World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Biden’s Baghdad mission: Securing “long term strategic” US interests

பிடென் பாக்தாத் வருகை: “நீண்ட கால மூலோபாய” அமெரிக்க நலன்களைப் பாதுகாத்தல்

By Bill Van Auken
7 July 2010

Back to screen version

திங்களன்று துணை ஜனாதிபதி ஜோ பிடென் ஈராக்கியப் பிரிவுகளை ஒரு புதிய அரசாங்கம் அமைக்க அழுத்தம் கொடுத்த பின்னர் ஈராக்கில் இருந்து திரும்பிச் சென்றார். அந்த அரசாங்கத்துடன் வாஷிங்டன் எண்ணெய் வளமுடைய நாட்டின் மீது தொடர்ந்த இராணுவக் கட்டுப்பாட்டை தொடர்வதற்கான விதிமுறைகள் பற்றிப் பேச்சுக்களை நடத்த முடியும்.

SOFA எனப்படும் படைகள் நிலைநிறுத்தல் உடன்பாடு ஒன்று 2008ல் வாஷிங்டனுக்கும் பாக்தாத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கப் போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 ஈராக்கில் முழுவதும் முடித்துக் கொள்ளப்படுவதற்கான காலக்கெடு ஆகும். இந்த உடன்படிக்கை 2011 முடிவிற்குள் அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் ஈராக்கில் இருந்து பின்வாங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

மரபார்ந்த அறிவின்படி இரு தலைநகரங்களிலும் இப்படிக் கூறப்பட்டுள்ள இலக்குகளில் எதுவுமே நடத்தப்பட மாட்டாது என்பது தெளிவு. அமெரிக்கத் துருப்புக்கள் தொடர்ந்து கொல்லும், கொல்லப்படும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைந்த தன்மையில், அமெரிக்க இராணுவ நிலைப்பாடு காலவரையறையற்றுத் தொடர்ந்து இருக்கும்.

தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்கு பின்னர் ஈராக்கிய அரசியல் முறை பெரிதும் முடங்கிக் கிடக்கிறது. போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு ஏற்படுவதில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை.

அமெரிக்கத் துணை ஜனாதிபதி, ஒபாமா நிர்வாகத்தால் ஈராக்கில் முக்கிய முடிவெடுக்க வேண்டியவர் என்று கூறப்பட்டுள்ளவர், தன்னுடைய பயணத்தால், இரு கடுமையான பிளவுற்றுள்ள அமெரிக்காவிற்கு தாழ்ந்துள்ள கட்சிகளிடையே உடன்பாட்டைக் கொண்டுவருவதில் திறைமையைக் காட்டினார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை. முன்னாள் பிரதம மந்திரி அய்யத் அல்லவி, மார்ச் 7 தேர்தலில் குறுகிய வெற்றி பெற்றவரும், தற்போதைய பிரதமர் நூரி அல்-மாலிக்கும், நெருக்கமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தவரும், உடன்பாடு காண்பதாக இல்லை.

அல்லவி மற்றும் அவர் வலியுறுத்தும் அல்-ஈராக்கியா பட்டியலில் உள்ளவர்களும் தான் பிரதம மந்திரி பதவியைப் பெற வேண்டும், தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று 91 இடங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருப்பதால் என்று வலியுறுத்துகின்றனர். இந்த முன்னாள் CIA சொத்து தனக்கு இப்பதவி மறுக்கப்பட்டால், அவருடைய கூட்டணியை ஆதரித்து சுன்னித் தளமுடைய கட்சிகள் அரசாங்கத்திலிருந்து சுன்னிப் பிரிவு வெளியேறுதலாக கருதப்படும் என்றும் அது உள்நாட்டுப் போரை மீண்டும் ஆராம்பிக்கும் திறன் உடையது என்றும் எச்சரித்துள்ளார்.

State of Law Coalition உட்பட ஷியைட் கட்சிகள், மாலிகியின் தாவாக் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை, மற்றும் அம்மர் அல் ஹகிமின் தலைமையில் உள்ள இஸ்லாமிய ஈராக்கியத் தலைமைக் குழுவை அடக்கியுள்ள தேசிய ஈராக்கிய கூட்டணி மற்றும் முக்டாடா அல் சதரின் தலைமையில் உள்ள சதர் இயக்கம் ஆகியவை மொத்தத்தில் போதுமான 159 இடங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதைக் கொண்டு பாராளுமன்றத்தில் அல்லவி அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். ஆனால் அடுத்த பிரதமர் யார் என்பதில் அவர்களுக்குள் உடன்பாடு இல்லாததால் அதைச் செய்யவில்லை.

அல்லவிக்கும் மாலிகிக்கும் இடையே ஒரு பெரும் கூட்டணிக்காக வாஷிங்டன் முயல்கிறது. அதே நேரத்தில் ஷியைட் மதக் கட்சி எதிர்ப்புக்களைச் சமாதானப்படுத்தவும், குர்திஸ்தான் கூட்டணியை அரசாங்கத்திற்குள் கொண்டு வரவும் முயல்கிறது. அவருடைய பயணத்தின் கடைசி நாளன்று பிடென், குர்திஷ் தலைவரான ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானியைச் சந்தித்தார். மேலும் ஈராக்கின் இஸ்லாமியத் தலைமைக் குழுவின் தலைவரான ஹக்கிமையும் சந்தித்தார்.

ஈராக்கியப் பிரிவுகளுடன் நடத்திய பேச்சுக்களில் பிடென் அமெரிக்காவிடம் “இரகசியச் செயற்பட்டியல்” ஏதும் இல்லை என்றும், “இப்பகுதியில் வேறு எந்த நாடும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆணையிட அனுமதிக்காதீர்கள்” என்றும் வலியுறுத்தினார். இச்செயற்பட்டியல் மிகத் தெளிவுதான். பல ஆண்டுகள் போர் ஆக்கிரமிப்பானது ஒரு மில்லியன் ஈராக்கியர்களையும் 4,400 அமெரிக்க படையினர்கள் உயிர்களைக் குடித்தபின், வாஷிங்டன் எண்ணெய் வளம் அதிகம் உடைய நாட்டின் மீது தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்க உறுதி கொண்டுள்ளது. அதே நேரத்தில் அது பெருகிய முறையில் ஈரானின் கணிசமான அரசியல், பொருளாதாரச் செல்வாக்கு ஈராக்கில் இருப்பது பற்றிக் கவலை கொண்டுள்ளது.

ஈராக்கில் தொடர்ந்து நிலவும் உறுதியற்ற தன்மை பிடெனின் மூன்று நாள் பயணத்தில் நன்கு புலப்பட்டது. பசுமைப் பகுதிக்குள் அவருக்கு மாலையில் கொடுக்கப்பட்ட வரவேற்பில் நிகழ்த்திய உரைக்கு பின் பல சுற்று வெடிகுண்டுகள் அதிகம் பலப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் போடப்பட்டன. இப்பகுதியில்தான் அமெரிக்கத் தூதரகமும் உள்ளது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்தன. பாக்தாத்திற்கு மேற்கே 70 மைல் தூரத்திலுள்ள ரமடி நகரில், ஒரு பெண் தற்கொலைத் தாக்குதல்காரர் நான்கு சோதனைச் சாவடிகளைக் கடப்பதில் வெற்றி கண்டு, கவர்னரின் அலுவலக நுழைவாயிலில் வெடிப்பை நிகழ்த்தினார். இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமுற்றனர்.

மோசூலில் மற்றொரு தற்கொலைத் தாக்குதல்காரர் ஒரு பொலிஸ் நிலையத்திற்கு முன் தன்னை வெடித்துக் கொண்டு இரு பொலிஸைரையும் காயப்படுத்தினார். கிர்குக்கில் ஒரு கார் வெடிகுண்டு வெடித்து 14 பேரைக் காயப்படுத்தியது.

செவ்வாயற்று பிடென் திரும்பிய பின்னர், வெடிகுண்டுகள், சாலைக் குண்டுத் தாக்குல்கள் என பாக்தாத்தில் நடத்தப்பட்டவை ஒரு மதப் யாத்திரையை மேற்கொண்டிருந்த ஒன்பது ஷியைட் முஸ்லிம்களைக் கொன்றன.

ஈராக்கிய அரசாங்கமும் அதன் அமெரிக்க எஜமான்களும் கோடை மாதம் வந்ததால் ஈராக்கில் மில்லியன் கணக்கான மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாத துன்பத்தை மின் பற்றாக்குறை நீடித்து ஏற்பட்டுள்ளதால் கொண்டுள்ள பெருகிய அமைதியின்மையையும் எதிர்கொள்ளுகின்றனர். ஜூன் 19ம் திகதி தெற்கு நகரமான பஸ்ராவில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்து, இருவர் கொல்லப்பட்டனர். அங்கு பாதுகாப்புப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இது ஏற்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பின்னர் இதே போல் ஒரு ஆர்ப்பாட்டம் நசிரியாவில் நடைபெற்றது. அங்கு 17 பொலிஸ் அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுடன் நடத்திய மோதலில் காயமுற்றனர். வாஷிங்டன் தான் 4.6 பில்லியன் டொலரை அமெரிக்கக் குண்டுவீச்சினால் அழிந்த மின் முறையை மறுகட்டமைக்க முதலீடு செய்துள்ளதாகக் கூறுகையில், ஒரு தசாப்தப் பொருளாதாரத் தடைகளை அடுத்து, மக்கள் சீற்றம் இப்பணத்தின் பெரும்பகுதி ஊழல் மிக்க அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களை அடைந்துள்ளது என்ற பரந்த நம்பிக்கை கொண்டதால் பெருகிய முறையில் எரியூட்டப்பட்டுள்ளது.

“நீண்ட கால மூலோபாய” உறவு பற்றி பிடென் வலியுறுத்தல்

அல்லவியின் தேர்தல் முகாமில் ஒரு உறுப்பினராக இருக்கும் மேசூன் அல்-டாமுல்ஜியை மேற்கோளிட்டு வாஷிங்டன் போஸ்ட் ஈராக்கியத் தலைவர்களுடன் ஒன்றரை மணி நேரம் நடத்திய பேச்சுக்களில் வாஷிங்டன் “ஒரு நீண்ட கால மூலோபாய” உறவை ஈராக்குடன் கொள்ள விரும்பவதாக பிடென் வலியுறுத்தினார் என்று தெரிவித்துள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்கத் தூதர் கிறிஸ்தோபர் ஹில் மற்றும் ஈராக்கில் மூத்த அமெரிக்கத் தளபதியாக இருக்கும் ஜெனரல் ரே ஒடிஎர்னோ ஆகியோரும் பங்கு பெற்றனர்.

பிடெனுடன் பயணத்திருந்த ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி AFP செய்தி அமைப்பிடம், “நாங்கள் ஈராக்கில் இருந்து பின்வாங்வில்லை, எங்கள் நிலைப்பாடு மாறுகிறது. ஒரு இராணுவத் தலைமையில் இருந்து சிவிலியத் தலைமைக்கு நாங்கள் நகர்கிறோம்.” என்று கூறினார்.

ஈராக்கியக் கைப்பாவை அரசியல்வாதிகளிடையேயும் அத்தகைய ஒரு நீண்ட கால “மூலோபாய” நிலைப்பாட்டிற்கு அழைப்புக்கள் வந்துள்ளன. இவற்றில் சிலர் அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் நாட்டை விட்டு நீங்குவது எதிர்ப்பு எழுச்சி புதுப்பிக்கப்பட காரணமாகிவிடும் என்று தெளிவாக அஞ்சுகின்றனர். இவ்விதத்தில் கடந்த மாதம் அல்லவி வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு கட்டுரையில், “வாஷிங்டன் ஈராக்கில் தீவிரமாக” ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் “நாடு மீண்டும் உறுதியற்ற தன்மையான குறும் பிரிவு மோதல்களுக்கும், பிராந்தியச் செல்வாக்கின் ஆளுமைக்கும் திரும்பிவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

துருப்புக்கள் தொடர்பான நிலைப்பாடு உடன்பாட்டின்படி, செப்டம்பர் 1ம் தேதிக்குள் தற்பொழுதைய அமெரிக்கத் துருப்புக்கள், ஈராக்கில் இருக்கும் 77,500 ல் இருந்து 55,000 எனக் குறைக்கப்படும். இது அந்தத் தேதியை ஒட்டி அனைத்து அமெரிக்கப் “போர்த் துருப்புக்களும்” நாட்டை விட்டு வெளியேறிவிடும் என்ற உறுதியை நிறைவேற்றுவதாக அமையும்.

ஆனால் அமெரிக்கத் துருப்புக்கள் போர் நிலையில் இருப்பது தொடரும். நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, “….இங்குள்ள பணிகள் ஒன்றும் அதிகம் மாறவில்லை. மாறாக இராணுவம் அவற்றை உறுதிப்பாட்டு நடவடிக்கைகள் என்று அழைக்கும். அவற்றுள் ஈராக்கியப் படைகளுக்கு ஆலோசனை, பயிற்சி கொடுப்பது தவிர, மாநில மறுகட்டமைப்புக் குழுக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதைத் தவிர, எழுச்சியாளர்களுடன் போரிடுவது, ஒருக்கால் இன்னும் அதிக அமெரிக்கத் துருப்புக்கள் இறப்பதும் அடங்கும்.”

டைம்ஸ் தகவல் தொடர்கிறது: “இன்று படையினர்கள் போர் நடவடிக்கைகள் என்று கூறுவது—எதிர்ப்பாளர்களை வேட்டையாடுவது, ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளும் அமெரிக்கச் சிறப்புப் படைகளும் போராளிகளைக் கொல்லுவது அல்லது கைது செய்வது என்பது—“உறுதிப்பாட்டு நடவடிக்கைகள்” என்று அழைக்கப்படும்.

அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டு தலைமையகம், தற்பொழுது அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிய எழுச்சியாளர்களைக் கொல்வதில் கொண்டுள்ள நேரடித் தொடர்பு பற்றி “குறைவாகப் பேசுகின்றனர்”, பல நேரமும் நடவடிக்கைகளை ஈராக்கியப் படைகளால் செய்யப்படுவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவம் “ஆலோசகர்கள்” என்ற முறையில் தான் செயல்படுவதாகத் தெரிவிக்கிறது.

2011 காலக்கெடு அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் திரும்பப் பெறப்படும் என்ற கூற்றைப் பொறுத்தவரை, டைம்ஸ் மேலும் கூறுகிறது: “ஆனால் அப்பொழுது அமெரிக்கா ஈரானில் கொண்டிருக்கும் தொடர்பு முடிந்துவிடும் என்று எவரும் நம்பவில்லை. இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள், ஈராக்கிய அதிகாரிகளிடையே மரபார்ந்த அறிவானது புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டபின், நீண்டகால அமெரிக்கத் துருப்புக்கள் நிலைப்பாடு பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்பதுதான்.”

இதே விதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது, “ஆகஸ்ட் 31ம் தேதி [போர் நடவடிக்கைகளில் இருந்து] மாறுதல் என்பது சொற்ஜாலமே அன்றி ஒரு மைல்கல் ஆகாது.”

மாற்றத்தை “வேறுபெயரிட்டு” அழைத்தல்தான் என்று குறிப்பிடும் தகவல் தொடர்கிறது: “வெளியே உள்ளவர்கள் போர் தான் என்று பெரிதும் நினைக்கும் நடவடிக்கைகள், உறுதியான சுன்னி இஸ்லாமிய எழுச்சி வலுவாக உள்ள இடங்களில் தொடரும். அமெரிக்கத் துருப்புக்கள் “அதி தீவிர பயங்கரவாத வலையமைப்புக்கள் மீது அழுத்தத்தைத் தக்கவைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பங்காளித்தனமாக செய்வர்.”

வடக்குப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டோனி குகோலோ நடைபெற்றுவரும் வடக்கு எழுச்சி ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளால், “இப்பொழுதுள்ள நிலைமையில்” “கையாளப்பட முடியாது” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

ஈராக்கில் உள்ள மூத்த அமெரிக்கத் தளபதி ஜெனரல் ரேமண்ட் ஒடிஎர்னோ தொடர்ந்த இராணுவ நிலைப்பாடு டிசம்பர் 2011க்குப் பின்னரும் தேவைப்படும், ஏனெனில் குர்திஷ்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நாட்டின் வடக்கில் அழுத்தங்கள் தொடர்கின்றன என்ற கருத்தைக் கூறினார். ஒரு உடன்பாடு ஏற்படவில்லை என்றால், “நாம் வேறு இயக்க முறையைப் பற்றி நினைக்க வேண்டும்” என்றார் ஒடிஎர்னோ. இது ஐ.நா. “அமைதி காக்கும் படை” வரக்கூடியதை அகற்றிவிடுகிறது.

தளபதியின் அறிக்கைக்கு விடையிறுக்கும் வகையில் அசோசியேட்டட் பிரஸ் கூறியது: “ஐ.நா. அமைதி காப்பாளர்கள் வருவது என்பது 2011 முடிவில் அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் நீங்கிய நிலையில் ஈராக் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்குமா என்ற வினாக்களுடன் தொடர்புடையது—வாஷிங்டனுக்கும் பாக்தாத்திற்கும் பாதுகாப்பு உடன்பாட்டின்படி அது காலக்கெடு ஆகும்.”

“ஈராக்கியத் தலைவர்கள் அமெரிக்காவை அந்த உடன்பாட்டை மறு பரிசீலனை செய்து 2011க்கு பின்னரும் சில துருப்புக்களை நிலைகொள்ளச் செய்ய கேட்டுக் கொள்ளலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதுதான் நாட்டின் சீரற்ற இராணுவப் பொலிஸ் படைகளுக்கு பயிற்சிக்கு இன்னும் அதிக அவகாசம் கொடுக்கும்.”

அமெரிக்காவானது ஈராக்கில் அதன் இராணுவ பிரசன்னத்தை முடித்துக் கொள்ளுவதாக இல்லை என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இதில் பாக்தாத்தில் உள்ள பரந்த அமெரிக்கத் தூதரகமும் ஒன்றாகும். 700 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டு, 104 ஏக்கர்களை ஆக்கிரமித்துள்ள இந்தத் தூதரகம் உலகில் வேறு எந்த அமெரிக்கத் தூதரகத்தையும் விட 10 மடங்கு பெரிதாகும்.

இதற்கிடையில் நான்கு பெரும் அமெரிக்கத் தளங்களில் அதன் துருப்புக்களை ஒருங்கிணைத்துக் கொண்டுவருகிறது—வடக்கில் கூட்டுத் தளம் பாலட்டில் உள்ளது, தெற்கே காம்ப் ஆடர் உள்ளது, மேற்கே அல் அசத் விமானத் தளம் உள்ளது, இதைத்தவிர விக்டரித் தள வளாகம் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே உள்ளது. பென்டகன் 496 மில்லியன் டொலரை 2009ல் ஈராக்கில் தளங்களைக் கட்டமைக்கச் செலவழித்தது—அதுவும் அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பி அழைக்கப்படும் என்ற உடன்பாட்டிற்குப் பிறகு. போர் துவங்கியதில் இருந்து இக்காரணத்திற்காக ஒதுக்கப்பட்ட மிகப் பெரிய தொகையாகும் இது. மற்றும் ஒரு 323 மில்லியன் டொலர் இந்த ஆண்டுத் தளக் கட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கணிசமான அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் இருந்து வெளியேற உத்தரவைப் பெற்றுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை, அவற்றின் கருவிகளுடன் ஆப்கானிஸ்தான் போர் விரிவாக்கத்திற்கு மாற்றப்படும். ஆனால் உண்மை என்னவென்றால், வாஷிங்டன் ஒரு நிரந்தர, காலனித்துவ முறை ஆக்கிரமிப்பை எண்ணெய் வளமுடைய அரபு நாட்டில் கொள்வதற்குத் தயாரிப்புக்களை நடத்துகிறது என்பதுதான்.