World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Government-backed protesters besiege UN office over war crimes investigation

இலங்கை: அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்

By K. Ratnayake
8 July 2010

Back to screen version

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், செவ்வாய்கிழமை கொழும்பில் 120 க்கும் மேற்பட்ட ஐ.நா அலுவலக ஊழியர்களை ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக பணையக் கைதிகளாக வைத்திருந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெளிப்படையாக உதவியது. அலுவலகத்தை தடுத்து நடத்தும் ஆர்ப்பாட்டம் நேற்றுவரையும் தொடர்ந்தது.

சிங்கள அதிதீவிரவாத தேசிய சுதந்திர முன்னணியின் (தே.சு.மு.) தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த இராணுவத் தாக்குதல்களின் கடைசி கட்டத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விசாரணையை முன்னெடுக்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள குழுவை கலைக்குமாறு கோருவதற்கே இந்த முற்றுகை என தெரிவித்தார்.

இனவாத சுலோகங்களை கூச்சலிட்டதோடு பான் கீ மூனின் கொடும்பாவியையும் எரித்த பௌத்த பிக்குகள் உட்பட சுமார் 2,000 ஆதரவாளர்களுக்கு வீரவன்ச தலைமை தாங்கினார். ஐ.நா. அலுவலகக் கட்டிடத்தின் மீது பாய்ந்த இந்த குழு நுழைவாயிலை அடைத்து ஐ.நா. அலுவலர்கள் வெளியேறாமல் தடுத்தது. சகல ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ள ஒரு உத்தியோகபூர்வ “உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்” ஐ.நா. அலுவலகம் அமைந்துள்ள போதிலும், அதற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கவில்லை.

பின்னர் பொலிசார் ஐ.நா. அலுவலக ஊழியர்களை தடையின் ஊடாக வெளியே கொண்டு சென்றனர். எவ்வாறெனினும், செய்திகளின் படி, ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோடாபய இராஜப்கஷவை தொலைபேசியில் வீரவன்ச தொடர்பு கொண்டதோடு, அவர் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார். முடிவில், ஐ.நா. அலுவலர்களை வெளியேற அனுமதிக்குமாறு தே.வி.மு. தலைவர்களிடம் வெளி விவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க கேட்டுக்கொண்டார்.

இந்த ஆத்திரமூட்டல் ஆர்பாட்டமானது உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் நடத்துவதையிட்டு இலங்கையின் ஆளும் வட்டாரங்களுக்கு மத்தியிலும் இனவாத குழுக்களுக்கு மத்தியிலும் காணப்படும் பதற்றத்தினதும் எதிர்ப்பினதும் வெளிப்பாடாகும். இலங்கையின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்காக பெரும் பூகோள வல்லரசுகளுக்கு இடையில் பகைமை அதிகரித்து வரும் நிலைமையின் மத்தியிலேயே இந்த முற்றுகைக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நா. குழுவுக்கு ஆதரவளிக்கும் அதே வேளை, சீனாவும் ரஷ்யாவும் அதை எதிர்த்துள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில், இராணுவம் நடத்திய கண்மூடித்தமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு உடலுறுப்புக்களையும் இழந்தனர். ஐ.நா. அமைப்பே சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டிருந்தது. கண்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், இராணுவம் உள்நோக்கத்துடன் பொதுமக்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதோடு 30,000 முதல் 70,000 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அல்லது இன்னமும் காணாமல் போயிருப்பதாக சர்வதேச நெருக்கடி குழு முடிவு செய்துள்ளது.

ஐ.நா. குழுவை தீவிரமாக நிராகரிக்கும் இராஜபக்ஷ அரசாங்கம், அதனுடன் ஒத்துழைக்க மறுக்கின்றது அல்லது அதன் உறுப்பினர்களுக்கு வீசா கொடுக்க மறுக்கின்றது. ஆயுதப் படைகளின் தளபதி ஜனாதிபதி இராஜபக்ஷவையும் ஏனைய தலைவர்களையும் மற்றும் “யுத்த வீரர்களையும்” (சிப்பாய்கள்) யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லாமல் காப்பதற்கே இந்த முற்றுகை என பிரகடனம் செய்த வீரவன்ச, “அதிதீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகளின் பக்கம் சார்ந்திருப்பதாக” ஐ.நா செயலாளர் நாயகம் பான் மீது குற்றஞ்சாட்டினார்.

“உள்நாட்டு அதே போல் சர்வதேச கடமைப் பொறுப்புகளுக்கு கீழ்படிந்து இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த்தாக.... ” செவ்வாய் கிழமை அரசாங்கம் கூறிக்கொண்டது. ஆயினும், “நாடு பயங்கரவாதத்தை அழித்த பின்னர் அபிவிருத்திக்காக முழுமையாக செயற்படும் போது, பல்வேறு சர்வதேச சக்திகள் அதை தடுக்கின்றன|” என அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை மேலும் தூண்டிவிட்டார்.

அரசாங்கம், பொலிஸ் மற்றும் சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவிலான கும்பல் வன்முறையின் வெளிப்படையான அரங்கேற்றம் உழைக்கும் மக்களை அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தயாராகின்ற நிலையில், அது ஐ.நா. குழுவுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்வதன் மூலம், இனவாதத்தை கிளரிவிட முயற்சிக்கின்றது. அது வாழ்க்கை நிலைமைகள் மீதான தனது தாக்குதல்கள் சம்பந்தமாக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை திசை திருப்புவதன் பேரில், இந்த யுத்த விசாரணைக் குழு விவகாரத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.

ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும், ஐ.நா. குழுவின் தலைவர் மர்ஸுகி டருஸ்மன் நேற்று டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், தனது குழு இந்த மாதக் கடைசியில் கூடி தனது வேலையைத் தொடங்கும் என தெரிவித்தார். கொழும்பு அரசாங்கத்தின் மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்துள்ள நிலையிலேயே அவரது அறவித்தல் வந்துள்ளது.

ஐ.நா. அலுவலக முற்றுகை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மார்க் டொனர், “மக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை” அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவித்த போதிலும், “தசாப்த கால யுத்தத்தின் பின்னர் தீவை அமைதிப்படுத்த உதவுவதற்கு ஆரோக்கியமான பொறுப்புடைமை முன்னெடுப்பு” தேவை என மேலும் கூறினார். “சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியமை பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொருத்தமான சிறந்த நடைமுறைகளைப் பற்றி ஆலோசனை வழங்குவதற்கு அனுபவசாலிகளின் குழுவொன்றை பான் அறிவித்ததை” அமெரிக்கா வரவேற்கின்றது என அவர் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய மேற்கத்தைய சக்திகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்தது. அவர்கள் கொழும்பு அரசாங்கத்துடன் சீனா நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்து கொண்ட பின்னரே மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். இத்தகைய சக்திகள், தமிழர்கள் உட்பட இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் எதைப் பற்றியும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, அவர்கள் தெற்காசியாவில் மூலோபாய ரீதியில் செல்வாக்குச் செலுத்துவதற்கு முயற்சிக்கின்றன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை உக்கிரமாக்கும் இன்னுமொரு முயற்சியாக, நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி மீளாய்வு செய்யும் முயற்சியில், இலங்கை தொழிற் சங்கங்களின் சார்பில் ஒரு அமெரிக்கத் தொழிற்சங்க அமைப்பான ஏ.எஃப்.எல்-சி.ஐ.ஓ. ஜூன் 30 அன்று தாக்கல் செய்த மனு ஒன்றை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இது இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கும் சுங்க வரிச் சலுகையை மீதான ஆண்டு மீளாய்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கை ஆடை உற்பத்திக்கு இரண்டாவது பெரும் சந்தையாக இருப்பதோடு தற்போதைய 12 மாத உடன்படிக்கை டிசம்பர் மாதம் முடிவடைகின்றது.

ஏ.எஃப்.எல்-சி.ஐ.ஓ., இலங்கையில் அல்லது எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர் உரிமைகள் சம்பந்தமாக அனுதாபம் கொண்டதல்ல. அது பரந்த வேலையின்மை தொடர்பாக அமெரிக்க தொழிலாளர் மத்தியில் காணப்படும் அதிருப்தியை திசை திருப்புவதற்கு தனது சொந்த தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத முயற்சிகளை அதிகரிக்கும் அதே வேளை, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கும் உதவுகின்றது.

வருடாந்தம் 1.56 பில்லியன் டொலர் பெறுமதியான வருமாணத்தைத் தரும் இலங்கையின் பிரமாண்டமான ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பிய ஒன்றியம், நாட்டுக்கு வழங்கிய இத்தகையை சலுகையை ஏற்கனவே இரத்துச் செய்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல், இலங்கை ஏற்றுமதிக்கு ஐரோப்பா கொடுத்த ஜீ.எஸ்.பீ. + வரிச் சலுகையை அது இழந்துவிடும் என ஐரோப்பிய ஆணையம் திங்களன்று அறிவித்துள்ளது. வரிகள் பூச்சியத்தில் இருந்து 18 வீதம் வரை அதிகரிக்கின்ற நிலையில், ஆடை உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறை மிகவும் பாதிக்கப்படும்.

அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகளை உத்தரவாதம் செய்யும் பிரிவுகளை அமுல்படுத்தாமை, விசாரணையின்றி தடுத்து வைத்திருத்தலுடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிகளை தொடர்ந்தும் அமுலில் வைத்துள்ளமை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபைகளுடன் ஒத்துழைக்காமை போன்றவை உட்பட இலங்கையின் உரிமை மீறல்களுக்கான 15 காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கோள் காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது. ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல தெரிவித்ததாவது: “நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைளை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இதனால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்காக நாம் ஏற்கனவே மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம்.” இருப்பினும், தீர்க்கமான சந்தைகள் இழக்கப்படுவதையிட்டு வர்த்தக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மாறுபட்ட வகையில், கடந்த வாரம் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குயின் கங், “இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் பலவேறு பிரச்சினைகளையும் கையாளும் இயலுமை கொண்டவர்கள் என சீனா நம்புகிறது. இலங்கையின் உள் நிலைமைகளை ஸ்திரப்படுத்தி பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த” அதற்கு ஐ.நா. மற்றும் சர்வதேச சக்திகள் உதவும் என பெய்ஜிங் நம்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா. குழுவை நியமிப்பதற்கு பானுக்கு உள்ள உரிமையை கேள்விக்குள்ளாக்கி ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. “ஒரு இறைமை கொண்ட அரசு மற்றும் ஐ.நா. உறுப்பினரின் –இலங்கையின்- நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை எங்களை மேலும் எச்சரிக்கின்றது” என அது மேலும் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கைகள் தெற்காசியாவில் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை உக்கிரமடைவதை காட்டுகின்றன. இந்து சமத்திரத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள இலங்கையை “இழக்க” வாஷிங்டன் அனுமதிக்க கூடாது என கடந்த ஆண்டு அமெரிக்க வெளி உறவு குழுவின் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இராஜபக்ஷ அரசாங்கம் அண்மையில் வாஷிங்டனுடனான உறவுகளை இலகுவாக்கிக்கொள்ள முயற்சித்த அதே வேளை, முட்டுக்கட்டைகளும் இருக்கின்றன. ஐ.நா. குழு திட்டத்தில் இருந்து தலை தப்பும் ஒரு தோல்விகண்ட முயற்சிக்காக பான் உடன் பேசுவதற்கும் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுடம் பேச்சுவார்த்தை நடத்தவும் வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இப்போது இராஜபக்ஷ அரசாங்கம், இந்த திட்டத்தை தடுப்பதற்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை பெற முயற்சிக்கின்றது.

இருந்த போதிலும், இலங்கை ஆளும் தட்டுக்குள்ளேயே வேறுபாடுகள் உள்ளன. இராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை சரிசெய்துகொள்ள தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேற்கில் உள்ள சந்தைகள் மற்றும் பூகோள அரசியல் ஆதரவையும் இழக்கும் வாய்ப்புகளைப் பற்றி கவலை கொண்ட வர்த்தக ஸ்தாபனங்களின் சில பகுதியினர் ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு பின்னால் அணிதிரண்டனர். தேர்தலில் தோல்விகண்ட பின்னர், தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், பொன்சேகா கைது செய்யப்பட்டு, இன்னமும் ஒரு இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டவாறு தடுத்து வைக்கப்ட்டுள்ளார்.

திங்களன்று, தான் ஐ.நா. குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதோடு “இராணுவத்தின் நற்பண்பை தூக்கி நிறுத்த” தயாராவதாக பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “யுத்தம் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் தீர்மானங்களின் படியே யுத்தம் முன்னெடுக்கப்பட்ட” காரணத்தால் தான் விசாரணை குழுவுக்கு பயப்படவில்லை என அவர் கூறிக்கொண்டார்.