World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Germany and France use loans to Greece to push for major arms deals

கிரேக்கத்திற்குக் கொடுத்த கடன்களை ஜேர்மனியும், பிரான்ஸும் பெரும் ஆயுத விற்பனை உடன்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்துகின்றன

By Johannes Stern
15 July 2010

Back to screen version

சில காலமாகவே பிரான்ஸும் ஜேர்மனியும் கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றி மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. கிரேக்கத்திற்கு பிணையெடுப்பு பற்றிய கடனின் தேவை பற்றி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி விரைவாக முடிவெடுக்கையில் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அவசரகால நிதியுதவிக்கு ஒப்புக் கொள்ள நீண்டகாலம் மறுத்தார். மேர்க்கெலின் நோக்கம் கிரேக்க அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை அதிகரித்து அதை ஒரு மோசமான சிக்கன நடவடிக்கை எடுப்பதை கட்டாயப்படுத்துதல் என்பதாகும்.

இந்த அழுத்தத்தின்கீழ் சமூக ஜனநாயக PASOK ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் தலைமையில் உள்ள அரசாங்கம் கிரேக்க மக்களின் பாரிய எதிர்ப்பிற்கு மத்தியில் €30 பில்லியன் மதிப்புள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைப் பொதி ஒன்றை இயற்றியது. இதற்கு ஈடாக மேர்க்கெல் அரசாங்கமும் கிரேக்க மீட்புப்பொதிக்கு €110 பில்லியன் தருதற்கு உடன்பட்டார். மேர்கெலை பொறுத்தவரை கிரேக்க அரசாங்கத்தின் திவால் ஒரு விருப்புரிமையே இல்லை, ஏனெனில் அத்தகைய திவால் ஜேர்மனிய வங்கிகள் கிரேக்க அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படும் €45 பில்லியன் மதிப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கடந்த சில நாட்களில், செய்தி ஊடகத்தகவல்கள் கிரேக்கத்திற்குக் கொடுத்த நிதிபணத்துடன் ஜேர்மனியும், பிரான்ஸும் தங்கள் வங்கிகளை மட்டும் காப்பாற்ற முற்படவில்லை என்பது வெளிப்பட்டுள்ளது. கிரேக்கம் பெரும் ஆயுத உடன்பாடுகளுக்கு உட்படவைக்கும் விதத்தில் அழுத்தம் கொடுக்கும் வழிவகையாக இந்தக் கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேர்க்கெலும் சார்க்கோசியும் கிரேக்கத்திற்கு தாங்கள் விதிக்கும் “சரியான” கொள்கை பற்றி வாதிட்டு, கிரேக்க மக்கள் பாரிய சமூகநலக் குறைப்புக்களை ஏற்க வேண்டும் என்று கோரினர். ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் தங்கள் நாட்டு பாதுகாப்பு தொழில்களின் நலன்களை திருப்திபடுத்த முயல்கின்றனர். செய்தி ஊடகத் தகவல்கள்படி, ஆயுத விற்பனை உடன்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை கிரேக்கத்திற்கு கடன் கொடுப்பதற்காக விதிக்கப்பட்ட முறைசாரா நிபந்தனைகளில் ஒன்றாகும்.

“கிரேக்க, பிரெஞ்சு அதிகாரிகளை” மேற்கோளிட்டு, அவர்கள் சார்க்கோசி ஆயுதப்பேரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளதாக கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கிரேக்க செய்தித்தாள் Kathimerini கருத்துப்படி பெப்ருவரி மாதம் பாப்பாண்ட்ரூ பிரெஞ்சு ஜனாதிபதியிட்டம் நிதிய உதவியை கேட்பதற்காக பாரிஸுக்குச் சென்றிருந்தார். அதேநேரத்தில், கிரேக்கத்தின் மகத்தான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை இருந்தாலும், அரசாங்கம் 2.5 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆறு பிரெஞ்சு சிறப்புக் கடற்படை கப்பல்கள் வாங்குவதற்கான முடிவு எடுத்தார். இதைத்தவிர, 15 பிரெஞ்சு Super Puma ஹெலிகாப்டர்கள், 400 மில்லியன் மதிப்புடையவை மற்றும் 40 பலநோக்கு போர்விமானங்கள் வாங்குவதற்கும் பேச்சுக்கள் நடைபெற்றன.

நெருக்கடிக்கு நடுவே கிரேக்கத்தான் பெறப்பட்ட இராணுவ அமைப்புகளின் மற்றொரு பெரும் பகுதி ஜேர்மனியில் இருந்த வருகிறது. மேர்க்கெல் அரசாங்கம் உரத்த குரலில் கிரேக்க மக்கள் தங்கள் வசதிக்கு மீறி வாழ்கின்றனர் என்று குற்றம்சாட்டி அவர்கள் “தங்கள் கணக்குகளை ஒழுங்காகப் போட வேண்டும்” என்று கோரிய பிரச்சாரம் நடந்த பின்னரும் இது வந்துள்ளது. இப்பொழுது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் விரிவாக எழுதியுள்ள ஒரு கட்டுரை மார்ச் மாதம் பேர்லின் கிரேக்க அரசாங்கத்துடன் 1.3 மில்லியன் மதிப்புடைய 2 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான உடன்பாட்டை முடித்தது என்று தெரிவிக்கிறது. மீட்புப்பொதிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று ஜேர்மனிய அரசாங்க வட்டாரங்கள் மறுத்தாலும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் குற்றச்சாட்டு தெளிவாகத்தான் உள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி இரண்டுமே கிரேக்க மீட்புப்பொதியில் பங்கு பெறுவதற்கு முன்னிபந்தனையாக ஆயுத ஏற்றுமதிகளைக் கூறியுள்ளன என்பதே அது.

கிரேக்கத்தில் இந்த அறிக்கைகள் புயலென எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளன. கிரேக்க மக்களிடம் இருந்து பாரிய செலவுக்குறைப்புக்கள் மூலம் பற்றியெடுக்கப்படும் பணம் இராணுவ வலிமையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 11 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டுள்ள கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பாவில் மரபார்ந்த ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு ஆகும். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடுகையில் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகஅதிக இராணுவச் செலவுகளைக் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் கிரேக்கம் 16 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஆயுதங்களை வாங்கியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி இந்தப் பணம் நாட்டின் வானளாவிய அரசாங்கக் கடன்களின் காரணங்களில் ஒன்றாகும்.

கிரேக்க மக்களுடைய சீற்றத்தைக் குறைக்கும் விதத்திலும், இராணுவ வாங்குதல்களைப் பற்றிய ஏதென்ஸின் உடனடி அண்டை நாடுகளின் கவலைகளைப் போக்கும் விதத்திலும் துணைப் பிரதம மந்திரி தியோடோர் பல்கலோஸ் சமீபத்தில் துருக்கியில், “நாங்கள் வாங்க விருப்பமில்லாத உடன்பாடுகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். கிரேக்கத்திற்குப் புதிய ஆயுதங்கள் தேவை இல்லை.” என்றார்.

கிரேக்க இராணுவக் கட்டமைப்புப் பின்னணி மற்றும் ஆயுத விற்பனைகள் ஐரோப்பா முழுவதும் படர்ந்த இராணுவ மூலோபாயங்களுடன் பிணைந்துள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் கிரேக்க ஆயுத விற்பனை உடன்பாடுகள் ஏற்பட்ட அதே நேரத்தில் Süddeutsche Zeitung பத்திரிகை “இராணுவக் கொள்கையும் நிதிய நெருக்கடியும்-ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான நேரம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. பாதுகாப்புக் கொள்கை தற்போதைய பணப் போக்கை” நிர்ணயிப்பதற்கு எதிராக எச்சரிக்கை கொடுத்து, “உறுதியற்ற நேரங்களை” எதிர்கொள்ளலுக்கு ஒரு தொழில் நேர்த்தியுடைய ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டமைப்பது “பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்” என்றும் கூறியுள்ளது.

பேர்லினிலும் பாரிசிலும் உள்ள அரசாங்கங்கள் கிரேக்கத்தில் ஒரு பாரிய இராணுவக் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்துள்ளன. அதையொட்டி ஏதென்ஸின் இராணுவ அமைப்பின் செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளன என்பது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கிரேக்கத்தில் ஒரு இராணுவக்குழு மக்கள் எதிர்ப்பை மிருகத்தனமாக நசுக்கி ஒரு காட்டுமிராண்டித்தன இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியதின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

பெருகிய முறையில் அரசியல் அழுத்தங்கள் உள்ள பின்னணியில் PASOKக்குள் சமூகவெட்டுக்களுக்கு மக்கள் நடத்தும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது. முக்கிய PASOK பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நீதித்துறை மந்திரி Haris Kastanidis ஐ அரசாங்கத்திற்கு ஒரு “புதிய ஆதரவைக் கொடுக்கும்” வகையில் முன்கூட்டிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததற்காக சாடினர்.

இதற்கு விடையிறுக்கும் வகையில் முன்னாள் தொழிலாளர் பிரிவு மந்திரி Militades Papaioannou தேர்தல்களை இப்பொழுது நடத்துவது ”நாட்டிற்கு எதிரான ஒரு குற்றம் போல் ஆகும்” என்று கூறினார். PASOK ன் பிரதிநிதியும் மத்திய குழு உறுப்பினருமான Ektoras Nasiokas இன்னும் வெளிப்படையாகக் “நாட்டிற்கு தேர்தல்கள் தேவையில்லை. நமக்கு நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் அரசாங்கம்தான் தேவை.” எனக்கூறினார்.