World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Trade tensions loom over US and China

அமெரிக்கா - சீனா இடையே வலுப்பட்டு வரும் வர்த்தகப் பதற்றம்

By John Chan
16 July 2010

Back to screen version

அமெரிக்கா மற்றும் சீன அரசாங்கங்களின் சமீபத்திய அறிவிப்புகளை மேலோட்டமாக பார்த்தால் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதைப் போல் தோன்றும். அமெரிக்க கடன்பத்திர பாக்கிகளை கைவிடப்போவதில்லை என்று சென்ற வாரம் சீனாவின் அன்னியச் செலாவணி நிர்வாகம் (எஸ்ஏஎப்இ) அறிவித்திருந்தது. அவ்வாறு கடன்பாக்கிகளை கைவிடுவோமானால் அது பொருளாதார ரீதியில் ஒரு அணுகுண்டு வெடிப்புக்கு சமம் ஆகும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது. அடுத்த நாள் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் வெளியிட்ட மிகமுக்கிய கருவூல அறிக்கையில் சீனா அமெரிக்க டாலருக்கு நிகராக அந்நாட்டு நாணயத்தை செயற்கையாக மதிப்பை திரிப்பு செய்வதாக கூறவுமில்லை.

யதார்த்தத்தில் இந்நிகழ்வுகள் அனைத்தும் அவ்விரு நாடுகளுக்கு இடையே வலுப்பட்டு வரும் பொருளாதார பதட்டத்தை எடுத்துக்காட்டும் வகையிலானவை. இவ்விரு நிகழ்வுகளிலும் சரி, பழிவாங்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என அறிவித்ததிலிருந்தே அப்படி ஒரு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டிருந்தது என்ற உண்மை வெளிப்படுகிறது.

செலாவணியை திரிக்கும் நாடு என சீனாவை குறிப்பிட்டு கூறியிருந்தால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வாஷிங்டன் தண்டனை வழங்கும் வகையில் வரி சுமத்த வழிவகுத்திருக்கக்கூடும். அவ்வாறு தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்வதென்ற மிரட்டல்கள், யுவான் என்னும் சீன நாணயத்தை மறுமதிப்பீடு செய்வதற்கான அழுத்தங்கள் மற்றும் கடந்த நவம்பர் மாதம் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் சீர்குலைந்த அமெரிக்க - சீன உறவுகள் ஆகிய இரண்டு காரணங்கள் ஒருங்கிணைந்ததே இந்த மிரட்டல் விடுப்பதற்கான பின்னணி ஆகும்.

ஈரான் மீது கூடுதல் தடைகள் விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெய்ஜிங் எவ்வாறு வாக்களிக்கப்போகின்றது என்பதை கவனிக்கவே, அமெரிக்காவின் கருவூல அறிக்கை வெளியிடுவதை ஏப்ரல் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு சாதகமானதுடன் அந்நாடு சீனாவின் நாணய விஷயத்திற்கு திரும்பியுள்ளது. கனடாவில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறும் சூழலில் இது குறித்து அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் வருவதற்கு முன்னதாகவே அமெரிக்க டாலருக்கு நிகராக யுவானின் மதிப்பை இணைத்துவைத்திருக்கும் முறையை நிறுத்தப்போவதாக பெய்ஜிங் அறிவித்தது.

சீனாவின் ஏற்றுமதித்துறையை பாதுகாக்கவும், யுவான் நாணயத்தின் மதிப்பை குறைந்த நிலையிலேயே நிலைநிறுத்தவும் 1990 களின் மத்தியிலிருந்தே அன்னியச் செலாவணி சந்தையிலிருந்து அமெரிக்க டாலர்களை வாங்கிக்குவிக்க சீனாவின் மத்திய வங்கி பெருமுயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததால் தான், கடந்த 2005-ம் ஆண்டு டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பை இணைத்துவைத்திருக்கும் முறையை சீனா நிறுத்தியது. மேலும் யுவானின் மதிப்பை 2008-ஆம் ஆண்டு அரை இறுதி வரையிலும் சுமார் 21 சதவீதம் உயர்த்தியிருந்தது. அது சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தொடக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கென்றே டாலர் மதிப்புக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பை இணைத்துவைத்திருக்கும் முறையை சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து, குறிப்பாக ஜனநாயக கட்சியினரிடமிருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் யுவானின் மதிப்பை 25 முதல் 40 சதவீதம் வரையில் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்க வேண்டுமென்றும் ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தினர்.

அன்னிய செலாவணி மதிப்பை ''திரிப்பது'' பற்றி பெய்ஜிங்கை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டாம் என்ற தீர்மானத்தை நியாயப்படுத்தும் வகையில், நாணய மதிப்பீட்டினை இணைத்துவைத்திருக்கும் முறையை சீனா தளர்த்துவது என்பது ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய மாற்றம் ஆகும் என அமெரிக்க கருவூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம் அமெரிக்க காங்கிரசை சமாதானப்படுத்துவதற்கென்றே கருவூலச் செயலர் டிம் கீத்னர் "நாணய மறுமதிப்பீட்டை எவ்வளவு சீக்கிரம் செய்து முடிக்கப்போகிறோம் என்பது தான் முக்கியம். சீன நாணயத்தின் மறுமதிப்பீட்டை, அமெரிக்க காங்கிரசுடன் இணைந்து, நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார்.

900 பில்லியன் டாலர்களுக்கான அமெரிக்க அரசு கடன்பத்திரங்களை இரத்து செய்துவிட்டு, பொருளாதார ரீதியிலான அணு குண்டு வெடிப்பு முறையை கையாளப்போவதில்லை என சீனாவின் SAFE அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடன்தொல்லையில் மூழ்கிப்போயுள்ள அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்த சீனாவால் முடியும் என்பதை அமெரிக்காவுக்கு நினைவூட்டும் வகையில் SAFE அறிக்கை உதவியிருக்க வேண்டும். ஐரோப்பாவின் கடன் பிரச்சனைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார தடுமாற்றங்களைத் தவிர்த்தால் அறையில் எஞ்சிய யானை அமெரிக்காவாகவே இருக்கும். அதுவே உலகின் அதிக அளவு கடன்பட்ட நாடு. நிதிநிறுவனங்கள் மற்றும் அமெரிக்க வங்கிகள் பெருமளவில் திவாலாகி விட்டதன் பலனாக அமெரிக்காவின் தேசிய அளவிலான கடன் தொகை 13 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் 90 சதவீதம் ஆகும். கடந்த 2008-ஆம் ஆண்டில் இது வெறும் 40 சதவீதமாகவே இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சீனாவின் 2.45 ட்ரில்லியன் டாலர்களுக்கான அன்னியச் செலாவணி கையிருப்பை நிர்வகிக்கும் SAFE இந்த மாதம் ஒரு கேள்வி - பதில் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பை சீனா ஒரு கொலைகார நடவடிக்கைக்கோ அல்லது அணு ஆயுதத்தைப் போன்றோ பயன்படுத்துமா என்பது தான் ஜூலை 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட கேள்வி. அதற்கு அளிக்கப்பட்டிருந்த பதில் அவ்வாறான ஒரு நடவடிக்கை முற்றிலும் தேவையற்றது, ஏனென்றால் சீனாவின் முதலீடானது சமபோக இலாபச் செயல் என்பதால் முதலீடு விஷயத்தை கட்டுப்படுத்துவது அதன் நோக்கம் அல்ல என்பதே ஆகும். அமெரிக்க கடன்பத்திரங்களை சீனா குறைத்துக்கொள்ளுமா என்ற மேலும் ஒரு கேள்விக்கு, அமெரிக்க கடன்பத்திரங்கள் சீனாவிற்கு மிக முக்கியமான ஒரு சந்தையை ஏற்படுத்தித்தந்துள்ளதாகவும், அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் ஒரு வழக்கமான முதலீட்டு நடவடிக்கை மட்டுமே ஆகும் என்றும் SAFE பதில் அளித்திருந்தது.

இந்த பதில்கள் ஏதும் உறுதியளிக்கும் வகையிலானவை அல்ல. அமெரிக்க டாலரின் மதிப்பு பெரும்பான்மையாகக் குறைக்கப்படும் பட்சத்தில் அது சீனாவின் கையிருப்பு டாலர் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு - போர் அல்லது நெருக்கடி ஏற்படாத பட்சத்தில் மத்திய வங்கி அன்னியச் செலாவணி கையிருப்பை ஒட்டுமொத்தமாக யுவானுக்கு பரிமாற்றம் செய்யப்போவதில்லை. அதனால் யுவானுக்கு நிகராக டாலர் மதிப்பு குறைக்கப்பட்டாலும் கூட அது நம் கையிருப்புக்கு நிஜமாகவே நஷ்டத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்று பதில் அளிக்கையில் தான் SAFE போர் என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியுள்ளது.

சீனாவில் ஏதேனும் ஒரு சூழலில் உள்நாட்டு கடன் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் பொருளாதார அமைப்பை சீராக நிலைநிறுத்துவதற்கு நாட்டின் டாலர் சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையும் அந்த அறிக்கையில் அடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியின்போது சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியின் பாதையில் செல்வதற்கான பெருமுயற்சியில் சீனாவின் வங்கிகள் வழங்கிய நிதி ஊக்கத் திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த நிதி ஊக்கத் திட்டங்கள் அனைத்தும் ஒரு நிலவியாபார குமிழைத் தான் உருவாக்கியுள்ளதே தவிர அரசாங்கத்தை அது கடன் வாங்கும் நிலைக்குத் தான் தள்ளிவிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் கடன் தொல்லை வரும் 2011-ஆம் ஆண்டு 7 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்றும், இது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தி்ன் 96 சதவீதம் ஆகும் என்றும் இல்லினாய்ஸில் உள்ள நார்த் வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விக்டர் ஷிஹ் மதிப்பிட்டுள்ளார். நிலவியாபார குமிழ் உடைந்து விடும் பட்சத்தில் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பில் கை வைக்காமலிருக்க பெய்ஜிங்கினால் இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் செயல்பட வாஷிங்டனிடம் SAFE வலியுறுத்தியுள்ளது. இது அமெரிக்காவின் கடன் பிரச்சனை பற்றி சீனாவின் கவலையை வெளிப்படுத்துகிறது, ஏனென்றால் சீனாவின் வீழ்ச்சிக்கு இந்த கடன் பிரச்சனையே போதுமானது. டிராகன் குளோபல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியை இந்த வாரம் நிறுவிய சீனா அமெரிக்க அரசாங்க கடனுக்கு வழங்கியுள்ள குறியீடு -ஏஏ (AA minus) ஆகும். இது ஒரு எதிர்மறையான தோற்றம் என்பது மட்டும் அல்லாமல், மேற்கத்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஒதுக்கியுள்ள ஏஏஏ என்னும் மதிப்பு குறியீட்டைவிட பல மடங்கு மோசமானதும் ஆகும்.

பான்னி மே மற்றும் பிரெட்டி மாக் ஆகிய இரு மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் சென்ற மாதம் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அமெரிக்க அரசு நிதி உதவி அளிக்க நேர்ந்ததோடு அமெரிக்காவின் நிலையற்ற கடன் பிரச்சனைகள் தொடர்பாக சீனாவுக்கு இருந்து வந்த கவலைகள் மேலும் அதிகரித்தன. அந்நிறுவனங்களுக்கு வாஷிங்டன் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 148 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்திருந்த நிலையிலும் பங்கு விலை ஒரு டாலர் என்ற படுமோசமான நிலையை எட்டியுள்ளது. பான்னி மே மற்றும் பிரெட்டி மாக் நிறுவனங்களிடமிருந்து சீனா 340 பில்லியன் டாலர்களுக்கான கடன் பத்திரங்களை வாபஸ் பெற்றுக்கொண்டதாக ஸ்டாண்டர்ட்ஸ் அண்டு புவர்ஸ் மதிப்பிட்டுள்ளது. அதே சமயம் பிற ஆய்வு நிறுவனங்கள் இந்த தொகையை 500 பில்லியனாக மதிப்பிட்டுள்ளன. வீடு மனை சந்தைத் துறையில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் அமெரிக்காவில் அத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு 93.6 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், இந்த ஆண்டு முதல் கால் இறுதியில் 18.2 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.

பான்னி மே மற்றும் பிரெட்டி மாக் நிறுவனங்களின் 80 சதவீத பங்குகளும் அமெரிக்க அரசாங்கத்திடம் உள்ளதால் சீனாவுக்கு வட்டி செலுத்துவது உறுதி என்று முதலீட்டாளர்களிடம் SAFE வாக்குறுதி கொடுத்துள்ளது. சீனாவின் பக்கம் உள்ள கடன்பத்திரங்களை வாங்க யாரும் முன்வரப் போவதில்லை என்பதே இந்த பீதிக்கு காரணம். 2009 - 2019 ஆண்டுகளில் இவ்விரு நிறுவனங்களுக்குமாக குறைந்தபட்சம் 389 பில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசாங்கம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவு காரியாலயம் மதிப்பிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் பணிபுரிந்த சீன நிதியியல் ஆய்வாளரான சொங் கொங்பிங்கின் கருத்தின்படி, அமெரிக்க வீட்டு சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடையுமானால் பிணை எடுப்பு 1,5-2 ட்ரில்லியன் டாலர் ஆகலாம் என்றார்.

நாட்டில் நிலவும் சமூகநிதிக்குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் உருவாகிக்கொண்டிருக்கும் சமூக பதற்றத்தை திசை திருப்பி விடுவதற்கு, சீனா மீது கடுமையான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி போன்ற அமெரிக்க அரசியல் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றன.

நியூயோர்க் டைம்ஸ் ஜூன் 24-ஆம் தேதியின் இதழில், சீனாவின் நாணய கொள்கை குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன் எழுதியதாவது: உலக பொருளாதாரமே பெருமளவில் பாதிப்புக்குள்ளாகிய சூழலில் இந்த கொள்கை முற்றிலும் பாதகமான விளைவுகளை உண்டாக்கக்கூடியதே ஆகும்.வர்த்தகத்துக்கு இடையூறு விளைவித்தாலும் சீனா அமெரிக்க கடன்பத்திரங்களை வாங்குவது, குறைந்த பட்சம் அவர்கள் குறைந்த விகிதத்திலான கடன் வழங்குபவர்கள் என்ற நிலையில், இது சீனாவின் தவறு அல்ல என்று வழக்கமான காலகட்டத்தில் வாதம் மேற்கொள்ளலாம். அதே போன்றே, முற்றிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார குமிழ் ஒன்றை சரி செய்ய கடன் வசதியை நாம் பயன்படுத்தியதும் சீனாவின் தவறு அல்ல என்ற வாதத்தை ஏற்கலாம்.தற்போது நாம் குறைந்த கடன் வசதியில் மிதக்கிறோம், பொருட்களும் சேவைகளும் வேண்டப்படுகிற நிலை இல்லாமல் போயுள்ளது என்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது சாத்தியம் அல்ல. சீனாவோ அளவுக்கு அதிகமாக வர்த்தகம் ஏற்படுவதைப் போன்ற பிரமையை உண்டாக்கி இந்த பிரச்சனையை மேலும் மோசமான நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. யுவான் நாணயத்தை சீனா உடனடியாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய க்ரூக்மேன் சீனா அதற்கு சம்மதிக்காவிட்டால் வர்த்தகத் தடை ஏற்படுத்துவது குறித்து பேச நேரம் வந்து விட்டது என்றார்.

சீனாவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இதே போன்ற சூழல்களில் நடுநிலை வகிப்பது வழக்கமாக இருந்தது என்றாலும் தற்போது அந்த நிலையிலிருந்து விலகத்தொடங்கியுள்ளன. சீனாவின் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக பெய்ஜிங் கூடுதல் பாதுகாப்பு வழங்கத் தொடங்கியதே இதற்கு காரணம். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவன தலைமை அதிகாரி ஜெப் இமெல்ட் சென்ற மாதம் இது குறித்து கூறுகையில்: நாம் வெற்றிபெறுவதையோ அல்லது சாதனை படைப்பதையோ அவர்கள் (சீன அரசாங்கம்) விரும்புவதாக என்னால் உறுதி கூற முடியாது என்றார்.

இந்த பதற்றம் அனைத்தும் அமெரிக்கா- சீனா இடையே நிலவி வந்த உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவில் நிலவிவந்த வீடு மற்றும் நுகர்வோர் கடன் குமிழ்கள் அங்கு சீன தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், தற்போதைய சந்தைகளை விரிவாக்கம் செய்யவும் அரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதே சமயம் ஏற்றுமதியின் வாயிலாக பெய்ஜிங் சம்பாதித்த டாலர்களை மறுசுழற்சி முறையில் திரும்ப அமெரிக்க பொருளாதார மண்டலத்திற்கே திருப்பி விட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு பொருளாதாரம் சரிவடையத் தொடங்கியபோது இருதரப்பினருக்கும் ஆதாயத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த செயல்கள் அனைத்தும் அதன் விபரீத அர்த்தத்திற்கு மாற்றப்பட்டது. டாலரின் மதிப்பை குறைப்பதன் மூலம் அரசு கடன்களை குறைக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அமெரிக்கத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் இந்த கொள்கையானது ஊதியத்தை குறைப்பதற்காகவும், நுகர்வு விகிதத்தை வெட்டுவதற்காகவும் அதன் மூலம் சர்வதேச சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுடனும் பிற பொருளாதார எதிரிகளுடனும் போட்டிபோட வைப்பதற்கும் என்றே உருவாக்கப்பட்டதாகும்