World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Stress test whitewash of European banks

ஐரோப்பிய வங்கிகளின் அழுத்தங்கள் பற்றிய சோதனை—ஒரு வெள்ளைப்பூச்சு

By Stefan Steinberg
26 July 2010

Back to screen version

ஐரோப்பிய வங்கிமுறை மேற்பார்வைக் குழுவினால் (CEBS) வெள்ளியன்று வெளியிடப்பட்ட, மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய வங்கிகளின் அழுத்தம் பற்றிய சோதனை முக்கிய நிதிய நிறுவனங்கள் செயல்பாடு பற்றிய ஒரு வெள்ளைப்பூச்சு என்று ஆகியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் மூடப்படும் வரை 91 ஐரோப்பிய வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புக்கள் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவதை CEBS தாமதப்படுத்தியுள்ளது.

ஏழு ஐரோப்பிய வங்கிகள் மட்டும்தான் அழுத்தச் சோதனையில் தோல்வியுற்றதாக அறிக்கை அறிவிக்கிறது. இந்த எண்ணிக்கை பல பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்த 10 முதல் 15 வங்கிகள் வரை என்னும் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாகும். ஒரே ஒரு ஜேர்மனிய வங்கிதான், Hypo Real Estate (HR) சோதனையில் தோற்றது; இதைத்தவிர ஐந்து ஸ்பெயின் நாட்டு வங்கிகளும் ஒரு கிரேக்க வங்கியும் தோல்வியுற்றன.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட அழுத்தச் சோதனைகளின் மாதிரியில் ஐரோப்பிய வங்கி அழுத்தச் சோதனைகளும் நடத்தப்பட்டன. இதே போல்தான் பெடரல் ரிசேர்வ் குழு முக்கிய அமெரிக்க வங்கிகளின் சோதனைகளை திரித்து நடத்தியது; காரணம், சந்தைகளுக்கு ஊக்கம் கொடுப்பதற்கும் வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன எனச் சான்று கொடுப்பதற்கும்தான்.

வெள்ளிக்கிழமை ஐரோப்பிய சோதனை முடிவுகள் வெளிவரும் முன், ஒரு மூத்த சந்தை பகுப்பாய்வாளர், “ஜேர்மனியில் HRE ஒன்றுதான் தோற்றுள்ளது என்றால், அது சோதனைகள் முழுவதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்—ஜேர்மனிக்கு மட்டும் அல்ல, ஐரோப்பா முழுவதிற்கும்” என்று அறிவித்தார். 2008ல் திவால் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், HRE ஜேர்மனிய அரசாங்கம் தேசியமயமாக்கப்பட்டு 100 பில்லியன் யூரோக்களுக்கும் மேலான நிதியைப் பிணை எடுப்பாக பெற்றது.

ஒரு வாரத்திற்கு முன்பு, பகுப்பாய்வாளர்கள் அழுத்தச் சோதனைகளில் தோல்வியுறும் வங்கிகளுக்கு மறு முதலீடு செய்யும் விதத்தில் 50 ல் இருந்து 100 பில்லியன் யூரோக்கள் வரை தேவைப்படும் என்று மதிப்பிட்டிருந்தனர். ஆனால், CEBS கருத்துப்படி 7 தோல்வி அடையக்கூடிய வங்கிகளையும் உறுதிப்படுத்த 3.5 பில்லியன் யூரோக்கள் கூடுதல் மூலதனம் இருந்தால் போதும் எனத் தெரிகிறது.

ஓராண்டிற்கு முன்பு 25 ஐரோப்பிய வங்கிகளுக்கு மட்டும் அழுத்தச் சோதனைகள் திட்டமிடப்பட்டிருந்தன; முடிவுகள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன்பின் கிரேக்க கடன் நெருக்கடி இந்த ஆண்டு முன்னதாக வெடித்தெழுந்தது, விரைவில் ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. யூரோவின் நிலைப்பாடே ஆபத்திற்கு உட்பட்ட நிலையில், ஐரோப்பிய தலைவர்களும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) யூரோப்பகுதி நாடுகளின் அரசாங்கக் கடன்களை உத்தரவாதம் செய்வதற்கும் பொது நாணயத்தை உறுதிப்படுத்தவும் 750 பில்லியன் யூரோ நிதியை நிறுவ உடன்பட்டனர்.

யூரோப்பகுதியில் தங்கள் முதலீடுகளுக்கு உத்தரவாதங்களை கோரிய அமெரிக்க, ஆசிய நிதிய மற்றும் அரசியல் வட்டங்களில் இருந்து கணிசமான அழுத்தத்தை தொடர்ந்து, ஐரோப்பிய அதிகாரிகள் தயக்கத்துடன் அழுத்தச் சோதனைகளை மொத்தம் 91 ஐரோப்பிய வங்கிகள்மீது நடத்த ஒப்புக் கொண்டனர்.

இந்த வங்கிகளே அழுத்தச் சோதனையின் வரம்புகளைப் பெரிதும் நிர்ணயித்தன என்பது இப்பொழு தெளிவாகியுள்ளது. கடந்த வாரம் Der Spiegel ல் வந்துள்ள தகவல் ஒன்றின்படி சோதனைக்குட்படுத்தப்பட்ட 14 ஜேர்மனிய வங்கிகளும் “எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, நம் சோதனைக்கான வரம்புகள் ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பியக்குழு மற்றும் ஐரோப்பிய வங்கிமுறை கண்காணிப்புக்குழுக்களால் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நீக்கப்பட்டுவிட்டன.” என்று கூறப்பட்டன.

சோதனை முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, Franckfurter Rundschau தன் மதிப்பீட்டில் காரசாரமாகத் தாக்கியுள்ளது. ஒரு தலையங்கத்தில், “பெயரளவிற்கு அழுத்தச் சோதனைகள் ஐரோப்பிய வங்கிகள் உறுதியானவை என்பதை நிரூபிக்க என்று கொள்ளப்பட்டன. மாறாக அவை ஐரோப்பிய வங்கிகள் மீதான அதிகாரத்தின் செயலற்ற தன்மையை இரக்கமற்ற முறையில் வெளிப்படுத்தியுள்ளன” என்று செய்தித்தாள் எழுதியுள்ளது.

ஐரோப்பிய வங்கிமுறை மேற்பார்வையாளர்கள் குழு (Committee of European Banking Supervisors) 25 ஊழியர்களைத்தான் கொண்டுள்ளது என்றும், 91 வங்கிகளை மதிப்பீடு செய்யும் “இந்த மகத்தான வேலையைச் செய்வதில் அது திணறியது”, தேசிய வங்கிகள் மீதான அதிகாரம் செயலற்று நின்றது. ஜேர்மனிய நிதியப் பணிகள் அதிகாரம் தொடர்புடைய 14 ஜேர்மன் வங்கிகளின் தலைவர்களுக்கு சந்தைகளை சமாதானப்படுத்துவதற்கும் சோதனைகளில் வெற்றிபெறவும் தேவையான பங்கு மூலதனத்தின் மதிப்பீட்டை கோரியது.

“இது கொள்ளையர்களை தங்கள் காவல் வழிவகைகளை முன்னேற்றுவித்துக் கொள்ளக் கேட்டுக் கொள்வது போல் இருந்தது” என்று செய்தித்தாள் முடிவுரை கூறியது.

நிதிய வல்லுனர்கள், வங்கிகளே விசாரணை புரிபவர்களுக்கு தங்கள் இருப்புநிலைக் குறிப்புக்கள் பற்றிய தகவலை அளித்தனர் என்ற உண்மையைத் தவிர மற்ற காரணங்களுக்காகவும் அழுத்தங்கள் பற்றிய சோதனையை குறைகூறியுள்ளனர். CEBS தன்னுடைய சோதனையை இரு ஆண்டுகள் மந்தியிலையில் சரிந்துள்ள பின்னணியை தளமாக கொண்டது; இக்காலத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் 20 சதவிகிதச் சரிவைக் கண்டன. சோதனைகள் கிரேக்கம் போன்ற அரசு கடன் திருப்பிக் கொடுப்பதில் ஏற்படக்கூடிய தாமதம், கொடுக்காமல் போய்விடுவது போன்ற செயற்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் இச்சோதனைகள் வங்கியின் வணிக கணக்குகளில் உள்ள நிதியத்தைத்தான் கருத்தில் கொண்டன. ஒரு நிறுவனம் தன் நிதிகள் ஒரு கணக்குப் பதிவேட்டில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றுவதை அனுமதித்தன. சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் CEBS சோதனைகள் போதுமான அளவு கடுமையாக இல்லை என்று தான் கருதுவதாகக் கூறியது.

Cantor ல் சந்தை மூலோபாய வல்லுனராக இருக்கும் Stephen Pope, “இச்சோதனையில் எந்த அழுத்தத்தையும் நான் காணவில்லை. R&R வார இறுதியில் வங்கிகளை விடுமுறைக்கு அனுப்புவது போல் இது இருந்தது.” என்றார். VTB மூலதனப் பொருளாதார வல்லுனர் Neil MacKinnon, “இது ஒரு வெள்ளைப் பூச்சுபோல் உள்ளது, சந்தைகளின் ஆரம்ப எதிர்கொள்ளல் இது பற்றி அவநம்பிக்கைத்தனம் என்றுதான் உள்ளது.” என்றார்.

ஐரோப்பிய அதிகாரிகள் அழுத்தங்கள் சோதனையை தங்கள் கண்டத்தின் வங்கிப் பிரிவின் வலிமைக்கு உதாரணம் என்று பாராட்டினர். உண்மையில் ஆராயப்பட்ட வங்கிகளில் மூன்றில் ஒரு பகுதி இன்னமும் அரசாங்க நிதியத்தைத்தான் நம்பியுள்ளன. CEBS ஆய்வு 91 வங்கிகளில் 38 வங்கிகள் 170 பில்லியன் யூரோ என்னும் அரசாங்க ஆதரவைத் தொடர்ந்து நம்பியுள்ளன.

2008 நிதியச் சரிவைத் தொடர்ந்து ஐரோப்பிய நிதிய மற்றும் அரசியல் வட்டங்களில் அத்தகைய பேரழிவு இனி வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அதிகாரம் கொண்டுள்ள நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற பேச்சு அதிகம் இருந்தது. CEBS அறிக்கை பெரும் பங்குதாரர்கள், முதலீட்டாளர்களுக்கு ஏதும் மாறவில்லை என்பதைத்தான் புலப்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் வணிகத்தை வழக்கம் போல் தொடரலாம், அவர்களுடைய சூதாட்ட இழப்புக்களை ஈடு செய்ய இன்னும் அரசாங்கப் பிணை எடுப்புக்களை நம்பலாம் என்ற பாதுகாப்பும் உள்ளது.