World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The “new normal”: More than one in five Americans at risk of destitution

“புதிய வழமை”: ஐந்தில் ஒரு அமெரிக்கருக்கு மேல் வறிய நிலைக்கு உள்ளாகும் ஆபத்து

By Barry Grey
29 July 2010

Back to screen version

2009ம் ஆண்டு ஐந்து அமெரிக்கர்களில் ஒருவருக்கும் மேல் வீட்டு வருமானத்தில் முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான இழப்பைக் கண்டனர் என்று ''பொருளாதார பாதுகாப்பு ஆபத்தில்'' என்ற தலைப்பில் ராக்பெல்லர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 1960 களில் இருந்து பொருளாதாரப் பாதுகாப்பின்மை எவ்வாறு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை ஆவணமிட்டு, 1985ல் இருந்து 2009 க்குள் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான ஆண்டு வருமான இழப்பு 49.9 சதவிகிதம் என்று ஆகியுள்ளது என்றும் முடிவுரை கூறியுள்ளது.

“மக்கள் தொகை அடிப்படையில் இந்தப் போக்கைக் கவனித்தால், கிட்டத்தட்ட 46 மில்லியன் அமெரிக்கர்கள் 2007ல் பாதுகாப்பு அற்றவர்கள் என்று, 1985ம் ஆண்டு 28 மில்லியனில் இருந்து உயர்ந்து கணக்கிடப்பட்டுள்ளனர்” என்று அறிக்கை கூறுகிறது. அறிக்கையை தயாரித்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாக்கப் ஹாக்கர் ஒரு பேட்டியாளரிடம், “அடிப்படையில் நாம் பார்ப்பதுதான் இப்பொழுது நம்மால் “புதிய வழமை” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையை மெதுவாக அதிகரித்து வருகிறோம்.” என்றார்.

பொருளாதாரப் பாதுகாப்புக் குறியீடு (Economic Security Index-ESI) என்பதை இக்குழு தயாரித்துள்ளது. இதில் ஒரு கொடுக்கப்பட்டுள்ள ஆண்டில் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் குறைந்த பட்சம் 25 சதவிகித சரிவைக் கொள்ளும் அமெரிக்கர்கள் பற்றிய கணக்கீடு அளவிடப்பட்டுள்ளது. இழந்த வருமானத்தை ஈடுகட்டுவதற்கு போதிய நிதியப் பாதுகாப்பு இவர்களிடம் இல்லை. இத்தகைய திடீரென்ற சரிவு பொதுவாக வேலையின்மை, உயர்ந்த மருத்துவச் செலவுகள், அல்லது இரண்டும் சேர்ந்த நிலையில் மக்களை வறிய நிலையை எதிர்கொள்ளத் தள்ளிவிடும்.

இந்த அறிக்கை 2010 புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்ளவில்லை; இவ்வாண்டில் நீண்டகால வேலையின்மை பெருமளவு ஏற்பட்டுவிட்டது. இந்த ஆண்டிற்கான ESI 2009 விடக் கணிசமாக உயர்ந்துவிடும்.

அதிரவைக்கும் விதத்தில் அமெரிக்கர்களில் 60 சதவிகிதத்தினர் 1966-2008 காலத்தில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட வருமான இழப்பைக் கொண்டனர் என்றும், இந்த இழப்புக்களின் அளவு 1980 களின் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலும் அனைத்து வருமானப் பிரிவுகளிலும் பொதுவாகக் காணப்பட்டது என்றும் ஆய்வு கூறுகிறது.

“மிக அதிக வருமானம், கல்வித் தேர்ச்சி உடையவர்கள் குறைந்த பாதுகாப்பின்மையைத்தான் எதிர்கொண்டனர். அதிக வசதியற்றவர்கள், குறைந்த கல்வியறிவு உடையவர்கள், ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் அதிக பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர். ஆனால் கிட்டத்தட்ட அனைத்துக் குழுக்களுமே கடந்த 25 ஆண்டுகளில் பாதுகாப்பின்மை மிகவும் அதிகரித்துள்ளதைத்தான் கண்டனர்.” என்று அறிக்கை கூறியுள்ளது.

சராசரி வருமானச் சரிவின் அளவு 1985க்கும் 1995க்கும் இடையே 38.2 சதவிகிதமும், 1997-2007க்கு இடையே 41.4 சதவிகிதமும் அதிகரித்து விட்டது என்றும் ஆய்வு கண்டுள்ளது. வருமான பாதுகாப்பின்மையின் அளவு ஒப்புமையில் வேலையின்மையின் அளவிற்கு எந்தக் கட்டத்திலும் இல்லாதவாறு கடந்த கால் நூற்றாண்டில் உயர்ந்துதான் விட்டது. 1985ல் வேலையின்மை விகிதம் 7.2 சதவிகிதம், ESI இனது 12 சதவிகிதம் என்று இருந்தது. 2002ல் வேலையின்மை விகிதம் 5.8 சதவிகிதம் என்று இருந்தபோது ESI இனது 17 சதவிகிதம் ஆயிற்று.

மருத்துவச் செலவுகள், வீட்டுக் கடன் ஆகிய இரண்டின் வெடிப்புத் தன்மை மிகுந்த அதிகரிப்புத்தான் பொருளாதாரப் பாதுகாப்பின்மை நீடித்து உயர்ந்துடன் தொடர்பு கொண்டது என்றும், பல தசாப்தங்கள் பொருளாதார ஏணியின் உயர்ந்த மட்டத்தில் செல்வக் குவிப்பு இருப்பதுடனும் அறிக்கையினால் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸின் வரவு-செலவுத் திட்ட அலுவலகம் 1979 க்குள் 2006க்கும் இடையே சராசரி வரிக்குப் பிந்தைய வருமானம் அமெரிக்க இல்லங்களின் மத்திய ஐந்தில் ஒரு பகுதிக்கு உயர்ந்தது என்றும் ஆனால் இது பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களுக்கு 112 சதவிகிதம் உயர்ந்தது என்றும் மிக உயர்ந்த 1 சதவிகிதத்தினருக்கு 256 உயர்ந்தது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளது.

ராக்பெல்லர் அறக்கட்டளை ஆய்வினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரப் பாதுகாப்பின்மையில் தீவிர உயர்வு, அமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள், ஊதியங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை மூன்று தசாப்த காலமாக தாக்கிவருவதின் விளைவாகும். இத்தாக்குதல் செப்டம்பர் 2008 நிதிய நெருக்கடி வெடித்ததில் இருந்து இன்னும் தீவிரமாகியுள்ளது. அந்நெருக்கடி 1930 களுக்கு பின்னர் மிக மோசமான மந்த நிலையைக் கொண்டு வந்தது. ஒபாமாவின்கீழ் இந்த நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் உந்துதல் ஊதிய வெட்டுக்கள், அதிக ஊதியம் கொடுக்காமல் உற்பத்தித்திறனை மட்டும் அதிகமாக்குதல், மிருகத்தனமான முறையில் சமூகநலச் செலவுகள் குறைப்பு மாநில, உள்ளூராட்சி அரசாங்கங்களில் ஏற்படுத்தப்பட்டது ஆகியவை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம் புஷ்ஷினால் தொடக்கப்பட்ட வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பை விரிவாக்கியது. இது வெகுஜன மக்கள் வேலையின்மையைப் பயன்படுத்தி நிரந்தரமாக அமெரிக்க தொழிலாளர்களுடைய ஊதியங்கள், நிலைமைகள் ஆகியவற்றை ஆசியாவில் உள்ள வறிய தொழிலாளர்கள் தரத்திற்குக் குறைக்கலாம் என்ற ஆளும் வர்க்க விருப்பத்திற்கு ஆதரவு அடையாளம் காட்டியது. அவ்வாறுதான் ஜெனரல் மோட்டார்ஸும், கிறைஸ்லரும் கடந்த ஆண்டு திவால் தன்மைக்கு ஒபாமாவின் கார் பணிப் பிரிவு (Auto Task Force) செயல்பட்டதைக் குறிக்க முடியும். இதையொட்டி புதிய ஆலைகள் மூடல், பணிநீக்கங்கள், புதிதாகச் சேர்க்கப்படும் கார்த் தொழிலாளர்களுக்கு முந்தையதரத்தில் பாதி என்ற முறையில் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை சுமத்தப்பட முடிந்தது.

இதையடுத்து சுகாதாரப் பாதுகாப்புச் “சீர்திருத்தம்” என்று அழைக்கப்பட்டது வந்தது. இது வணிகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் சுகாதாரப் பாதுகாப்பு செலவுகளை பாதுகாப்பை பகிர்ந்து கொடுத்தல், பல மில்லியன் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்களுடைய நலன்களைக் குறைத்தல் ஆகிவற்றின் மூலம் குறைத்துவிடும். சுகாதாரப் பாதுகாப்பு மறுசீரமைப்பிற்கு பின்னர் நிர்வாகம் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளையும் கைவிட்டுவிட்டது. இதற்குக் காரணம் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கு மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் நம்பியுள்ள அடிப்படைச் சமூகநலத் திட்டங்களை தாக்குவதில் குவிப்புக் காட்டுவதற்குத்தான்.

இக்கொள்கைகளின் விளைவு பெருநிறுவன இலாபங்களில் மிக அதிக உயர்வாகும். இது தொழிலாளர் பிரிவுச் செலவினங்களை பணிநீக்கங்கள், ஊதிய, நலன்கள் வெட்டுக்கள் மற்றும் ஊதியத்தை உயர்த்தாமல் தொழிலாளர் உற்பத்தித் திறனை மட்டும் கூடுதலாக கொடுக்க வேண்டும் ஆகியவற்றை செயல்படுத்துவதைத் அடித்தளமாகக் கொண்டுள்ளது

“ஆழ்ந்த வெட்டுக்களில் தொழில் நிறுவனங்கள் ஏற்றமிகு இலாபங்களை காண்கின்றன” என்ற தலைப்பில் ஜூலை 26ம் திகதி நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்கப் பெருநிறுவன இலாபங்கள் 2008 கடைசியில் இருந்து 2010 முதல் காலாண்டிற்குள் 40 சதவிகிதம் உயர்ந்தன என்று கூறியுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இலாப விகிதம் மிக அதிகளவிலான 8.9 சதவிகிதத்தை அடையும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் காலாண்டின் முடிவுகளை வெளியிட்டுள்ள S&P 500 நிறுவனங்கள் மொத்தம் 175ல் பத்தில் ஒன்றிற்கு மேல் குறைந்த விற்பனையில் அதிக இலாபம் அடைந்ததாகவும், இது தற்போதைய மந்தநிலைக்கு முந்தைய சராசரி காலாண்டில் இருந்ததைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும் என்று டைம்ஸ் கூறியுள்ளது. இரண்டாம் காலாண்டின் வருமானங்களை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் வருமானங்கள் சராசரியாக 6.9 சதவிகிதம் உயர்ந்தன, இலாபங்கள் 42.35 சதவிகிதம் உயர்ந்தன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரை மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் Harley Davidson கடந்த வாரம் விற்பனை எண்ணிக்கை குறைந்தபோதிலும்கூட, $71 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதை வெளியிட்டுள்ளது. இது ஓராண்டிற்குமுன் இருந்த இலாபத்தைப் போல் மூன்று மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஆண்டு நிறுவனம் 2,000 வேலைகளை தகர்த்தது, மற்றும் 1,400 முதல் 1,600 வேலைகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைக்க உள்ளது. Harley பங்கு அதன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட தினத்தில் 13 சதவிகிதம் உயர்ந்தது.

சரியும் விற்பனைகள் மற்றும் வருமானங்களை இழந்தும் தங்கள் அடித்தளத்தை முன்னேற்றியுள்ள நிறுவனங்களில் General Electric, JPMorgan Chase, Hasbro, Ford ஆகியவை உள்ளன. Ford இன் வடஅமெரிக்கச் செயற்பாடுகளில் 2010ல் 2005ல் இருந்து வருமானச் சரிவு இருந்தபோதிலும் 2010ல் 5 பில்லயன் டாலருக்கும் மேல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005-2010 காலத்தில் நிறுவனம் அதன் வட அமெரிக்க தொழிலாளர் தொகுப்பை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைத்தது.

டைம்ஸ் கட்டுரை வந்த அன்றே வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையை வெளியிட்டது; அதில் நிதியச் சந்தைகள் பொதுவாக விரிவாக்க திட்டங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களை தண்டிக்கின்றன, புது தொழிலாளர்களை சேர்க்காதவை, இன்னும் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வர்க்கப் போர்க் கொள்கை நிதியப் பிரபுத்துவத்தை இன்னும் செல்வக் கொழிப்பு உடையதாகச் செய்துள்ளது. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த தசாப்தத்தில் மிக அதிக ஊதியம் பெற்ற பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலின் உயர்மட்டத்தில் Oracle ன் தலைமை நிர்வாக அதிகாரி லாரன்ஸ் எல்லிசன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இவர் ஈட்டிய ஊதியம் $1.84 பில்லியன் ஆகும்.

அவருடைய சராசரி ஆண்டு வருமானம் $184 மில்லியன் என்பது எல்லிசனை அவருடைய மொத்தச் சொந்து மதிப்பை $28 பில்லியன் ஆக்க தவியது. எல்லிசன் மற்றும் அவருடைய சக தலைமை நிர்வாகிகள் வாழும் முறை Oracle ன் உயர் நிர்வாக அதிகாரிகள் பல போர் விமானங்களை வைத்துள்ளார், கலிபார்னியாவில் $200 மில்லியன் மதிப்புடைய பண்ணையை வைத்துள்ளார், அதில் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி உள்ளது. இதைத்தவிர அவருக்கு மாலிபு, ரோட தீவு ஆகியவற்றிலும் பெரும் அரண்மனை போன்ற வீடுகள் உள்ளன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கொடுத்துள்ள பட்டியலில் 25 உயர் நிர்வாக அதிகாரிகளின் வருமானம் $13.5 பில்லியன் ஆகும், இது ஒரு நிர்வாகிக்கு ஒரு தசாப்தத்தில் சராசரி $540 மில்லியன் என்று கணக்கிடப்பட முடியும்

இத்தகைய பேராசையும், இழிந்த செல்வக் குவிப்பும், அமெரிக்காவில் மில்லியன் கணக்கான பொருளாதாரப் பாதுகாப்பின்மை, வறுமை, வீடின்மை உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்குப் பட்டினி என்ற நிலையின் மறு பக்கம் ஆகும்.