World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Hundreds of billions for the banks

France votes credits for European Financial Stability Fund

வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்கள்

ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிதிக் கடனுக்கு பிரான்ஸ் வாக்களிக்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
8 June 2010

Back to screen version

ஜூன் 1 ம் திகதி பிரெஞ்சு தேசிய சட்டமன்றமானது ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிதிக்கு (EFSF) பிரான்சின் பங்கான 111 பில்லியன் யூரோக்களை அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தது. இது, மே மாதம் யூரோவிற்கு எதிரான ஊகத்தைத் தடுப்பதற்கும், கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் அரசாங்கக் கடன்களில் தாமதம் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கும் யூரோப் பகுதி அரசாங்கங்கள் நிறுவ உடன்பட்ட நிதியாகும்.

இச்சட்டம் அதிகப் பெரும்பான்மையுடன் இயற்றப்பட்டது, 462 வாக்குகள் ஆதரவு, 33 வாக்குகள் எதிர்ப்பு என்று பதிவாயின. எதிர்க் கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS) ஆளும் பழமைவாத UMP உடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் 25 பிரதிநிதிகள் இதற்கு எதிராக வாக்களித்தனர். அதேபோல் ஒரு சில வலதுசாரி UMP தேசியவாதிகளும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதேபோன்ற இரு கட்சி ஒற்றுமை மே 3ம் திகதியும் இருந்தது. அப்பொழுது தேசிய சட்டமன்றமானது 16.8 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதியம் கிரேக்கத்திற்குக் கொடுத்த கடனின் பங்களிப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இக்கடனின் நிபந்தனையானது கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ கிரேக்க மக்கள் மீது ஊதியங்கள், ஓய்வூதியங்கள், வேலைகள் ஆகியவற்றின் மீது மாபெரும் வெட்டுக்களைச் சுமத்த வேண்டும் என்பதாகும்.

EFSF வாக்களிப்பு செனட்டால் ஜூன் 3ம் தேதி உறுதி செய்யப்பட்டது, அப்பொழுதும் இதே போல் பெரிய வித்தியாசமாக 309க்கு-24 வாக்குகள் பதிவாயின. வாக்களிப்பு பற்றிய செய்திகள் பொதுவாக செய்தித் தாட்களின் உள்பக்கங்களில் முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டன. மே 21ம் தேதி ஜேர்மனிய பாராளுமன்றம் EFSF க்கு தன் பங்காக 148 பில்லியன் யூரோக்களை அளிக்க வாக்களித்த பின்னர் இது நடந்துள்ளது.

வரவு-செலவுத் திட்ட மந்திரி François Baroin, அரசாங்கம் மிகப் பெரிய செலவினக் குறைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் இதில் சமசீர் வரவு-செலவுத் திட்ட திருத்தத்திற்கான அறிமுகமும் இருக்கலாம் என்று தெளிவாக்கியுள்ளார். "வரிகளை நாங்கள் தொடமாட்டோம்" என்று அவர் உறுதிமொழி கொடுத்தார். "நம் AAA தரத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் சந்தைகளின் மீது அதிகமாக தங்கியிருக்கும் நிலை இருக்காது, அங்குத்தான் நாம் சமசீர் வரவு-செலவுத் திட்டத்துக்காக நம் அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிய கருத்தைப் பெறுகிறோம்." என்று சேர்த்துக் கொண்டார்.

பிணை எடுப்புத் திட்டங்கள் பிரான்சின் 2010 வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை 152 பில்லியன் யூரோக்கள் என்று இருக்கும் கணிப்புக்களை மாற்றாது என்று Baroin கூறினார்.

EFSF பிணை எடுப்புத் திட்டங்கள், நிதியப் பிரபுத்துவத்தால், நிதிப் பிரபுத்துவத்திற்கு, நிதியப் பிரபுத்துவமே எடுக்கும் ஒரு பிற்போக்குத்தன நடவடிக்கை ஆகும். கிரேக்கம், ஸ்பெயின் அல்லது பிற நாடுகளின் கடன்களை இரத்து செய்யாது. அவைதான் இப்பொழுது நிதியச் சந்தைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும் சர்வதேச வங்கிகளைப் பிணை எடுக்கும் அதே நேரத்தில் அதிக கடன்பட்டுள்ள நாடுகளை இன்னும் கடுமையான முறையில் வெட்டுக்களையும் வருங்காலத்தில் அதிக கடன் திருப்பிக் கொடுத்தல் செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தும். செல்வம் நிறைந்துள்ள நாடுகளில் கடன்களை விரிவாக்கும் செலவுகளும் அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தில் அழுத்தங்களை அதிகரிக்கும்.

இந்த நடவடிக்கைகள் கடன்பட்டுள்ள நாடுகளை ஐரோப்பிய உறுதிப்பாட்டு உடன்படிக்கையின் தேவைகளுக்கு உட்பட்டு நடக்க வைக்கும். அதற்கு Maastricht அளவு கோல் என்றும் பெயர் ஆகும். அவற்றின்படி ஒரு நாட்டின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். அதன் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்தை தாண்டக் கூடாது.

EFSF க்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பானது இதேபோல் பிற்போக்குத்தன, தேசிய தன்மையைத்தான் கொண்டிருந்தது. PCF ன் பிரதிநிதி Jean-Pierre Brard ஜேர்மனிக்கு எதிராக ஒரு சோவனிச வெறித் தூண்டுதல் உரையைத் தொடக்கி பிணை எடுப்பின் முழுச் செலவையும் அது ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஜேர்மனி "ஒரு திருடும் மரங்கொத்தி " என்று ஒப்பிட்டுக்கூறிய அவர் "நாஜிக் கொடுங்கோன்மைக் காலத்தில் கிரேக்கத்தைச் சூறையாடியது, கிரேக்கத்திற்கு ஜேர்மனி கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கோருவதின் மூலம் பிரான்சின் மதிப்பு உயரும்" என்று அவர் கூறி முடித்தார்.

இது ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முழுவதையும் கொள்ளை அடிப்பதற்குப் பதிலாக வங்கிகள் ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தை மட்டும் கொள்ளை அடிப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என்ற திட்டத்தைத்தான் கொடுக்கிறது.

இத்தகைய கருத்துக்கள் ஐரோப்பிய அரசியல், நிதிய அதிகாரிகளுக்கு இடையே பிணை எடுப்பை எப்படி நடத்துவது என்பது பற்றிய சொற் போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதி ஆகும். இவை குட்டி முதலாளித்துவ கிரேக்க SYRIZA கூட்டணியின் Manolia Glezon உடைய திட்டங்களைத்தான் எதிரொலிக்கின்றன.

மே 31 அன்று, Der Spiegel ஒரு கட்டுரையை "ஜேர்மனிய மத்திய வங்கிக்காரர்கள் பிரெஞ்சு சதி பற்றிச் சந்தேகிக்கின்றனர்" என்ற கட்டுரையை வெளியிட்டது. அதில் கிரேக்க அரசாங்கத்தின் கடனை ஐரோப்பிய மத்திய வங்கி வாங்கும் கொள்கைக்கு ஜேர்மனியின் எதிர்ப்புக்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இது கிரேக்க அரசாங்கத்திற்கு கடன்கொடுத்தவர்களை--குறிப்பாக முக்கிய பிரெஞ்சு வங்கிகளை--அவை வைத்துள்ள அபாயம் நிறைந்த கிரேக்க பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கி புதிதாக அச்சடிக்கும் பணத்திற்கு மாற்றாகப் பெறுவதற்கு--அனுமதிக்கிறது. இக்கொள்கை பிரெஞ்சு அதிகாரிகளாலும் பெருமளவு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் இயக்குனர் Jean-Claude Trichet, மற்றும் சர்வதேச நாணய நிதியின் நிர்வாக இயக்குனர் Dominique Strauss-Kahn ஆகியோராலும் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கி ஏற்கனவே 26 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய அரசாங்கப் பத்திரங்களை வாங்கிவிட்டது, ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் யூரோ மதிப்புடையவற்றை வாங்குகிறது என்று Der Spiegel கூறுகிறது. ஆனால் ஜேர்மனிய வங்கிகள் பேர்லினிடம் ஐரோப்பிய மத்திய வங்கியின் வாங்கும் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளன.

ஜேர்மனிய அதிகாரிகள் "ஒரு பிரெஞ்சு சதியை" சந்தேகிக்கின்றனர் என்று கூறிய Der Spiegel, எழுதியது: "இந்தக் கொள்கை ஐரோப்பிய மத்திய வங்கியை "மோசமான வங்கி" என்று அழைக்கப்படுவதாக மாற்றுகிறது (நச்சுச் சொத்துக்களை மற்ற நிறுவனங்களுக்கு உதவுவதற்காக வாங்கும் வங்கி); இதன் தலைவர் இதை முற்றிலும் மறுத்தாலும் நிலைமை இதுதான். ஐரோப்பிய வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பில் இருக்கும் பத்திரங்களின் (junk bonds- a high-yielding high-risk security, typically issued to finance a takeover) தொகுப்பு தொடர்ந்து பெருகுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி விலைகளை செயற்கையாக உயர்த்தி வைத்துள்ளது. வங்கிகளுக்கு தங்கள் அபாய சொத்துக்களை மத்திய வங்கியிடத்தில் தள்ளிவிட நல்ல ஊக்கத்தைக் கொடுக்கிறது"

அதே தினம், ஐரோப்பிய மத்திய வங்கியின் சபை உறுப்பினர்களான Axel Weber, Mario Draghi ஜேர்மனிய, இத்தாலிய மத்திய வங்கிகளின் தலைவர்களாக முறையே இருப்பவர்களும் ஐரோப்பிய மத்திய வங்கி அரசாங்கக்கடன்களை வாங்குவதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பணவீக்க ஆபத்தைச் சுட்டிக்காட்டிய வேபர் இத்திட்டம், "உறுதிப்பாட்டு அபாயம்" என்ற நிலைமையைக் கொடுக்கும் என்றும் "துல்லியமான முறையில் இலக்கு கொண்டு, குறைந்த வரம்பை பெற்றிருக்க வேண்டும்" என்றும் கூறினார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திர வாங்குதல்கள் "சந்தைகள் தன்னார்வத்துடன் தொடர்புடைய நாடுகளின் பத்திரங்களில் வணிகத்தை தொடர்ந்தவுடன் மிக விரைவில் நிறுத்தப்பட வேண்டும்" என்று ட்ராகி கூறினார். ஆஸ்திரிய மத்திய வங்கி நடாத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் Trichet "எளிமையான சொற்களில், நாங்கள் ஒன்றும் பணம் அச்சிடவில்லை" என்றார். இன்னும் அதிக வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.