World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கணனி தொழில்நுட்பம்

Google publishes figures on government requests for data

அரசாங்கம் கோரும் தகவல் விபரங்களைக் கூகுள் வெளியிடுகிறது

By Mick Ingram
26 April 2010

Back to screen version

அரசாங்க கோரிக்கைகளை பட்டியலிடும் கருவி [http://www.google.com/governmentrequests] என்றழைக்கப்படும் ஒரு புதிய செயல்பாட்டை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைக்கொண்டு, கூகுள் வழக்கமாக சேகரிக்கும் தகவல்கள் மீது அரசாங்கங்கள் எத்தனை கோரிக்கைகளை கோரியிருக்கின்றன என்பதைப் பயன்படுத்துபவர்களால் பார்க்க முடியும்.

இந்த கருவியைக் கொண்டு, பயன்படுத்துபவர்கள் தகவல்களைக் கோரும் அரசாங்க முறையீடுகள், அல்லது அரசாங்கங்கள் கோரும் நீக்கப்பட வேண்டிய முறையீடுகளின் புள்ளிவிபரங்களைப் பார்வையிட முடியும். அரசாங்கங்கள் கோரும் நீக்குவதற்கான முறையீடுகளில், நிறுவனங்களால் வழக்கமாக செய்யப்படுகின்ற நீக்கும் குழந்தைப் பாலியல் அல்லது காப்புரிமையுள்ள யு-ரியுப் பொருள்கள் உள்ளடங்காது. பயன்படுத்துபவர்கள் தகவலைக் கோரும் பட்டியலானது, கோரிக்கைகளின் எண்ணிக்கையைத் தவிர வேறெந்த விபரங்களையும் அளிப்பதாக இல்லை. மேலும் கூகுள் அந்த கோரிக்கைகளுக்கு உடன்பட்டதா என்பதைப் பற்றியும் எவ்வித குறிப்பும் இதில் காணப்படவில்லை.

ஜூலை 1, 2009 முதல் டிசம்பர் 31, 2009 வரையில் தகவல்களைக் கோரி 3,663 கோரிக்கைகளை அனுப்பியுள்ள பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா 3,580 கோரிக்கைகளை அனுப்பியுள்ளது. பட்டியலின் மூன்றாவது இடத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் இங்கிலாந்து 1,166 முறையீடுகளை அனுப்பி உள்ளது.

ஏப்ரல் 20, செவ்வாயன்று, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைப்பதிவு ஒன்றில், புதிய சேவையின் அறிவிப்புடன் கூகுள் மனித உரிமைகள் மீதான சர்வதேச தீர்மானத்தின் 19ஆம் பிரிவைக் குறிப்பிட்டு காட்டுகிறது. அதன்படி, "ஒவ்வொருவருக்கும் அவரவருடைய கருத்துக்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு சுதந்திர உரிமை இருக்கிறது; வரம்புகள் இல்லாமல், தலையீடுகள் இல்லாமல் கருத்துக்களை வைத்திருப்பதற்கும், கோருவதற்கும், பெறுவதற்கும், தகவல்களையும், சிந்தனைகளையும் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அளிப்பதற்குமான சுதந்திரத்தை இந்த உரிமைகள் உள்ளடக்கி உள்ளன." இந்த 1948ம் ஆண்டு அறிக்கை "இன்றைய இணைய உலகிற்கு முற்றிலும் பொருந்துவதாக" நிறுவனம் கூறுகிறது. "பரந்தளவில் ஒளிவுமறைவில்லாமல் இருப்பது தணிக்கையைக் குறைக்க உதவும்" என்று நம்புவதாக கூகுள் தெரிவிக்கிறது.

கேள்வி-பதில் பகுதியில் இடம் பெற்றிருக்கும் ஒரு கேள்வி, "இவற்றில் எத்தனை முறையீடுகளுக்கு நீங்கள் உடன்படுவீர்கள்?" என்று கேட்கிறது. "இதிலிருக்கும் 'தகவல் கோரிக்கைகளின்' எண்ணிக்கையானது, எங்கள் சேவைகளை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பயன்படுத்துபவர்களைக் குறித்து, உள்ளூர் போலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸ் போன்ற அரச முகவர்களினால் கேட்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். பொதுவாக, தகவல்களுக்கான ஒரு கோரிக்கையுடன் நாங்கள் உடன்படுகிறோமா, இல்லையா என்பதை அவர்கள் கேட்பதில்லை. பயன்படுத்துபவர்கள் தகவலைக் கோரும், ஒரு கோரிக்கையை நாங்கள் பெறும்போது, அது எங்களால் கவனமாக மதிப்பாய்வு செய்யப்படும். பின்னர், அந்த கோரிக்கையின் தேவை மற்றும் கோரியவரின் அதிகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தகவல்களை அளிக்கப்படும். சில விஷயங்களில் தகவல் அளிக்க மறுக்கப்படும் அல்லது அந்த கோரிக்கை வரையறைகளுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படும்.

நிறுவனம் மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், ஆனால் அவ்வாறு செய்வதில் அளிப்புரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் கூறுகிறது. "பயன்படுத்துபவர்கள் தகவல்களைக் கேட்டு பல்வேறு அரசு துறைகளிலிருந்து எங்களுக்கு வரும் கோரிக்கைகள், வெவ்வேறு அதிகார தட்டுகளிலிருந்து, வெவ்வேறு வடிவத்தில் வருகின்றன. அவர்கள் ஒரே முறையைப் பின்பற்றுவதுமில்லை; ஒரேவகையான தகவலைக் கோருவதுமில்லை. கோரிக்கைகள், வெவ்வேறு பயன்படுத்துபவர்கள்களைப் பற்றிய தகவல்களைக் கேட்கும் அல்லது ஒரேயொரு பயன்படுத்துபவர்களின் தகவலைக் கூட கேட்கும். ஒரேயொரு கோரிக்கை பல்வேறு வகையான தகவல்களைக் கோரும்; ஆனால் ஒரேயொரு வகைக்கு மட்டுமே மதிப்புடையதாகவும், மற்றவற்றிற்கு மதிப்பிழந்தும் கூட இருக்கும். அவ்வாறான விஷயங்களில், சட்டரீதியாக நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் நம்பினால் மட்டுமே தகவல்களை வெளியிடுவோம்."

கூகுளின் வியாபார உத்திக்கு, அதன் வருவாயின் முக்கிய ஆதாரமாக இருந்து உதவும் விளம்பரங்களுக்காக, அதன் பயன்படுத்துபவர்களின் பரந்த தகவல்களைத் தொகுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 2006 ஜனவரியில், குழந்தைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு முட்டுகொடுக்கத் தேவைப்பட்ட பரந்த தகவல்களை ஒப்படைக்க கோரிய, ஓர் அரசாங்கத்தின் அழைப்பாணைக்கு கூகுள் உடன்பட மறுத்த போது, விஷயம் வெளியுலகிற்கு வந்தது. அதை போலவே, அமெரிக்க அரசாங்கத்தின் தேடும் வேட்டையில் இந்த தகவல்கள் முக்கிய இலக்காக இருக்கின்றன.

அப்போதே, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: தகவல்களுக்காக, ஒருபோதும் இல்லாத அளவிற்கு, கட்டாய கோரிக்கைகளுடன் நிறுவனங்களை உடன்படச் செய்ய அதனால் எந்தளவிற்கு போக முடியும் என்பதைப் பார்க்க அமெரிக்க அரசாங்கத்தின் கோரிக்கை, ஆழம் பார்த்து வருகிறது. அந்த கோரிக்கையை வெளியில் கொண்டு வந்து, அதற்கு எதிராக ஒரு சட்டரீதியான போரை கூகுள் முன்னெடுத்த நிலையில், முன்னணி தேடுபொறி நிறுவனங்களில் நான்கில் மூன்று மௌனமாக அந்த கோரிக்கைக்கு உடன்பட்டன. கூகுளின் சட்டரீதியான எதிர்ப்பின் காரணமாக, அந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், வெறுமனே அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு விட்டு, யாகூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏஓஎல் நிறுவனங்கள் தகவல்களை அரசாங்க வழங்கறிஞர்களிடம் ஒப்படைத்தன. (பார்க்கவும்: “US government demands Google hand over Internet search data”)

மார்ச் 2006இல், நீதிபதி ஜேம்ஸ் வேரால் அளிக்கப்பட்ட தீர்ப்பில், தேடுபொறி விசாரணைகளில் பயனர்களின் தகவல்களைக் கோரும் அரசாங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "இணையத்தை அல்லது பிற தொலைதொடர்பு ஊடகத்தைப் பயன்படுத்தும் போது அரசாங்கத்தின் பொதுவான கண்காணிப்பிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஒருவரின் தனிப்பட்ட விருப்பமானது," இந்த வழக்கில் "முக்கிய நலன்களில்" ஒன்றாக எழுப்பப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டுக் காட்டினார். எவ்வாறிருப்பினும், அரசாங்க கோரிக்கை மீதான சட்டச்சிக்கல்கள் குறித்து வேர் மிக கவனமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

கூகுள் 50,000 வலைமுகவரிகளை ஒப்படைக்கும் என்ற கோரிக்கைக்கு உடன்பட்டு, சட்ட விவகாரங்களுக்காக இணைய நிறுவனங்களின் உதவியை கட்டாயமாக கோருவதற்கான, அரசின் உரிமையை நீதிமன்றம் தாங்கிப்பிடித்தது. கூகுளின் புதிய கருவி ( அரசாங்க கோரிக்கைகளைப் பட்டியலிடும் கருவி), ஒரேயொரு முறை கோரிய ஒரு கோரிக்கையால் உருவானதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கூகுள் போன்ற தேடுபொறிகள், அவை கொண்டிருக்கும் தகவல் வளங்களுக்காக, அரசாங்க ஒற்று வேலைகளின் முக்கிய இலக்காக இருக்கின்றன. கூகுள் பயன்பாட்டு இணைய அலுவலக தொகுப்பு (online office suite Google Apps) மற்றும் அனைத்திடங்களிலும் நிறைந்திருக்கும் கூகுள் மின்னஞ்சல் சேவை போன்ற மதிப்பு கூட்டு சேவைகள் மூலமாக பயன்படுத்துபவர்கள் தங்களின் சொந்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்களை கூகுள் கவர்ந்திழுக்கிறது.

"ஒரு கூகுள் சேவையை ஒரு பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தும் போது, அந்த உலாவியால் அனுப்பப்படும் தகவல்களைத் தானாகவே சர்வர்கள் பதிவு செய்து கொள்கின்றன. கூகுளின் பிரத்யேக அறிக்கைகளின்படி, "இணையத்தில் நீங்கள் கோரும் விஷயங்கள், இணைய நெறிமுறை (IP) முகவரி, எந்த வகையான உலாவி, உலாவியில் பயன்படுத்தப்படும் மொழி, நீங்கள் சேகரித்த விஷயங்களின் தேதியும், நேரமும் ஆகியவை உட்பட உங்களின் உலாவியைப் பிரத்யேகமாக கண்டறிய தேவைப்படும் ஒன்று அல்லது பல குக்கீகள் போன்ற தகவல்களைச் சர்வர் கொண்டிருக்கும்" என்று கூகுள் தகவல் பாதுகாப்பு அறிக்கை குறிப்பிடுகிறது. கூகுள் சேவைகளில் உள்நுழையாத பயன்படுத்துபவர்கள்களையும் கூட, இணைய நெறிமுறை (IP) கண்டறிவதன் மூலமாக பிரத்யேகமாக கண்டறிய முடியும். ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் நபருடைய இணைய முகவரியுடன் தொடர்புபடுத்தி அவருடைய உண்மையான இடத்தைக் கண்டறிய, இணைய சேவை வழங்குனரிடமிருந்தும் (ISP) சில தகவல் பெற வேண்டியதிருக்கும். ஒரு கணக்கிற்குள் பயன்படுத்துபவர்கள் நுழையும் போது, தகவல்களின் அளவு கணிசமாக உயர்கிறது. ஒரு சேவைக்குள் பயன்படுத்துபவர்கள் நுழையும் போது, ஓர் அமர்வு தொடங்கப்படும். இதன்மூலம் அந்த அமர்விற்குள் இருக்கும் பயன்படுத்துபவரைக் கண்காணிக்க முடியும். வேறு வகையில் கூறுவதானால், கணக்கிற்குள் நுழையும் போதே, ஒருவர் அளித்திருந்த தனிப்பட்ட தகவல்கள் மூலமாக ஒரு நபரை அடையாளம் காண முடியும்.

1998இல் கூகுள் அதன் தேடுபொறியைத் தொடங்கியதில் இருந்து, அது நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில், தனது கிளையைப் பரப்பும் வகையில் வல்லுனர்களுடனும், தொழில்நுட்பங்களுடனும் ஆரம்பநிலை நிறுவனங்களை வாங்கிய கூகுள், தற்போது ஓரளவிற்கு, இணைய உலாவி குரோமிலிருந்து, ஒளிப்பட பகிர்வு சேவையான யூ-டியூப் வரையில், அனைத்து வகையான இணைய சேவைகளிலும் தனது கைகளை நுழைத்திருக்கிறது. இந்த யூ-டியூப்பைத் தளத்தை கூகுள் 2006இல் $1.65 பில்லியன் பங்குகளுடன் விலைக்கு வாங்கியது. தகவல் பாதுகாப்பு நிலைப்புள்ளியிலிருந்து அதற்கு கவலைக்கிடமான விஷயமாக இருப்பது, மொபைல் இணையம் மற்றும் எப்போதும் இணைய இணைப்பு அளிக்கும் ஸ்மார்டு போனின் வளர்ச்சியாக இருக்கிறது. கூகுளின் தகவல் பாதுகாப்பு கொள்கையில், "இட தகவல்" என்ற ஒரு தலைப்பும் இடம் பெற்றுள்ளது. அது பின்வருமாறு குறிப்பிடுகிறது: "மொபைல்களுக்கான கூகுள் மேப்ஸ் போன்ற, இடம் சார்ந்த சேவைகளையும் கூகுள் அளிக்கிறது. நீங்கள் அந்த சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை (இதற்காக மொபைல் சாதனத்தில் இருந்து அனுப்பப்படும் ஜிபிஎஸ் சமிக்ஞை போன்றவற்றைப் பயன்படுத்தும்) அல்லது ஓர் இடத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் தகவலை (செல் அடையாளம் போன்றவற்றை கூகுள் பெறக்கூடும்."

கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சர்வர்களில் இருக்கும் இந்த தகவல்களுடன், மக்கள் என்ன படிக்கிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்பதை மட்டுமில்லாமல், அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட அரசாங்க துறைகள் தடையேதுமில்லாமல் அணுக முடியும். கூகுளினால் பதிவு செய்யப்பட்டிருக்கும் 3,500 கோரிக்கைகள், ஒபாமா நிர்வாகத்தால் கோரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். புஷ் நிர்வாகத்தால் தொடங்கி வைக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பதற்கு இது மேலும் ஓர் அறிகுறியாக இருக்கிறது.