World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government crisis intensified by president’s resignation

ஜேர்மனிய அரசாங்க நெருக்கடி ஜனாதிபதியின் இராஜிநாமாவால் தீவிரமடைகிறது

By Ulrich Rippert and Peter Schwarz
3 June 2010

Back to screen version

திங்கள் பிற்பகல் எதிர்பாராமல் ஜனாதிபதி ஹொர்ஸ்ட் ஹோலர் திடீரென இராஜிநாமா செய்தது ஜேர்மனிய அரசாங்கத்தின் நெருக்கடியை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இது ஒரு வாரத்திற்குள் உயர்மட்டத்தில் பணிபுரியும் அரசியல்வாதியின் இரண்டாம் இராஜிநாமா ஆகும். ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஹெஸ்ஸ மாநில பிரதமமந்திரி ரோலண்ட் கொக் (CDU) வேண்டுமென்றே சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு அவமதிப்புத் தரும் வகையில் தன்னுடைய பதவியைவிட்டு விலகினார்.

ஆனால் ஹோலரின் இராஜிநாமா அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. ஜேர்மனிய ஜனாதிபதியின் பங்கு முக்கியமாக ஒரு பெயரளவிலானதாக இருந்தாலும், நாட்டின் தலைவர் என்னும் முறையில் அவர் அரசாங்கத்தின் அதிகாரம் மற்றும் முழு அரசியல் அமைப்பு முறையின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவருடைய பணி கூடுதலாக சமூக, அரசியல் நெருக்கடி காலத்தில் அரசாங்கம் மற்றும் உத்தியோகபூர்வ அரசியலில் மக்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க முயல்வதாகும்.

அக்காரணத்தினால், முன்னெச்சரிக்கை ஏதுமின்றி, தயாரிப்பு இல்லாமல் மற்றும் உடனடியாக ஹோலர் இராஜிநாமா செய்த விதம் ஒரு அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான்ஸ்லர், வெளியுறவு மந்திரி மற்றும் ஹோலருக்கு அடுத்தாற்போல் சட்டபூர்வமாக பதவி ஏற்கும் பாராளுமன்ற மேல்பிரிவின் தலைவரான Jens Bohmsen (SPD, சமூக ஜனநாயகக் கட்சி) ஆகியோருக்குகூட இரண்டு மணி நேரம் முன்னதாகத்தான் இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

ஒரு குறுகிய காலத்தில் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஹோலர் தன்னுடைய முடிவு பற்றி மூன்று சுருக்கமான பத்திகளில் விளக்கி, தன்னுடைய பதவியை விட்டு உடனடியாக விலகினார். ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவத்தின் ஈடுபாடு பற்றிய அவருடைய ஒரு பேட்டி பாரிய விமர்சனத்திற்குள்ளானதே தன்னுடைய இராஜிநாமாவிற்கு காரணமாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய துருப்புக்களை விஜயம் செய்துவிட்டு திரும்பி வருந்து ஜனாதிபதி சர்வதேச இராணுவ நடவடிக்கைகளை ஜேர்மனியின் பொருளாதார நலன்களுடன் தொடர்புபடுத்தியிருந்தார். “நம்முடைய நாடு இருக்கும் பரப்பு, அதன் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம், அதனுடன் தொடர்பாக வெளிநாட்டு வணிகத்தில் தங்கியுள்ள தன்மை ஆகியவை அவநம்பிக்கையான அல்லது அவசரகால நிலைமைகளில் எமது நலன்களை பாதுகாக்க நம் இராணுவப் படைகள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணரவேண்டும்” என்று அப்பட்டமாக கூறினார்.

பொருளாதார நலன்களை இராணுவ வழிவகைகள் மூலம் பாதுகாப்பது என்பது சில காலமாக ஏற்கப்பட்டுள்ள வழிமுறையாகும். ஆனால் எந்த முக்கிய அரசியல்வாதியும் பொது மக்கள் கருத்தை மிகைப்படுத்தும் விதத்தில் இதை முன்பு கூறியதில்லை. செய்தி ஊடகம் ஹோலரை அதைச் செய்ததற்காக கடுமையாக விமர்சித்து, அவரை “அதிகம் பேசுபவர்” என்றும், அவருடைய உயர்ந்த பதவிக்குப் போதுமான பக்குவத்தைக் கொண்டிருக்க முடியவில்லை, தன்னுடைய கருத்துக்களைக்கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குறைகூறியது.

தன்னுடைய இராஜிநாமா உரையில், ஹோலர் தன்னுடைய அறிக்கை “தவறான விளக்கத்திற்கு வழிவகை செய்யக்கூடும்” என்பதை உண்மையில் ஒப்புக் கொண்டார்; ஆயினும்கூட தன்மீதான விமர்சனத்தை பதவியின் மாட்சிமைக்கு ஏற்புடைத்தது அல்ல என்ற கருத்தைக் கூறினார். “இவ்விமர்சனம் முற்றிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. என்னுடைய பதவிக்கு எந்த மரியாதையையும் இது காட்டவில்லை.” என்று தான் வெளியேறுவதற்கு நியாயத்தைக் கற்பித்தார்.

முழு இராஜிநாமா விவகாரமும் பீதி நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. மிகத் தீவிர சமூக நெருக்கடிக்காலத்தில்தான் இத்தகைய நிகழ்வு நடக்கும். கூடியிருந்த செய்தியாளர்களின் பெரும் திகைப்பு அவர்களில் ஒருவர்கூட ஹோலர் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியேறுவதற்கு முன் ஒரு கேள்விகூட எழுப்பமுடியாத அளவிற்குப் போயிருந்தனர்.

இதையொட்டி வெளிவந்த செய்தி ஊடக பிரதிபலிப்பு இகழ்வாக இருந்தது. “இந்தத் திங்களன்று ஹோர்ஸ்ட் ஹோலர் கூட்டாட்சி ஜனாதிபதி பதவிக்கு கொடுத்த சேதத்தைப் போல் ஒருபோதும் எவரும் செய்ததில்லை” என்று Süddeutschen Zeitung பத்திரிகையின் துணைத் தலைமை ஆசிரியர் குர்ட் கிஸ்டர் “ஹோலர் கைவிட்டுச் செல்லுதல்” என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் கூறினார். “நாட்டின் மிக உயர்ந்த பதவியை தான் அவமதிக்கப்பட்டோம் என்று உணர்ந்ததால் அவர் தூக்கியெஎறிந்தார்.” என்றும் எழுதப்பட்டது.

மற்ற செய்தித்தாட்களும் இதேபோன்ற முறையில்தான் செய்தியை எதிர்கொண்டன. அப்பொழுது முதல், ஹோலர் திடீரெனப் பதவியில் இருந்து விலகுவதற்கு எது வழிவகுத்திருக்கும் என்ற ஊகத்திற்கு முடிவே இல்லை. மென்மையான அவருடைய குணநலன் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. அத்துடன் அவர் ஒரு பயிற்சி பெற்ற அரசியல்வாதியாக இல்லாததும் அவருடைய சிக்கலான ஆளுமையும் காரணம் கூறப்பட்டன.

ஆளுமை குணநலன்கள் ஒரு பங்கை வகித்திருக்கலாம், ஆனால் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்தபின், ஏன் திடீரென பதவியை விட்டு ஹோலர் நீங்கினார் என்பதை அவை இறுதியில் விளக்க முடியவில்லை. இத்தகைய பீதிமிக்க செயலை உண்மையில் அறிந்து கொள்ளவதற்கு, அதைசுற்றியிருந்த நிலைமைகளை நன்கு ஆராய்வது மிகவும் முக்கியம். அவையோ உறுதியற்ற தன்மை, அழுத்தங்கள் மற்றும் பெரும் கவலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.

அங்கேலா மேர்க்கெல் (CDU), மற்றும் கீடோ வெஸ்டர்வெல்ல (FDP) என்று இவரை ஒரு ஜனாதிபதியாக “கண்டுபிடித்தவர்களின்” அரசாங்கத்திற்கு ஹோலரின் இராஜிநாமா ஒரு நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். இதற்கு முன் பகிரங்கமாக அறியப்படாத நிதிய வல்லுனரான இவர் நிதி அமைச்சரகத்தில் தன் வாழ்க்கைப் போக்கை சேமிப்பு வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்தபோது 2004ல் எதிர்க்கட்சித் தலைவர்களால் ஜனாதிபதியாக நிற்குமாறு வெஸ்டெர்வெல்லவின் வீட்டில் நடந்த ஒரு தனிக்கூடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு பழைமைவாத-தாராளவாதக் கூட்டணி அப்பொழுது இருந்த சமூக ஜனநாயகக் கட்சிக் கூட்டணிக்கு எதிராக கொண்டுவரப்பட வழிவகுப்பார் என்பது கருத்தாக இருந்தது.

இறுதியில் ஹோலர் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பழைமைவாத-தாராளவாத கூட்டணி ஏற்படுத்தப்பட முடியவில்லை. 2005 பொதுத் தேர்தலில் அதற்குப் போதுமான பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே மேர்க்கெல் சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு பெரும் கூட்டணியை அமைத்தார். 2009ல் CDU பின்னர் FDP உடன் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்தபோது, அவர்கள் பெரும் பொருளாதார, சமூக, வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர்கள் அதை எதிர்நோக்கவும் இல்லை, அதைத் தீர்க்கவும் முடியவில்லை.

1930க்கு பின்னர் ஏற்பட்ட ஆழ்ந்த சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனிய அரசியல் கொண்டிருந்த உறுதிப்பாடுகள் அனைத்தையும் சிதறடித்தது. ஐரோப்பாவுடன் சார்பு, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகள், சமூகத்தில் ஒருமித்த உணர்வைக் காணுதல், ஒரு வலுவான நாணயம் என்பவையே அவை. ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயத்தின் மையாமாக கடந்த இருபது ஆண்டுகளாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பொது நாணய முறையும் இப்பொழுது கேள்விக்குரியதாகிவிட்டன.

இதை எதிர்கொள்ளும் விதத்தில் சான்ஸ்லர் மேர்க்கெல் நெளிந்து, வளைந்து செல்லும் பாதையைக் கொண்டார்; முடிவெடுக்க முடியாத தன்மை, திறமையற்ற தன்மை போன்ற விமர்சனங்கள் அவர் மீது குறைகூறப்பட்டன. நீண்டகாலமாக அவர் பெரும் கடன் பட்டிருந்த கிரேக்கத்திற்கு நிதிய உதவி அளிப்பதை எதிர்த்தார். இது யூரோ தப்பிப் பிழைப்பதையே பிரச்சினைக்குரியதாக்கியது. பின் திடீரென பாதைத் திருப்பம் நடத்தப்பட்டு அவர் முன்னோடியில்லாத அளவான 750 பில்லியன் யூரோ பிணை எடுப்புப் பொதிக்கு ஒப்புக் கொண்டார். பெரும் கூட்டணிக் காலத்தில் பொதுக் கடன் வாங்கும் வரம்பிற்கு ஒரு வரையறை நிர்ணயத்திருந்தாலும், அவர் இதுவரை பொதுநலச்செலவினக் குறைப்புக்களை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டியுள்ளார். அவருக்கு முன்பு பதவியில் இருந்த ஹெகார்ட் ஷ்ரோடர் நடந்து கொண்டதற்கு முற்றிலும் மாறாக, இவர் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு என்ற கொள்கைக்கு உறுதியளித்தார். ஆனால் அட்லான்டிக்கு அப்பாலான சக்தியுடன் பொருளாதார விரோதங்கள்தான் இன்னும் தீவிரம் அடைந்ததைத்தான் கண்டார்.

ஹொர்ஸ்ட் ஹோலர், மேர்க்கெலுக்கு அரசியல், பொருளாதார ஆலோசகராகச் செயல்பட்டார். ஆனால் அவருக்கும் மேர்க்கெல் போல் எதுபற்றியும் தெளிவில்லை. ஒரு நேரத்தில் அவர் கடுமையான பொதுச் செலவு வெட்டுக்களைப்பற்றி சாதகமாகப் பேசுவார், சில நேரம் வெகுஜனங்களை திருப்திப்படுத்தும் வகையில் “அரக்கத்தனமான” நிதியச் சந்தைகள் இருப்பது பற்றிச் சீற்றத்தைக் காட்டுவார். இதற்கிடையே நீண்ட நேர மௌனங்கள்தான் இருந்தன. முக்கிய ஆட்சித்துறை ஊழியர்கள் அவருடைய அலுவலகத்தை விட்டு நீங்கிவிட்டனர், ஜனாதிபதியின் அலுவலகம் பெரும் குழப்ப நிலையில் உள்ளதாகப் பல தகவல்கள் வந்துள்ளன.

இதற்கிடையில், CDU/FDP கூட்டணி வீழ்ச்சியுறும் வால்நட்சத்திரம் போல் சரிந்து கொண்டு வந்தது. பாராளுமன்றத்தின் மேல்பிரிவின் தன்னுடைய பெரும்பான்மையை அது இழந்தது. பொதுமக்கள் ஆதரவும் கருத்துக் கணிப்பில் 40 சதவிகிதம்தான் என்று குறைந்தது. அரசாங்கக் கட்சிகளுக்குள் இருக்கும் பூசல்கள் தீவிரமாகிவிட்டன. பொது நெருக்கடி நிலவிய சூழலில், ஹோலர் தன்னுடைய இராஜிநாமாவை அறிவித்துள்ளார். இது சான்ஸ்லருக்கு மற்றொரு பெரிய அடியைக் கொடுத்துள்ளது.

Spigel Online வந்துள்ள தகவல் ஒன்றின்படி, மேர்க்கெல் ஹோலரின் முடிவு மற்றும் அவர் காட்டிய பிடிவாதம் பற்றி அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது. அவருடைய மனதை மாற்றிக் கொள்ள மேர்க்கெல் ஒரு தொலைபேசி அழைப்பில் “அசாதாரண வியத்தகு சொற்களை” பயன்படுத்தி முயற்சித்தார். இத்தகைய தயாரிப்பற்ற, திட்டமிடப்படாத நடவடிக்கை ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவரிடம் எச்சரித்தார். குடிமக்கள் மிக உயர்ந்த பதவி மற்றும் அரசியலில் கொண்டிருக்கும் நம்பிக்கை மோசமான சேதத்திற்கு உட்பட்டுவிடும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் அவர் இராஜிநாமா செய்வதற்குக் காரணத்தை அறிந்து கொள்ளவில்லை என்றால் அவர் தாக்குதலுக்கு உட்பட நேரும் என்றும் ஹோலரிடம் மேர்க்கெல் கூறினார். “பலமுறை” முடிவு பற்றி மறு சிந்தனை செய்யுமாறும் அவர் வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ பிடிவாதமாக இருந்துவிட்டார்.

இந்த அரசியல் நெருக்கடி எப்படி வளரும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாகும். CDU/FDP கூட்டணி அல்லது மேர்க்கெலே சரியக்கூடும் என்ற வாய்ப்பை மறுக்க இயலாது. முக்கிய தொழில்துறை வட்டங்களில் சமூக ஜனநாயகக் கட்சி அல்லது பசுமைவாதிகள் மீண்டும் அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சமூகநலக் குறைப்புக்களை உறுதியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உரத்த குரல்கள் எழுந்துள்ளன.

எந்த நிலைமைகளின் கீளும், தொழிலாள வர்க்க மக்கள் தங்களுக்கென சொந்த அரசியல் குரலைக் கொண்டிருக்காத நிலையில் இத்தகைய நெருக்கடிகள் ஆபத்தானவை. வைமார் குடியரசின் கடைசி ஆண்டுகள் பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் உயரடுக்குகள் ஹிட்லரை சான்ஸ்லராக ஆக்குவது என்று இறுதி முடிவு எடுக்கும் வரை முதலாளித்துவக் கட்சிகளின் சரிவு மற்றும் முழுச்சரிவின் இயல்பைக் காட்டின. சமூக ஜனநாயகக் கட்சி, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகியவை நாஜிக்களுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக அதை பிளவிற்குட்படுத்தி, முடக்கி, பலவற்றிலும் தோல்வி அடைந்ததுதான் இதைச் சாத்தியமாக்கியது.

இன்று சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள், இடது கட்சி ஆகியவை மீண்டும் முதலாளித்துவ முறையைத் தங்களால் இயன்ற அனைத்து விதத்திலும் பாதுகாக்க உறுதிகொண்டுள்ளன. அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொண்டு வரவு செலவுத்திட்ட வெட்டுக்களை செயல்படுத்தவும் அதையொட்டிய தொழிலாளர்கள், வேலையற்றோர், ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவருக்கும் எதிராகச் செலவுக் குறைப்புக்களைச் செயல்படுத்தவும் தயாராக உள்ளன.

தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகத் தலையிடாத வரை, நெருக்கடிக்கான “தீர்வு” தவிர்க்க முடியாமல் பெருகிய முறையில் பிற்போக்குத்தன, சர்வாதிகார வடிவமைப்பைத்தான் கொள்ளும். வேலையின்மை நலன்களைப் பெறுவோர் மீது சுமத்தப்படும் கட்டாய உழைப்பு வகையான “குடிமக்களின் வேலை” (citizen’s labour) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய பொது விவாதம் இதன் அடையாளம் ஆகும். இதேபோல்தான் சமூகநலச் செலவுகளில் பாரிய வெட்டுக்களுக்கு திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஹோர்ஸ்ட் ஹோலரால் முன்முயற்சியெடுக்கப்பட்ட தேசியப் பொருளாதார நலன்களைக் காப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது பற்றிய விவாதம் அவர் அகன்ற பின்னும் தொடரும்.

ஹோலரின் இராஜிநாமா, CDU/FDP கூட்டணியின் முடிவிற்கு முன்கூட்டியே வழிகாட்டுவது, ஆளும் அரசியல் வட்டங்களுக்குள் உள்ள ஆழ்ந்த நெருக்கடியின் அடையாளம் ஆகும். ஆனால் இதை ஒட்டி மெத்தனமாக இருந்துவிட முடியாது. மாறாக இது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு வழிகாட்டும் ஒரு புதிய கட்சி கட்டமைக்கப்படுவதற்கு தூண்டுகோலாக செயல்பட வேண்டும். அது முதலாளித்துவத்தை ஒரு சோசலிச சமூகம் மூலம் அகற்றுவதாலும், வங்கி, பெருவணிக நலன்களின் இலாபங்களுக்கு என்பற்கு பதிலாக சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் உற்பத்தி முறையைக் கொள்ளும் சமூகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.