World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

As Chinese premier urges “respect” for workers, police prepare crackdown

தொழிலாளர்களுக்கு "மதிப்பளிக்க வேண்டும்" என்று சீனப் பிரதமர் வலியுறுத்துகையில், பொலிஸ் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயாரிப்பு நடத்துகிறது

By John Chan
18 June 2010

Back to screen version

நாட்டின் சமீபத்திய வேலைநிறுத்த அலை பற்றி சீன ஆட்சியானது பதட்டத்தைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் வென் ஜியாபோ இந்த வாரம் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட அனாதை இல்லங்கள், குறைவூதிய வருமான இல்லங்கள் மற்றும் பெய்ஜிங்கில் கட்டிட வேலைத் தளங்கள் ஆகியவற்றிற்கு சென்று, கிராமப்புறத்தில் இருந்து குடியேறிய தொழிலாளர்களை வாழ்த்தி சீனப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் அவர்கள் பங்கு பற்றிப் புகழ்ந்தார். அதே நேரத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரகம் சமூக மோதல்களை அடக்குவதற்குத் தயாராக இருக்கும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இப்பொழுது "தாத்தா வென்" என்ற புகழைப் பெற்றுள்ள பிரதம மந்திரி ஆட்சிக்கான அனுபவப் பங்கையும், ஒரு மனிதாபிமான முகத்தைக் காட்டுவதையும் செய்து கொண்டு இருக்கிறார்--இதைத்தான் அவர் 2008ல் சிசுவான் நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்துவதற்கும் இந்த ஆண்டு க்விங்ஹாய் நிலநடுக்கத்தின் போதும் பயன்படுத்தினார். இப்பொழுது வென் காண்பிக்கும் கிராமப்புறக் குடியேறிய தொழிலாளர்களுக்கான அக்கறை, மே, ஜூன் மாதங்களில், குறிப்பாக ஹொண்டா கார்த் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு அவர்கள் நடத்தும் ஊதியம், பணிநிலைகள் பற்றிய வேலைநிறுத்தங்களுக்கும், தென்சீனாவில் உள்ள பெரும் மின்னணு பாக்ஸ்கான் ஆலையில் அலையென நடந்த தற்கொலைகளுக்கும் ஆகும்.

ஒரு நிலத்தடி இரயில் நிலையத்தைக் கட்டும் தொழிலாளர்களிடம் பேசுகையில், வென் அறிவித்தார்: "சீனாவின் தொழில்துறைத் தொகுப்பில் கிராமப்புறத்தில் இருந்து வந்துள்ள குடியேறிய தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். நம் நாட்டின் வளமும் வானளாவிய கட்டிடங்களும் உங்கள் கடுமையான உழைப்பு, வியர்வை இவற்றின் வடிகட்டிய வடிவமைப்புக்கள் ஆகும். உங்கள் உழைப்பு பெருமைக்கு உரியது, சமூகம் முழுவதும் அதை மதிக்க வேண்டும்." அரசாங்கமும் சமூகத்தின் பெரும்பான்மையும் "இளைய குடியேறிய தொழிலாளர்களைத் தங்கள் சொந்தக் குழந்தைகள் போல் பாவிக்க வேண்டும்" என்றும் அவர் அறிவித்தார்.

"மதித்தல்" பற்றி வென்னின் அறிவிப்பு முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். நகரத்திற்குக் குடிபெயர்ந்துள்ள பல மில்லியன் தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் சுரண்டுப்படும் தட்டுக்கள் ஆவர். வீட்டு வாரியாக பதிவு செய்யும் முறை இவர்களுக்கு நகர்ப்புற வாசிகள் என்ற உரிமைகளை மறுப்பதுடன், அடிப்படைப் பணிகளுக்கான வாய்ப்பையும் மறுக்கிறது. ஹுபெய் மாநிலத்தில் இருந்து வரும் ஒரு தொழிலாளி, தான் பெய்ஜிங்கில் எட்டு ஆண்டுகளாக வசித்து வந்தும், தனக்கு ஒரு வீடு வாங்க முடியவில்லை, தன்னுடைய குழந்தையை தக்க நகர்ப்புறப் பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்று வென்னிடம் கூறினார். இது சீனா முழுவதும் குடியேறிய தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்பதை ஒப்புக் கொண்ட வென் இப்பிரச்சினையை தீர்ப்பதாக--ஆனால் படிப்படியாகத்தான்--என்று உறுதி அளித்தார்.

அனைத்து முக்கிய செய்தித்தாட்களிலும் வென்னின் பயணம் தலைப்புச் செய்திகளாக இருந்தது. ஹொண்டா வேலைநிறுத்தங்கள் வெடித்திருந்த குவாங்டாங் மாநிலத்திலுள்ளவற்றில் குறிப்பாக உத்தியோகபூர்வ Southern Daily, Ghangzhou Daily ஆகியவைகளிலாகும். ஹொண்டாவின் பரப்புகை உற்பத்திக் கூடத்தில் (Transmission plant) ஏற்பட்ட வேலைநிறுத்தமானது நிறுவனத்தின் ஒன்றிணைக்கும் உற்பத்திக் கூடங்கள் பலவற்றையும் இருவாரங்கள் முடக்கின. அதன் பின் காருக்கான வாயு வெளியேற்றும் முறை மற்றும் பூட்டுக்கள் ஆலைகளிலும் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தன. இளம் தொழிலாளர்கள் அதிக ஊதியத்தைக் கோருவதோடு, அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ACFTU எனப்படும் அனைத்து சீனத் தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்கும் சவால் விட்டுள்ளனர். அது தான் ஆட்சிக்கு தொழில்துறை பொலிஸ் போல் செயல்படுகிறது.

முதல் இரு வேலைநிறுத்தங்கள் இறுதியில் ஹொண்டா கணிசமான ஊதிய உயர்வுகளை அளித்தவுடன் முடிவிற்கு வந்தன. ஹொண்டா லாக் வேலைநிறுத்தக்காரர்கள் செவ்வாயன்று தான், அதுவும் தற்காலிகமாக, பணிக்கு திரும்பிவர ஒப்புக் கொண்டனர். நிர்வாகம் இன்று தங்கள் கோரிக்கைக்கு திருப்திகரமான விடையிறுப்பு அளிக்கவில்லை என்றால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர்.

வென்னின் பொது உறவு நடவடிக்கைகள் பெருவணிகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அரசாங்கம் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கும் நோக்கத்தைக் கொண்டது ஆகும். சர்வதேச நிதியச் செய்தி ஊடகம் ஹொண்டாவில் நடைபெறும் வேலைநிறுத்தங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது மற்ற ஷென்ஜேன், ஷாங்காய் மற்றும் ஜியனில் உள்ள தொழிலாளர்களையும் அதிக ஊதியங்கள், நல்ல பணி நிலைமைகள் ஆகியவற்றிற்கு வேலைநிறுத்தம் செய்யத் தூண்டியுள்ளது.

ஜப்பானின் Akita International University யின் உயர் கல்வியாளர் வில்லி லார்ன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் திங்களன்று ஒரு கருத்துத் தெரிவித்தார்: "அதிக ஊதியங்கள் பற்றிய கோரிக்கையை குறைப்பதற்கு பெய்ஜிங்கிடம் அதிக விருப்புரிமைகள் இல்லை". நிலமை பெரும் இடருக்கு உட்பட்டிருப்பதால், உயர் தலைவர்கள், சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ உட்பட, அனைவரும் "மோசமாகிக் கொண்டிருக்கும் உள்நாட்டு நெருக்கடியை தனிப்பட்ட முறையில் கையாள முயல்கின்றனர்" என்றும் அவர் விளக்கியுள்ளார்.

"விளம்பரப்படுத்தப்படாத, மூடிய கதவுகளுக்குள் நடக்கும் தொழிலாளர் நிலை பற்றிய பேச்சக்களில், திரு ஹு மற்றும் பிற பொலிட்பீரோ உறுப்பினர்கள் முதுபெரும் தலைவர் ஜியோபிங்கின் போலந்தின் சொலிடாரிட்டி இயக்கம் எப்படி முன்னாள் கிழக்கு முகாம் முழுவதையும் கம்யூனிஸ்ட் கட்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது என்ற எச்சரிக்கைகளை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளனர். லாம் எழுதினார்: CCP தலைவர் கலகப் பிரிவு பொலிஸ் மற்றும் மக்கள் இராணுவப் பொலிசின் பிரிவுகளை கூடுதல் வலுவிற்காக "தொழிலாளர்களின் குறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஷென்ஜென் ஜோங்காஹன் மற்றும் குவாங்ஜு இன்னும் பிற நகரங்களுக்கும் அனுப்பியுள்ளார். இப்பெரும் ஆயுதமேந்திய சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் இப்பொழுது "தயார்நிலை" அந்தஸ்த்தில் உள்ளனர். அவர்கள் தொழிலாளர்களின் நீடித்த போராளித்தனத்தை அடக்குவதற்கு செயலில் இறங்குவர். அதில் "சட்டவிரோத" தொழிற்சங்கங்கள் பரந்த அளவில் அமைக்கப்பட்டுள்ளவற்றை அடக்குவதும் அடங்கும்."

100 மில்லியன் இளம் குடியேற்றத் தொழிலாளர்களின் புதிய தலைமுறை, 1980, 1990 களில் பிறந்தவர்கள் இப்பொழுது அவர்களுடைய பெற்றோர்கள் அடைந்ததைவிடக் கூடுதலாக் கோருவதுடன், தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு ஒழுங்குபடுத்துவதற்கு எளிதாக உள்ளது என்று லாம் சுட்டிக் காட்டியுள்ளார். "சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை பொருளாதார, அரசியல் நலன்கள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்பதில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர விரும்பவில்லை என்றால், இது முழு எழுச்சியைச் சந்திக்க வேண்டிய ஆபத்தில் உள்ளது. ஏற்கனவே நலிந்த நாட்டின் சமூக இழை அறுக்கப்பட்டுவிடலாம்" என்று அவர் முடித்துள்ளார்.

இக்கருத்து சீனத் தொழிலாளர்களின் "முழுக் கிளர்ச்சி" உலக முதலாளித்தவத்திற்கு ஒரு அடிப்படையான அச்சுறுத்தலை கொடுக்கக்கூடும் என்னும் வோல் ஸ்ட்ரீட்டின் அச்சத்தைப் பிரதிபலிக்கிறது. சீனாவின் பரந்த குறைவூதிய உற்பத்திமுறையை இவர்கள் நம்பியுள்ள தன்மையில், சர்வதேச பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்க அமைதியின்மையை பொலிஸ் அரசாங்க அடக்குமுறை மூலம் நசுக்குவதற்கு ஆதரவு கொடுக்கத் தயங்கமாட்டார்கள். அப்படித்தான் அவர்கள் 1989 தியனன்மன் சதுக்கப் படுகொலைகளுக்கு, முன்னதாகவும் பின்பாகவும் ஆதரவு கொடுத்திருந்தனர்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சரகம் சீனா முழுவதும் தொழில்துறை மோதல்களை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணுமாறு பொலிசுக்கு உத்தரவு இட்டுள்ளது--வேறுவிதமாகக் கூறினால் ஒரு வெகுஜன இயக்க வளர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கவும், நசுக்கவும். பொதுப் பாதுகாப்புத் துறையின் துணை மந்திரி ஜாங் ஜிங்பெங், "ஒரு சமூகப் பொருளாதார மாறுதல் கால வழிவகையில், சீனா சமூக மோதல்களையும் சமூகப் பாதுகாப்பில் புதிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள பொலிசார் பிரச்சினையின் சிக்கல்களை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஹாங்காக்கின் நாளேடு Ming Pao Daily News ல் ஜூன் 14 வந்த தலையங்கம் ஒன்று அதிருப்தியின் அடிப்படைக் காரணங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டியது. "உயரும் விலைவாசி, வீட்டு வாடைகை போன்றவை தொழிலாள வர்க்கத்தின் சில பிரிவுகள் இடையே வாழ்க்கைத் தரத்தில் சரிவை ஏற்படுத்தியுள்ளன. இது வெளியிலுள்ளவர்களால் உணரப்படாமல் இருக்கலாம், ஆனால் சீனத் தொழிலாளர்கள் வலுவான சொந்த அனுபவங்களை இது பற்றிக் கொண்டுள்ளனர்." என்று அது கூறுகிறது. "இந்த வேலைநிறுத்தங்கள் மிதக்கும் பனிப்பாறையாக தொழிலாள வர்க்க அதிருப்தியை, ஊதியங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் அதிகப்படுத்துவது தற்காலிகமாகத்தான் அதிருப்தியை அடக்க முடியும். உண்மையான எரிமலை சமூகத்தின் பெரும்பகுதியில் அனைத்துவித சமூக அநீதிகளுக்கு எதிராக மறைந்துள்ள அமைதியற்ற உணர்வுகளில் காணப்படுகிறது."

பெரும்பாலான ஆலை முதலாளிகள் 2004ல் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் கொடுக்கின்றனர். ஆனால் அந்த ஊதியம் மிகக் குறைவு, தொழிலாளர்கள் நிறைய கூடுதல் மணி நேர வேலைபார்த்தால்தான் தப்பிப் பிழைக்க முடியும். உலக நிதிய நெருக்கடிப் பாதிப்பினால், அரசாங்கம் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பை 2009க்கு நிறுத்தியது. நாட்டின் மிக அதிக வாழ்க்கைச் செலவு நகரங்களான ஷாங்காய், குவாங்ஜூ மற்றும் ஷென்ஜென்னில், குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு அமெரிக்க 160 டொலர் என்று உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அது அதிகமாகும் வீட்டிற்கானதும், உணவு மற்ற தேவைகளிற்கான செலவினங்களுக்குப் பெரிதும் பின்தங்கியுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் மே மாதம் மொத்த விலை உயர்வை 3.1 சதவிகிதம் என கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை 6.1 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. ஊக வணிக முதலீட்டினால் உந்தப்பட்டு, சொத்துக்கள் விலை 70 நகரங்களில் 12.4 சதவிகிதம் மே மாதத்தில் கடந்த ஆண்டைவிட உயர்ந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு வீட்டுச் செலவினங்களை அதிகமாக்கியுள்ளது. சீன வணிக ஏடான Caijin ல் பொருளாதார வல்லுனர் Andy Xia எழுதியதில், பணவீக்கம் "கடுமையான முறையில் வருமான மதிப்பில் புரையோடியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பின் இன்றைய வயதிற்கு வந்தவர்கள் தங்கள் பெற்றோர்களைவிட "கசப்பை உட்கொள்வதில்" குறைந்த விருப்பத்தைத்தான் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

பெய்ஜிங்கில் வென் மேற்கொண்ட பொது உறவு நடவடிக்கை பல மில்லியன் குடியேறிய தொழிலாளர்களின் அவல நிலையை தீர்க்காது. அவர்களுடைய வாழ்க்கைத் தரங்கள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல் நடத்தப்படுகின்றனர். எனவேதான் வென்னின் சலித்துப்போன கருத்துக்களுக்கு பின் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலுக்காக தன் பொலிஸ் கருவியைத் தயார் செய்து கொண்டிருக்கிறது.