World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What is driving the crisis of the German government?

ஜேர்மனிய அரசாங்கத்தின் நெருக்கடிக்கு எது உந்துதல் கொடுக்கிறது?

Peter Schwartz
18 June 2010

Back to screen version

ஜேர்மனிய கூட்டரசாங்கத்தின் நெருக்கடி பல வாரங்களாக தொடர்கிறது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), அதன் சகோதரக் கட்சி கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகிய மூன்று கூட்டணிக் கட்சிகளும் எந்தவொரு விடயத்திலும் உடன்பாடு காணமுடியாதுள்ளனர். சிக்கன நடவடிக்கைகளாயினும், வரிக் கொள்கை, சுகாதாரப் பாதுகாப்பு அல்லது இராணுவசேவை என்றாலும், அரசாங்கக் கட்சிகளும் அவற்றின் பல பிரிவுகளும் மோதலில்தான் உள்ளன.

சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் அரசாங்கம் பற்றிய கருத்துக் கணிப்பில் அது சரிவிற்கு உட்பட்டுள்ளது. இந்த ஞாயிறு ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு மொத்த வாக்குகளில் 5 சதவிகிதம்தான் கிடைக்கும். -இது ஒன்பது மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் இருந்து தீவிர சரிவு ஆகும். அப்பொழுது தாராளவாத ஜனநாயகக் கட்சி கிட்டத்தட்ட 15 சதவிகிதத்தை பெற்றது.

CDU/CSU 30 சதவிகித வாக்குகளைத்தான் பெறும், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இந்த எண்ணிக்கைக்கும் குறைவாக உள்ளது. மாறாக, பசுமைவாதிகள் மிக அதிகத் தரமான 18 சதவிகிதத்தை அடைந்தது--இது மத்தியதர வகுப்புக்களுக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பின் தெளிவான அடையாளம் ஆகும்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் தற்பொழுது அரசாங்கக் கூட்டணியை விட அதிக வாக்காளர் ஆதரவைப் பெறுகின்றன. ஆனால் மாறாமல் இருக்கும் வாக்காளர் ஆதரவான 11 சதவிகிதத்தைக் கொண்டுள்ள இடது கட்சியுடைய ஆதரவை பெற்றால், ஆளக்கூடிய பெரும்பான்மையை அடையக்கூடும்.

கடந்த வாரம் முக்கிய செய்தித்தாட்கள் மேர்க்கெல் மற்றும் FDP யின் கீடோ வெஸ்டர்வெல்லவின் தலைமையிலுள்ள அரசாங்கத்தின் முடிவு பற்றிக் கணித்து எழுதியுள்ளன. சில முற்றுப்பெற வேண்டும் என்று கோரியுள்ளன.

அரசாங்கத்தின் உள் நெருக்கடி அடுத்த வார இறுதியில் அது சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது பூசலில் முடியலாம். FDP கடுமையான முறையில் அனைவரும் அதற்கு பணம் செலுத்தவேண்டும் என்கிறது, அதே அளவிற்கு கடுமையான முறையில் CSU அதை நிராகரிக்கிறது.

மாற்றீடாக CDU, FDP யின் ஜேர்மனிய ஜனாதிபதி பதவிக்கு கூட்டு வேட்பாளரான கிறிஸ்டியன் வொல்ப் ஜூன் 30 தேர்தலில் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் கவிழக்கூடும். SPD மற்றும் பசுமைவாதிகள் போட்டி வேட்பாளராக நிறுத்தியுள்ள Joachim Gauck க்கிற்கு FDP க்குள் கணிசமான ஆதரவு உள்ளது.

பல வர்ணனையாளர்களும் அரசாங்க நெருக்கடிக்கு முக்கிய நபர்களின் வலுவற்ற தன்மைதான் காரணம் என்று கூறியுள்ளனர் --மேர்க்கெல்லிடம் உறுதிப்பாடற்ற நிலை, பக்குவமற்ற முறையில் வெஸ்டர்வெல்ல நடந்து கொள்வது, CSU தலைவர் Horst Seehofer உடைய கணிக்கமுடியாத செயற்பாடுகள் போன்றவற்றை குறிப்பிடுகின்றன. ஆனால் காரணங்கள் இன்னும் ஆழ்ந்து உள்ளன. தன்னிடம் பதிலில்லாத அடிப்படைச் சமூக மாற்றங்களை அரசாங்கம் எதிர்கொள்கிறது என்பதே அது.

பல தசாப்தங்களாக சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் நடத்தப்படுதல், மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் சமூக சமச்சீர்நிலைக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன. அக்கொள்கைதான் ஜேர்மனிக்கு போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் ஓரளவு உறுதிப்பாட்டைக் கொடுத்திருந்தது. அதிலும் குறிப்பாக பாராளுமன்ற ஜனநாயக முறையின் மரபார்ந்த கோட்டையான மத்தியதர வகுப்புக்கள் இப்பொழுது சேதமுற்று, பலமிழந்து வருகின்றன.

பொருளாதார ஆய்வுக்கான ஜேர்மன் நிலையம் (DIW), மத்தியதர வகுப்புக்கள் புரையோடி இருப்பது பற்றிய ஆய்வை நடத்தியிருப்பது அதிக கவனத்தை ஈர்த்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஆய்வாளர்கள் வறிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்றும் சற்றே குறைந்த அளவிற்கு செல்வந்தர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், மத்தியதர வகுப்பின் வருமானத் தளத்தில் ஏற்பட்ட இழப்பை ஒட்டி என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஒரு வலுவான மத்தியதர வர்க்கம் "சமூக ஸ்திரப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முக்கியமானது" என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வெஸ்டர்வெல்லவின் FDP, சற்றும் மறைக்காத விதத்தில் நிதிய உயரடுக்கின் தயவையும் வசதியானவர்களின் சுயநலத்தினையும் இணைத்துள்ள கட்சி, மத்தியர வகுப்பின் சமூகச் சரிவு பற்றிய அச்சங்களை தான் அதை சமூகத்தில் வறியவர்களுக்கு எதிராகத் திசைதிருப்ப முடியும் என்று தன்னையே நம்ப வைத்துக் கொண்டுள்ளது. சமூகநல உதவி பெறுபவர்கள்மீது நடத்தும் தாக்குதல்களில் அவர் "பழைய ரோமானிய இழிசரிவை" உதாரணங்களாக காட்டிக் கண்டித்திருப்பது முற்றிலும் அவர் நினைத்த இலக்கை தவற விட்டுவிட்டது.

Gottingen நகரில் உள்ள அரசியல் விஞ்ஞானிகள் நடத்திய புறநிலை ஆய்வு ஒன்று, "தற்பொழுது சமூக மத்திய பகுதி ஜேர்மனியின் நிதிய வடிவமைப்பை அச்சுறுத்தும் தவறான நடவடிக்கை சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வருகிறது என்ற உணர்வைக் கொண்டிருக்கவில்லை." மாறாக "தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கிகள், நிதிய ஊகக்காரர்கள் என வரும்போது.... மையத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் SPDஐ விட இன்னும் தீவிரமாக பேசுகின்றனர்." என முடிவுரையாகக் கூறியுள்ளது.

இதுதான் FDP யின் விரைவான சரிவை விளக்குகிறது.

CDU/CSU கட்சிகளின் வேறுபட்ட சமூகத் தளங்களுக்கும் பிராந்திய குழுக்களுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டுள்ளது. பெருவணிகப் பிரதிநிதிகள், சிறு வணிக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்சித்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றைக் கட்சிக் குடையின்கீழ் ஒன்றுபடுத்தப்பட முடியாது. அதுவும் சமூகம் பிளவுகளில் ஈடுபட்டிருக்கையில். கத்தோலிக்கப்பிரிவே ஆழ்ந்த நெருக்கடியில் இருப்பதுடன், நெடிய காலத்திற்கு முன்பே ஒரு ஒற்றுமைப்படுத்தும் கட்சிப்பிணைப்பு என்ற திறனை இழந்துவிட்டது.

வெளியுறவு விடயங்களிலும்கூட, கூட்டாட்சி அரசாங்கம் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. மேலை நட்பு முறை, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டு நெறியாக அடிநோவர் காலத்தில் இருந்து இருப்பது இப்பொழுது முறிந்து வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தானிய போர்களின் பின்னணியில், மற்றும் பெருகிய அட்லான்டிக் கடந்த அழுத்தங்கள் பெருகுவதில், நீண்டகாலம் அமெரிக்காவுடன் கொண்டுள்ள நெருக்கமான நட்பு வருங்காலத்திற்கு ஒரு பணையக் கைதித் தன்மையில் வெளிப்பட்டுள்ளது. ஐரோப்பாவிற்குள்ளேயே, பூசல்கள் பெருகி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சிதைக்கும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன.

இச்சூழ்நிலையில் இன்னும் அதிக குரல்கள்தான் SPD அதிகாரத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்று எழுப்பப்படுகின்றன. 1918 நவம்பர் புரட்சிக் காலத்தில் இருந்தே, SPD அப்பொழுது முதலாளித்துவத்தின் சொத்து உறவுகளை தொழிலாளர்கள், படையினரின் தாக்குதலில் இருந்து மீட்டதில் இருந்தே, இக்கட்சி பலமுறையும் இருக்கும் ஒழுங்கைக் காக்கவும் நெருக்கடி காலத்தில் தேவையான மாற்றங்களை சுமத்தவும்தான் அழைக்கப்பட்டுள்ளது.

1969 ம் ஆண்டு SPD யைச் சேர்ந்த சான்ஸ்லர் வில்லி பிராண்ட் தெருக்களில் இருந்து எழுச்சி செய்த இளைஞர்களை அகற்றி, அவருடைய பெரும் சிக்கலுக்கு உட்பட்ட கிழக்கு நோக்கிய கொள்கை மூலம் ஜேர்மனிய ஏற்றுமதித் தொழில்துறைக்கு புதிய சந்தைகளை பெற உதவினார். 1998ம் ஆண்டு பெருவணிகம் ஹெல்முட் ஹோல் காலத்தில் ஏற்பட்ட "தேக்க நிலை" பற்றிக் குறை கூறியபோது, ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தன்னுடைய 2010 செயற்பட்டியல் பொதுநலச் "சீர்திருத்தங்கள்" மூலம் சமூகநலப் பாதுகாப்பு முறையை அகற்றினார்.

அரசாங்கத்தின் ஆளுமையை குறைந்துவிட விருப்பம் கொண்டுள்ள FDP போல் இல்லாமல், ஒரு வலுவான சமூகநல அரசாங்கமாக அல்லாது, ஒரு வலுவான அரசாங்கம் நெருக்கடிக் காலத்தில் தேவை என்று SPD கருதுகிறது. சமூகநல அரசாங்கம் SPD பசுமைக் கட்சி 7 ஆண்டுகால கூட்டணி ஆட்சியிலும், பெரும் கூட்டணியின் நான்கு ஆண்டு காலத்திலும் அழிக்கப்பட்டுவிட்டது; மாறாக சமூக வர்க்கங்களை விட உயர்ந்து வெளிப்பட்டு உறுதியாக செயல்பட்டு, சமூகநல உதவி பெறுவோர் சமூக சேவை செய்யவேண்டும், மற்றும் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று செயல்படும் அரசாங்கத்தை விரும்புகிறது.

.தங்கள் பங்கிற்கு தொழிற்சங்கங்கள் அத்தகைய பங்கைக் கொள்ள பேரார்வத்தைக் கொண்டுள்ளன. SPD யின் முதல் முன்னுரிமை "சமூக அமைதியை" தக்க வைத்தல், அதாவது வர்க்கப் போராட்டத்தை அடக்குதல் என்பதாகும்; அதற்காக கடந்த ஆறு தசாப்தங்களில் அடையப்பட்டுள்ள சமூக நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்தாலும்கூட.

SPD பசுமைவாதிகளின் ஆதரவை நம்ப முடியும். முன்னாள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை நாடும் கட்சி நீண்டகாலம் முன்னரே கடுமையான நிதியக் கட்டுப்பாடு மற்றும் வெளிநாடுகளில் இராணுவச் செயற்பாடுகளுக்கு பேராதரவைக் கொடுக்கத் தொடங்கிவிட்டது.

ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சியின் வாரிசான இடது கட்சியைப் பொறுத்தவரை, அது எப்பொழுதுமே ''சோசலிசத்தை'' ஒரு வலுவான, சர்வாதிகாரப் போக்குடைய அரசாங்கம், தொழிலாளர்களின் சுயாதீன இயக்கம் எதுவும் நெரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகும். முன்னாள் SPD தலைவரும் இப்பொழுது இடது கட்சியின் தலைவருமான ஒஸ்கார் லாபோன்டைன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் Saarbrücken நகரசபை தலைவராக இருந்தபோது, தேசியத் தலைமையில் ஒரு முக்கியப் பங்கை வகித்து, சமூகநல உதவி பெறுவோர் சமூக சேவை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். பின்னர் சார்லாந்தில் மாநிலப் பிரதமராக இருந்தபோது, அவர் வட்டாரத்தின் எஃகு மற்றும் சுரங்கத் தொழில்கள் அழிக்கப்படுவதை மேற்பார்வையிட்டு, தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாகவும் ஒத்துழைத்தார்.

ஒரு கூட்டணிப் பங்காளி என்ற முறையிலோ, அல்லது SPD-பசுமைக் கட்சி சிறுபான்மை அரசாங்கத்திற்கு ஆதரவு தருவது என்ற முறையிலோ SPD அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கு உதவ இடது கட்சி உறுதிபூண்டுள்ளது. இப்பொழுது அப்படித்தான் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன.

CDU-CSU-FDP கூட்டணி உண்மையில் முன்கூட்டியே ஒரு முடிவிற்கு வந்துவிடுமா என்பது விடையிறுக்க முடியான வினா ஆகும். அரசியலமைப்பு பாராளுமன்ற வரைகாலத்தின் நடுவில் அரசாங்க மாற்றம் அபூர்வ சூழ்நிலையில்தான் முடியும் என்று கூறியுள்ளது; CDU/CSU, FDP வட்டாரங்களில் புதிய தேர்தல்களுக்கு அதிக ஆர்வம் இல்லை.

தற்போதைய அரசாங்கத்திற்கு பதிலாக எத்தகைய கூட்டணி வரலாம் என்ற வினாவிற்கும் விடையில்லை. CDU, SPD இரண்டின் பெரும் கூட்டணி, புதிய தேர்தல்கள் இல்லாமல் பெரும்பான்மையைப் பெறக்கூடியது, SPD, FDP மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணி இடது கட்சியுடைய பங்கு அல்லது ஆதரவுடனா என்பது வினாவிற்கு உரியது.? கடைசி இரு கூட்டுக்கள் புதிய தேர்தல் ஒன்றின்மூலம்தான் பெரும்பான்மை பெற முடியும்.

ஆனால் ஒன்று உறுதி. SPD அரசாங்கத்திற்கு திரும்புதல் என்பது ஒரு இடதுசாரி வளர்ச்சியை பிரதிபலிக்காது. அது புதியசுற்று சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடக்கும். அதே நேரத்தில் மத்தியதர வர்க்கத்தின் அரசியல் கொந்தளிப்பு வலதுசாரி வெளிப்பாட்டைக் காணும் ஆபத்தையும் அதிகரிக்கும்--அதுதான் சமீபத்தில் இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஹங்கேரியில் நடைபெற்றது.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கையில்தான் எதிர்கால வளர்ச்சி தங்கியுள்ளது. அது SPD, தொழிற்சங்கங்கள் அல்லது இடதுகட்சிகள் என்ற நப்பாசைகளினால் கட்டுப்பட்டுவிடக்கூடாது.

அது அனைத்துவித முதலாளித்துவ மற்றும் அதன் கட்சிகள், பிரிவுகள் ஆகியவற்றில் இருந்து அது அரசியல் சுயாதீனத்தை நிறுவ வேண்டும்--"இடது மற்றும் வலது எதுவாயினும் சரி. வேலைகள், வருமானங்கள், ஜனநாயக, சமூக உரிமைகள் என்பவை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ்தான் பாதுகாக்கப்பட முடியும். அது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை, சமூக சொத்துடமையாக்கி, அவற்றை ஜனநாயகக் கட்டுபாட்டிற்குள் வைக்கும்.

இதற்கு ஒரு புதிய கட்சியான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) என்னும் நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவு கட்டியமைக்கப்படுவது அவசியமாகும்.