World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Young refugee commits suicide in deportation centre

ஜேர்மனி: இளம் புகலிடம் கோரியரியவர் நாடுகடத்தும் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார்

By Martin Kreickenbaum
18 March 2010

Back to screen version

ஹாம்பேர்க்கில் உள்ள ஒரு நாடுகடத்தப்படும் மையத்தில் ஒரு ஜோர்ஜிய புகலிடம் கோரியவர் தற்கொலை செய்து கொண்டமை தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகளின் கூட்டணியிலான நகரத்தின் செனட் மனித உயிர் பற்றி கொண்டுள்ள மதிப்பினை தெளிவாகக் காட்டுகிறது.

ஜோர்ஜியா குடிமகன் ஒருவர் டேவிட் எம், மார்ச் 7ம் திகதி தன்னுடைய சிறை அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார். அதிகாரிகளுக்கு தன்னுடைய தஞ்சம் கோரிய விண்ணப்ப மனுவில் தனக்கு 17 வயதுதான் என்று கூறியும்கூட அவர் நகரத்தின் நாடுகடத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். உரிய ஆவணம் இல்லை என்னும் காரணத்தால் ஒரு இளவயதுக்காரர் ஜேர்மனியில் கைது செய்யப்படுவது ஐ.நா. சிறுவர்கள் உரிமைகள் மரபுகளை மீறுவது ஆகும்.

பெப்ருவரி தொடக்கத்தில் டேவிட் எம். ஹாம்பேர்க்கில் ஒரு பொலிஸ் ரோந்து வண்டியை நிறுத்தி, தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பிக்க விரும்பினார். ஏற்கனவே அவர் போலந்திலும், ஸ்விட்சர்லாந்திலும், தஞ்சம் நாடியிருந்ததால் Dublin II உடன்பாட்டு அமுலுக்குள்ளானது. அதன்படி அவர் ஆரம்ப மனு கொடுத்திருந்த ஐரோப்பிய நாட்டிற்கு உடனடியாக நாடுகடத்தப்பட முடியாது.

குடியேற்ற அதிகாரிகள் வாடிக்கையாக அகதிகள் நாடுகடத்தலை தவிர்க்க விரும்புகின்றனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். எனவே அகதிகள் நாடுகடத்தப்படும் மையங்களில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பல நேரமும் இதில் ஒரே பிரச்சினை விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தஞ்சம் கோரும் முறை பற்றிய சிக்கல் வாய்ந்த விதிகள் பற்றி தெரியாது என்பதுதான். டேவிட் எம். நாடுகடத்தப்படுமுன் Hahmofersand ல் உள்ள சிறார் காவல் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தன்னுடைய நிலைமையின் மோசமான தன்மையை டேவிட் எம். உணர்ந்தவுடன் அவர் பெப்ருவரி 9 அன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். பெப்ருவரி 25ம் திகதி அவர் கைதி மையத்திற்கான மருத்துவமனை ஒன்றிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஆதன் போலந்திற்கு அனுப்பப்படுவது பற்றிய தகவல் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மார்ச் 9 அன்று அனுப்பப்பட உள்ளார் என்பதையும் அறிந்தார். மார்ச் 6 அன்று அவர் திட உணவுப் பொருளை உண்டார். ஆனால் ஒரு நாளைக்குப் பின்னர் அவர் தன்னுடைய படுக்கை மூடு துணியைக் கிழித்து தன்னையே தூக்கிலிட்டுக் கொண்டார்.

ஜேர்மனிய மனிதாபிமானமற்ற தஞ்சம் மற்றும் குடியேற்ற சட்டத்தின்மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்த டேவிட் எம். அதன் பாதிப்பாளராகிவிட்டார். தன்னுடைய தாய்நாட்டில் எதிர்கொண்டிருந்த அச்சம், இழிநிலை இவற்றில் இருந்து தப்பி அவர் மேற்கு ஐரோப்பாவிற்கு ஓடிவந்திருந்தர். ஆனால் ஜேர்மனியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எந்தளவிற்கு அடிப்படை உரிமைகள் பெறவில்லை என்பதைத்தான் அனுபவித்தார்.

இவர் தற்கொலை செய்து கொண்ட இரு நாட்களில் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) ஹார்பேர்க் செனட்டின் உள்துறை மந்திரி கிறிஸ்தோப் ஆல்ஹுவுஸ் "தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை இளைஞர் மரணம் பற்றி" தெரிவித்தார். ஆனால் அவருடைய பரிவுணர்வு நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை. நீண்டகாலமாகவே அதிகாரிகள் இரக்கமற்ற முறையில் நாடுகடத்துகின்றனர் என்ற அவப்பெயரை ஹாம்பேர்க் நகரம் கொண்டுள்ளது. அவர்கள் குறைந்த வயதினரானாலும் நிலைமை இப்படித்தான் இருந்துள்ளது. நகரசபைத்தலைவரான ஒலோ வொன் பொய்ஸ்ட் (CDU) தலைமையில் உள்ள செனட் கூட்டணியில் பசுமைவாதிகள் சேர்ந்ததில் இருந்து நகரத்தில் எதுவும் மாறவில்லை என்பது தெளிவு.

2008ல் ''எல்லைகளற்ற இளைஞர் அமைப்பு" அமைப்பு உள்துறை செனட்டர் ஆல்ஹுவுஸை "நாடுகடத்தும் மந்திரி" என்று பெயரிட்டது. ஏனெனில் அந்த ஆண்டு ஜேர்மனிய மாநிலங்களிலேயே ஹாம்பேர்க்தான் நாடுகடத்துவதில் முதல் இடத்தில் இருந்தது. அங்கு 1,300 பேருக்கும் மேலாக நாடு கடத்தப்பட்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை பாதி கதையைத்தான் கூறுகிறது. அகதிகளை மனிதாபிமானமற்று நடத்துவதிலும் ஹாம்பேர்க் முதலில் நிற்கிறது. தன்னுடைய பங்கிற்கு ஆங்ஹுவுஸ் திமிர்த்தனமாக எல்லைகளற்ற இளைஞர் அமைப்பு கொடுத்த "விருதை", "பாராட்டு" என ஏற்று, "ஹாம்பேர்க் குடியேற்ற அதிகாரிகள் சட்டம், ஒழுங்கைச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்" என்று புலம்பிக்கொண்டார்.

சாதாரண வழக்கில் இதன் பொருள் ஹாம்பேர்க் அதிகாரிகள் சட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டையையும் பயன்படுத்தி தேவையில்லாத அகதிகளை அகற்றிவிடுவர் என்பதாகும். ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் உலகின் மற்ற நெருக்கடி பகுதிகளுக்கும் அகதிகளை அனுப்பிவிடுவதில் ஹாம்பேர்க் முதலிடத்தில் உள்ளது.

சிறுவர்கள் உரிமை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மரபுகள் சிறுவர்கள், இளைஞர்கள் பற்றி நடந்து கொள்ளும்போது கவனம் தேவை என்று கூறினாலும், பெற்றோர்களுடன் இல்லாத சிறார்கள் இந்நகரத்தில் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டு காவல் மையங்களில் அடைக்கப்படுகின்றனர். ஐ.நா.மரபிற்கு ஒப்புதல் கொடுப்பதில் ஜேர்மனிய கூட்டாட்சி எதிர்ப்பு கொடுத்துள்ளதால், இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது; இந்த எதிர்ப்பின்படி குடியேறுபவர்களை பொறுத்தவரையில் இளவயது என்பது கவனத்திற்கு உரிய காரணி இல்லை என்று நடைமுறையில் ஆகிவிடும். வேறுவிதமாகக் கூறினால், குறைவயதுடைய அகதியை நாடுகடத்துவது முன்னுரிமை பெறும்--அத்தகைய இளவயதினர் பல நேரம் அவர்கள் கடந்த கால நிகழ்வுகளால் பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்ட குறிப்பான தேவைகள், பிரச்சினைகளை அடைந்திருந்தாலும் இந்த நிலைமைதான் கடைபிடிக்கப்படுகிறது.

மற்ற ஜேர்மனிய மாநிலங்களிலும் இளவயதினரை நாடுகடத்தல் பொது வழக்கம் என்றாலும், ஹாம்பேர்க்கில் உள்ள அதிகாரிகள் ஒருபடி மேலே சென்று, சிறுவர்களும் இளவயதினரும் கொடுக்கும் வயதை வாடிக்கையாக நம்பாமல் செயல்படுகின்றனர்.

"அதிகாரி இளவயதினர் உண்மையில் கூடுதல் வயதானவர் என்று சந்தேகித்தால், சந்தேகத்திற்கு உட்பட்டவர் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்." என்று ஹாம்பேர்க்கின் அகதிகள் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த கொனி ஹுஸ்லர் விளக்கினார். மருத்துவமனையில் சிறாரின் பற்கள், தாடை எலும்புகள், தோள்பகுதிகள், கைகள் ஆகிவை எக்ஸ்ரே செய்யப்படும். ஒரு வல்லுனரின் கருத்துப்படி ஹாம்பேர்க்கில்தான் இத்தகைய வழக்கம் உள்ளது. இத்தகைய வழிமுறைகள் பிரச்சினைக்கு உரியவை மற்றும் நிரூபணமான அறிவியல் உறுதி கிடையாது என்று 2007ல் ஜேர்மனிய டாக்டர்கள் காங்கிரஸ் இதுபற்றி கருத்துத் தெரிவித்தது.

ஒரு இளவயது குற்றவாளியின் வயதை நிர்ணயிப்பது நீதிமன்றங்களோ அல்லது இளைஞர் நல அதிகாரிகளோ இல்லாமல் நேரடியாக குடியேற்ற அதிகாரிகளால் என்பது ஹாம்பேர்க்கில் ஒரு வழக்கமாகும். இவர்களுக்கு இளவயதினரை வயதிற்கு வந்தவர்கள் என்று பெயரிடுவதில் நேரடி நலன்கள் உண்டு. ஏனெனில் விரைவில் அவர்களை நாடு கடந்திவிட முடியும் அல்லது 16 வயதினர் என்று அடையாளம் கண்டு தஞ்ச சட்ட அதிகார வரம்பின்கீழ் கொண்டுவந்துவிட முடியும். அகதியின் வயது பற்றிய முடிவிற்கு எதிரான முறையீடு செய்ய ஹாம்பேர்க்கில் சட்டத்தில் இடம் இல்லை. இந்த அடிப்படையில் நகரத்தில் உள்ள அகதிகளில் பாதிக்கும் மேலானவர்கள் கடந்த ஆண்டு வயதிற்கு வந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டனர்.

ஜோர்ஜிய தூதரகம் குறிப்பிட்டுள்ளபடி, டேவிட் எம். 25 வயதுக்காரராக இருந்தாலும், அவருடைய இறப்பிற்கு முழுப் பொறுப்பும் ஹாம்பேர்க் அதிகாரிகளுடையது என்ற உண்மை மாற்றப்பட முடியாது. "பெற்றோருடன் இல்லாத ஒவ்வொரு இளவயதுக்காரர்களின் சட்டஉரிமையான இளவயதினரின் உரிமைகளை ஒப்புக்கொண்டு காப்பதற்குப் பதிலாக அது அவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையின் தனிமைப்படுத்தப்படுகின்றனர், நாடு கடத்தப்படுகின்றனர், அல்லது போலி பிறந்த தேதியைக் கூறி வயதுவந்தவர்கள் என்று அறிவிக்கப்படுகின்றனர்" என்று உள்ளூர் அதிகாரிகளின் வழக்கம் பற்றி ஹாம்பேர்க் அகதிகள் ஆலோசனைக்குழுவின் ஹேர்மான் ஹார்ட் கருத்துக் கூறினார்.

Pro Asyl என்னும் அகதிகள் அமைப்பும் ஐரோப்பா முழுவதும் இருக்கும் அகதிகள் விரோதக் கொள்கையை தாக்கியுள்ளது. இரண்டாம் டப்ளின் உடன்பாடு இயற்றப்பட்டதற்குப் பின்னர் இக்கொள்கை கொடூர வடிவங்களை பெற்றுள்ளது. அந்த நேரத்தில் ஜேர்மனிய அரசாங்கமாக இருந்த சமூக ஜனநாயக கட்சியின் (SPD) ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் இருந்த பசுமைவாதிகள், சமூக ஜனநாயக கட்சிக் கூட்டணி உடன்பாட்டை எப்படியும் ஏற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தது. கண்டத்தின் நடுவில் உள்ள ஜேர்மனி தஞ்சம் கோருவோர் தங்கள் பயணத்தைத் தொடங்கிய நாடுகளுக்கு மீண்டும் அனுப்பப்படுவதற்கு தங்கள் திறமை வலுப்பெறும் என்று நம்பியது. இந்த உடன்பாட்டின் விளைவாக இப்பொழுது அகதிகளை ஐரோப்பா முழுவதும் பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் வழக்கம் பரந்து வளர்ந்துள்ளது. அதன்பின் அவர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இப்படி நாடுகடத்தும் சிறுவர்கள், இளவயதினரின் சிறப்புத் தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்று Pro Asyl ன் ஐரோப்பிய ஆலோசகர் கார்ல் கொப் கூறினார். "இந்த இளைஞரின் மரணம் குழந்தைகளை காப்பாற்றும் நோக்கம் உடைய எல்லா சட்ட வழிவகைகளும் ஹாம்பேர்க்கில் அகற்றப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. சிறுவரும் இளவயதினரும் சிறையில் இருக்கக்கூடாது, கால்நடைகள் போல் ஐரோப்பா முழுவதும் அனுப்பப்படக்கூடாது."

ஹாம்பேர்க்கில் உள்ள பசுமைக் கட்சியின் செனட்டர் ரில் ஸ்ரெவ்வ டேவிட் எம்.மின் இறப்பை "ஒரு சோகமான நிகழ்ச்சி" என்றார். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் ஒன்றும் அபூர்வம் அல்ல. 1993ல் இருந்து 2008 வரை நாடுகடத்தலை எதிர்நோக்கியிருந்த 150க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 814 பேர் நாடுகடத்தலில் இருந்து தப்பியோட முயன்றபோது அல்லது உண்ணாவிரதப்போராட்டத்தின் மூலம் எதிர்ப்புத் தெரிவித்த விதத்தில் காயமுற்றனர்.

ஹாம்பேர்க் செனட்டின் உள்துறை மந்திரி இதன்பின் இளவயது அகதிகள் காவல்மையங்களில் அடைக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் சிறுவர்கள், இளவயதினரைப் பொறுத்தவரையில் இது நிலைமையை மாற்றாது. இளவயதுக் குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் இந்த விதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். மற்ற குறைந்த வயதுடைய அகதிகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பொறுத்துக் கொள்ளப்படுவர், எஞ்சியவர்கள் நாடுகடத்தப்படும் அச்சத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வர்.

ஹாம்பேர்க் கூட்டணியில் உள்ள பசுமைவாதிகள், புதிய விதியைப் பற்றி "மிக மகிழ்ச்சி" அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் நகர செனட்டில் அவர்கள் பிரிவும் இந்த மனிதாபிமானமற்ற நாடுகடத்தல் வழக்கத்தில் முழுமையாக தொடர்புடையவர்கள் ஆவர். இத்தகைய நாடுகடத்தும் வழக்கங்கள் 1938ல் தேசிய சோசலிஸ்டுக்களால் (நாஜிக்களால்) முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பொலிஸ் சட்டங்களில் அடிவேர்களை கொண்டவை என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். பசுமைவாதிகள் இன்னும் திருப்தியான தீர்விற்கு தயார் செய்வார்கள். செய்தி ஊடகத்திற்கு கூறிய கருத்துக்களில் பசுமைவாதிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "நாம் என்ன செய்ய முடியும், நாங்கள் ஒரு கூட்டணியில் உள்ளோம்." என்றார்.

ஒருகாலத்தில் மனித உரிமைகள், இனவெறிக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை பசுமைவாதிகள் அறிவித்திருந்தனர். ஆனால் அதிகாரத்தில் தொடர்வதற்கும் மிகவும் பிற்போக்குத்தன அரசியல் சக்திகளுடன் உறவுகளை தக்க வைத்துக் கொள்ளவும் தமது கொள்கைகளை தியாகம் செய்துவிட்டது. முன்னாள் அமைதிவாத பசுமைவாதிகள் 1999ல் யூகோஸ்லேவியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான போருக்கு ஆதரவு கொடுத்தது மட்டும் இல்லாமல், கட்சி சமூக ஜனநாயக கட்சியின் ஒட்டோ சில்லி கொண்டுவந்த குடமையான குடியேற்றச் சட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்தது. ஹாம்பேர்க் செனட்டின் ஒரு பகுதி என்ற முறையில், அவர்கள் இப்பொழுது இச்சட்டத்தை செயல்படுத்துவதின் தீவிரமாகவும் உள்ளனர். இவ்விதத்தில், டேவிட் எம்.இன் தற்கொலை இறப்பு எதையும் மாற்றவில்லை. டேவிட் எம்.மின் இறப்பின் சில நாட்களுக்குள் ஒரு 15வயது அகதி நகரத்தில் இருந்து ஹங்கேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved