World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain faces a possible Greek scenario, European Union warns

கிரேக்கத்தின் நிலையை போன்றதை பிரிட்டன் எதிர்கொள்ளக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கிறது

By Chris Marsden
22 March 2010

Back to screen version

பிரிட்டிஷ் அரசாங்கம் சிக்கன நடவடிக்கையை விரிவுபடுத்தாவிட்டால், கிரேக்கத்தில் நிலைமை போன்றதை எதிர்கொள்ளக்கூடும் என்று ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

பிரிட்டனின் AAA கடன்தர மதிப்பு ஆபத்திற்கு உட்பட்டுள்ளது, ஏனெனில் கோர்டன் பிரெளனின் தொழிற்கட்சி அரசாங்கம் கடன்களை குறைக்க வெட்டுக்களை போதுமான மிருகத்தனத்துடன் செய்யவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர்கள் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 178 பில்லியன் பவுண்டுகளையும் விடக் கூடுதலாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதம் என்ற நிலையில், பிரிட்டனின் பற்றாக்குறை கிரேக்கத்துடன் விகிதாசாரரீதியில் சமமாக இருப்பதுடன், உண்மை மதிப்பில் மிக அதிகமாக உள்ளது.

இங்கிலாந்து அதன் பற்றாக்குறையை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதியான அரசாங்கப் பற்றாக்குறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் கீழே 2014க்குள் கொண்டுவரவேண்டும் என்ற திசையில் செல்லவில்லை என்று அறிக்கை குறைகூறியுள்ளது. பிரிட்டன் யூரோப்பகுதியில் இல்லாவிடினும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் பெரிதும் தங்கியுள்ளது.

தொழிற்கட்சியின் வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்தைய அறிக்கை 19 பில்லியன் வெட்டுக்களுக்கான திட்டங்களை அறிவித்தது. இது இங்கிலாந்தின் பற்றாக்குறையை 2015 க்குள் 4.7 சதவிகிதம் எனக் குறைக்கும் என்று கூறப்பட்டது. கூடுதல் வெட்டுக்கள் பற்றி அரசாங்கத்தின் மதிப்பீடுகள், 20 க்கும் 25 பில்லியன் பவுண்டுகளுக்கும் இடையே வேண்டும் என்று கோரப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கை அப்பட்டமாக பின்வருமாறு கூறுகிறது: "பொது நிதிகளை நிலைக்கத்தக்க தன்மைக்கு மீட்பதற்கான கால அட்டவணைக்கு இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள இறுக்கும் நடவடிக்கைகளைவிட அதிக நிதியக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது."

இங்கிலாந்து நிதி அமைச்சரகத்தின் 2010-11க்கான 2 சதவிகித பொருளாதார வளர்ச்சி, அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் 3.3 சதவிகித வளர்ச்சி என்ற கணிப்பையும் அறிக்கை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. BBC இடம் ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி, "தன் மீட்பு வாய்ப்புக்கள் பற்றி பிரிட்டன் கூடுதலான நம்பிக்கை கொண்டுள்ளது. நாங்கள் நினைப்பதைவிட அது தான் விரைவில் மீண்டுவிட முடியும் என்று நினைக்கிறது" என்றார்.

ஸ்டெர்லிங்கை விற்பதின் மூலம் சந்தைகள் ஆரம்பத்தில் இதை எதிர்கொண்டன. இதனால் பவுண்டு டாலருக்கு எதிராக 10 மாதக் குறைவில் $1.50க்கும் கீழே $1.4977 என்று குறைந்தது. பின்னர் எதிர்பார்த்ததைவிட வீடுகள் நிலைமை பற்றிய நல்ல தகவலினால் மீண்டு, ஆனால் டாலருக்கு எதிராக 7 சதவிகிதம் குறைந்தது என்ற விதத்தில் மோசமான நிலை ஏற்பட்ட முக்கிய நாணயமாக இருக்கிறது.

"வருங்கால வணிகர்கள் ஸ்டெர்லிங்கை பொறுத்தவரையில் சரியும் தன்மையைத்தான் காட்டுகின்றனர். டாலருக்கு எதிராக பவுண்டு குன்றிப்போகும் என்று பந்தயம் கட்டுபவர்கள் பவுண்டிற்கு இலாபம் கிடைக்கும் என்பவர்களை விட 1992ல் நாணயத்திற்கு எதிராக 1 பில்லியன் டாலரை பந்தயத்தில் George Soros பெற்ற காலத்தைவிட எட்டு மடங்கு அதிகம்" என்று Bloomberg சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய ஊகங்கள், உலக நிதியாளர்கள் தொழிலாள வர்க்கம் வங்கிகள் பிணை எடுப்பிற்கு விலை கொடுக்க வேண்டும் என்ற தீராத கோரிக்கையின் வெளிப்பாடுதான். அவர்கள் இன்னும் பொதுவான, நீடித்த பொருளாதார சமூக வாழ்வைத் தங்கள் நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்க விரும்புகின்றனர்.

தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மில்லியன்களை சுரண்டி எடுத்து அரசாங்க கருவூலங்களை நிரப்பத் தீவிரமாக உள்ளனர். கட்டுக்கடங்காத ஊகத்தினால் சரிந்த நிதியங்களை முட்டுக் கொடுத்து மீட்க கருவூலங்கள் காலி செய்யப்பட்டிருந்தன.

இதைச் செய்வதற்கு அவர்கள் பொதுச்சேவைகள் தகர்க்கப்பட்டு மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மையில் தள்ளப்பட்டு அல்லது பட்டினி ஊதியத்தில் தள்ளப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கிடையில் தங்களை மீண்டும் செல்வக் கொழிப்பு உடையவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். பில்லியன் கணக்கில் அரசாங்க பத்திரங்களை அதிக வட்டி கொடுக்குமாறு செய்து வாங்குவதில் பணம் சேர்க்கின்றனர். அதே நேரத்தில் அரசாங்கங்கள் அதிகம் கடன் வாங்குகின்றன என்று கண்டிக்கின்றனர். AAA தரம் திரும்பப் பெறப்பட்டால், அது வங்கிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கப்பட்ட கடன்களை புதுப்பிக்கும் செலவுகளை அதிகமாக்கும். இந்த வங்கிகளை காப்பாற்றத்தான், அவை நாட்டையே திவாலாக்கிவிடும் என்பதால்தான் மீட்பு நடவடிக்கைக்கு நிதிகள் கொடுக்கப்பட்டன.

இந்த பேராசைபிடித்த நலன்கள்தான் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் செயற்பட்டியலை ஆணையிடுகின்றன.

ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கை அரசாங்கத்தால் எச்சரிக்கை என்பதை விட அச்சுறுத்தல் என்று காணப்பட்டது. குறிப்பாக இன்னும் அறிவிக்கப்படாத, ஆனால் மே 6 நடக்கக்கூடிய பொதுத் தேர்தலுக்கு முன்பு வந்துள்ள இவற்றை பழைமைவாதிகள் இந்நிலையில் அரசாங்கத்தை இப்பொழுது தேவைப்படும் வெட்டுக்களைப் பற்றி நேர்மையாக ஒன்றும் கூறவில்லை என்று கண்டிக்கின்றனர்.

நிழல் அமைச்சரவையின் நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன், "பழைமைவாதிகள் நாம் நம்முடைய மிக அதிக வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறைகளை இன்னும் விரைவாகக் குறைத்து, மீட்பிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்."

டோரித் தலைவர் டேவிட் காமிரோன் கடினமான முடிவுகளை தள்ளிப்போடும் ஒரு நேர்மையற்ற தொழிற்கட்சி அரசாங்கம், "சட்டைக்கையை மடக்கிவிட்டுக் கொண்டு வேலைக்குத் தயாராக இருக்கும்" பழைமைவாத அரசாங்கம் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை வாக்காளர்கள் எதிர்கொள்ளுகின்றனர் என்றார்.

தாராளவாத ஜனநாயக கட்சியின் நிதித்துறை செய்தித் தொடர்பாளர் வின்ஸ் காபிள் நம்பகத்தன்மை வேண்டும் என்றால் கட்சிகள் தாங்கள் எதைக் குறைப்போம் என்பதை சொல்ல வேண்டும் என்றார்.

இதற்கு விடையிறுக்கையில் பழைமைவாதிகள் தங்கள் திட்டமிட்ட வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களால் "மீட்பை நாசப்படுத்திவிடுவர்" என்று பிரெளன் கூறினார். நிதி மந்திரி அலிஸ்டேரின் வரவு-செலவுத் திட்டம் இந்த வாரம் புதனன்று வரவுள்ளது. ஐரோப்பிய ஆணையம் "தவறு" என்று அவர் வலியுறுத்துவதுடன், இன்னும் விரைவான வெட்டுக்கள் மீட்பிற்கு தீமை பயக்கும் என்றார்.

உண்மையில் சிக்கன நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி, G7 தொழில்துறை நாடுகளிலேயே தீவிர, வேகமான வரவு-செலவுத் திட்ட குறைப்பு இது என்று தொழிற்கட்சி பெருமை பேசுகிறது. இதில் 38 பவுண்ட் பில்லியன் குறைப்பு உள்ளது என்றும் 2011ல் இது தொடங்கும் என்றும் ஏப்ரல் முதல் 19 பில்லியன் வரி அதிகரிப்புக்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இன்னும் அதிகம் செல்லத் தான் விரும்புவதாகவும் சுமத்துப்படும் வெட்டுக்கள் விரைவில் பொருளாதாரத்தை மந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுமோ என அஞ்சுவதாகவும் தெளிவாக்கியுள்ளது--இந்த நிலை ஏற்கனவே இங்கிலாந்து வங்கியாலும் பல பொருளாதார வல்லுனர்களாகும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இப்பொழுது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி உறுதி கூறுவது தேர்தலில் தொழிற்கட்சி தோற்பதை உறுதிப்படுத்திவிடும் என்பதையும் அது நன்கு அறியும். ஆனால் இவை அனைத்தும் தந்திரோபாயங்கள்தாம். பொருளாதார நிலைமை மோசமானால் அல்லது இன்னும் தீவிர நடவடிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தால், தொழிற்கட்சி எதிர்பார்த்ததை செய்யும்.

நிதி அமைச்சரகத்தின் தலைமைச் செயலர் லியாம் பயர்ன் அரசாங்கத்தின் கணிப்புக்கள் பொருளாதார வளர்ச்சியில் கிடைக்கவுள்ள 25 பில்லியன் பவுண்டுகளை தளமாகக் கொண்டுள்ளது என்றார். அது ஏற்படவில்லை என்றால், ஐரோப்பிய ஆணையம் கோடிட்டுக்காட்டியுள்ள வெட்டு எண்ணிக்கை சுமத்தப்படும் என்றார்.

இங்கிலாந்து பொருளாதாரம் பெரும் அவதியில் உள்ளது. உள்நாட்டு, உலகப் பொருளாதார நிலைமை மோமாகும் என்ற எதிர்பார்ப்பிற்கு காரணமும் உள்ளது.

இந்த வாரம் இங்கிலாந்து வங்கியின் காலாண்டு அறிக்கை இப்பொழுதுள்ள வாழ்க்கைத் தரங்களில் சரிவை எதிர்பார்க்க வேண்டும் என்றும், அதில் ஊதியக் குறைப்பும் இருக்கும் என்றும் கூறியுள்ளது. வேலையின்மை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்று கூறுவதும் முன்கூட்டிய கருத்தாக இருக்கும்.

பல தொழிலாளர்கள் ஊதியக் குறைப்புக்கள், பகுதி நேர வேலைகளை ஏற்றுள்ளனர். ஆனால் வங்கியோ அவர்கள் பொருட்கள், பணிகள் விலைகள் ஊதியங்களைவிட அதிகமாக உயரும் என்பதை உணரவேண்டும் என்று கூறியுள்ளது. ஊதிய உயர்வுகள் ஆண்டிற்கு 1.4 சதவிகிதம் என்று இருக்கும்போது, தனியார் துறையில் அது 0.7 சதவிகிதம் என்றுதான்--பணவீக்கத்தைவிட மிகக் குறைவாகத்தான்--உள்ளது.

"மந்த நிலையில் வேலைகளை காக்க ஊதியத் தேக்கம் உதவியது என்றாலும், இன்னும் கணிச காலத்திற்கு இது தொடர்ந்தால்தான் வேலைகள் இழப்பு மீட்பின் போது இருக்காது எனப்படுவது இங்கிலாந்து தொழிலாளர்களின் நல்லெண்ணத்தின் வரம்பை சோதிக்கும் என்ற உணர்வும் வந்துள்ளது" என்று அறிக்கை கூறியுள்ளது.

"வேலைகளில் இன்னும் சரிவு என்னும் ஆபத்து தொடர்ந்தும் உள்ளது.... வணிகங்கள் வருங்கால இலாபக் குறைவைக் குறைக்க ஊழியர்களை குறைக்கக்கூடும்" என்று அது தொடர்ந்து எழுதியது.

வங்கிக் கொள்கை இயற்றுபவர், நிதியக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் கேட் பார்க்கர் பொருளாதாரம் மீண்டும் இந்த ஆண்டு மந்த நிலையில் நுழையும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

Chartered Institute of Personnel and Development (CIPD) ன் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஜோன் பில்பொட் கூறினார்: "குறைந்த நேர வேலை" அல்லது இன்னும் மோசமாக "வேலைகள் இழப்பு" மீட்பு என்பது CIPD கவனத்தில் சில காலமாக உள்ளது."

உத்தியோகபூர்வமாக வேலையின்மை ஜனவரியில் 2.45 மில்லியன் என்பதில் இருந்து 33,000 ம் எனக் குறைந்து 7.8 சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் இந்த வேலையின்மை சரிவு இங்கிலாந்து வேலைத்துறையில் 14 ஆண்டுகள் குறைவைத்தான் மறைக்கிறது. தேசியப் புள்ளி விவரங்கள் அலுவலகம் 8.16 மில்லியன் மக்கள் இப்பொழுது "பொருளாதாரரீதியாக செயலற்றுள்ளனர்" என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வயதிற்கு வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் வேலையை நாடவில்லை.

நீண்டகாலமாக வேலையின்மை என்பது 61,000த்தில் இருந்து 687,000 ஆக உயர்ந்துள்ளது. இளைஞர்களிடையே வேலையின்மை 1 மில்லியன் என்று உள்ளது. பகுதி நேரவேலை என்பதும் 1 மில்லியனாக உள்ளது. மற்றும் ஒரு 100,000 மக்கள் கல்வி பயிலச் சென்றுள்ளனர், ஏனெனில் வேலைகள் இல்லை. இது கல்வியில் இருப்பவர்களை 2.3 மில்லியன் என்று மிக உயர்ந்த எண்ணிக்கையில் வைத்துள்ளது.

வேலை இழந்தவர்கள் அல்லது பொருளாதாரத்தில் செயலற்று இருப்பவர்கள் எண்ணிக்கை எனவே 10.6 சதவிகிதம் அல்லது உழைக்கும் மக்கள் தொகுப்பில் 28 சதவிகிதம் என்று மொத்தமாக உள்ளது.

இச்சூழலில்தான் அதிக வெட்டுக்கள் இப்பொழுது செய்யப்படும். Telegraph பத்திரிகையில் ஜெரமி வோர்னர், "சந்தைகள் தேர்தல் தினம் வரை தீர்ப்பை நிறுத்திவைக்கும் என்று பந்தயம் கட்டாதீர்கள். அவை வரும்போது, நாணய, நிதிய நெருக்கடிகள் திடீரென வளரும் போக்கைக் கொண்டிருக்கும், அதிக எச்சரிக்கை கிடைக்காது. சரியும் விளிம்பிற்கு மிக அருகே நாம் செல்லக்கூடும்."

நடக்கும் நெருக்கடியின் தீவிரத் தன்மை பற்றி கணிசமான சித்திரம் அமெரிக்க கடன் தரம் அளிக்கும் நிறுவனமான Moody இல் இருந்து அரசாங்கக் கடன் பற்றி வந்துள்ளது. ஜிமீறீமீரீக்ஷீணீஜீலீக் பத்திரிகையில் Ambrose Evans-Pritchard அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை "மீட்பை முளையிலேயே கிள்ளி எறியாமல், பொது நிதியங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கையில், கயிற்றின் மேல் கழைக்கூத்தாடி போல் நடக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

Moody நிறுவனம் ஊக்கப் பொதி நடவடிக்கைகள் முன்கூட்டி திரும்பப்பெறப்பட்டால் ஏற்படக்கூடிய "கணிசமான செயல்முறை ஆபத்து" பற்றி எச்சரித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு ஒன்று தொகுப்பளவில் 40ல் இருந்து 100 அடிப்படைப் புள்ளிகள் கடன் செலவினங்களை குறைத்ததை குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதிக காலம் காத்திருப்பதும் "அதே ஆபத்தைத்தான் கொடுக்கும்."

அறிக்கையின் முக்கிய ஆசிரியரான Pierre Cailleteau தங்கள் நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி ஆளும் உயரடுக்கிற்கு நிதானம் நிறைந்த எச்சரிக்கையுடன் அறிக்கையை முடித்தார்:

"கடன்களை திருப்பிக் கொடுக்கும் நிலையை AAA தரத்தில் காப்பாற்றுவது என்பதற்கு தவிர்க்கமுடியாமல் மிகப் பெரிய அளவில் நிதிய சமச்சீரை மாற்றுவது தேவை. சில இடங்களில் இது சமூக ஒழுங்கை ஆபத்திற்கு உட்படுத்தும்.... நாம் புரட்சி பற்றி பேசவில்லை, ஆனால் நெருக்கடியின் கடுமை அரசாங்கங்களை சமூகத்தின் நலிவை அம்பலப்படுத்தும் வேதனை தரும் விருப்பங்களை செய்யக் கட்டாயப்படுத்தும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved