World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

BBC Radio Manchester interviews SEP candidate Robert Skelton

BBC மான்செஸ்டர் வானொலி சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ரோபர்ட் ஸ்கெல்டரைப் பேட்டி காண்கிறது

By our correspondent
30 April 2010

Back to screen version

BBC வானொலி மான்செஸ்டரின் மிசேல் டேனியல், மான்செஸ்டர் மத்தியத் தொகுதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளார் ரோபர்ட் ஸ்கெல்டனை பேட்டி கண்டார்.

நகரத்தின் வேட்பளார்கள் சிலரை ரேடியோ மான்செஸ்டர் பேட்டி கண்டு ஒவ்வொருவரையும் மக்கள் ஏன் அவர்கள் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் மற்றும் சுகாதாரம், குடியேற்றம், கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம், குற்றங்கள் பற்றிய அவர்கள் கொள்கைகள் பற்றி ஒரே மாதிரியான வினாக்களையும் கேட்டது. 20 செகண்டுகள் ஒலிக் குறிப்புக்களையும் பேட்டிகளில் இருந்து எடுத்து பிபிசி தங்கள் செய்தி அறிக்கைகளில் வெவ்வேறு கொள்கைத் தலைப்புக்களின் போது பயன்படுத்துகிறது.

நாம் அப் பேட்டியை மீழ பிரசுரிக்கிறோம்

மிசேல் டேனியல்: மக்கள் ஏன் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

ரோபர்ட் ஸ்கெல்டன்: எங்கள் கட்சி ஒன்றுதான் இத்தேர்தலில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடைப்படையில் நிற்கிறது; எனவே மக்கள் சோசலிசச் சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். லேபர், கன்சர்வேடிவ்கள் மற்றும் லிபரல்கள் அனைத்துமே பெருவணிகத்தின் கட்சிகள் ஆகும். நாம் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் நிற்கிறோம். தனியார் இலாபத்தையும், இழிவான முறையில் ஒரு சமூகத்தின் மிகச்சிறிய சிறுபான்மையின் செல்வக் கொழிப்பையும் கொண்ட முதலாளித்துவ சமூகம் சோசலிசத்தால் மாற்றி அமைக்கப்பட வேண்டும்—அதாவது சமூகத் தேவைக்காக உற்பத்தி முறைகள் அனைத்தையும் பகுத்தறிவார்ந்த முறையில் கட்டுப்படுத்துதல் வேண்டும்.

எம்டி: சுகாதாரம் பற்றிய உங்கள் கொள்கை என்ன?

ஆர்.எஸ். ஒரு இலவச, விரிவான, முழு நிதி அளிக்கப்பட்ட தேசிய சுகாதாதர சேவை அனைவருக்கும் கிடைக்ககூடிய முறையில் இருப்பதைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி விரும்புகிறது. தேர்தலுக்கு பின்னர் அனைத்துக் கட்சிகளும் தேசிய சுகாதார சேவையில் பாரிய வெட்டுக்களை செய்யும். இதன் பொருள் வேலை இழப்புக்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் பிற்பக்கத்தில் இன்னும் தனியார்மயமாக்கல் என்பதாகும்.

அதிஉயர் செல்வந்த உயரடுக்கு பிரிட்டனை நடத்துவது, இலவச சுகாதாரப் பாதுகாப்பை அதன் தடையற்ற செல்வக் குவிப்பில் ஒரு பெரும் கசிவு என்று கருதுகிறது. வங்கிகளுக்கு அரசாங்கம் பிணை எடுத்ததில் கொடுக்கப்பட்ட பொதுப்பணத்தின் அளவு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். அது முழு தேசிய சுகாதாதர சேவைக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு போதுமான நிதியாகும்.

மான்செஸ்டர் மத்திய தொகுதியில், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் இப்பொழுது 3 மில்லியன் பவுண்டுகளுக்கு வெட்டுக்களை அறிவித்துள்ளது. மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் 127 வேலை இழப்புகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

எம்.டி: குடியேற்றம் பற்றி உங்கள் கொள்கை என்ன?

ஆர்.எஸ்: சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் இடங்களில் எங்கு வேண்டுமானாலும் வசித்து, உழைக்கும் உரிமைக்கு ஆதரவு கொடுக்கிறது. குடியேறுபவர்கள், தஞ்சம் கோருபவர்களை பலிகடாக்களாக ஆக்குவதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். அனைத்துக் கட்சி அரசியல் வாதிகளும் செய்தி ஊடகத்தினரும் இவர்களை நம் சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் குறை கூறுகின்றனர்.

குடியேறுபவர்கள் மற்றும் புகலிடம் நாடுபவர்கள் மீது இடையறாத் தாக்குதல்கள் நடத்தப்படுவதின் நோக்கம், உழைக்கும் மக்களை பிரித்து வைப்பதற்காகும். 1930 களுக்கு பின்னர் வந்துள்ள ஆழ்ந்த மந்த நிலையையின் உண்மைக் காரணத்தில் இருந்து திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி மகத்தான பொதுநலச் செலவினக் குறைப்புக்கள் நடத்தப்படுகின்றன. ஒரு சோசலிஸ்ட் வேட்பாளர் என்னும் முறையில் நான், தொழிலாள வர்க்க மக்கள் அவர்களுடைய பொது நலன்களின் அடிப்படையில் சர்வதேச ரீதியாக ஐக்கியப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளேன்.

எம்.டி: பாதுகாப்பு பற்றி உங்கள் கொள்கை?

ஆர்.எஸ்: நாங்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் இன்னும் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் அனைத்து பிரிட்டிஷ் துருப்புக்களும் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். பிரிட்டிஷ் துப்பாக்கிகள், குண்டுகளால் பேரழிவிற்கு உட்பட்டுள்ள இந்நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும். இப்போரை பொய்களின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்படுத்திய தொழிற் கட்சி அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஒரு போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இது, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான எங்கள் சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டின் இணைந்த பகுதியாகும். பிரிட்டனின் அணுவாயுதங்கள் அழிக்கப்பட்டுவிட வேண்டும், ஆயுத்தொழிலில் வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் சமூகத்திற்குப் பயனளிக்கும் உற்பத்தி முறைகளில் மீண்டும் வேலை கொடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பிற்குகாக செலவழிக்கப்படும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் உழைக்கும் மக்களின் தேவைகளுக்காக—கௌரவமான வாழ்க்கை மற்றும் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்காக-- செலவழிக்கப்பட வேண்டும்.

எம்.டி; பொருளாதாரம் பற்றி உங்கள் கொள்கை என்ன?

ஆர்.எஸ்; மூன்று முக்கிய கட்சிகளுமே தேர்தலுக்குப் பிறகு உழைக்கும் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளன. இதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. முக்கிய வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களின் குற்றம் சார்ந்த மற்றும் ஊக நடவடிக்கைகள்தான் இந்த மந்த நிலையைத் தோற்றுவித்தன, உழைக்கும் மக்கள் அல்ல.

சமூகத்தின்மீது உயர் செல்வந்தரும் பெருநிறுவன உயரடுக்கும் கொண்டுள்ள ஏகபோக உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடிக்கு ஒரே ஜனநாயகத் தீர்வு இந்த ஒட்டுண்ணிகளிடம் இருந்து அரசியல் அதிகாரத்தை நீக்கி விடுவதுதான். சர்வதேச நிதிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அனைத்துக் கடன்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். வங்கிகளும், பெரு நிறுவனங்களும் பொது உடைமைகளாக மாற்றப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் பயன்பாட்டு அமைப்புக்களாக கொண்டுவரப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இலாபத்திற்கு என்று இல்லாமல் தேவைக்கு என்று நாம் உற்பத்தியை திட்டமிட முடியும்.

எம்.டி: குற்றங்களைப் பற்றி உங்கள் கொள்கை என்ன?

ஆர்.எஸ்: கலந்துரையாடப்பட வேண்டிய மிகப் பெரிய குற்றம் உயர் செல்வந்தர்கள் செய்ததைப் பற்றித்தான் என்று நாங்கள் நினைக்கிறோம்—பில்லியனர்களும் அவர்களுடைய அரசாங்க ஆதரவாளர்களும்; இதுதான் நிதிய நெருக்கடிக்கு வகை செய்து, முன்னோடியில்லாத அளவிற்கு பொதுப் பணங்களை கொள்ளையடிக்க வகை செய்தது.

மகத்தான அளவிற்கு குற்றம் சார்ந்த தன்மை மற்றும் மோசடியினால் ஏற்பட்ட 2008 நெருக்கடிக்கு பின்னர் நடந்தது என்ன? எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக பொதுச் சொத்தில் கொழுத்த செல்வந்தர்களள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களின் சூறையாடல் நடந்தது. கிட்டத்தட்ட 1 டிரில்லியன் பவுண்டுகள் திருடப்பட்டன—வரலாற்றிலேயே இது மிகப் பெரிய கொள்ளையாகும்.

வங்கியாளர்கள் கைது செய்யப்பட்டு தவறான முறையில் பெற்ற தேட்டங்களை திருப்பி செலுத்துமாறு செய்யப்பட வேண்டும்.

எம்.டி: கல்வி பற்றிய உங்கள் கொள்கை?

ஆர்.எஸ்: கல்வி என்பது ஒரு உரிமை. அது சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கான ஒரு சலுகை அல்ல. நாங்கள் மழலையர் பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை இலவச, உயர்ந்த தரத்திலான கல்வி சகலருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வெட்டுக்களின்படி 200,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்த செப்டம்பரில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற முடியாது. வேலையின்மை பெருகும் நிலையில் அவர்கள் சமூக உதவிப் பணத்தை நாட வேண்டும் அல்லது குறைவூதிய வேலைகள நம்ப வேண்டும் என்ற எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர்.

இதன்பின் திருமதி டேனியல் கேட்டார்: "உங்கள் வலைத் தளத்தைப் பார்த்தேன், சோசலிச சமத்துவக் கட்சி மான்செஸ்டர் மத்திய தொகுதி, மற்றும் ஆக்ஸ்போர்ட் கிழக்குத் தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும், இதனால் அதிக வேறுபாடு வரப்போவதில்லை, இல்லையா?’

ஆர்.எஸ்: சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் நிற்கிறது; மக்களவைக்கு தேர்தல் வெற்றி என்ற அடிப்படையில் அல்ல. எங்கள் பிரச்சாரத்தின் இலக்கும் அதுவல்ல. தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், தொழிலாள வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரங்கள், வேலைகள், ஊதியங்கள், மற்றும் பணிநிலைகளுக்கு எதிராக தவிர்க்க முடியாது வரும் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கான ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்.