World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Residents protest against demolition of homes

இலங்கை: வீடுகள் தகர்க்கப்படுவதற்கு எதிராக குடியிருப்பாளர்கள் போராட்டம்

By our correspondents
15 May 2010

Back to screen version

மத்திய கொழும்பு கொம்பனித்தெருவில் நேற்று சுமார் 200 பேர் இராணுவத்தால் தமது வீடுகள் அழிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். 45 குடும்பங்கள் வசித்த இருபது வீடுகள் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் கட்டளையின் பேரில் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் முஸ்லிம்களாவர்.

அண்மையில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்

வீடுகள் கற்கூளங்களாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்திருந்த குடியிருப்பாளர்களை தடுப்பதற்கு கடந்த வாரக் கடைசியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் இராணுவச் சிப்பாய்களும் குவிக்கப்பட்டிருந்தனர். அரசாங்கத்தின் நடவடிக்கையை மக்கள் எதிர்த்த போது கலகம் அடக்கும் பொலிசார் தடியடி பிரயோகம் செய்ததோடு அவர்களை தூர விரட்டினர்.

கொழும்பு புறநகர் பகுதியான தொட்டலங்கவில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் குடிசைகளில் மீளக் குடியமருமாறு அரசாங்கம் விடுத்த கட்டளையை அந்த வறிய குடும்பங்கள் நிராகரித்தன. மாறாக அவர்கள் தமது வீடுகள் இருந்த இடத்துக்கு முன்னால் கூடாரங்கள் அமைத்து வாழ்கின்றனர். அநேகமானவர்கள் சிறுவர்களின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உடைகள் உட்பட உடமைகளை இழந்துள்ளனர். அவர்கள் இப்போது அயலவர்களதும் நலன்புரி அமைப்புகளதும் உதவிகளில் தங்கியிருக்கின்றனர். முன்னர் அவர்களது வீடுகள் இருந்த நிலம் மட்டமாக்கப்பட்டு, தகரங்களால் சுற்றி வேலியிடப்பட்டுள்ளதுடன் "தடைசெய்யப்பட்ட பிரதேசமாகவும்" பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததை அடுத்து, நகர அபிவிருத்தி அதிகார சபை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மாற்று வீட்டைப் பெறுவதற்கான ஆண்டு வாடகைப் பணமாக 100,000 ரூபாவை (880 அமெரிக்க டொலர்) கொடுத்தது. எவ்வாறெனினும், அவர்கள் தயக்கத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்துக்கு சென்ற போது, அவர்களது உடமைகளை கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு 5,000 ரூபா மட்டுமே கொடுக்கப்பட்டது.

நேற்று கடும் மழையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். "எமது வீடுகளில் கைவைக்காதே!", "எமது பிள்ளைகள் வீதிகளில்", "இராஜபக்ஷவின் சிறந்த ஆட்சி இதுவா?", "தன்னுணர்வுள்ள தலைவர் [இராஜபக்ஷ] தூக்கத்தில்" போன்ற சுலகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தினர்.

கடந்த மாதம் தனது புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட உடனேயே, இராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய இராஜபக்ஷ, கொம்பனித்தெரு குடிசைகள் "கண்ணை உறுத்துகின்றன" அவை அகற்றப்பட வேண்டும் என பிரகடனம் செய்தார். அரசாங்கம் அபிவிருத்திக்காக அடுக்குமாடி கட்டிடங்களை அமைக்கக் கூடிய நிலங்களை துப்புரவு செய்ய முயற்சிக்கின்றது.

"கொழும்பு குடியிருப்பாளர்களின் வீடுகளை காக்கும் அமைப்பு" நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் குழு எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் நவசமசமாஜக் கட்சியால் அமைக்கப்பட்டிருந்தது.

"மக்கள் வெளியேற்றப்பட்ட விதம் இழிவானதாகும். இரண்டு மணித்தியாலங்களுக்கு மாறாக, அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வழங்கியிருக்க வேண்டும்," என தெரிவித்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவுஃப் ஹக்கீம், இந்தக் குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார். கடந்த மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் குடிசை வாசிகள் யூ.என்.பி. க்கு வாக்களித்தமைக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையே இந்த வெளியேற்றமாகும் என யூ.என்.பி. மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஸ்மான் கூறிக்கொண்டார்.

ந.ச.ச.க. தலைவர்களில் ஒருவரான சமல் ஜயநெத்தி, மேலும் வார்த்தை ஜாலங்களை பேசினார். "இது மஹிந்தவின் சிந்தனையல்ல இது இழிந்த சிந்தனை. மஹிந்த சிந்தனையை வெளியேற்றுவதற்கான முதலாவது வேட்டை நாம் கொம்பனித்தெருவில் தீர்த்துள்ளோம் என்பதை கூறிக்கொள்கின்றோம். இந்த முறையில் இந்த நாட்டை கட்டியெழுப்புவதை நாம் அனுமதிக்க முடியாது. இது அழிவுகரமான அபிவிருத்தி" என அவர் பிரகடனம் செய்தார்.

இந்த சகல வாய்வீச்சுக்களும் ஒரு புறம் இருக்க, தமது இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகள் இடிக்கப்பட்ட இடத்திலேயே பொருத்தமான வீடுகள் மீண்டும் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என எந்தவொரு பேச்சாளரும் கோரவில்லை. அவர்கள் இந்த வெளியேற்றத்தை நடந்து முடிந்த விடயம் என்ற விதத்திலும் மற்றும் "சட்ட விரோதமாக குடியிருக்கும்" குடிசைவாசிகளை வெளியேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு "உரிமை" உண்டு என்பதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டனர். வழக்கு தொடரப்பட்டால், அது ஆத்திரமடைந்துள்ள குடியிருப்பாளர்களை சாந்தப்படுத்துவதற்கு கொஞ்சம் கூடுதலான நட்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பதாகவே அமையும்.

மீண்டும் முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியினர் மிகவும் நயவஞ்சகமான பாத்திரத்தை ஆற்றியுள்ளனர். அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக, ஒழுக்கமான மற்றும் குறைந்த செலவிலான வீடுகளைக் கோரி எந்தவொரு சுயாதீனமான அரசியல் போராட்டமும் நடக்காமல் தடுக்க வலதுசாரி யூ.என்.பி. மற்றும் சிங்கள அதிதீவிரவாத ஜே.வி.பி. உடனும் கைகோர்த்துக்கொண்டனர். யூ.என்.பி. ஆட்சியில் இருக்கும் போது, அது கொழும்பு பிரதேசங்களில் இருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றியதோடு அடிப்படை ஜனநாயக உரிமைகளை தாக்குவதில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு.

கொம்பனித்தெருவில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றியமை, பெருந்தொகையான குடிசைவாசிகளை வெளியேற்றி, முதலீட்டாளர்கள் மூலம் மத்திய கொழும்பை அபிவிருத்தி செய்வதன் பேரில் ஆயிரம் ஏக்கர் இலாபகரமான நிலங்களை துப்புரவு செய்யும் கொழும்பு அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் பகுதியாகும். ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் மீது பாய்வதற்காக இதே போன்றதொரு நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டது.

சமுதாயத்தில் மிகவும் வறிய மற்றும மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதியினரை இலக்காகக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகள், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற நிலையில், அது முழுத் தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக பயன்படுத்தவுள்ள வழிமுறைகள் பற்றிய ஒரு எச்சரிக்கையாகும்.

கொம்பனித்தெரு குடிசைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை காக்க தொழிலாளர்கள் முன்வர வேண்டும். நிலத்துக்கு சட்டப்பூர்வமான பத்திரங்கள் அவர்களிடம் இல்லாத போதிலும், பெரும்பாலானவர்கள் அந்தப் பிரதேசத்தில் பல தசாப்தங்களாக, சிலர் பல பரம்பரைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களைப் போல், தக்க தங்குமிடம், மின்சாரம், சுத்தமான தண்ணீர் மற்றும் மலசலகூடம் போன்ற அடிப்படை சேவைகள் இன்மை உட்பட ஒரே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சொத்துக்களில் இலாபம் சம்பாதிப்பவர்களுக்கு வழியமைப்பதற்காக அரசாங்கம் எவ்வாறு இத்தகைய குடிசைகளை அழிக்கின்றதோ, அவ்வாறே பூகோள நிதி சந்தையின் கோரிக்கைகளை நிறைவேற்ற பொதுச் செலவு மற்றும் அத்தியாவசிய சேவைகளையும் அழிக்கத் தயாராகின்றது. ஒரு சில செல்வந்தர்களின் தனியார் இலாபத்துக்காக அல்லாமல், வெகுஜனங்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதன் மூலம் மட்டுமே, வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

தொழிலாள வர்க்கத்தை இந்த இலாப முறைமையுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கும் யூ.என்.பி., ஜே.வி.பி. மற்றும் முன்னாள் தீவிரவாதிகள் உட்பட சகல முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, குடிசைகள் மற்றும் தொழிலாள வர்க்க பிரதேசங்களில் நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிப்பதே அத்தகைய போராட்டத்துக்கான ஆரம்பப் புள்ளியாகும். இந்த வேலைத்திட்டத்தையே சோசலிச சமத்துவக் கட்சி அபிவிருத்தி செய்கின்றது.

வெளியேற்றப்பட்ட சிலர் உட்பட கொம்பனித்தெரு குடியிருப்பாளர்களிடம் உலக சோசலிச வலைத்த தள நிருபர்கள் பேசினார்கள். திருமணமான பெண் ஒருவர் விளக்கியதாவது: "நகர அபிவிருத்தி அதிகார சபை தொட்டலங்கவில் கொடுத்துள்ள வீடுகளில் எங்களால் வாழ முடியாது. அவற்றை வீடுகள் என்றே சொல்ல முடியாது. அவை சேற்று நிலத்தில் அமைக்கப்பட்ட பலகை பெட்டிகளாகும். அங்கு தக்க காற்றோட்டம் கிடையாது. வாய்க்கால்கள் நிரம்பிவழிகின்றன. கெட்ட நாற்றத்தை தாங்க முடியாது. நாங்கள் வாழ்ந்த வீடுகள் அவற்றை விட நூறு மடங்கு நல்லவை. நாங்கள் எதற்காக அங்கு போக வேண்டும்? நாங்கள் போகாமல் இருக்க முடிவெடுத்துவிட்டோம்."

இன்னுமொரு குடும்பப் பெண், "புறநகர் பகுதியில் கூட ஒரு வீட்டை அரை ஆண்டுக்கு வாடகைக்கு வாங்க ஒரு இலட்சம் ரூபா போதாது. அதே சமயம் எவ்வளவு காலம் வாடகை வீட்டில் வாழவேண்டி வரும் என்பதும் தெரியாது. அவர்கள் எங்களுக்கு வீடு கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை" என்றார்.

வெளியேற்றும் நடவடிக்கையின் கொடூரத்தை ஒரு இளம் தாய் விளக்கினார். அவரது மகள் பாடசாலை பையை எடுக்க முற்பட்ட போது அவளை பொலிசார் அடித்தனர். "அவர்கள் வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலமே கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் எமது மக்களை மனிதாபிமானமற்ற முறையில் அடிக்கத் தொடங்கினர். அவர்கள் முதியவர்கள் சிறுவர்கள் என பார்க்கவில்லை. யுத்தத்தின் போது வடக்கில் இருந்த மக்களை அவர்கள் எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதை இப்போது எங்களால் நினைத்துப் பார்க்க முடிகின்றது," என அவர் கூறினார்.

2008ல் கொம்பனித்தெரு கிளென் பெசேஜில் இருந்த மக்களை வெளியேற்றிய போது, குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்காக அதைச் செய்ய வேண்டியிருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டது. அரசாங்கம் என்ன சொன்னது என்பதை ஒரு குடியிருப்பாளர் நினைவூட்டினார். "விமானப் படை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும், அது அருகில் உள்ள சிவிலியன்களை பாதிக்கும் என அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். எங்கள் மீது எவ்வளவு அனுதாபம்! இப்போது யுத்தம் முடிந்துவிட்டது, புலிகளும் இப்போது இல்லை. புலிகள் அல்ல, எங்களை இராணுவமும் பொலிசும் தான் கொடூரமாகத் தாக்கியது."

முன்னால் கொம்பனித் தெரு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள "இடைத்தங்கல் குடியிருப்புக்களை" WSWS குழு சென்று பார்த்தது. வெளியேற்றப்பட்ட மக்கள் விளக்கியதை விட அந்தக் கூடாரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தின் நிலைமை மிகவும் மோசமானதாகும். கிளென் பெசேஜில் இருந்து வெளியேற்றப்பட்ட 73 குடும்பங்கள் இன்னமும் சதுப்பு நிலம் போன்ற பிரதேசத்தில் ஏங்கித் தவிக்கின்றனர். அவர்கள் சட்ட விரோத குடியிருப்பாளர்கள் என அரசாங்கம் இப்போது கூறும் நிலையில், அவர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. "பல அரசாங்க அரசியல்வாதிகள் எங்களுக்கு புதிய வீடுகளை தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளின் பின்னரும் நாங்கள் இன்னமும் இந்த நரகத்தில் வாழ்கின்றோம்," என ஒரு குடும்பப் பெண் கூறினார்.