World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US stokes disputes with China at Asian summit

ஆசியன் உச்சிமாநாட்டில் சீனாவுடன் மோதல்களை அமெரிக்கா தூண்டுகிறது

By Peter Symonds
1 November 2010

Back to screen version

ஹனோயில் சனிக்கிழமை நடைபெற்ற கிழக்கு ஆசியா உச்சிமாநாட்டில் தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக்கடல் பற்றிய முக்கிய கடல்சார்ந்த மோதல்களில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் அழுத்தத்தைத் தொடர்ந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ASEAN) ஏற்பாடு செய்திருந்த வியட்நாமில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசியாவில் பெரும் சீனச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இணைவான ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தின் ஒரு பகுதியாக முதல் தடவையாக அமெரிக்கா கலந்து கொண்டது.

கடந்த வாரம் ஹொனொலுலுவில் பேசிய கிளின்டன் தன்னுடைய ஆசியப் பயணத்தையும் இந்த வாரம் ஜனாதிபதி “முன்னோக்கிய போக்குடைய இராஜதந்திர முறை”க்காக இவ்வாரம் தொடங்கும் பணி பற்றியும் குறிப்பிட்டார். சீனாவிற்கு எதிராக இது இயக்கப்படவில்லை என்று கூறிய அவர், “நாம் எங்கு சென்றாலும், பொதுவாகப் பொருந்தும் இலக்குகள் தொகுப்பை முன்வைப்போம்: அதாவது ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் தலைமையை நீடித்து வலுப்படுத்துவதை…. நாங்கள் ஒரு தீவிரச் செயல் தளத்தை ஏற்றுள்ளோம்: நாங்கள் எங்கள் இராஜதந்திரச் சொத்துக்களை அனுப்பியுள்ளோம்—எங்கள் உயர்மட்ட அதிகாரிகள், வளர்ச்சித்துறை வல்லுனர்கள், பல முக்கிய, பரந்த வகைப் பிரச்சினைகள் பற்றிய குழுக்கள் ஆகியவை அடங்கும்—ஆசிய-பசிபிக் பகுதியின் ஒவ்வொரு மூலைமுடுக்கு மற்றும் தலைநகரங்களுக்கும்.”

உச்சி மாநாட்டில் கிளின்டன் வாஷிங்டனின் தீவிரச்செயல் நிலைப்பாட்டை தென் சீனக்கடல் பகுதி மோதல்கள், சீனா மற்றும் ஏசியன் உறுப்பு நாடுகளான வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே தொடர்புடையவை பற்றி மீண்டும் வலியுறுத்திப் பேசினார். “அமெரிக்கா தடையற்ற கடல்போக்குவரத்து மற்றும் சட்டபூர்வ வணிகத்தின் சுதந்திரம் பற்றித் தேசிய அக்கறை கொண்டுள்ளது” என்றார் அவர். மோதல்கள் எழும்போது அவை சர்வதேச சட்டத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

தென் சீனக் கடலில்—சீனாவிற்கு அருகிலும், அமெரிக்க நிலப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிலும் இருப்பது—அமெரிக்காவிற்கு “ஒரு தேசிய அக்கறை” உள்ளது என்னும் அறிவிப்பு பெய்ஜிங்கின் மூலோபாயக் கவலைகள் அமெரிக்காவின் கடற்படை ஆதிக்கம் வடகிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு, ஆபிரிக்காவிற்கு இடையே உள்ள மூலோபாயக் கப்பல் பாதைகளில் இருப்பதுடன் நேரடியாக மோதுகின்றன. வாஷிங்டன் தென் சீனக் கடல் பகுதி மோதல்களில் மத்தியஸ்தம் செய்யவும் முன்வந்தது. இது ஆசியான் உறுப்பினர்களுக்கு அமெரிக்க கொடுத்த குறிப்பான ஆதரவு என்பதுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களைத் தீர்க்கும் சீனாவின் முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. கிளின்டன் இதே போன்ற கருத்துக்களை ஜூலை மாதம் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டில் பேசியபோது, சீன வெளியுறவு மந்திரி யாங் ஜியேச்சி அவற்றை “கிட்டத்தட்ட சீனா மீதான தாக்குதல் தான்” என்று அறிவித்தார்.

வாஷிங்டனின் நிலைப்பாடு மற்ற நாடுகளையும் சீனா மீது இன்னும் உறுதியான நிலைப்பாட்டைக் கொள்ள ஊக்குவித்துள்ளது. கடந்த மாதம் ஜப்பான் ஒரு சீன மீன்பிடிக்கும் கப்பலின் தலைமை மாலுமியை மோதலுக்கு உட்பட்ட டயாவோயு தீவுகளுக்கு (சென்காக்கு என்று ஜப்பானில் அறியப்படுவது) அருகே உள்ள கடல்நிலையில் காவலில் வைத்தபோது ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடேய உள்ள அழுத்தங்கள் ஹனோயில் கடந்த வாரக் கூட்டங்களில் அதிக இடம் பெற்றமை. பெய்ஜிங் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு ஜப்பானுக்கு அபூர்வ நிலத் தாதுப் பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாகத் தோன்றிய நிலையில் டோக்கியோ கப்பல் தளபதியை விடுவித்தது. ஆனால் அடித்தளத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன.

ஹனோய் உச்சிமாநாட்டில், சீனப் பிரதம மந்திரி வென் ஜியாபாவோ ஜப்பானியப் பிரதம மந்திரி நாவோடா கானுடன் நடக்கவிருந்த இருதரப்புப் பேச்சுக்களை கடைசி நிமிஷத்தில் ஜப்பானிய வெளியுறவு மந்திரி செய்ஜி மேஹரா பகிரங்காக ஜப்பான் டயாவோயு/சென்காகு தீவுகள்மீது இறைமை உண்டு என மீண்டும் வலியுறுத்திய அளவில் இரத்து செய்தார். கிளின்டன் குறுக்கிட்டு அமெரிக்கா ஒரு முத்தரப்பு உச்சமாநாட்டை ஜப்பான் மற்றும் சீனாவுடன் இம்மோதல் இன்னும் மற்ற பிரச்சினைகள் பற்றி பேசலாம் என்று அழைப்பு விடுத்தது—இதையும் சீனா இருதரப்புப் பேச்சுக்களில் தீர்க்க வேண்டும் என்று விரும்புவதில் ஒரு குறுக்கீடு ஆகும்.

அமெரிக்கா “உறுதியான, சமாதானமான உறவுகள்” இரு நாடுகளுக்கும் இடையே இருக்க வேண்டும் என்று கிளின்டன் அறிவித்தபோது, வாஷிங்டன் டோக்கியோவிற்கு ஆதரவு கொடுத்துள்ளது மோதலுக்கு எரியூட்டியுள்ளது. ஜப்பானின் வெளியுறவு மந்திரி மெஹராவுடன் ஹொனோலுலுவில் கடந்த வாரம் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கிளின்டன் அமெரிக்கா டயாவோயு/சென்காகு பற்றிய எந்த இராணுவ மோதலிலும் அமெரிக்கா ஜப்பானுக்கு ஆதரவு கொடுக்கும் என்று உறுதிப்படுத்தினார். எந்த நாட்டிற்கு தீவுகள் மீது இறைமை உண்டு என்ற நிலைப்பாட்டை அது கொள்ளவில்லை என்றாலும் இவ்வாறு கூறப்பட்டது.

கிளின்டனுக்கும் சீன வெளியுறவு மந்திரி யாங்கிற்கும் இடேயே ஹனோயில் நடந்த பேச்சுவார்த்தைகள் அழுத்தம் நிறைந்தவையாக இருந்தன என்பது தெளிவு. சீனச் செய்தி ஊடகத்திடம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலரிடம் சீனாவின் தீவுகள் மீதான இறைமையை மதிக்குமாறு கூறி, “பொறுப்பற்ற கருத்துக்களைக்” கூறவேண்டாம் என்றும் யாங் தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மா ஜாவோக்சு, “சீனாவானது அமெரிக்க ஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையில் “டயாவோயு தீவுகள் பற்றி சொல்லிலோ செயலிலோ எவ்விதக் குறிப்பு இருப்பதையும் ஏற்காது” என்றும் அறிவித்தார்.

கிளின்டன் யாங்கிடம் இருந்து சீனா “அபூர்வ தாதுப்பொருட்கள் அளிப்பதில்” நம்பகத் தன்மையுடன் இருக்கும் என்ற உறுதிமொழியை யாங்கிடம் இருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது சீனா கிட்டத்தட்ட ஒரு ஏகபோக உரிமையை—95 சதவிகிதக் கட்டுப்பாட்டை—இந்த தாதுப்பொருட்கள் பற்றிய உலகச் சந்தையில் கொண்டுள்ளது. இவை பல உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கு, மின்னணுத்துறை உட்பட, தயாரிப்பிற்கு மிகவும் முக்கியமாகும். சீனாவின் “தெளிவுறுத்தலை” ஏற்ற கிளின்டன் “உலகம் முழுவதுமே இப்பொழுது சீனா ஒரு விநியோகிக்கும் நாடு என்பதற்கு மாற்றீடுகளைக் கண்டுபிடிக்கும் தேவையில் உள்ளது” என்று அறிவித்தார்.

பெய்ஜிங்கின் வேண்டுகோளின் பேரில் கிளின்டன் சீனாவின் ஹைனியன் தீவிற்கு பின்னர் சனியன்று அரசாங்க வெளியுறவுத்துறை ஆலோசகர் டாய் பின்குவோவுடன் பேச்சுக்கள் நடத்தப் பறந்து வந்தார். பிந்தையவர் அரசாங்க அதிகாரத்துவப் படிநிலையில் யாங்கிற்கு மூத்தவர் ஆவார். விவாதங்களின் பொருளுரை பகிரங்கமாக ஆக்கப்படவில்லை என்றாலும், கிளின்டன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வட கொரியா எந்தத் தீவிர “தூண்டுதல் நடவடிக்கைகளை” அடுத்த வாரம் தென்கொரியத் தலைநகரான சியோலில் நடக்க இருக்கும் G20 உச்சி மாநாட்டின்போது எடுக்காமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாஷிங்டனின் “முன்னோக்கிய நிலைப்பாடு இராஜதந்திர முறையின்” ஒரு பகுதியாக கிளின்டன் கம்போடியாவிற்கு பயணிப்பார்—இது சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. அதைத்தவிர மலேசியா, பாப்புவா நியூ கினியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்த வாரத்தில் செல்லுவார். பாப்புவா நியூ கினியாவிற்கு அவர் செல்லுவது இனியும் தன் நட்பு நாடான ஆஸ்திரேலியாவை தென் மேற்கு பசிபிக் பகுதி விவகாரங்ளை நிர்வகிக்க விடுவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்பதின் அடையாளம் ஆகும். கடந்த வாரம் ஹவாயில் நடத்திய உரையில் கிளின்டன் USAID பிஜியில் ஒரு அலுவலகத்தை அடுத்த ஆண்டு நிறுவி $21 மில்லியன் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றி உதவுவதாகச் சுட்டிக்காட்டினார். இது பிஜியின் இராணுவ ஆட்சியை தனிமைப்படுத்தும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து முயற்சிகளை வெட்ட முற்படுவதாகும்.

நவம்பர் 2 இடைத்தேர்தல்கள் முடிந்தவுடன் ஜனாதிபதி ஒபாமா இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறார்—ஆனால் சீனாவிற்கு அல்ல. இப்பயணம் G20 கூட்டம் சியோலில் நடைபெறுவதையும் அடக்கியுள்ளது. ஒபாமாவும் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் அமெரிக்க இராணுவ விமானங்கள் வாங்கப்படுதலைப் பற்றி உடன்பாட்டில் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிக நவீன அமெரிக்கப் போர் விமானங்களை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மூலோபாய உறவுகளைப் புதுப்பிக்க வாங்கும் பேரம் பற்றியும் விவாதிப்பர் என்று தெரிகிறது.

ஜப்பானும் இந்தியாவும் தென்கிழக்கு நாடுகளுடன் தனித்தனியே வணிக உடன்பாடுகள் கொண்டும் “ஜனநாயக வட்டம்” பற்றிப் பேசியும் ஈர்க்கின்றன. இரு நாடுகளும் இத்தைகைய நடவடிக்கைகள் பெய்ஜிங்கிற்கு எதிராக இல்லை என்று மறுத்தாலும், “ஜனநாயக வட்டம்” என்பது “சர்வாதிகாரச் சீனா” மற்றும் அதன் நட்பு நாடுகளான பர்மா, வட கொரியா போன்றவற்றை ஒதுக்குகிறது என்பது வெளிப்படை. ஹொனோலுலுவில் கிளின்டன் தன் கருத்துக்களில் தெளிவாக்கியது போல், அமெரிக்கா இந்தியாவை இன்னும் அதிக பங்கை கிழக்கு ஆசியாவில் கொள்ளுமாறு ஊக்கம் கொடுக்கிறது. புது டெல்லியுடன் நடந்த பிரச்சினைகளில் ஒரு அடிப்படைப் பிரச்சினை “இந்தியாவின் கிழக்கு ஆசியாவுடனான இணைப்பிற்கு பெருகிய முறையில் ஊக்கம் தருவது” என்றார். இந்தியாவுடன் போட்டியைக் குறைக்கும் விதத்தில், சீனப் பிரதமர் வென் ஹனோயில் சிங்கைச் சந்தித்த பிறகு உலகில் இரு நாடுகளும் வளர்வதற்குப் “போதிய இடம்” உள்ளது என்று அறிவித்தார்.

இந்தக் கட்டத்தில் ஆசிய நாடுகள் பெய்ஜிங்கின் பொருளாதாரப் பதிலடி பற்றிக் கவலைப்படுபவை, வாஷிங்டன் மீது மிக அதிக சார்பு கொள்ளுவது பற்றியும் எச்சரிக்கையுடன் உள்ளன. சீனாவின் விரைவான பொருளாதார ஏற்றத்தின் விளைவாக அது அப்பகுதியிலுள்ள பெரும்பாலான நாடுகளின் மிகப் பெரிய வணிகப் பங்காளி. இதில் ஜப்பான், இந்தியா மற்றும் தென் கொரியா ஆகியவையும் அடங்கும். ஆசியானுக்குச் சீன ஏற்றுமதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த ஒரு தடையற்ற வணிக உடன்பாட்டை அடுத்து ஜனவரியில் இருந்து ஆகஸ்ட்டிற்குள் வியத்தகு 54 சதவிகித உயர்வைக் காட்டியுள்ளன.

ஆயினும்கூட வாஷங்டனின் ஆக்கிரோஷமான ஆசியாவினுள் உந்துதல், சீனாவின் இழப்பு என்பது, பகுதிக்குள் உறவுகளை மாற்றி, பிராந்தியப் பிளவுகளுக்கு எரியூட்டியுள்ளது. மோதல்களைத் தோற்றுவிக்க உதவியபின், அமெரிக்கா ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் உடன்படிக்கைகளை வலியுறுத்துதல், பிராந்தியம் முழுவதும் புதிய பிணைப்புக்களைக் கொள்ளுதல் எனச் செய்கிறது. இது அதன் போட்டி நாடான சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியாகும். இந்த மூலோபாயம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையிலுள்ள தட்டுக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது. அவை முந்தைய புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புதை மணலில் சிக்க வைத்ததற்கு பெரும் குறையைக் கொண்டிருந்தன. மேலும் சீன எழுச்சியால் முக்கிய அமெரிக்க நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் கருதுகின்றன.

ஹொனோலுலுவில் தன்னுடைய பேச்சில் கிளின்டன் அமெரிக்கா ஒவ்வொரு முக்கிய ஆசிய-பசிபிக் அரங்கிலும் கலந்து கொள்ளும் உரிமையைத் தெளிவாக்கினார். இது சீனா தன்னுடைய பிராந்திய முகாமை ஒருங்கிணைக்கும் முயற்சியை திறமையுடன் தடுத்துவிட்டது. “ஆசிய நிறுவனங்களின் அமெரிக்கப் பங்கிற்கு வழிகாட்டும் கொள்கையை நான் கூற விரும்புகிறேன். முக்கிய விளைவுகளைக் கொடுக்கக்கூடிய பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டால், எங்கள் அக்கறைகள் அவற்றில் தொடர்புடையவை என்றால், பின் மேசையில் விவாதிக்க நாங்களும் இடம் கோருவோம்.” என்றார்.

“ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் தலைமையைத் தக்க வைத்து, வலுப்படுத்தும்” வாஷிங்டனின் உறுதிப்பாடு தவிர்க்க முடியாமல் இப்பகுதி முழுவதும் அழுத்தங்களை உயர்த்தி பெரும் சக்திகளுக்கிடையே வருங்கால மோதல்களை வலியுறுத்திக் காட்டுகிறது.