World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK students march against cuts, occupy Conservative Party HQ

வெட்டுகளுக்கு எதிராக இங்கிலாந்து மாணவர்கள் பேரணி; கன்சர்வேடிவ் கட்சி தலைமையகத்தை ஆக்கிரமித்தனர்

By Paul Mitchell
11 November 2010

Back to screen version

கன்சர்வேட்டிவ்-லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் கல்வித் துறை வெட்டுகளை எதிர்த்து லண்டனில் நேற்று 50,000க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட பேரணி இறுதியில் டோரி கட்சியின் தலைமையகத்திலான ஆக்கிரமிப்பு போராட்டத்திலும் கலகத் தடுப்பு போலிசாருடனான மோதலிலும் முடிந்தது.

லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகம் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்களின் பேரணி

இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த தேசிய மாணவர் சங்கம் (NUS) மற்றும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி சங்கம் (UCU) ஆகியவற்றின் எதிர்பார்ப்பை இப்பேரணி பாரிய அளவில் விஞ்சியிருந்தது, ஏறக்குறைய பிரிட்டனில் இருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் இருந்தும் மாணவர்கள் திரண்டிருந்தனர். அரசாங்கத்தை கண்டனம் செய்யும் கையால் செய்யப்பட்ட பதாகைகள் ஏராளமாய் இருந்தன. நகரத் தொழிலாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் கைதட்டி ஆதரவளித்தனர்.

நாடாளுமன்ற அவைகளுக்கு அருகே அமைந்த கன்சர்வேடிவ் கட்சியின் மில்லிபாங்க் தலைமையகத்தின் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. மில்பாங்க் லாபிக்குள்ளாக ஒரு கூட்டம் புகுந்து பின் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டது. அதன்பின் நுழைவாயிலுக்கு வெளியில் இருந்த விளம்பர பலகைகளுக்கு அவர்கள் தீவைக்கத் தொடங்கினர். அலுவலக முற்றத்தில் இருந்த சன்னல் நொறுக்கப்பட்டது, ஏராளமான புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அதன்பின் இன்னும் அதிகமான மாணவர்கள் கட்டிடத்திற்கு உள்ளே புகுந்தனர், வெளியிலிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவர்களுக்கு ஊக்கமளித்ததோடு “டோரி அசிங்கம்” (Tory scum) என்று முழக்கமிட்டனர்.

ஆரம்பத்தில் ஒரு சில தனிநபர்களால் செய்யப்பட்ட ஒரு செயல், தங்களின் படிப்பை முடிக்கும் போது மலைபோல் குவியும் கடன் சுமைக்கான சாத்தியத்திற்கும் முட்டுச் சந்து வேலைகளுடனான ஒரு வருங்காலத்திற்கும் முகம் கொடுக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடக்கி வைத்த ஆத்திரத்திற்கான மையமாக துரிதமாய் ஆனது. வருடத்திற்கு 9,000 பவுண்டுகள் வரை கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் திட்டமிடுகிறது, அவ்வாறு ஆகும்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஒரு பொது பல்கலைக்கழக படிப்பிற்கு உலகின் மிக செலவுவைக்கும் இடங்களாக அமையும்.

பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர் நிதி 2014 ஆம் ஆண்டுக்குள்ளாக 7.1 பில்லியன் பவுண்டுகளில் இருந்து 4.2 பில்லியன் பவுண்டுகளாக குறைக்கப்படவிருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது, பல்கலைக்கழகங்களுக்கான அரசு நிதி உதவியை ஒட்டுமொத்தமாக மாணவர்களிடமிருந்தான கட்டணங்களைக் கொண்டு இடம்பெயர்க்கின்ற வெட்டுகளின் ஒரு தொகுப்பின் பாகமே இது. சில பல்கலைக்கழகங்கள் தங்களது ஒட்டுமொத்த நிதியாதாரத்தையும் ஆசிரியர்களுக்கு என செலவிட வேண்டியதாக இருக்கும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சமூக கல்வி மற்றும் கலை போன்ற பாடங்களிலான சிறப்புப் படிப்பு ஆசிரியர்களுக்கு.

லண்டனில், மிக பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களில் பத்து பல்கலைகள் தங்களது நிதியாதாரம் துடைத்தழிக்கப்படுவதைக் காணக் கூடும். லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், ராயல் அகாதமி ஆஃப் மியூசிக், ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடிஸ், தி இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன், செண்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமா மற்றும் கோர்டால்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட் ஆகியவை இதில் அடங்கும். பல்கலைக் கழக வருடாந்திர கட்டணங்கள் £10,000க்கு உயர்த்தப்படுமாயின் பத்து இளைஞரில் சுமார் எட்டு பேர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கி விடுவார்கள் என்று NUS இன் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டன் கன்சர்வேடிவ் கட்சி தலைமையகத்திற்கு வெளியே போலிசை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள்

மாணவர்களை விரட்டியடிக்க மில்பாங்க் கோபுரத்திற்கு உள்ளே செல்ல கலகத் தடுப்பு போலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆயினும் ஆரம்பத்தில் மாணவர்கள் சுற்றியிருக்கும் தெருக்களில் சிதறி அமைந்திருந்த நிலையில், பெருநகர போலிஸ் ஆணையரே தனது படைகளுக்கு அது ஒரு “தர்மசங்கடம்” என ஒப்புக் கொள்ள வேண்டியதானது. 32 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர போலிஸ் கூறுகிறது. போலிஸ் வன்முறை குறித்த ஏராளமான தகவல்கள் இருக்கின்றன, மாணவர்கள் கண்மண் தெரியாமல் லத்திகளாலும் கலகத் தடுப்பு கவசங்களாலும் தாக்கப்படும் படக் காட்சிகள் மாணவர்களின் சமூக வலைத் தளங்களில் விரவிக் காணப்படுகின்றன.

கட்டண அதிகரிப்பை எதிர்ப்பதற்கு தேர்தலில் அளித்த வாக்குறுதியை மறந்து போனதற்காக நாடாளுமன்றத்தின் லிபரல் ஜனநாயக உறுப்பினர்களை “திரும்பி அழைத்துக் கொள்வதற்கான” கோரிக்கைகளை மையமாகக் கொண்டு கூட்டணி அரசாங்கத்திற்கு “நெருக்குதலளிப்பது” என்னும் NUS மற்றும் UCU ஊக்குவிக்கும் ஒரு பரிதாபகர மூலோபாயத்தினை மறைமுகமாக கண்டிக்கும் ஒன்றாகவே மாணவர்களின் நடவடிக்கை அமைந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதற்கான ஒரு நடைமுறை என்பதே இருக்கவில்லை.

அப்படி ஒரு நடைமுறையை ஸ்தாபிக்க இருப்பதாக கூறியதே லிபரல் ஜனநாயகக் கட்சியினரின் இன்னுமொரு பயனற்ற தேர்தல்கால வாக்குறுதி மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் பல ஆண்டுகளுக்கு அது நடைமுறைக்கு வருவதே சாத்தியமற்ற நிலையில் இருப்பதோடு, பின்னரும் கூட அது “தீவிரமான தவறிழைக்கிற” உறுப்பினர்கள் மீது மட்டுமே பாயும், அரசாங்க கொள்கையை செயல்படுத்துகிற ஒரு எம்பியை அது அநேகமாய் பாதிக்கப் போவதில்லை!

நாடாளுமன்றத்திற்குள்ளே, பிரதமர் டேவிட் கேமரூன் இல்லாத சமயங்களில் அரசாங்கத்தின் சார்பாய் பேசுகின்ற துணைப் பிரதமரான லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் கிளெக் இந்த வெட்டுகள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்பதைத் தெளிவாக்கினார், தொழிற்கட்சி உறுப்பினர்களோ கட்சிக்கு எந்தவிதமான உறுதிப்பாட்டையும் அளிக்காத வண்ணம் வாய்த்திறமையில் ஒரு சில புள்ளிகளைப் பெறுவதற்கே முயற்சித்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு “முறையற்ற செயல்” என்றும் ஒரு சொற்ப எண்ணிக்கையிலான “பிரச்சினை செய்வோரின்” வேலை என்றும் NUS உடனடியாகக் கண்டித்தது. சிலர் - “அராஜகவாதிகள் தான்” - “திட்டமிட்டு நிகழ்வை கடத்திக் கொண்டு விட்டதாக” NUS தலைவர் ஆரோன் போர்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ”மற்றபடி அமைதியாக நடந்திருக்கக் கூடிய ஒரு ஆர்ப்பாட்டத்தை பலவீனப்படுத்திய ‘ரவுடித்தன ஆர்ப்பாட்டக்காரர்களின்’ வன்முறை நடவடிக்கைகளை” கண்டித்து NUS வலைத் தளம் அந்த இரவு ஒரு அறிக்கையை பிரசுரித்திருந்தது. இனி மேலதிக ஆர்ப்பாட்டங்களுக்குக் கூட தன்னால் அழைப்பு விடுக்காது போக நேரிடும் என்றும் பின் தன்னை “வாக்குறுதி-மீறுகிற” லிபரல் ஜனநாயகக் கட்சி எம்பிக்களைத் “தேடிப் பிடிப்பதுடன்” நிறுத்திக் கொள்ள வேண்டியதாகும் என்றும் கூட NUS சுட்டிக் காட்டியது.

சிட்டி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு ஊடகவியல் மாணவரான பேட்ரிக் ஸ்மித் கார்டியனில் இந்த கூற்றுகளை மறுத்தார். ”இது வெட்டுகளால் போர்க்குணம் பெற்ற மாணவர்களின் நடவடிக்கை ஆகும்....தங்களை கைவிட்டதாக அம்மாணவர்கள் நம்பும் ஒரு அரசியல் உயர்தட்டினருக்கு எதிரான தங்களது கோபத்தைக் காட்டும் முகமாகவே இன்று அவர்கள் தடைகளை உடைத்து டோரி கட்சியின் பிரச்சார தலைமையகத்திற்குள் நுழைந்தனர்.”

“தேசிய மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்ட மற்றும் லாபி வகை தீர்வு பற்றிய பிரமைகள் சில மாணவர்களிடம் விலகி இருப்பதையே இந்த வகை தீவிர நடவடிக்கை காட்டுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார். “கொஞ்ச காலமாகவே கூடுதல் அதிரடியான நடவடிக்கைக்கு நெருக்கி வந்திருக்கும் மாணவர் இயக்கத்தின் கணிசமான பகுதி இருந்து வந்திருக்கிறது. மாற்றம் என்னவென்றால், மாணவர் சமுதாயத்தின் இன்னும் பரந்த பகுதியை உள்ளடக்கிய வண்ணம் அந்த பகுதி இன்னும் விரிவடைந்திருக்கிறது என்பது மட்டுமே.”

டோரி கட்சி தலைமையகத்தின் வெளியே கோபம் வெடித்ததானது, தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு அனைத்து எதிர்ப்பையும் சிதறடித்து அனைத்து வேலைநிறுத்தங்களையும் அடகுவைத்த நிலைமைகளின் கீழ், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த தங்களது உண்மையான உணர்வினை வெளிப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எந்தவொரு பிரிவிற்கும் முதன்முறையாக கிட்டிய உண்மையான வாய்ப்பை உணர்த்தியது.

சென்ற வாரத்தில் கல்விக்கட்டண அதிகரிப்புக்கு எதிராக 40,000 அயர்லாந்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (இந்த நிகழ்விலும் மாணவர்கள் நிதி அமைச்சகத்தை ஆக்கிரமித்த பின் போலிசாரால் வெளிப்படையாக லத்தி, நாய்கள் மற்றும் குதிரைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது), மற்றும் பிரான்ஸ், கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் நடந்த பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

பிரிட்டனில் நிலவும் அரசியல் மற்றும் சமூக உறவுகளிலான அசாதாரண பதட்டவய நிலைமைக்கும், அதிகரிக்கும் பதட்டங்களுக்கு உத்தியோகபூர்வ கட்சிக் கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்காக எந்த வடிகாலும் இல்லாத நிலையால் அந்த நிலைமையே இன்னும் கூடுதலாய் உருவாகிய நிலைக்கு இந்த நிகழ்வுகள் சாட்சியமளிக்கின்றன. ஆயினும் இந்த பதட்டங்கள் இன்னும் கூடுதலான வெடிப்பான வடிவங்களை தொடர்ந்து எடுக்கும். தவிர்க்கவியலாமல், அரசாங்கத்திற்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தின் (NUS போன்ற இற்றுப் போன அமைப்புகளுக்கு எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சி வடிவத்தை இந்த இயக்கம் எடுத்தாக வேண்டும்) அபிவிருத்தி மூலமாக அவை அரசியல் வெளிப்பாட்டைக் காணும்.