World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German unions’ “hot autumn” protests seek to demobilize workers

ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் “சூடான இலையுதிர்கால” எதிர்ப்புக்களை பயன்படுத்தித் தொழிலாளர்கள் அணிதிரளலை குலைக்க முற்படுகின்றன

By our reporters
16 November 2010

Back to screen version

ஜேர்மனி முழுவதும் சனிக்கிழமை அன்று ஜேர்மனியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DGB) ஏற்பாடு செய்திருந்த வேலைக் குறைப்புக்கள், பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், சமூக நிலை ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் அணிவகுப்புக்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர். DGB இந்த ஆர்ப்பாட்டங்களையும் அணிவகுப்புக்களையும் இழிந்த முறையில் தொழிலாளர்கள் தங்கள் சீற்றத்தை வெளியிடுவதற்கு வழிவகையாகவும், ஜேர்மனிய கன்சர்வேடிவ் கூட்டரசு அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒத்துழைப்பை மூடிமறைப்பதற்காகவும் ஏற்பாடு செய்திருந்தன.

DGB வெளியிட்டுள்ள தகவல்படி, ஸ்ருட்கார்ட்டில் 45,000, நூரம்பேர்க்கில் 30,000, டோர்ட்முண்டில் 14,000 மற்றும் ஏர்ஃபோர்ட்டில் 6,000 என்றும் மக்கள் பங்கு கொண்டனர். சனிக்கிழமை அரங்குகளை, அரசாங்கத்தின் கொள்கைகளைக் குறைகூறப் பயன்படுத்தினாலும், DGB மற்றும் பிற தொழிற்சங்கத் தலைவர்கள் சமூகக் குறைப்புக்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.

ஸ்ருட்கார்ட்டில் நடைபெற்ற அணிவகுப்பில் ஜேர்மனியின் மிகப் பெரிய தொழில்துறைச் சங்கமான IG Metall ன் தலைவரும் தன்னுடைய 60வது பிறந்தநாளை ஜேர்மனியச் சான்ஸ்லர் அலுவலகத்தில் கொண்டாடிய பெர்த்தோல்ட் ஹ்யூபர் புதிய பணக்காரர்களைக் கண்டித்தாலும் அரசாங்கத்தைப் பற்றி உருப்படியான குறைகூறல் எதையும் தெரிவிக்கவில்லை.

டோர்முண்டில் பொதுப்பணித் துறை தொழிற்சங்கமான வெர்டியின் தலைவர் பிரங்க் பியர்ஸ்கே அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தாக்குகையில் சான்ஸ்லர் மற்றும் அவருடைய கட்சி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக அவர் தன் சீற்றத்தை ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல மீதும் நிதி மந்திரி ரைனர் ப்ரூடர்ல மீதும் காட்டினார். இவர்கள் இருவரும் தடையற்ற சந்தை ஆதரவு தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) உறுப்பினர்கள் ஆவர்.

டோர்முண்டில் பொதுப்பணித் துறை தொழிற்சங்கமான வெர்டியின் தலைவர் பிரங்க் பியர்ஸ்கே அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தாக்குகையில் சான்ஸ்லர் மற்றும் அவருடைய கட்சி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக அவர் தன் சீற்றத்தை ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல மீதும் நிதி மந்திரி ரைனர் ப்ரூடர்ல மீதும் காட்டினார். இவர்கள் இருவரும் தடையற்ற சந்தை ஆதரவு தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) உறுப்பினர்கள் ஆவர். எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் DGB செயலர்கள் பிழைக்கிடமின்றி தங்கள் பணிகளை அரசாங்கத்திற்கு சமூகக் குறைப்புக்களைச் செயல்படுத்த உதவுவதற்கு அளித்தனர். அதே நேரத்தில் அவர்கள் சமூக மற்றும் அரசியல் வெடிப்பைத் தவிர்க்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தனர். ஸ்ருட்கார்ட்டில் ஹியூபர் பின்வருமாறு எச்சரித்தார்: “ஒரு சிறுபான்மையினரின் நலனுக்காகத்தான் அரசியல் என்றால், பின் மக்கள் ஜனநாயகத்தில் இருந்து அகன்றுவிடுவர்.” டோர்ட்முண்டில் பியர்ஸ்கே வார்த்தைஜாலமான முறையில் கடந்த சில மாதங்களாக நடத்தப்படும் ஓய்வூதிய வயதை 67க்கு உயர்த்தியது, பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், குறைந்த ஊதியங்கள், பெருகிவிட்ட ஒப்பந்தப் பணிகள், சுகாதாரப் பிரிவில் வெட்டுக்கள் என்ற சமூகநலக் குறைப்புக்களைக் கண்டித்தார். இவை “சமூக குண்டாகிவிடும், அது தவிர்க்கப்பட வேண்டும்.”

அதே நேரத்தில் எதிர்ப்புக்கள் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமை வாதிகள் மற்றும் இடது கட்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் போலித்தோற்றங்களையும் பயன்படுத்தின. டோர்ட்முண்டில் படிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின்(NRW) ஒரு முக்கிய பசுமைக் கட்சி அரசியல்வாதி டானியேலா ஸ்னெக்கன்பேர்கர் DGB ஐப் புகழ்ந்து கூட்டாட்சி அரசாங்கத்திலும் சமீபத்தில் NRWவில் மாநில அரசாங்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மாற்றத்திற்கு இணையானது வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இடது கட்சியின் ஆதரவுடனான SPD-பசுமைவாதிக் கூட்டணி இந்த ஆண்டு முன்னதாக வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் பதவிக்குவந்து அது வரவுசெலவுத்திட்ட மற்றும் சமூகநலச் செலவு வெட்டுகளை செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் தொழிற்சாலை மேலாளர்களால் பெரிதும் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. அதிகாரத்துவம் ஒரு பரந்த திரட்டை ஊக்குவிக்க முயற்சிக்கவில்லை என்பது தெளிவாயிற்று. மேலும் ஸ்ராலினிச, குட்டி முதலாளித்துவ எதிர்ப்புக் குழுக்களின் பல பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்; இவர்கள் DGB யிலும் அதன் “சூடான இலையுதிர்கால” எதிர்ப்புக்களிலும் நப்பாசைகளை வளர்ப்பதில் முன்னணியில் நின்றனர். தங்கள் செய்தி ஊடக மற்றும் வலைத்தளங்களையும்கூட தொழிற்சங்கங்கள் பற்றித் தகவல் கொடுக்கும் அளவிற்குச் சென்றனர்.

மாவோயிச MLPD இந்த இலையுதிர்கால நடவடிக்கைகள் “மிகச் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று எழுதியது. பப்லோவாத புரட்சிகர சோசலிஸ்ட் லீக் எதிர்ப்புக்கள் “சரியான திசையில் ஒரு நடவடிக்கை” என்று அறிவித்தது. பிரிட்டிஷ் Militant போக்குடன் இணைந்த SAV எனப்படும் சோசலிச மாற்றீட்டுக் குழு “தொழிற்சங்கப் போக்குகளில் ஒரு மாற்றம் வேண்டும்” என்று குரல் கொடுத்து ஸ்ருட்கார்ட்-21 கட்டமைப்புத் திட்டத்திற்கு எதிராக ஸ்ருட்கார்ட்டில் நடக்கும் வாடிக்கையான எதிர்ப்புக்களில் பங்கு பெறுமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பையும் விடுத்தது. அதே நேரத்தில் IG Metall உடைய செய்திக் குறிப்புக்களையும் தன் வலைத்தளத்தில் வெளியிட்டது.

PSG யும் தன்னுடைய நூல்கள் நிறைந்த மேசைகளை அணிவகுப்புக்களில் வைத்தது. கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் “Trade union federation works hand in glove with German government ’” என்னும் துண்டுப் பிரசுரத்தின் பிரதிகளை வழங்கினர். இது கணிசமான ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டு பரந்த முறையில் படிக்கப்பட்டது. WSWS நிருபர்கள் பங்கு பெற்றவர் பலருடனும் பேசினர்.

Bosch கார் வினியோக ஆலையில் சாகின் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் IG Metall உறுப்பினராக இருந்ததாகவும் “அதற்குக் காரணம் அவ்விடத்தை வலதுசாரிக்கு விட்டுக்கொடுத்துவிடக்கூடாது” என்பதற்காக என்றார். அதே நேரத்தில் தன்னுடைய பணியிடத்தில் அதிக அமைதியின்மை உள்ளது என்றும் அறிவித்தார். “உள்ளே பல கொதிப்பான நிகழ்வுகள் நடக்கின்றன, என்னுடைய சக பணியாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.” “பல தீவிரமான நடவடிக்கைகள் முடிவெடுக்கப்பட்டுள்ளன” என்றார் அவர். வேலைகள் குறைக்கப்பட்டு விட்டன. தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் அதைப்பற்றி ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு பிரிவு முற்றிலும் மூடப்பட உள்ளது. இதைத்தவிர, ஒரு புதிய முற்றிலும் ஒழுங்கற்ற பணிநேர முறை, “18 ஷிப்ட்” என்று அழைக்கப்படுவது அறிமுகப்படுத்தப்பட்டு, ஞாயிறும்கூட சாதாரண வேலை நாளாக சேர்க்கப்பட்டுஇட்டது.

சாகின் கருத்துப்படி, “இந்த பணிநேரமுறையில் மார்ச் மாதத்தில் இருந்து பணிபுரிகிறேன், கடந்த ஆறு மாதங்களாக எனக்கு நண்பர்கள், கால்பந்து போன்றவற்றிற்குக் கூட நேரம் இல்லை. வார இறுதியில் தந்தைகள் தங்கள் குழந்தைகளைப் பார்ப்பதில்லை. இத்தகைய நிலை ஏற்கப்பட்டுள்ளது என்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு நம்பிக்கைத் துரோகம் ஆகும்.

“பல ஆண்டுகளாக நாம் அனைத்தையும் ஏற்கிறோம், எவரேனும் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் தீவிரவாதிகள் அல்லது சோசலிஸ்ட்டுக்கள் அல்லது கிறுக்கர்கள் என்று கூறப்பட்டு கண்டிக்கப்பட்டனர். IG Metall இடது சாரி அமைப்பு அல்ல, அமைப்பிற்குள் பெரிய உட்பூசல் நடந்து கொண்டிருக்கிறது.” சாகின் தொடர்ந்து கூறினார்: “சமூக ஜனநாயக கட்சி(SPD) செயலர்கள்தான், சிலசமயம் தாராளவாத ஜனநாயக்கட்சி(FDP) உறுப்பினர்கள் கூட கொள்கைகளை நிர்ணயிக்கின்றனர். முன்னர் நாம் ஒரு தொழிலாளர்கள் அமைப்பாக இருந்தோம் என்பதை நம்பக்கூட முடியவில்லை.”

தான் ஏற்கனவே கடந்த கூட்டாட்சித் தேர்தல்களுக்கு முன்னர் ஒரு அணிவகுப்பில் பெர்த்தோல்ட் ஹ்யூபரைப் பார்த்துள்ளதாக சாகின் குறினார். “அப்பொழுது ஹ்யூ்பர் எங்களுக்கு நிறைய உறுதிமொழிகள் கொடுத்தார். ஆனால் IG Metall எங்களை SPDக்கு வாக்களிக்கச் சொன்னது. அதாவது, ஹெகார்ட் ஷ்ரோடர் கட்சிக்கு. அவர்தான் தொழிலாளர்கள் என்ற முறையில் நமக்கு இருந்த உரிமைகளைப் பறித்தவர்.”

ஸ்ருட்கார்ட் நகரத்தில் ஒரு புதிய நிலத்தடி முக்கிய இரயில் நிலையம் கட்டப்படுவதை எதிர்க்கும் இயக்கங்களில் தொடர்புடையவர்தான் லூக்காஸ். இவர் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆவார். இன்று ஆர்ப்பாட்டத்தில் அவர் அரசாங்கத்துடனான தன் கோபத்தை வெளிப்படுத்துவதற்கும் 67 வயதில்தான் ஓய்வூதியங்கள் கிடைக்கும் என அறிமுகப்படுத்தப்படவுள்ள திட்டங்களையும் எதிர்ப்பதற்கு பங்கு பெற்றார்.

முதலாளித்துவம்தான் சமூகத் தாக்குதல்களின் வேர்களில் உள்ளது என்று லூக்காஸ் அறிவித்தார். எந்த கட்சி அரசாங்கம் அமைத்தாலும் இதுதான் நிலை. “SPD, பசுமைவாதிகள் அல்லது CDU எப்படியாயினும், இவர்கள் அனைவரும் ஒன்றுதான். இவர்கள் வெட்டுக்களைச் செயல்படுத்துகின்றனர். என்னுடைய பங்கிற்கு பசுமைவாதிகளிடம் எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் ஸ்ரட்கர்ட் 21 கட்சியை வளர்க்கப் பயன்படுகிறது, பசுமைவாதிகளை அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் ஆதரவு பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.” லூக்காஸின் தீர்வு இந்த அமைப்புமுறையை முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதாகும். இன்னும் சொல்லப்போனால் இது தகர்க்கப்பட வேண்டும் என்று கூட அவர் கூறுகிறார். அவருடைய கருத்தில் DGB ஆர்ப்பாட்டங்களை நடத்துவதின் காரணம் “ஆலைகளில் அரசாங்கம், அதன் குறைப்புக்களுக்கு எதிராக பரந்த எதிர்ப்புணர்வு உள்ளது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இடையே அழுத்தம் பெருகியுள்ளது.”

தொழிற்சங்கம் பற்றி இருதலை அணுகுமுறையை ஹெகார்ட் கொண்டுள்ளார். “பல முறை அதில் சேர்ந்துள்ளேன், விலகியுள்ளேன், மறுபடி சேர்ந்துள்ளேன்” என்றார் அவர். “ஒவ்வொரு முறையும் ஏதேனும் மாறும் என்று நம்பினேன்.” என்ற அறிவித்தார். மோசமான பணிநிலைமைகள், குறைந்த ஊதியங்கள் பற்றி நிறைய அனுபவங்களை ஹெகார்ட் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் பொதுத்துறையில் வேலைசெய்யத் தொடங்கினார். ஆனால் முன்னதாக அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்தார்; அதுவோ அற்ப ஊதியங்களைத்தான் கொடுத்தது. “இத்தொழிலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திட்டத்தை அவர்கள் செல்படுத்தவில்லை, அதேபோல் வயதானவர்கள் பாதுகாப்பும் செயல்படுத்தவில்லை.”

“எவரும் கவலைப்படவில்லை, செய்தி ஊடகம் பிரச்சினையை குறைத்து மதிப்பிட்டது, அதாவது, என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பொய்தான் கூறியது.” தொழிற்சங்கங்களும் சட்டவிரோத ஊதியங்களைப் பற்றி ஏதும் செய்யவில்லை. இவ்விதத்தில் ஹெகார்ட் “தொழிற்சங்கம் சமூக அநீதியை எதிர்ப்பதற்குப் போதுமானவற்றைச் செய்யவில்லை” என்ற முடிவிற்கு வந்துள்ளார்.