World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Police action against demonstrators opposing “Stuttgart 21” rail project

“ஸ்ருட்கார்ட் 21” இரயில் திட்டத்தை எதிர்க்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை

By Peter Schwarz
4 October 2010

Back to screen version

பாடன்-வூர்ட்டெம்பேர்க் மாநில அரசாங்கம் அதன் தந்திரோபாயங்களை மாற்றி இப்பொழுது மாநிலத் தலைநகரத்தின் புதிய இரயில் நிலையத்தை “ஸ்ருட்காட் 21 திட்டம்” என்று அழைக்கப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு, எதிராக அதிகமாக வலிமையைப் பயன்படுத்துகிறது. கடந்த வியாழனன்று அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜேர்மனி முழுவதும் பல நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளால் சூழப்பட்டு நீர்பாய்ச்சுதல், கண்ணீர் புகை குண்டுவீச்சு மற்றும் தடியடிகளுக்கு உட்பட்டனர்.

சில நேரங்களில் ஸ்ருட்கார்ட்டின் Castle Park ஒரு இராணுவ சர்வாதிகார காட்சியைப் போல் தோன்றியது. எதிர்ப்பு காட்டுவதற்காக வந்திருந்த மக்களை பொலிசார் பொறுப்பின்றி அடித்துத் தள்ளினர். இதில் குறைந்த வயதான மாணவர்கள், முதிர்ந்த வயது ஓய்வூதியம் பெறுவோரும் அடங்கினர். அமைப்பாளர்கள் கருத்துப்படி, பல நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். கண்பாதிப்பு, காயங்கள், சிராய்ப்புக்கள், குமட்டல் ஆகியவை தவிர முறிந்த விலா எலும்புகள், புடைப்புக்கள் ஆகியவைகளும் இருந்தன. அடிபட்ட பலரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட நேர்ந்தது.

தாக்குதல்கள் தூண்டுதலின்றியே நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னதாகப் பொலிஸ் மீது கற்களை எறிந்தனர் என்ற கூற்றுக்கள் பின்னர் உத்தியோகபூர்வமாக ஸ்ருட்கார்ட்டின் உள்துறை மந்திரியாலேயே திரும்பிப் பெறப்பட்டன. “எங்களுக்கு தவறான தகவல்கள்தான் கிடைத்தன” என்று உள்துறை மந்திரி Heribert Rech (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) யின் செய்தித் தொடர்பாளர் வியாழன் மாலை கூறினார்.

பிரச்சினைக்குரிய கட்டிட திட்டத்தின் ஒரு பகுதியாக மரங்கள் வெட்டப்படும் ஒரு பகுதியை வேலி போட்டு வியாழன் காலை மறைக்கப்பட்ட இடத்தில் தடைகள் போடப்பட்ட, நிலையில், பூங்காவிற்கு அருகில் ஒரு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தையும் பொலிசார் அனுமதித்திருந்தனர். அனைத்து மரங்களும் வெட்டப்பட இருக்கின்றன என்ற செய்தி பரவியதையும், மாணவர்கள் திட்டமிட்ட வழியைக் கைவிட்டு, மற்ற ஆயிரக்கணக்கான ஸ்ருட்கார்ட் மக்களைப் போல பூங்காவிற்குள் பரபரப்புடன் நுழைந்தனர்.

மாணவர்கள் பூங்காவிற்குள் நுழைவர் என்று எளிதில் கணித்திருக்க முடியும். ஏனெனில் 300 பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களில் சில 100 ஆண்டுகளுக்கும் மேலானவை ஸ்ருட்கார்ட் 21 திட்டத்தின் கீழ் தியாகம் செய்யப்பட வேண்டும் என்பது பிரச்சினைக்குரிய கட்டமைப்புத் திட்டத்தை எதிர்த்தவர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாகும். “பூங்காக் காவலர்கள்” என்று அழைக்கப்பட்டவர்கள் பல நாட்களாக மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் தங்களைச் சங்கிலிகளால் மரத்தோடு பிணைத்துக் கொண்டிருந்தனர்.

சில மாணவர்கள் வேலிகளை கொண்டுவந்த பொலிஸ் வாகனத்தைச் சூழ்ந்த போது, எதிர்ப்பாளர்கள் தெருக்களில் தடுப்புக்களை ஏற்படுத்திய நிலையில், பொலிஸ் செயல்படத் தொடங்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பாளர்கள் மீது தாக்கத் தொடங்கி இளையோர் முதியோர் என்று பார்க்காமல் விரட்டியடிக்க முற்பட்டு இடத்தில் தடுப்புக்களைப் போட முற்பட்டனர். நீர் பாய்ச்சுதல் பூங்காவில் பயன்படுத்தப்பட்டு “பூங்காக் காவலர்கள்” என அழைக்கப்பட்டவர்கள் மீது பெரும் வேகத்துடன் நீர் பாய்ச்சப்பட்டு அவர்களை கிளைகளில் இருந்து அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சாட்சியங்கள் கூற்றுப்படி பொலிசார் ஆண், பெண் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது பொலிசார் மிளகுப் பொடியையும் தூவி, எந்தத் தூண்டுதலும் இன்றி அவர்களை அடித்தனர். பொதுத்துறை தொழிற்சங்கம் Verdi யின் முன்னாள் மாநிலத் தலைவர் Sybille Stramm எப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படாமல் தான் பொலிஸ் அதிகாரிகளால் தரையில் தள்ளப்பட்டது பற்றிக் கூறினார். இணைய தளத்திலும் தொலைக்காட்சிகளிலும் இரத்தத்தில் நனைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த காட்சிகள் வெளிவந்ததுடன், இதுபோன்றதை அனுபவிக்காத பங்கு பெற்றவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தின.

“இத்தகைய முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட அடித்தல்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை” என்று Taz ஒருவரை மேற்கோளிட்டு எழுதியது. “ஒவ்வொரு வினாடியும், காயமுற்ற மக்கள் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். நம் நாட்டில் இதைவிட மோசமாக இனியும் நடக்குமா என்று எனக்குத் தெரியாது” என்றார் மற்றொருவர்.

இந்த மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கை ஒரு வேண்டுமென்று நடத்தப்பட்ட தூண்டுதல் நிகழ்வாகும். இது கவனத்துடன் திட்டமிட்டு மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டது. முந்தைய வரலாறு மற்றும் இதைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகளில் இருந்து இது நன்கு புலனாகிறது.

கோடையிலிருந்து ஒவ்வொரு வாரமும், பல்லாயிரக்கணக்கான மக்கள் “ஸ்ருட்கார்ட் 21”க்கு எதிராக அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது எந்தப் பெரிய நிகழ்வுகளுக்கும் வழிவகுத்துவிடவில்லை. முதலில் மாநில அரசாங்கம் எதிர்ப்பைப் புறக்கணித்தது, படிப்படியாக இது மறைந்து விடும் என்று நம்பியது. மாறாக இது பெரிதாக வளர்ந்து இன்னும் அதிகமாக மக்கள் தெருக்களுக்கு வந்த ஆர்ப்பரிக்கையில், அரசாங்கம் ஒரு “உரையாடலுக்கு” ஒப்புக் கொண்டது. ஆனால் எந்தக்கணிசமான சலுகைகளையும் கொடுக்கவில்லை. கட்டமைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

கடந்த வெள்ளியன்று திட்டத்தின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களுக்கு இடையே முதல் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் மாநில, நகரவை அதிகாரிகள் Deutsce Bahn உடன் (தேசிய இரயில் நிறுவனம்) திட்டத்தைச் செயல்படுத்த விரைந்து முடிக்கும் செயலைக் காட்ட வேண்டும் என்று முற்பட்ட நிலையில், பேச்சுக்கள் பயனற்றுப் போயின.

உண்மையில் மாநிலப் பிரதமர் Stefan Mappus (CDU) முன்பே ஒரு மோதல் போக்கிற்கு முடிவு எடுத்துவிட்டார். 44 வயதான இவர், தன் முதல் மாநிலத் தேர்தல்களை மார்ச் 2011ல் எதிர்கொள்கிறார். இப்பதவியை அவர் Gunther Oettinger இடம் இருந்து பெற்றார். Gunther Oettinger பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்சர்வேடிவ் பிரிவு கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் முன்னணித் தலைவர் என்ற முறையில் Mappus உறுதியான சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை அடிப்படையிலே தேர்தல் பிரச்சாரத்தை நடத்த விழைகிறார்—“தெருக்களில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு” பணிவதில்லை என்ற உறுதியுடன், அதில் முன்னாள் CDU வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட.

இரு வாரங்களுக்கு முன்பு Mappus உத்தியோகபூர்வ ஆதரவை CDU தலைவர் அங்கேலா மேர்க்கெலிடம் இருந்து பெற்றார். கூட்டாட்சிப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட விவாதத்தின்போது சான்ஸ்லர் மேர்க்கெல் முழு ஆதரவை “ஸ்ருட்காட் 21”க்குக் கொடுப்பதாகவும் பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் அடுத்த மார்ச்சில் நடக்கவுள்ள மாநிலத் தேர்தல்கள் இந்த விவாதத்திற்குரிய கட்டிடத் திட்டம் பற்றிய வாக்கெடுப்பு போல் இருக்கும் என்றும் கூறினார். இவ்விதத்தில் அவர் தன்னுடைய அரசியல் வருங்காலத்தையும் Mappus உடன் பிணைத்துள்ளார். 1952ல் இருந்து தொடர்ச்சியாக பிரதம மந்திரிப் பதவியை வகித்துள்ள ஒரு CDU கோட்டையான பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலையில், மேர்க்கேல் ஒரு கட்சித் தலைவராகவும், சான்ஸ்லராகவும் தொடர்வது கடினமாகும்.

அதே உரையில் மேர்க்கெல் தான் கிறிஸ்துவ ஜனநாயக-சுதந்திர ஜனநாயகக் கட்சிகளின் கூட்டாட்சிக் கூட்டணிக்கான உறுதிப்பாட்டையும் இருமடங்கு அதிகரிக்க உள்ளதாக அறிவித்தார். பல மாதங்களாக செய்தி ஊடகமானது அவர் வலுவற்று உள்ளார் என்று குற்றம் சாட்டி வருகின்றன. அப்பொழுது முதல், ஒரு நாள்கூட அரசாங்கம் ஏதேனும் ஒரு புதிய தூண்டுதல் தரும் தாக்குதலை மக்களின் பரந்த பிரிவுகள் மீது நடத்தாமல் இருப்பதில்லை. அதே நேரத்தில் பெருவணிகத்திற்கு பொருளாதாரச் சலுகைகளையும் கொடுத்துவருகிறது. ஜேர்மனியின் அணுசக்தி ஆலைகளின் காலத்தை விரிவாக்குதல், சுகாதார “சீர்திருத்தங்கள்” மற்றும் பல பொதுநல நலன்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணங்கள் ஆகும்.

ஸ்ருட்கார்ட்டில் நடக்கும் பொலிஸ் செயல்பாடு இப்பின்னணியில் காணப்பட வேண்டும். இது, ஸ்ருட்கார்ட் 21 திட்டத்தின் எதிர்ப்பாளர்களை மிரட்டும் திட்டம் என்பதற்கு மட்டும் உதாரணம் அல்ல. கூட்டாட்சி, மாநில அரசாங்கங்களின் வணிகச் சார்பு செயல்களுக்கு எந்த எதிர்ப்பிற்கும் இது ஒரு மிரட்டல்போல்தான். மோதலை அதிகப்படுத்தும் முயற்சியில் தான் Mappus ம் ஈடுபட்டுள்ளார். அதையொட்டி இழிந்த வலதுசாரிப் பிரிவுகளைத் தன்னுடைய சட்டம் மற்றும் ஒழுங்குக் கொள்கையின்பால் திரட்டலாம் என்று அவர் கருதுகிறார்.

பொலிஸ் நடவடிக்கை பற்றி சான்ஸ்லர் அலுவலகத்துடன் விவாதித்திருக்கக்கூடும் என்பது இயல்பே ஆகும். எப்படியும் அது மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. Mappus ம் அவருடைய உள்துறை மந்திரி ரெக்கும் பவேரியா, ரைன்லாந்து-பாலடிநேட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகியவற்றில் இருந்து கூடுதல் பொலிசை கோரியிருக்கலாம். 25 மரங்கள் ஒரு பூங்காவின் சிறிய பகுதியில் இருந்து ஆரம்ப செயலாக வெட்டி அகற்றப்படுவதற்கு, இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொலிசார் மாணவர்களையும், ஆர்ப்பாட்டக்காரர்களையும் அடித்து நொருக்கிக் கொண்டிருந்தபோது, Mappus ஸ்ருட்கார்ட் “விவசாயிகள் தின” கொண்டாட்டங்களில் பீர் குடித்துக் கொண்டிருக்கும் காட்சி புகைப்படமாக்கப்பட்டது. Deutsche Bahn சொத்தை வளர்ப்பவர்கள் என்ற முறையில் உரிமைகளைக் கொண்டிருக்கும்போது அதைப் பாதுகாப்பது பொலிசின் கடமை என்று ரெக் கூறினார். ஏனெனில் “நாம் சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம்” என்றார் அவர். மாநிலப் பாராளுமன்றத்தில் CDU பிரிவின் தலைவரான Peter Hauck ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டிக்கும் விதத்தில் தான் “முந்தைய கம்யூனிஸ்ட்டுக்கள், இடது சாரிகளின் ஆணைகளுக்கு எதிராகப் பாதுகாப்பதாகக் கூறினார். அவர்கள் தான் சமீபத்திய வாரங்களின் எதிர்ப்புக்களுக்குத் தலைவர்கள் என்றும் அவர் கூறினார்.