World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US banks fake documents to rush foreclosures

வீடுகளை ஏலத்தில் விடுவதற்காக ஆவணங்களை அமெரிக்க வங்கிகள் போலித்தனத்திற்கு உட்படுத்துகின்றன

By Tom Eley
7 October 2010

Back to screen version

நூறாயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்களின் வீடுகளை பகிரங்க ஏலத்தில் விடுவதை விரைவுபடுத்துவதற்காக முக்கிய அமெரிக்க வங்கிகள் திட்டமிட்டு போலித்தனத்திற்கு உட்படுத்துவதாக பெருகும் சான்றுகள் கூறுகின்றன. இவ்வழிவகையில் கூட்டாட்சி மற்றும் மாநிலச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.

சமூக நெருக்கடி மற்றும் பெரும் வங்கிகளின் குற்றத்தன்மையின் பரிமாணங்கள் இரண்டையும் பற்றி இந்த ஊழல் நன்கு காட்டுகிறது. அடைமானத்திற்கு பணம் கொடுப்போர் ஏலத்திற்காக ஆவணங்களை திரித்து ஏமாற்றுதல் பெருகியுள்ளதற்கு உடனடிக் காரணம் பொருளாதார நெருக்கடியால் குடும்பங்கள் பேரழிவு என்னும் பேரலைக்கு உட்பட்டுள்ளது ஆகும். அந்த நெருக்கடியே வங்கிகளின் கொள்ளைமுறை கடன்கொடுக்கும் வழக்கங்களினால் தான் தொடங்கியது. இதன் நோக்கம் ஆவணங்கள் பற்றிய சட்டபூர்வ தேவைகளை எச்சரிக்கையுடன் கடந்து, மக்களை அவர்களுடைய வீட்டில் இருந்து காரணத்துடனும், இரக்கமற்ற முறையிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான்.

ஏலத்திற்கு விடுவதை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும், இவை பற்றிய விசாரணைகள் தேவை என்று அரசியல்வாதிகள் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். பிரதிநிதிகள் மன்றத்தின் தலைவர் நான்ஸி பெலோசியும், மற்றும் 30 கலிபோர்னியா பிரதிநிதிகளும் இந்த வாரம் அடைமானக் கடன் கொடுக்கும் தொழில்துறை பற்றி ஒரு கூட்டாட்சி விசாரணை தேவை என்று கோரி நீதித்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் மின்னிசோட்டாவின் அல் பிராங்கன் மற்றும் நியூஜேர்சியின் ரோபர்ட் மெனெண்டெஸும் செவ்வாயன்று இத்தகைய தவறுகளை நடக்க அனுமதித்த அரசாங்கக் கட்டுப்பாட்டு அமைப்புக்களின் பங்கு பற்றி அரசாங்கப் பொறுப்பு அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். பல மாநிலங்களிலும் தலைமை வக்கீல்கள் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர். ஒரு சில மாநிலங்களில் ஏலத்திற்கு விடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பிரச்சனைக்குள்ளான வீட்டு உரிமையாளர்கள் பற்றி இந்த தேர்தலுக்கு முன் காட்டப்படும் அக்கறை முற்றிலும் நேர்மையற்றதாகும். உண்மையில், அமெரிக்கர்களை அவர்கள் வீடுகளிழக்கச் செய்யும் முழு வழிவகையும் இரு கட்சிகளின் அரசியல்வாதிகளின் உதவியாலும், குறிப்பாக ஜனாதிபதி ஒபாமா உதவியாலும் நடந்தது. அவருடைய போலித்தன “வீடுகள் மீட்பு” என்னும் 2009 திட்டம் பேரழிவின் மூலகாரணத்தை ஆராய்ந்து சீர்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. அடைமானங்கள் பெரிதும் கூடுதல் மதிப்புக் காட்டப்பட்டுள்ள, அமெரிக்க தொழிலாளர்களின் வருமானங்களுடன் இயைந்து இருக்கவில்லை என்பது உண்மையாகும். இது மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களை “நீருக்கு அடியில்” ஆழ்த்தியுள்ளது-இதன் காரணம் வீடுகளைப் பற்றிய வங்கிகளின் மதிப்பீடு என்பதே தவிர சந்தை மதிப்பு இல்லை என்பதால்தான்.

அதே நேரத்தில் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு மற்றும் ஒபாமா பலமுறை தான் வங்கிகளின் மோசமான கடன்களை அடைக்க “எதுவும் செய்யத்தயார்” என்று கொடுத்த உறுதிமொழிகளும் கடன் கொடுத்தவர்கள் மோசமான கடன்கள் மீது காட்டிய மதிப்புக் கூட்டப்பட்ட அசல் தொகையை பெரிதும் குறைப்பதற்கான ஊக்குவித்தல் எதையும் கொடுக்கவில்லை. இதன் விளைவாக 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் ஏலங்கள் விரைந்து நடைபெறுகின்றன.

மோசடிக்கான சான்றுகள் கடந்த மாதம் Ally Financial (முன்னாள் GMAC அடைமான நிறுவனம்), நான்காவது மிகப் பெரிய அமெரிக்க அடைமானக் கடன்கொடுக்கும் நிறுவனம் சொத்துக்களை எடுத்துக் கொள்வதற்கு ஒரு நீதிமன்ற உத்தரவு தேவை என்ற நிலையில் 23 மாநிலங்களில் ஏலங்களை நிறுத்திய பின்னர், இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நிதியப் பெருநிறுவனங்கள் JP Morgan Chase மற்றும் Bank of America ஆகியவை இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டன. இதில் Wells Fargoவும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பெரிய வங்கிகளுமே இதேபோன்ற வழிவகைகளை பயன்படுத்தி வீட்டு உரிமையாளர்கள் வீடு இழப்பதை விரைவுபடுத்தின என்பது இப்பொழுது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதித்துறைப் பரிசீலனை தேவைப்படாத 27 மாநிலங்களில் கடன் கொடுத்தவர்கள் இதே சந்தேகத்திற்குரிய, அநேகமாக சட்டவிரோதமாக இருக்கக்கடிய வழக்கங்களை பின்பற்றிவந்தாலும், ஏலம்விடுவதற்கான நடவடிக்கைகளை தொடர்கின்றன. நீதித்துறை பரிசீலனை தேவைப்படாத மாநிலங்களில் நாட்டின் மிக அதிக மக்கட்தொகையை கொண்ட கலிபோர்னியா மாநிலம் மிகஅதிக அடமான ஏலங்களை கொண்டதாக உள்ளது.

ஒரு சொத்தை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு சட்டநெறியான ஆவணங்கள் தேவையாகும். ஆனால் வாடிக்கையாக வங்கிகள் தங்களுக்கு “உரிமை” அல்லது சட்டபூர்வமாக ஏலத்திற்கு விடுவதற்கு உரிமை உள்ளது என்பதைக் காட்டும் காகித ஆவணங்களை முன்வைப்பதில்லை. மாறாக அவை வங்கிகள் அல்லது கடன் பணிசெய்யும் நிறுவனங்கள், வங்கி கொடுக்கும் ஊதியத்தைப் பெறுபவை, அளிக்கும் உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன. கொள்கையளவில் இக்கையெழுத்துக்கள் ஒரு நடுநிலை, மூன்றாம் நபரான சட்டநெறியாக்கும் நபர் மூலமாக செயல்படுத்தப்படும். அவர் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பரிசீலனை செய்யவேண்டும் என்பது சட்டத்தின் கட்டாயமாகும்.

ஆனால் வெளிப்பட்டுள்ளதோ, இத்தகைய நெறிப்படுத்தும் முறை பரந்த அளவில் முக்கிய நிதிய அமைப்புக்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதுதான். மற்ற வழக்கங்களுடன், நெறிப்படுத்துதல்கள் ஒருக்காலும் இயலாத பரிசீலனை செய்பவர் மாதத்திற்கு சில ஆயிரப் பத்திரங்களை சோதிப்பது என்பதின் மூலம் நடந்தது என்று வெளிப்பட்டுள்ளது. மேலும் அவை உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுமுன்னரே நடைபெற்றன, கையெழுத்துக்கள் ஒரே தனிப்பட்ட வங்கி நபரின் சார்பில் ஒருவருக்காகப் பலரால் இடப்பட்டன. உறுதிப்படுத்தப்படுத்தல் ஆவணங்கள் கையெழுத்திடப்பட்ட அலுவலகங்களில் இருந்து மிகத் தொலைதூரத்தில் நடந்தன என்பதும் வெளிவந்துள்ளன.

இதைத் தவிர, நீதிமன்றங்கள் எந்த வங்கிகள் உண்மையில் அடைமானப் பத்திரங்களை கொண்டுள்ள என்பதை நிர்ணயிக்க சிரமப்படுகின்றன. இந்த உறுதியற்ற தன்மைக்குக் காரணம் அடைமானக் கடன்களுக்கான உத்தரவாதம், பொதுவாக வாடிக்கையாக மொத்தமாக எடுக்கப்பட்டு, விற்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டு இறுதியில் சில்லரைத் துண்டுகளாக ஆக்கப்பட்டு மறுபடியும் விற்கப்பட்டுவிடுகின்றன. இதன் விளைவு பல நேரமும் ஒரே சொத்துக்கள் மீது பல வங்கிகள் உரிமை கொண்டாடுவதுதான்.

இந்த ஊழலின் விளைவாக, ஏலங்கள் தற்காலிகமாக பல மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் சார்பில் வாதிடும் வக்கீல்கள் இப்பொழுது இன்னும் கூடுதலான வகையில் சட்டரீதியான திருத்தங்களை நாடுவர். நீதிபதிகளும் முன்னரே ஏலத்திற்கு விடப்பட்டுள்ள வீடுகள் பற்றிய வழக்குகளை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடும்.

டெக்சாசின் தலைமை அரசாங்க வக்கீல் கிரெக் ஆப்பட் பல ஆவணவழித் தவறுகளால் “ஏலம் செல்லுபடியானவை அல்ல” என்று ஆகலாம் என்றார். ஓகையோ மற்றும் அயோவா மாநிலங்கள் முறையே $25,000, $40,000 அபராதத் தொகையாக “முறையற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்திற்கும், உண்மையற்ற நிலைப்பாடு பற்றி உறுதி கூறப்பட்டதற்கும்” விதிக்க முடியும் என்று ஓகையோவின் தலைமை வக்கீல் கூறியுள்ளார். கனக்டிகட் தலைமை அரசாங்க வக்கீல் ஜெனரல் ரிச்சார்ட் ப்ளூமென்தால் அடைமானப் பத்திரங்கள் “நீதிமன்றத்திற்கு செய்யப்பட்ட மோசடிகளாக” இருக்கலாம் என்றார்.

ஒரு கூட்டு வழக்கு நடவடிக்கை ஏற்கனவே கென்டக்கி வீட்டு உரிமையாளர்கள் சார்பில் தவறான அடைமானச் சொத்து வழக்குகள் பற்றி பதிவாகியுள்ளது. இன்னும் பல தொடரக்கூடும். வீடுகள் உரிமையை காப்பீடு செய்பவர்கள் தெளிவற்ற உரிமைகள் பற்றிய நிலைக்குப் பொறுப்பு ஆவார்கள். அவர்களும் வங்கிகளுக்கு எதிராகத் தங்கள் இழப்புக்களை மீண்டும் பெற வழக்குகளை தொடக்கக் கூடும்.

இந்த நடவடிக்கைகளின் நிகர விளைவு நூறாயிரக்கணக்கான ஏலங்களை சந்தைக்கு விற்பனைக்கு வருவதை தாமதப்படுத்தக்கூடும். இது வாங்குபவர்களை ஏலத்தில் விடப்பட்டு சந்தைக்கு வந்துள்ள வீடுகளை வாங்குவதில் இருந்து ஒதுக்கும். இது வீடுகளின் மதிப்புக்களை இன்னும் குறைக்கும். இதையொட்டி ஒபாமா நிர்வாகமும் இரு பெரும் கட்சிகளும் வங்கிகளைப் பாதுகாப்பதை தங்கள் முக்கிய கடமையாக எடுப்பர். இதுதான் அவர்களுடைய முக்கிய அக்கறையாக இரு ஆண்டுகளுக்கு முன் நிதிய நெருக்கடி முதலில் வெடித்ததிலிருந்து உள்ளது.

இதற்கிடையில், வீடுகள் நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் கடன் கொடுத்தவர்கள் 95,000 அமெரிக்க வீடுகளை மீண்டும் எடுத்துக் கொண்ட விதத்தில் ஒரு சாதனையைச் செய்தனர். மேலும் RealtyTrac கருத்துப்பட ஏலத்திற்கு தேவையான தயாரிப்பை 338,836 வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

Mortgage Bankers Association கொடுத்துள்ள தகவலின்படி, கடன்கள் செலுத்தாமையின் சதவிகிதம் 2010ன் முதல் காலாண்டில் அனைத்து அமெரிக்க இல்லங்களிலும் குறைந்தது 90 நாட்களுக்கு 9.5% ஆக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டில் இருந்து 4% அதிகம் ஆகும். ஐந்து மில்லியன் வீடுகளுக்கும் மேலாக இப்பொழுது ஏலத்திற்கு விடப்படுவதற்கான தயாரிப்பில் உள்ளன.