World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

For Committees of Action _ Not the People’s Front

நடவடிக்கைக் குழுக்களின் பக்கம் நிற்போம் - மக்கள் முன்னணியின் பக்கம் அல்ல

November 26, 1935
By Leon Trotsky

Back to screen version

நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் 1935ல் நோர்வேயில் இருந்து எழுதப்பட்ட இந்த கட்டுரையில் லியோன் ட்ரொட்ஸ்கி பிரான்சில் “மக்கள் முன்னணி”யின் அரசியலை அம்பலப்படுத்தினார், முதலாளித்துவ தீவிரக்கோட்பாட்டுக் கட்சி (Radical Party), சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை கொண்ட ஒரு கூட்டணியாகும் இது. கஸ்ரோன் டூமெர்க்கின் (Gaston Doumergue) வலது சாரி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த 1934 ஆம் ஆண்டின் பாசிசக் கலகத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்த மக்கள் முன்னணி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடன் கட்டிப் போட்டது. அதிகாரத்திற்கு வந்தபின், அது மே-ஜூன் 1936 பொது வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட ஏற்பாடு செய்தது. இந்த திவாலான கட்சிகளிடம் இருந்து முறித்துக் கொள்வதற்கும் தொழிலாள வர்க்க போராட்டத்தின் ஒழுங்கமைப்புகளாக அதிகாரத்திற்கான புரட்சிகர சாதனங்களாய் வளர்ச்சியடையத்தக்க நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கும் ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்குள் தொழிலாளர்கள் நுழைகின்ற சமயத்தில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்கி வைப்பதற்கு வேலைசெய்யும் தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் பிடியில் இருந்து முறித்துக் கொள்வதற்கான அவசியத்திற்கு அவர்கள் முகம்கொடுக்கின்றனர். அந்த அர்த்தத்தில், 1930களில் பிரான்சில் இருந்த நிலைமை குறித்தான ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டுவதற்கு சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான அவரது அழைப்பும் உழைக்கும் மக்கள் இன்று முகம் கொடுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு மதிப்பிடமுடியாத வழிகாட்டியாய் விளங்குகின்றன. ”மக்கள் முன்னணி” (The People's Front) என்பது பாட்டாளி வர்க்கம் தீவிரக்கோட்பாட்டுக் கட்சி மற்றும் அதேவகையிலான சிறிய பயனற்ற கட்சிகளின் வடிவத்திலான ஏகாதிபத்திய முதலாளித்துவத்துடன் கொண்டிருக்கும் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த கூட்டணி நாடாளுமன்ற வட்டங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலான வட்டங்களிலும் விரிகிறது. இரண்டு வட்டங்களிலுமே தீவிரக்கோட்பாட்டுக் கட்சியானது, முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை தனக்கெனப் பாதுகாத்து வைத்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாட்டு சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை மிருகத்தனமாய் திணிக்கிறது.

தீவிரக்கோட்பாட்டுக் கட்சியே சிதைவுக்கு ஆட்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதன் ஆதரவாளர்கள் அதிலிருந்து விலகி வலதுக்கும் இடதுக்கும் சாரிசாரியாய் செல்வதற்கான கூடுதல் சான்றினை ஒவ்வொரு புதிய தேர்தலும் வழங்குகின்றது. இன்னொரு பக்கத்திலோ, ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி இல்லாததால் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வலிமையாக வளர்ந்து வருகின்றன. குட்டிமுதலாளி வர்க்கம் உட்பட உழைக்கும் மக்களின் பொதுவான போக்கு இடது நோக்கி இருப்பது மிகத் தெளிவாய் இருக்கிறது. அதேபோல் தொழிலாளர்களது கட்சிகளின் தலைவர்களது நோக்குநிலையும் பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது, வலது நோக்கி என்பதை. வெகுஜனங்கள் தங்களது வாக்குகளின் மூலமும் போராட்டத்தின் மூலமும் தீவிரக்கோட்பாட்டு கட்சியை விரட்டியடிக்க தலைப்படும் சமயத்தில், ஐக்கிய முன்னணியின் தலைவர்களோ, அதற்கு நேரெதிராய், அதனைக் காப்பாற்ற பிரயத்தனப்படுகின்றனர். ஒரு “சோசலிச” வேலைத்திட்ட அடிப்படையின் மீது பரந்துபட்ட தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அந்த நம்பிக்கையின் பெருவாரியான பகுதியினை, அந்த பரந்துபட்ட தொழிலாளர்கள் முற்றுமுதலாய் கொஞ்சம் கூட நம்பிக்கை வைக்காத தீவிரக்கோட்பாட்டுக் கட்சியிடம் மனமுவந்து ஒப்படைக்க இந்த தொழிலாளர் கட்சிகளின் தலைவர்கள் சென்றார்கள்.

”மக்கள் முன்னணி” தனது இப்போதைய வேடத்தில் தொழிலாளர் ஜனநாயகத்தை மட்டுமல்லாது உத்தியோகபூர்வ அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தையும் வெட்கமின்றி காலில் மிதித்துக் கொண்டிருக்கிறது. தீவிரக்கோட்பாட்டுக் கட்சி வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களின் போராட்டத்தில், எனவே மக்கள் முன்னணியில், பங்கேற்பதில்லை. அப்படியிருந்தும் தீவிரக்கோட்பாட்டுக் கட்சியானது இந்த முன்னணியில் சமமானது மட்டுமன்றி சிறப்புரிமையான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறது; தொழிலாளர்களது கட்சிகள் தங்களது செயல்பாட்டை தீவிரக்கோட்பாட்டுக் கட்சியின் வேலைத்திட்ட மட்டத்திற்கு கட்டுப்படுத்திக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த சிந்தனை l’Humanité சிடுமூஞ்சிகளால் மிகவும் உரத்த குரலில் முன்னெடுக்கப்படுகிறது.

மக்கள் முன்னணியில் தீவிரகோட்பாட்டுக் கட்சியினர் பெற்றிருக்கும் சிறப்புரிமையான இடத்தை சமீபத்திய செனட் தேர்தல்கள் சிறப்பான தெளிவுடன் வெளிச்சமிட்டுள்ளன. தொழிலாளர்களின் வசத்தில் இருந்த பல தொகுதிகளையும் பாட்டாளி-வர்க்கமல்லாத கட்சிகளுக்கு சாதகமாக தாங்கள் விட்டுக் கொடுத்ததான உண்மையை கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் பகிரங்கமாய் பெருமையடித்துக் கொண்டனர். முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாக சொத்து தகுதியை ஐக்கிய முன்னணி பகுதியாக மறுஸ்தாபகம் செய்தது என்பது தான் இதன் எளிமையான அர்த்தம் ஆகும்.

நேரடியான மற்றும் உடனடியான போராட்டத்திற்கான ஒரு அமைப்பாகத் தான் “முன்னணி” சிந்திக்கப்பட்ட போது இருந்தது. போராட்ட பிரச்சினை என வருகையில், ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளித்துவ வர்க்கத்தின் பத்து பேருக்கு, அவர்கள் மக்கள் முன்னணியுடன் ஒட்டியிருப்பவர்களாயிருந்தாலும், சமம். முன்னணியின் புரட்சிகர போராட்ட வலிமையின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், தேர்தல்ரீதியான சிறப்புரிமைகள் எல்லாம் தொழிலாளர்களுக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே அன்றி தீவிரக்கோட்பாட்டுக் கட்சியை சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு அல்ல. ஆனால் சாரத்தில், சிறப்புரிமைகள் என்பதற்கே இங்கு இடமில்லை. மக்கள் முன்னணி ”ஜனநாயக”த்தைப் பாதுகாப்பதற்கு நோக்கம் கொண்டிருக்கிறதா? அப்படியானால் அது தன் சொந்த படிநிலைகளில் அதனை செயலுறுத்துவதில் இருந்து தொடங்கட்டும். அதன் அர்த்தம் என்னவெனில், மக்கள் முன்னணியின் தலைமையானது போராடும் வெகுஜனங்களின் விருப்பத்தின் நேரடியான மற்றும் உடனடியான பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.

எவ்வாறு? வெகு எளிது: தேர்தல்கள் மூலமாக. பாசிசத்திற்கு, லாவலின் போனபார்டிச ஆட்சிக்கு, ஏகாதிபத்தியவாதிகளின் போர்ச் சதிக்கு, மற்றும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறையின் அனைத்து பிற வடிவங்களுக்கும் எதிரான தன்னுடைய போராட்டத்தில் கைகோர்த்துப் போராடுவதற்கான உரிமையை பாட்டாளி வர்க்கம் யாருக்கும் மறுக்கவில்லை. வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் தமது உண்மையான அல்லது சாத்தியமான கூட்டாளிகளிடம் வைக்கும் ஒரே கோரிக்கை என்னவென்றால் அவர்கள் செயலில் இறங்கிப் போராட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் போராட்டத்தில் உண்மையாக பங்கேற்றிருக்கிற அத்துடன் பொதுப்பட்ட ஒழுங்கிற்கு சமர்ப்பிக்கத் தயாராய் இருக்கின்ற மக்களின் ஒவ்வொரு குழுவும் மக்கள் முன்னணியின் தலைமையில் செல்வாக்கு செலுத்துவதற்கு சம உரிமை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நகரம், மாவட்டம், தொழிற்சாலை, பாளையம் மற்றும் கிராமத்தில் ஒரு சமயத்தில் மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருப்பவர்களில் ஒவ்வொரு இருநூறு, ஐநூறு அல்லது ஆயிரம் பேரும் போராட்ட நடவடிக்கைகளின் சமயத்தில் பிராந்திய நடவடிக்கைக் குழுவிற்கான தங்களது பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் அதன் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டவர்களாவர். கம்யூனிச அகிலத்தின் கடைசி காங்கிரஸ், டிமிட்ரோவ் அறிக்கை மீதான தனது தீர்மானத்தில், மக்கள் முன்னணிக்கு வெகுஜன ஆதரவு இருப்பதால் தேர்ந்தெடுக்கப்படுகிற நடவடிக்கைக் குழுக்களுக்கு ஆதரவாக தான் நிற்பதாக வெளிப்படுத்தியது. உண்மையில் அந்த மொத்த தீர்மானத்திலும் இருந்தே ஒரே முற்போக்கான சிந்தனை இது தான். ஆனால் துல்லியமாக அக்காரணத்தினாலேயே ஸ்ராலினிஸ்டுகள் அதனை நனவாக்க எதனையும் செய்யவில்லை. முதலாளித்துவத்துடன் கூட்டு முறிந்து போகும் அச்சத்தில் எதனையும் அவர்கள் செய்வதற்குத் துணியவில்லை.

நிச்சயமாக, குழுக்களின் தேர்தல்களில் தொழிலாளர்கள் மட்டுமன்றி அரசு ஊழியர்கள், நிர்வாகிகள், முன்னாள் படைவீரர்கள், கலைஞர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளும் கூட பங்கேற்க இயலும். இவ்வாறாக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான செல்வாக்கிற்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளுடன் நெருக்கமான இசைவில் நடவடிக்கைக் குழுக்கள் அமைகின்றன. ஆனால் அவை தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான கூட்டை சிக்கலின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன. இதனிடையே, மக்கள் முன்னணி தனது இப்போதைய வடிவத்தில், பாட்டாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (தீவிரக்கோட்பாட்டு கட்சியினர்) இடையே வர்க்க ஒத்துழைப்புக்கான அமைப்பாக இருக்கிறதே அன்றி அதைத் தாண்டி எதுவுமில்லை. நடவடிக்கைக் குழுக்கள் உண்மையான வெகுஜனத் தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுவதானது முதலாளித்துவ இடைத்தரகர்களை (தீவிரக்கோட்பாட்டுக் கட்சியினர்) மக்கள் முன்னணியின் பொறுப்புகளில் இருந்து தானாகவே வெளியேற்றி விடும், இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து உத்தரவிடப்படும் கிரிமினல் கொள்கை சுக்குநூறாய் நொருக்கப்பட்டு விடும்.

ஆயினும், ஒரு நிர்ணயித்த தினத்தில் நேரத்தில் அனைத்து பாட்டாளி வர்க்க மற்றும் குட்டிமுதலாளித்துவ வெகுஜனங்களையும் அழைத்து கொடுக்கப்பட்ட ஒரு சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கைக் குழுக்களைத் தேர்வு செய்வது சாத்தியம் என்று நினைத்தால் அது பிழையாகி விடும். இத்தகையதொரு அணுகுமுறை முழுக்க அதிகாரத்துவயப்பட்டதாய் இருக்கும் என்பதோடு அதனாலேயே தரிசாகிப் போய் விடும். தொழிலாளர்கள் தாங்களே நடவடிக்கைகளின் ஒரு பகுதியில் பங்கேற்று புரட்சிகர தலைமையின் அவசியத்தை உணரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களால் நடவடிக்கை குழுவினைத் தேர்வு செய்ய முடியும். இங்கே முன்நிற்கும் பிரச்சினை, அனைத்து மற்றும் எந்த மக்களது உத்தியோகபூர்வ ஜனநாயகப் பிரதிநிதித்துவமும் இருக்கிறதா என்பதல்ல மாறாக போராடும் வெகுஜனங்களின் புரட்சிகர பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பது தான். நடவடிக்கைக் குழு என்பது போராட்டத்திற்கான ஒரு எந்திரம். நடவடிக்கைக் குழு உருவாக்கத்தை நோக்கி உழைப்பவர்களின் எந்த அடுக்கு ஈர்க்கப்படும் என்பதை முன்னரே துல்லியமாக ஊகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை: போராடும் வெகுஜனங்களில் வகைப்பிரிப்புக் கோடுகள் போராட்டத்தின் போக்கிலேயே ஸ்தாபகமுறும்.

பிரான்சில் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால் வெகுஜனங்களின் புரட்சிகர ஆற்றல் எல்லாம் திடீர் தாரைகளில், துலோன், பிரெஸ்ட், மற்றும் லிமோகெஸ் போன்ற தனிமைப்பட்ட வெடிப்புகளாக இறைக்கப்பட்டு பற்றுகுறைந்த நிலைக்கு பாதை காட்டி விடும். இப்போதைய சூழ்நிலையில் இந்த தருணம் வரை அணிதிரட்டப்பட்டிருக்கும் வெகுஜனங்களை மக்கள் முன்னணி அரசாங்கத்திடம் இருந்து மேலிருந்தான ஆசி கிட்டும்வரை நிறுத்தி வைத்திருப்பது சாத்தியமாகும் என்று நனவுடன் துரோகம் செய்பவர்களோ அல்லது மண்டையில் களிமண் கொண்ட நம்பிக்கையற்றவர்களோ தான் சிந்திக்க முடியும். இப்போதைய சூழ்நிலையில் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள், தெரு மோதல்கள், நேரடிக் கிளர்ச்சிகள் ஆகியவை முழுக்க முழுக்க தவிர்க்கவியலாதவை ஆகும். பாட்டாளி வர்க்க கட்சியின் பணி இந்த இயக்கங்களை தடுப்பதோ அல்லது முடக்குவதோ அல்ல மாறாக அவற்றை ஒன்றுபடுத்துவதும் அவற்றில் சாத்தியமான மிகப்பெரும் சக்தியை உள்ளிடுவதுமே ஆகும்.

எல்லாவற்றுக்கும் மேல் சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் தீவிரக்கோட்பாட்டுக் கட்சியினரை பயமுறுத்தக் கூடாது என்று அஞ்சுகின்றனர். ஐக்கிய முன்னணி எந்திரம் என்பது வெகுஜனங்களின் சிதறுண்ட இயக்கங்களின் விடயத்தில் ஒழுங்கமைவுக் குலைப்பாளரின் பாத்திரத்தை நன்கு நனவுடனே ஆற்றுகிறது. இந்த எந்திரத்தின் மீது வெகுஜனங்கள் காறி உமிழாமல் காப்பதற்கே Marceau Pivert வகை ”இடதுகள்” சேவை செய்கின்றனர். போராடும் வெகுஜனங்களுக்கு, இத்தருணத்திற்குரிய அவசியப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு எந்திரத்தை போராட்ட நிகழ்முறையிலேயே உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் மட்டுமே இந்த சூழ்நிலை காப்பாற்றப்பட முடியும். சரியாய் இந்த நோக்கத்திற்காகத் தான் நடவடிக்கைக் குழுக்கள். துலோன் மற்றும் பிரெஸ்ட் போராட்ட சமயத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு பிராந்திய போராடும் அமைப்பை உருவாக்குவதற்கு அழைப்பு விடப்பட்டிருந்தால் அவர்கள் எந்த தயக்கமும் இன்றி அதனை உருவாக்கியிருப்பார்கள். லிமோகஸில் குருதிகொட்டும் தாக்குதல் நடந்த அடுத்த நாளிலேயே, தொழிலாளர்களும் குட்டிமுதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பகுதியும் இந்த குருதி கொட்டிய நிகழ்வுகளை விசாரணை செய்யவும் வருங்காலத்தில் அவை நடைபெறாமல் தடுக்கவும் ஒரு தேர்ந்தெடுத்த குழுவை உருவாக்குவதற்கு தாங்கள் தயாராய் இருப்பதை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த ஆண்டு கோடையில் இராணுவத்தினர் வசிப்பிடங்களில் இராணுவ சேவைக்கால நீட்டிப்பை (rabiot) எதிர்த்து நடந்த இயக்கத்தின் போது இத்தகையதொரு பாதை ஆலோசிக்கப்பட்டிருந்தால் இராணுவத்தினர்கள் எந்த இழுபறியும் இன்றி பட்டாலியன், ரெஜிமெண்ட், மற்றும் காரிசன் நடவடிக்கைக் குழுக்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள். இதேபோன்ற சூழ்நிலைகள் ஒவ்வொரு படியிலும் எழுகின்றன, தொடர்ந்து எழும் - அநேக சந்தர்ப்பங்களில் பிராந்திய அளவில் என்றாலும் சில சமயங்களில் தேசிய அளவிலும். இந்த வகையான சந்தர்ப்பம் ஒன்றை தவற விடுவதைக் கூட தவிர்ப்பது தான் நமது பணியாகும். கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரங்களின் எதிர்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே சாதனமாக நடவடிக்கைக் குழுவின் முக்கியத்துவத்தை தெளிவாய் புரிந்து கொண்டிருப்பது தான் இதற்கான முதல் நிபந்தனை ஆகும்.

அப்படியானால் நடவடிக்கைக் குழுக்கள் என்பவை கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான பிரதியீடுகள் என்று கூறுவது தான் இதன் அர்த்தமா? இந்த வகையில் கேள்வியை வைப்பதே மடத்தனமானது. வெகுஜனங்கள் தங்கள் அனைத்து சிந்தனைகள், பாரம்பரியங்கள், குழுவாக்கங்கள் மற்றும் அமைப்புகளுடனும் தான் போராட்டத்திற்குள் நுழைகிறார்கள். கட்சிகள் தொடர்ந்து இருக்கும் போராடும். நடவடிக்கைக் குழுக்களின் தேர்தல்களின் போது ஒவ்வொரு கட்சியும் இயல்பாகவே தங்களது சொந்த ஆதரவாளர்களை தேர்வு செய்யவே தலைப்படும். ஒரு பெரும்பான்மையின் வழி நடவடிக்கைக் குழுக்கள் முடிவுகளை எடுக்கும் (கட்சி மற்றும் கன்னை குழுவாக்கங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில்). கட்சிகளைப் பொறுத்தவரை, நடவடிக்கைக் குழுக்களை ஒரு புரட்சிகர நாடாளுமன்றம் என்று அழைக்கலாம்: கட்சிகள் விலக்கி வைக்கப்படுவதில்லை - நேரெதிராய் அவை அவசியமான வகையில் முன்னெதிர்பார்க்கப்படுகின்றன - அதே சமயத்தில் அவை நடவடிக்கையில் சோதிக்கப்படுகின்றன, அத்துடன் வெகுஜனங்கள் இற்றுப் போன கட்சிகளின் செல்வாக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படியானால், நடவடிக்கைக் குழுக்கள் என்பவை வெறுமனே சோவியத்துகள் தான் என்று அர்த்தமா? குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் நடவடிக்கைக் குழுக்கள் தங்களை சோவியத்துகளாக உருமாற்றிக் கொள்ள முடியும். ஆயினும், நடவடிக்கைக் குழுக்களை இந்த பெயரில் அழைப்பது பிழையாகி விடும். இன்று, 1935ல், சோவியத்துகள் என்கிற வார்த்தையுடன் ஏற்கனவே கைப்பற்றியிருக்கும் அதிகாரம் குறித்த கருத்தாக்கத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவே வெகுஜன மக்கள் பழக்கப்பட்டுள்ளனர்; ஆனால் இன்றைய பிரான்ஸ் இதிலிருந்து கணிசமாய் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. ரஷ்ய சோவியத்துகள் தங்களது ஆரம்ப கட்டங்களில் அவை பின்னால் ஆனதில் கொஞ்சம் கூட இருக்கவில்லை, அந்த நாட்களில் அவை பெரும்பாலும் தொழிலாளர்கள் அல்லது வேலைநிறுத்தக் குழுக்கள் என்கிற கண்ணியமான பெயரில் அழைக்கப்பட்டன. பிரான்சின் உழைக்கும் மக்களை ஒரு தற்காப்புப் போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதும் இதன்மூலம் எதிர்வரும் தாக்குதல்களில் தங்களது சொந்த ஆற்றல் குறித்த நனவை அவர்களுக்குப் புகட்டுவதும் இப்போதைய கட்டத்தில் நடவடிக்கைக் குழுக்கள் கொண்டுள்ள கடமைகளாகும். உண்மையான சோவியத்துகளின் புள்ளி வரை விடயங்கள் செல்லுமா என்பது பிரான்சில் நிலவும் தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலை இறுதியான புரட்சிகர தீர்மானங்களாய் விரியுமா என்பதைப் பொறுத்தது. இது நிச்சயமாக புரட்சிகர முன்னணிப்படையின் விருப்பத்தை மட்டும் சார்ந்ததல்ல மாறாக ஏராளமான புற நிலைமைகளையும் சார்ந்தது; எந்த வகையாயினும், இன்று மக்கள் முன்னணியின் முட்டுக்கட்டைக்கு எதிராக திரண்டு பெருகியிருக்கக் கூடிய வெகுஜன இயக்கமானது நடவடிக்கைக் குழுக்கள் இன்றி முன்னால் செல்ல முடியாது.

தொழிலாளர் போராளிப்படையை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வது ஆகிய பணிகள் எல்லாம், போராடும் வெகுஜனங்கள் தங்களது அதிகாரமுற்ற சாதனங்களின் மூலம் தாங்களாகவே இந்த வேலைகளை எடுத்துச் செய்யவில்லை என்றால் இவையெல்லாம் வெறும் காகிதத்தில் மட்டும் தான் இருந்து கொண்டிருக்கும். போராளிகளை ஆயிரக்கணக்கில் இன்றி பத்தாயிரக்கணக்கில் கொண்ட ஒரு உண்மையான போராளிப்படையை போராட்டத்தில் பிறக்கும் நடவடிக்கைக் குழுக்கள் மட்டுமே உறுதியளிக்க முடியும். நாட்டின் மிக முக்கிய மையங்களைத் தழுவி அமைந்திருக்கும் நடவடிக்கைக் குழுக்கள் மட்டுமே போராட்டத்தின் இன்னும் தீர்மானகரமான வழிமுறைகளுக்கு உருமாறுவதற்கான தருணத்தை தெரிவு செய்ய முடியும், அப்போராட்டத்தின் தலைமை நியாயமான வகையில் அவற்றினுடையதாக அமைந்திருக்கும்.

மேலே வரையப்பட்ட முன்மொழிவுகளில் இருந்து பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சிகரவாதிகளின் அரசியல் நடவடிக்கைக்கான ஏராளமான முடிவுகள் பாய்கின்றன. முதன்மையான முடிவு Gauche Révolutionnaire [புரட்சிகர இடது] என்று அழைக்கப்படும் ஒன்றினை பற்றித் தொடுகிறது. இந்த குழுவாக்கம், புரட்சிகர வெகுஜனங்களின் இயக்கத்தை ஆளுகிற நியதிகளை கொஞ்சம் கூட புரிந்துகொண்டிராத தன்மையை குணமாகக் கொண்டது. எவ்வளவு தான் மையவாதிகள் “வெகுஜனங்கள்” குறித்து பிதற்றினாலும், அவர்கள் எப்போதும் சீர்திருத்த எந்திரத்தை நோக்கியே தங்களை நோக்குநிலை அமைத்துக் கொள்கின்றனர். ஏதேனும் ஒரு புரட்சிகர முழக்கத்தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு, மர்சி பைவர்ட் அதனை “அமைப்பு ஒற்றுமை” என்னும் அருவமான கோட்பாட்டிற்கு அடிபணியச் செய்கிறார், அது நடைமுறையில் புரட்சிகரவாதிகளுக்கு எதிராக தேசப்பற்றுவாதிகளுடன் ஒற்றுமை என்பதாகத் திரும்புகிறது. ஒன்றுபட்ட சமூக-தேசப்பற்று எந்திரங்களின் எதிர்ப்பை நொருக்குவதென்பது வெகுஜனங்களுக்கு வாழ்வா சாவா என்கிற கேள்வியாக வந்து நிற்கிற அந்த சரியான தருணத்தில், இடது மையவாதிகளோ, புரட்சிகர போராட்டத்தின் நலன்களுக்கு மேலாக நிற்கும் முற்றுமுதலான ஒரு “நன்மை”யாக இந்த எந்திரங்களின் ”ஒற்றுமை”யைக் கருதுகின்றனர்.

சமூக தேசப்பற்றுவாதிகளின் துரோக தலைமையில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்கும் அவசியத்தை முழுமையாக புரிந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே நடவடிக்கைக் குழுக்கள் கட்டப்படும். அவ்வாறிருக்க, பிவேர்ட் சிரோம்ஸ்கியை பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ப்ளுமைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவரோ தோரஸுடன் சேர்த்து ஹெரியட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் லாவலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். பிவேர்ட் மக்கள் முன்னணியின் அமைப்புமுறைக்குள் நுழைகிறார் (சென்ற தேசியக் குழு கூட்டத்தில் புளுமின் அவமானகரமான தீர்மானத்திற்கு ஆதரவாய் அவர் வாக்களித்தார் என்றால் காரணமில்லாமல் இல்லை), மக்கள் முன்னணி லாவலின் போனபார்டிச ஆட்சிக்குள் ஒரு சிறகாய் நுழைகிறது. போனபார்டிச ஆட்சியின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. எதிர்வரும் தீர்மானகரமான காலகட்டம் மொத்தத்தின் பாதையிலும் மக்கள் முன்னணியின் தலைமையானது (ஹெரியட்-புளும்-கேச்சின்-தோரஸ்- சிரோம்ஸ்கி-பிவேர்ட்) தனது பாதத்தை தொடர்ந்து கொண்டிருப்பதில் வெற்றிபெறுமானால், அப்போது போனபார்டிச ஆட்சியானது தவிர்க்கவியலாமல் பாசிச ஆட்சிக்கு வழிவிடும். நடப்பு தலைமையின் கலைப்பு தான் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிபந்தனையாக இருக்கிறது. இந்த நிலைமைகளில் “ஒற்றுமை” முழக்கம் என்பது முட்டாள்தனம் மட்டுமல்ல ஒரு குற்றமும் கூட. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச சங்கத்தின் முகவர்களுடன் எந்த ஒற்றுமையும் கிடையாது. திட்டமிட்டு துரோகமிழைக்கும் அவர்களது தலைமைக்கு எதிராக புரட்சிகரமான நடவடிக்கைக் குழுக்களை முன்நிறுத்துவது அவசியமாகும். மெர்சி பிவேர்ட்டை தலைமையில் கொண்டு Gauche Révolutionnaire என்று அழைக்கப்படுவதானதின் எதிர்புரட்சிகர கொள்கைகளை தாட்சண்யமின்றி அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டும் தான் இந்த குழுக்களைக் கட்டுவது சாத்தியமாக முடியும். இந்த விடயத்தில் நம்மிடையே பிரமைகள் அல்லது சந்தேகங்களுக்கு நிச்சயமாக எந்த இடமும் இல்லை.