World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Constitutional Council approves burqa ban

பிரெஞ்சு அரசியலமைப்பு சபை பர்க்கா தடைக்கு ஒப்புதல் அளிக்கிறது

By Kumaran Ira
15 October 2010

Back to screen version

அக்டோபர் 7இல், பிரெஞ்சு அரசியலமைப்பு சபை, பொதுஇடத்தில் பர்க்கா அல்லது நிகாப் போன்ற முழு-முகத்தையும் மூடும் முகத்திரையை அணிவதற்கு தடைவிதிக்கும் ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த தடை அரசியலைப்பில் சேர்க்கப்பட்டுவிட்டதாக அறிவித்து அது ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அடுத்த வசந்தகாலத்தில் இருந்து இந்த பர்க்கா தடைச்சட்டம் நடைமுறைக்கு வரும். இச்சட்டத்தின்படி, பிரான்சில் ஒரு பர்க்காவோ அல்லது நிகாபோ அணிந்து செல்லும் ஒரு பெண் €150 அபராதத்தை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் அல்லது குடியுரிமை பிரிவுகளை நீக்க தள்ளப்படுவார். முழு-முகத்தையும் மறைக்கும் முகத்திரையை அணிய ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தும் குற்றத்திற்கு எவரேனும் ஆளானால் €30,000 அபராதம் மற்றும் ஓர் ஆண்டு சிறைதண்டனையை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும்.

செப்டம்பர் 14இல், செனட்டால் இந்த தடைக்கு வாக்களிக்கப்பட்ட பின்னர், செனட்டின் மற்றும் தேசிய நாடாளுமன்றத்தின் தலைவர்கள் அரசியலமைப்பு பேரவையிடம் சட்டவரைவைச் சமர்பித்தார்கள். இதன் மூலம், “அரசியலமைப்புடனான அதன் இணக்கம் எந்த நிச்சயமற்ற நிலைமையிலும் பாதிக்கப்படாது." முஸ்லீம்களை அழிப்பதை நோக்கமாக கொண்ட இந்த தடை, பரவலாகவும்—மிகச் சரியாகவும்—ஜனநாயக உரிமைகள் மீதான அரசியலமைப்புக்குப் புறம்பான ஒரு தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு அரசாங்கம் அதன் பர்க்கா-எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கிய போது, இது பெண்களின் உணர்வு மற்றும் மத சுதந்திரத்தின் மீதான உரிமைகளை மீறுகிறது" என்று அறிவித்து ஐரோப்பிய பேரவையும் (council of Europe) மற்றும் Amnesty Internationalலும் அந்த தடையை விமர்சித்தன.

அது வெளியான நிலையில், அரசியலமைப்பு பேரவை சோவினிச மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பு முறைமைகளுக்கான ஒரு சட்டப்பூர்வ அடையாள-முத்திரையாக செயல்பட்டிருக்கிறது. பேரவையின் அறிக்கையில் மேற்கோளிட்டுக் காட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் பிரகடனத்தின் [பிரெஞ்சு புரட்சியின் விளைபொருளாக இருக்கும் இது, 'அரசியலைப்பின் மதிப்பைக்” கொண்டிருப்பதாக கருதப்படுகிறது] பிரிவுகள், 'பர்க்கா தடையானது அரசியலமைப்பிற்குப் புறம்பானது என்பதையும், அதை வலுக்கட்டாயமாக திணிக்கும் அரசின் முயற்சிகள் உத்தியோகபூர்வ மாய-வேட்டை மற்றும் சட்டவிரோத தன்மைக்குள்ளான ஒரு தாழ்மையை உட்கொண்டிருக்கிறது என்பதையும்' தீர்மானமாக நிரூபிக்கின்றன.

பிரகடனத்தின் பிரிவு 4 குறிப்பிடுவதாவது: “எவரையும் பாதிக்காமல் செய்யப்படும் எந்த நடவடிக்கையும் சுதந்திரம் என்பதில் உள்ளடங்கும்; இதனால், சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் மற்றவர்கள் பெறும் அதே உரிமைகளை அனுபவிக்க உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தால் மட்டும் தான், மனிதனின் இயல்பான உரிமைகள் கட்டுபடுத்தப்படுகின்றன."

பிரிவு 5 குறிப்பிடுவதாவது: “சட்டத்தால் வெளிப்படையாக தடை செய்யப்படாத எதையும் தடுக்க முடியாது. மேலும் சட்டம் ஆணையிடவில்லை என்பதற்காக யாரையும் எந்த நடவடிக்கைகளுக்குள்ளும் பலவந்தப்படுத்த முடியாது.”

பிரிவு 10 குறிப்பிடுவதானது: “மத கருத்துக்கள் உட்பட, ஒருவருடைய நடவடிக்கை சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட பொது ஒழுங்கை தொந்தரவு செய்யாத வரையில் அவர்களுடைய நடவடிக்கைக்காக யாரையும் தொந்தரவு செய்ய முடியாது.”

இறுதியாக, அரசியலமைப்பு நீதிமன்றம் 1946இன் அரசியலமைப்பின் முகவுரையை மேற்கோள் காட்டியது. அது கூறுவதாவது, “இந்த சட்டம் ஆணுக்கு அளிக்கப்படும் எல்லா உரிமைகளையும் சமமாக எல்லா இடங்களிலும் பெண்ணுக்கும் அளிக்க உத்தரவாதமளிக்கிறது."

பர்க்கா அணிவதென்பது யாரையும் புண்படுத்துவதாகாது; பொது ஒழுங்கை சீர்குலைப்பதோ அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சம உரிமைகள் மீதான தாக்குதலோ அல்ல. ஆனால் ஒரு பெண்ணை பர்க்கா அணியக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது என்பது எந்த முந்தைய சட்டமும் இல்லாமல் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்குள் பலவந்தப்படுத்துவதாகும். அதாவது, தற்போதைய தடை இந்த அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடுகள் அனைத்தையும் மீறுகிறது.

இந்த தடை அரசியலமைப்பிற்கு புறம்பானது என்ற பரந்த உணர்விற்கு அளிக்கப்பட்ட ஓர் அர்த்தமற்ற சலுகையாக, 'பெண்கள் வழிபாட்டு இடங்களில் பர்க்கா அணியலாம்' என்று கவுன்சில் அறிவித்தது. “பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கும் வழிபாட்டு இடங்களில் மத சுதந்திரத்தின் நடைமுறைகளை இந்த பர்க்கா தடை தடுக்காது" என்று அது குறிப்பிட்டது. எவ்வாறிருப்பினும், வழிபாட்டு இடங்களுக்கு வெளியே மத சுதந்திரத்தைத் தடுக்க எவ்வாறு அரசியலமைப்பிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை விளக்கவில்லை.

தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் அதிருப்தியைத் திசைதிருப்ப, ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசியல் அரசியலமைப்பும் இனவாதம், முஸ்லீம்-எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கும் எதிரான உணர்வு ஆகியவற்றினை ஊக்குவித்து எந்தளவிற்கு இன்னும் அதிகமாக வலது கொள்கைக்கு மாறியிருக்கிறது என்பதையே பேரவையின் முடிவு அடிக்கோடிடுகிறது.

எரிச்சலூட்டும் வகையில், இந்த தடை பெண்களின் உரிமைகள் மீதான பாதுகாப்பைப் பிரதிநிதிப்படுத்துவதாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக மதசார்பின்மையை எடுத்துக்காட்டுவதாகவும் கூறி, அரசாங்க அதிகாரிகள் பேரவையின் முடிவைப் பாராட்டினார்கள். பிரதம மந்திரி François Fillon, “மனசாட்சியையும், மத சுதந்திரத்தையும் மதிக்கும் அதேவேளையில் குடியரசின் மதிப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் இந்த சட்டம் முக்கியமானதாகும்" என்றார்.

UMP தேசிய சட்டப்பேரவை குழுவின் தலைவர் Jean-François Copé (ஆளும் கன்சர்வேடிவ் கட்சியான Union pour un mouvement populaire) வலியுறுத்தியதாவது: “இந்த தடையைக் குறித்த அரசியலமைப்பு பேரவையின் மதிப்பீடு ஓர் உறுதியான பிரதிபலிப்பாகும். மேலும் தங்களின் கண்ணியத்தைக் காக்க போராடும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இதுவொரு வலுவான சமிக்ஞையாகும்," என்று தெரிவித்தார்.

முதலாளித்துவ "இடது" கொள்கையினர், குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (PCF), மற்றும் போலி-இடது கட்சியான புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்றவையும் அதன் ஆதரவாளர்களும் இந்த தடையை ஆதரித்திருப்பது, ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியின் ஜனநாயக-எதிர்ப்பு பிரச்சாரத்தில் அவர்களும் உடந்தையாய் இருப்பதையே அடிக்கோடிடுகிறது.

1930கள் மற்றும் 1940களில் யூதர்களின் சித்திரவதைகளில் ஒன்றை மட்டுமே நினைவுபடுத்தும் விதத்தில், பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசின் அதிகாரம்—இதன் கரங்கள் இன்னும் கூட குறிப்பாக இந்தோசீனா, வடக்கு ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் இரத்தத்தில் தோய்ந்து தான் இருக்கின்றன—தற்போது ஒரு சிறுபான்மை முஸ்லீம் பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது இந்த "இடது" பெண்கள் மற்றும் ஆண்கள் யாருக்கும் முக்கியமான ஒன்றாக தெரியவில்லை.

சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பர்க்கா தடை குறித்த பேரவையின் முடிவை வரவேற்றனர். அருகிலிருக்கும் வறுமை நிறைந்த புலம்பெயர்ந்தோர்களிடையே உருவாகும் வன்முறையையும், சிறிய குற்றங்களையும் ஒடுக்க வலுவான போலிஸ் முறைகளுக்கு அழைப்புவிடுத்த சோசலிஸ்ட் கட்சி நிர்வாகி François Rebsamen, பிரெஞ்சு நாளிதழான Le Mondeக்கு கூறியதாவது: “அனைத்து சோசலிஸ்ட் கட்சியினரும், இன்னும் பரந்தளவில் அனைத்து குடியரசு கட்சியினரும் கூட, நம்முடைய நாட்டிலும் ஏனைய இடங்களிலும் பர்க்கா பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பெண்களின் கண்ணியம் சார்ந்த ஒரு விஷயமாக இருக்கிறது."

சட்டத்திலிருக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான உள்ளடக்கம் மற்றும் பழிக்குப்பழி வாங்கும் உள்ளடக்கம் ஆகியவற்றை மூடிமறைக்க உதவும் வகையில், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி அதன் பங்கிற்கு, முக்கியமாக பெண்களின் உரிமை பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் இந்த தடைக்கு ஆதரவு காட்டியது. (பார்க்கவும்: “The French New Anti-Capitalist Party and the anti-burqa campaign”.)

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு அரசியல்ரீதியான எதிர்ப்பு இல்லாததால், ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதும் அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு இந்த பர்க்கா-தடை தளம் அமைக்கிறது.

அக்டோபர் 13இல், பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றம் ஒரு பிற்போக்குத்தனமான புலம்பெயர்ந்தோர் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் போலிஸ் அல்லது அரசு அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் வெளிநாட்டில்-பிறந்த புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து பிரெஞ்சு குடியுரிமை நீக்கப்படும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும் அது புலம்பெயர்ந்த ஆவணமற்ற தொழிலாளர்களின் வெளியேற்றத்திற்கும் உதவி செய்கிறது. (பார்க்கவும்: “French National Assembly debates anti-immigration law”)

கோடையின் போது, ரோமா முகாம்களை பிரித்தெடுக்க ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியதுடன், பிரெஞ்சு அரசாங்கம் ரோமாக்களை ருமானியாவிற்கும், பல்கேரியாவிற்கு வெளியேற்ற உந்தியது. ரோமாவிற்கு எதிராக சார்கோசியின் பிரிவினைவாத கொள்கையின் மீது முன்னர் கண்டனங்கள் இருந்த போதினும், ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் பிரான்சின் ரோமா கொள்கைக்கு எதிரான அதன் கண்டனத்திலிருந்து பின்வாங்கியது.

ரோமா மற்றும் நோமண்டுகளை சட்டத்திற்குப் புறம்பாக இலக்காக்கும், குடியுரிமை பெறாத இன சிறுபான்மையினர் (Non-Settled Ethnic Minorities - MENS) குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் தொகுத்திருக்கும் ஒரு தகவல்களஞ்சியம் குறித்து Le Mondeஇன் தகவல் வெளியான, அதே நாளில் அரசியலைப்பு பேரவையின் தீர்மானமும் வெளியானது. பிரெஞ்சு போலிஸ் படையால் (gendarmerie) நடத்தப்படும் ஓர் அமைப்பான Central Office for the Fight Against Itinerant Delinquencyஆல் (OCLDI) இந்த MENS அமைக்கப்பட்டிருந்தது.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு தகவல் களஞ்சியத்தைத் தொகுத்தமைப்பதிலும், இனம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் தனிநபர்களின் தகவலைத் திரட்டியமைத்ததிலும் பொறுப்பேற்றிருந்தவர்கள் மீது ஒரு விசாரணையை நடத்தக் கோரி ரோமா உரிமைகள் குழுக்களின் சார்பாக இயங்கும் வழக்கறிஞர்கள் பிரதிவாதிகளுக்கு அழைப்புவிடுத்தனர்.

ரோமா குழுக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு வழக்கறிஞரான Françoise Cotta குறிப்பிட்டதாவது: “நாம் 1940இல் இல்லை. பொதுமக்களிடமிருந்து ஓர் எதிர்வினையை எதிர்பார்க்கிறோம். அதன்மூலமாக தான் மிக விரைவாக இதை தடுக்க முடியும். தற்போதைய நிலைமையில் சமூக அமைதிக்கு அரசாங்கமே பெரும் அபாயமாக இருக்கிறது."

Le Monde குறிப்பிட்டதாவது: “நோமண்டுகளின் அமைப்புகள் அந்த பிரபலமான தகவல்களஞ்சியத்தை இணையத்தில்—OCLDI’இன் நோக்கத்தை விவரிக்கும் ஓர் ஆவணத்தில் அதைக் கண்டறிந்தன. அந்த ஆவணம் Lilleஇல் 2004 நவம்பரில் நடந்த ஒரு கூட்டத்தின் போது OCLDI’இன் முன்னணி அதிகாரியால் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் சில முட்டாள்தனமான குறிப்புகளைச் சேர்த்திருந்தார். 'நாடோடி குடும்பங்களின் வம்சாவளியை' ஒரு பக்கம் விவரித்திருந்தது. ஒரு தகவல்களஞ்சியம் இல்லாமல் அதை உருவாக்குவது மிகவும் சிரமமாகும்.” அது மேலும் குறிப்பிடுகையில், “பிரான்சின் வரைபடத்தில் சொடுக்குவதன் மூலமாக, ஒரு தளபதியால் பிராந்தியம் பிராந்தியமாக, நோமண்டுகளின் குடும்ப பெயர்களைப் பெற முடியும்" என்று குறிப்பிட்டது.

பிரெஞ்சு போலிஸ் படையால் (gendarmerie), 2000த்திலிருந்து 2004 வரையில், நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு ரோமாக்களின் தேசத்தின்—ரோமானியன், ஹங்கேரியன், மால்தவியன், அல்பேனியன் எனக் காட்டும்—ஒரு தகவல்களஞ்சியத்தையும் போலிஸ் கொண்டிருந்தது.