World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Tens of thousands demonstrate in Germany against railway project

இரயல்வே திட்டத்திற்கு எதிராக ஜேர்மனியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்

By our correspondents
14 October 2010

Back to screen version

ஒரு புதிய நிலத்தடி இரயில் நிலையம் கட்டப்படுவதற்கான நகரவையின் திட்டங்களை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களிலயே மிகப் பெரியது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 9) நடந்தபோது ஸ்ருட்கார்ட் மையத்தில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமினர். அமைப்பாளர்கள் 150,000 பேர் கூடியதாக மதிப்பிட்டபோது, பொலிசார் 63,000 மக்கள் பங்கு பெற்றனர் என்று கூறினர்.

“கட்டிடம் கட்டுவதை இப்பொழுது நிறுத்துக, பின்னர்தான் பேச்சுக்கள்” என்ற கோஷத்தை தாங்கி நகரத்தின் மையப் பகுதியான Schlossgarten இல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) முன்னாள் பொதுச் செயலரான ஹெனர் கைஸ்லர் எழுப்பிய கோரிக்கையுடன் இணைந்துள்ளது. அவர் இப்பூசலில் ஒரு நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். பசுமைக் கட்சியின் ஆதரவை நியமனத்திற்குப் பெற்றுள்ள கைஸ்லர் பேச்சுக்களுக்கு முன்னிபந்தனையாக கட்டமைப்பிற்கு நிறுத்தம் கோரியுள்ளார். ஆனால் இக்கோரிக்கை பற்றிய எந்த உடன்பாடும் உடனடியாக நகரவை நிர்வாகத் தலைவரான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் ஸ்ரெபான் மாப்பஸாலும் ஜேர்மனிய தொடரூர்ந்து போக்குவரத்தின் தலைவருமான ரூடிகர் குரூபவினாலும் மறுக்கப்பட்டுவிட்டது.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் சமூக அடுக்குகளின் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் அனைத்து வயதுப் பிரிவுகளில் இருந்தும் வந்திருந்தனர். ஏராளமான எதிர்ப்பாளர்கள் மரக்கிளைகளில் ஏறி அமர்ந்து அங்கேயே இரவு முழுவதும் இருந்தனர்; மரங்கள் வெட்டப்படுவதை காப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல கோஷ அட்டைகள் தற்போதைய தரைமட்டத்தில் உள்ள தொடரூர்ந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள பூங்கா ஆகியவை எப்பொழுதும் தொடர்ந்து தக்க வைக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளன.

நகரவை நிர்வாகம் அதிக செலவாகும் நிலத்தடி தொடரூர்ந்து நிலையத்தைக் கட்டுவதற்கு பில்லியன் கணக்கில் வரிசெலுத்துபவர்கள் பணத்தைக் கொடுக்கத்தயார், அதே நேரத்தில் சமூக வாழ்வின் அனைத்துக்கூறுபாடுகளிலும் கடுமையான வரவு-செலவுத்திட்ட செலவுக் குறைப்புக்களை செயல்படுத்துவது பற்றி எதிர்ப்பாளர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரிக்கின்றனர். இரண்டாவதாக அவர்கள் இரக்கமற்ற முறையில் நிர்வாகம் இத்திட்டத்தை தொடரப்படும் விதத்தையும் எதிர்க்கின்றனர்-எதிர்ப்புக்களை முறியடிப்பதற்கு மிருகத்தனமான பொலிஸ் தலையீடுகள் பயன்படுத்தப்படுதல் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

சனிக்கிழமைக் கூட்டத்தில் பேசிய எந்தப் பேச்சாளரும் இப்பிரச்சினைகளைப் பற்றிக் கூறவில்லை. மாறாக தங்கள் கருத்துக்கள இரண்டாம் தரப் பிரச்சினைகளான தடங்கள் எங்கு போடப்பட வேண்டும், தொடரூர்ந்து கால அட்டவணைள், திட்டத்தின் செலவுகள் மற்றும் மாநில கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய தலைவர் மாப்பஸுடன் நடத்தும் பேச்சுக்களில் சமீபத்திய நிலை ஆகியவை பற்றிப் பேசினர்.

“Stuttgart 21” திட்டத்திற்கு எதிரான Action Alliance சார்பில் கடைசிக் கருத்து பற்றிப் பேசிய கங்கோவ் ஸ்ரொக்கர் நிர்வாகம் “திட்டத்தைத் திரும்பப் பெறுவது” பற்றி பரிசீலிக்கத் தயார் என்று அறிவித்தால் தன் குழு பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று அறிவித்தார். இத்தகைய நிலைப்பாடு கூட்டிற்குள் இருக்கும் அரசியல் அமைப்புக்களான பசுமைவாதிகள் மற்றும் தங்களையே இடது எனக் கூறிக்கொள்ளும் குழுக்களுடைய முக்கிய அக்கறை வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல் என்பது தெளிவாகிறது.

பத்து நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை நிறைந்த பொலிஸ் நடவடிக்கை பற்றி எந்தப் பேச்சாளரும் ஏதும் கூறவில்லை. செப்டம்பர் 30 அன்று பொலிசார் பாதுகாப்பற்ற எதிர்ப்பாளர்கள் மீது நீர் பீச்சி அடித்தல், மிளகு தூவுதல் ஆகியவற்றைச் செய்தனர். பங்கு பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்களும், முதிர்ந்த வயதினரும் ஆவர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர், இருவர் நீர்க் குண்டுத் தாக்குதலால் கடுமையான கண் காயங்களை அடைந்தனர்.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் பலர் இந்த மிருகத்தன பொலிஸ் தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வந்தவர்கள். சில கோஷ அட்டைகளில், “இப்பொழுது டாங்குகளும், இராணுவத்தினருமா திரு.மாப்பஸ் அவர்களே?”, “கூட்டம்கூடும் உரிமையைக் பாதுகாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தன. ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்ட முக்கிய இரயில்வே நிலையத்தின் வடக்குப் பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கோஷ அட்டையில் “சுவர்க்க அமைதி கொடுக்கும் சதுக்கம்” என எழுதப்பட்டிருந்தது- இது ஜூன் 1989ல் சீனாவில் நடைபெற்ற மாணவர்கள் படுகொலையை நினைவுபடுத்தியது.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் பல பல்கலைக்கழக, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று செப்டம்பர் அன்று நடந்த பொலிஸ் தலயீட்டினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினர். நீர் பாய்ச்சுவதற்கு முன்பு பொலிசார் பலமுறையும் பள்ளி மாணவர்களைத் தூண்டிவிடும் வகையில் நடந்து கொண்டனர் என்று அவர்கள் கூறினர்.

ஸ்ருட்கார்ட்டில் மையப்பகுதியில் உத்தியோகபூர்வ ஆர்ப்பாட்டத்தின் போது பல மாணவர்கள் எஸ்எம்எஸ் தகவல் மூலம் 100 வயது மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்ற தகவலைப் பெற்றனர். இளைஞர்கள் Schlossgartenக்கு மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள விரைந்தனர் என ஸ்டீபன் கூறினார்.

நாங்கள் பூங்காவில் இருந்தபோது பொலிசார் சாதாரண உடையணிந்து எங்களை அணுகினர். எங்களை விரட்ட முற்பட்டு, அவமரியாதையாகப் பேசினர். ஒரு வன்முறை விடையிறுப்பை நாங்கள் கொடுப்பதற்கு அவர்கள் தூண்டினர் என்பது தெளிவு” என்று ஸ்டீபன் கூறினார். அதைத்தொடர்ந்து பொலிஸ் நீர் பாய்ச்சுதல், மிளகு கலந்த நீர் தூவுதல் இவற்றை மேற்கோண்டனர்.

“12 முதல் 14 வயது வரையில் உள்ள பள்ளி மாணவர்கள் உத்தியோகபூர்வ அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் எதற்காக நீர்பாய்ச்சும் கருவிகள் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதே வினாவிற்கு உரியது” என்று ஸ்டீபன் தொடர்ந்தார். அரசாங்க அதிகாரிகள் ஒரு வன்முறை விடையிறுப்பிற்குத் தயாரித்திருந்தனர் என்பது தெளிவு. கட்டுப்பாட்டு அதிகாரிகளின் மூலோபாயம் மக்களைத் தூண்டிவிட்டு அவர்கள் தங்களை உடலளவில் பாதுகாத்துக் கொள்ளக் கட்டாயப்படுத்துவது என்று இருந்தது. ஆரம்ப பொலிஸ் தகவல்கள் நாங்கள் கற்களை எறிந்தோம் என்று அறிவித்தன. இது ஒரு முழுப் பொய் ஆகும்; பொலிசாரே பின்னர் தங்கள் முந்தைய அறிக்கை தவறு எனத் திருத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

செப்டம்பர் 30 அன்று Schlossgarten இல் இருந்து லூயி (15 வயது) பொலிசார் மிளகு தூவியதில் பாதிக்கப்பட்டார். அரசியல்வாதிகள் அப்பட்டமாகப் பொய்கூறி நிகழ்வுகளைத் திரிக்கின்றனர்” என்றார் அவர். “என் கருத்தில் அவர்கள் வேண்டுமென்றே எதிர்ப்பைத் தீவிரப்படுத்த முயன்றனர். எனவேதான் அவர்கள் இத்தகைய மிருகத்தன தலையீட்டை நடத்தினர்.”

செப்டம்பர் 30 அணிவகுப்பில் லீனாவும் கலந்து கொண்டிருந்தார். “ஆரம்பத்தில் இருந்தே எங்களை மிரட்டுவதற்காக வன்முறையைப் பயன்படுத்த பொலிசார் தயாராக இருந்தனர் என்றுதான் நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். அவர்களுக்கு முன்பு நாங்கள் அமர்ந்தோம், அவர்கள் நீர் பாய்ச்சுதலை விடையிறுப்பாக மேற்கொண்டனர். ஏழு அல்லது எட்டு வயதுக் குழந்தையை பொலிசார் முரட்டுத்தனமாகத் தள்ளியதை நான் பார்த்தேன். இவர்கள் எத்தைகைய சிந்தனையை கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி நான் அதிர்ச்சியும், வியப்பையும் கொண்டேன்.” என்று அவர் கூறினார்.

அடுத்து என் நிகழ்ந்தது என்று லீனா கூறினார்: “திடீரென நாங்கள் பொலிசால் சூழப்பட்டோம்; தப்பிக்க முடியவில்லை. தங்கள் தலைக்கவச மறைப்பை இறக்கிவிட்டுக் கொண்டனர்: அவர்களில் ஒருவர் வெகு அருகே நின்று எங்கள்மீது கண்ணீர்ப் புகை குண்டைப் போட்டார். அது மிக மோசமானது. என்னுடைய தோழி தடுமாறித் தரையில் வீழ்ந்தாள். அவளுடைய கைகளை ஒரு பொலிஸார் முறுக்கிப் பின் பக்கமாகக் கட்டி, அவளை இழுத்துச் சென்றார். இதன் விளைவாக அவள் கைகள் முறிந்து கணிசமான வேதனைக்கு உள்ளானாள்.”

“நான் இனி ஒருபொழுதும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய அல்லது சமூக ஜனநாயக கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன். சமூக ஜனநாயகக் கட்சியிடத்திலும் நான் நம்பிக்கை இழந்து விட்டேன். ஏனெனில் அது சமூகப் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை.” என்று லீனா முடித்தார். பசுமைவாதிகளைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, லீனா அவர் கடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்ததாக அறிவித்தார். அவர் மேலும் கூறினார்: “உண்மையில் எவரும் இக்கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள், பசுமைவாதிகளைப் பொறுத்தவரை கூட, எப்படி அரசாங்கத்திற்கு வந்த உடன் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த உறுதிமொழிகளைக் கைவிடுகின்றனர் என்பதைக் காண்கிறோம். இப்பொழுது தேவையானது முதலாளித்துவம், சுரண்டுதல் ஆகியவற்றை எதிர்க்கும் ஒரு புதிய கட்சியாகும்” என்று லீனா முடித்தார்.

கடந்த சனி ஆர்ப்பாட்டத்தில் பல கோஷ அட்டைகள் தற்போதைய சமூக நெருக்கடிக்கும் ஸ்ருட்கார்ட் 21 திட்டத்திற்காக செலவிடத் திட்டமிடப்பட்டுள்ள பில்லியன் யூரோக்களுக்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாட்டின்மீது கவனத்தைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு மத்திய மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் “பயனற்ற 21 திட்டத்திற்கு பில்லியன்களை வீண்டிக்கிறீர்கள்; எங்களுக்கோ அவசரமாக அதிக ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.” என்ற கோஷ அட்டையைச் சுமந்திருந்தார்.

Bad Cannstatt ஐச் சேர்ந்த எலினாவும் ஜெசிகாவும் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர்: “கல்விக்கும் எங்கள் வருங்கால முதலீட்டிறகாகவும் பயன்படுத்தக்கூடிய பணம் வீண்டிக்கப்படுவது குறித்து நாங்கள் கோபம் கொண்டுள்ளோம். ஆசிரியர்கள் எங்களுக்குக் குறைவாக உள்ளனர், பாடங்கள் தொடர்ச்சியாக இரத்து செய்யப்படுகின்றன.” இரு இளம் வயதினரும் முந்தைய ஆர்ப்பாட்டத்தின்போது நீர் பாய்ச்சியவகையில் பொலிஸ் தலையிட்டது பற்றிக் கோபமாக உள்ளனர். “அவர்கள் ஒரு காரணத்தைத் தோற்றுவித்து வலிமையைக் கையாண்டு திட்டத்தைத் தொடர விரும்புகின்றனர். இதற்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பே இல்லை.”

வயதானவர்களுக்கு மருத்துவக் பாதுகாப்பு மனைப் பணிக்காக பயிற்சியாளராக இருக்கும் ஜீசஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்; “வயோதிபர் பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை குறிப்பாக, மிக அதிக ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நான் அதைப் பார்க்கிறேன். நான் வேலை செய்யும் இடத்தில், ஒரு நோயாளிக்கு 15 நிமிடங்கள்தான் அவர்கள் எழுந்து, சுத்தம் செய்து கொண்டு, உணவு உட்கொள்ளுவதற்கு செலவழிக்க முடிகிறது. இது மிக மிக்க குறைவானது! கூடுதல் நேரம், பணியாளர்கள் தேவை; ஆனால் அதற்குப் பணம் இல்லை என்று நாங்கள் கூறப்படுகிறோம். இதன் விளைவாக வயோதிபர்களும், இயலாதவர்களும் அதிகளவில் கூண்டுகளில் விலங்குகளைப் போல் வைக்கப்பட்டுள்ளனர்.”

Schlossgarten இல் சோசலிச சமத்துவக் கட்சி அதன் பிரசுரங்கள் அடங்கிய மேசையை வைத்திருந்தது. அது “ஸ்ருட்கார்ட் 21-உண்மையான பிரச்சினைகள்” என்ற துண்டுப்பிரசுரத்தையும் வினியோகித்தது. இது அதிக ஆர்வம், விவாதம் ஆகியவற்றை ஈர்த்தது. பிரச்சனைக்குரிய திட்டத்தின் பின்னணியில் உள்ள பரந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்த ஒரே துண்டுப்பிரசுரம் இதுதான்.

ஸ்ருட்கர்ட்டில் நிர்வாகத்தின் திட்டம் “பொருளாதார சக்தியின் நெம்புகோல்களை கட்டுப்படுத்தும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் முன்னோக்கு ஒன்றானால்தான் போராட முடியும்” என்று அது கூறியது. “வங்கிகளும் பெருநிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும், தனியார் இலாபம், உரிமையாளர்கள், பங்குதாரர்கள் நலனுக்காக இல்லாமல் முழுச் சமுதாய நலன்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஸ்ருட்கார்ட் தொடரூர்ந்து நிலையத் திட்டம் போன்ற முக்கிய அடிப்படைக் கட்டுமானத்திட்டங்கள் முறையானவகையில் உருவாக்கப்பட முடியும், பாதிக்கப்படும் அனைவரும் பங்கு பெறும்வகையில் ஜனநாயக முறை இருக்கும்.” என்று அது கூறியது.

இதன்பின் துண்டுப்பிரசுரம் “அத்தகைய சோசலிச முன்னோக்கு அடையப்படுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் தேவைப்படுகிறது. இதற்கு முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பசுமை வாதிகள், சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் அரசியல் முறிவு தேவை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.