World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Interview with striking Detroit Symphony violist Hart Hollman

“What is happening to the DSO is a poster child for what is happening to the arts in America”

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டெட்ரோயிட் இன்னிசைக்குழு வயோலாக் கலைஞர் ஹார்ட் ஹோல்மன் உடன் ஒரு பேட்டி

“DSO விற்கு நடப்பது அமெரிக்காவில் கலைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது”

By Shannon Jones
19 October 2010

Back to screen version

டெட்ரோயிட்டின் இன்னிசைக்குழு கலைஞர்களின் வேலைநிறுத்தம் திங்களன்று மூன்றாவது வாரத்தில் நுழைகிறது. அக்டோபர் 4ம் திகதி 85 பாடகர்கள் நிர்வாகத்தின் முயற்சியான இவர்களுடைய அடிப்படை ஊதியத்தை 33 சதவிகிதம் குறைத்தல், ஆரம்பக் கலைஞர்களின் ஊதியங்களை 42 சதவிகிதம் என்று நிர்ணயித்தல் மற்றும் சுகாதார நலன்களில் கூடுதல் வெட்டுக்கள் (உண்மையில் இவை ஊதியத்தை 33 சதவிகிதத்திற்கும் குறைவாக வெட்டிவிடும்) மற்றும் பிற இழிவான கோரிக்கைகளுக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்.

அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது, எப்படியாயினும் இப்போது இருக்கும் நிலைக்கு நன்றி உடையவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நிர்வாகமானது தேசிய மற்றும் உள்ளூர்ச் செய்தி ஊடகத்தின் உதவியுடன் பாடகர்களுக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போயின. அவர்களது பயிற்சி, பணி அட்டவணை மற்றும் செலவுகள் ஆகிவற்றைக் கருத்திற் கொண்டால், அதுவும் வாகன நிறுவன முதலைகள் மற்றும் டெட்ரோயிட் செய்தி ஊடகத்துடன் அலைபவர்களுடன் ஒப்பிடும்போது பாடகர்கள் மட்டான வருவாயைத்தான் ஈட்டுகின்றனர்.

இந்த நிருபர் WSWS கலைப்பிரிவு ஆசிரியர் டேவிட் வோல்ஷுடன், நீண்ட கால அனுபமுள்ள வயலோ வித்துவான் ஹார்ட் ஹோல்மனுடன் சனிக்கிழமை அவருடைய கலைக்கூடத்தில் பேசினார். இந்த அழகிய அறை ஹோல்மனின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இதில் பேரார்வம் உள்ளது. இதைத்தவிர சுவரின் ஒரு பகுதி முழுவதும் அவர் வாசித்துள்ள ஏற்பாட்டாளர்களதும் மற்றும் கலைஞர்களுடையதும் புகைப்படங்கள் உள்ளன. எங்களுக்காக சிறிது நேரம் அவர் வாசித்து காட்டியது எங்கள் அதிருஷ்டமே ஆகும்.

அவர் பென்சில்வானியாவிலுள்ள ஆலன்டௌனில் வளர்ந்ததாக ஹார்ட் விளக்கினார் (அந்த நேரத்தில் அது பென்சில்வானியா கிழக்குப் பகுதியில் ஒரு தொழில்துறை நகரமாக இருந்தது). தன்னுடைய இசைப் பின்னணி பற்றி அவர் பேசினார். “DSO வில் நுழைவது அதிருஷ்டம் அல்ல” என்றார் அவர். “நான் மூன்று வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து வருகிறேன். என்னுடைய பெற்றோர்கள் இருவரும் பியானோ கலைஞர்கள். அவர்கள் நாடெங்கிலும் 1930 கள், 1940களில் இசை விருந்தளித்தனர். அவர்கள் பியானோ கலைஞரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவருமான டாக்டர் எட்வின் ஹ்யூஜிஸின் (1884-1965) சீடர்கள். அவர் பியோனா கற்பிப்பதில் விற்பன்னர் என் தந்தையார் செயின் லூயியில் இருந்து வந்தவர், 11 வயதிலேயேயே அவர் Schumann பியானோ இசை அரங்கில் இசைத்தவர்.

“நான் மூன்று வயதிலேயே பியானோ கற்கத் தொடங்கிவிட்டேன்… பெடலைக்கூட அப்பொழுது என்னால் தொடமுடியாது. ஏழு வயதில் நான் வயலின் வாசிக்கத் தொடங்கினேன். ஆலென்டௌன் பகுதியிலிருந்த சிறந்த ஆசிரியரை என் பெற்றோர்கள் எனக்கு ஏற்பாடு செய்தனர். இரண்டு ஆண்டுகள் பயின்றபின், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் பிலடெல்பியா இசைக்குழுவின் துணை இசை ஆசிரியர் டேவிட் மாடிசனுடன் படிக்க வாய்ப்பு கிடைத்தது. 14 வயதில் என் பெற்றோர்கள் என்னுடைய கைகள் வயலின் வாசிப்பதற்கு மிகப் பெரியவையாக இருந்தன என்று உணர்ந்ததால் நான் வயோலாவிற்கு மாறினேன். நாட்டில் மிகச் சிறந்த வயலோ ஆசிரியரை என் பெற்றோர்கள் எனக்கு ஏற்பாடு செய்தனர். சிறந்த ஆசிரியர்களிடம் பயிலும் மதிப்பை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

“என்னுடைய மாணவர் ஒருவர் இன்டியான பல்கலைக்கழகத்தில் தேர்விற்காக பெப்ருவரி மாதம் செல்ல உள்ளார். வயலோ வாசிப்பதை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டு வரமுடியாது என்று அறிந்துள்ள ஏனைய மாணவர்களும் எனக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்வு முழுவதும் நிறைவு காணும் வகையில் நான் ஊக்கம் கொடுக்கிறேன். கலை ஒருவரை மாற்றும், ஒருவருடைய வாழ்வை மாற்றும். வேறு எந்த மனிதச் செயலும் செய்ய முடியாததை அது செய்யும்.”

டெட்ரோயிட் இசைக்குழுவில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தத்திலுள்ள பிரச்சினைகள் பற்றி ஹார்ட் பேசினார். “DSO வில் நடப்பது கலை உலகில் நடந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டும் சுவரொட்டி போன்றதாகும். இது எல்லா பெரிய இசைக் குழுக்களுக்கும் பொருந்தும். இது பீதியடையச் செய்கிறது. இது கேள்விகளை எழுப்புகிறது—‘எதற்காக இன்னிசையை ஆதரிக்க வேண்டும்?’—இது ஒன்றும் உயரடுக்கிற்காக மட்டும் அல்ல.

“நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணம் இந்த உலகத்தரம் வாய்ந்த இசைக்குழுவைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்காகத்தான்.

“இசைக்குழு நிர்வாகம் செய்ய இருப்பது நடந்துவிட்டால், நாங்கள் ஒரு B வகுப்பு இசைக்குழுவினராகக் கூட இருக்க மாட்டோம். இப்பொழுது எங்களிடம் க்ளீவ்லாந்து இன்னும் பிற முக்கிய இசைக்குழுவினரிடமுள்ள நல்ல தரம் உள்ளது. எங்கள் கலைஞர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்துள்ளனர்—இது இசைக்குழுவின் விதி போன்றது. அரங்கிற்குப்பின் நாங்கள் ரஷிய, சீன மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கேட்கிறோம். இது ஒரு உலகளாவிய இசைக்குழு. இங்கு பல்கேரியர்களும் ஏனைய கிழக்கு ஐரோப்பியர்களும் உள்ளனர். இங்குதான் கலைஞர்கள் முடிவில் வர விரும்புகின்றனர். இசைக்குழு மட்டுமில்லாமல் எங்கள் அரங்கமும் உலகின் உயர் அரங்குகளில் ஒன்றாகும்.

“அவர்கள் எத்தொடர்பும் இல்லாமல்தான் எங்கள் ஊதியத்தைக் கொடுக்கிறார்கள். இந்தக் கலைக் குழுவைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உயர்தரமுடைய இசைக்கலைஞர்கள், இந்தப் பெரும் இசையைத் தோற்றுவிப்பவர்கள் தேவை. நாங்கள் ஒன்றும் இசையை சிறந்த முறையில் இசைப்பதற்கு இங்கு இல்லை. இசையை மாபெரும் முறையில் அளிப்பதற்குத்தான் இங்கு உள்ளோம்.

“இசைக்குழு அமைப்பாளர்கள் எங்கள் மருத்துவ நலன்களை வெட்டத் திட்டமிட்டுள்ளனர். நிர்வாகம் அதைக் குறிப்பிடுவதில்லை. மொத்த வெட்டு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் என்று ஆகிறது. நாங்கள் எப்படி அவ்வளவு விலை கொடுக்க முடியும்? எங்கள் அனைவருக்கும் வீடுகள் உள்ளன, கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் உள்ளனர். இசைக் கருவியின் விலைகள் நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன. இந்த மட்டத்திலுள்ள இசைக்கருவிகள் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் விலையாகும், கிட்டத்தட்ட $1 மில்லியன் கூட. உயர்மட்டக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு உயர்மட்டக் கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

“என்னுடைய ஓய்வூதியத்திற்காக வைத்துள்ள சேமிப்புக்களை இப்பொழுது நான் செலவழிக்க வேண்டும். இது கடினமான செயல் ஆகும். இசைக் கலைஞர்களுக்கு உகந்த சூழல் இது அல்ல. சமீபத்தில் நான் ஒரு இசை நிகழ்ச்சி வழங்க வேண்டி இருந்தது. அது ஒரு புதிய பாடல், பணப் பிரச்சினைகள் பற்றி நான் பெரிதும் கவலைப்பட்டேன்.

“38 ஆண்டுகளில் நான் பார்த்த மிக மோசமான ஒப்பந்தம் அது. இரு பெரிய வெளிநடப்புக்களையும் நான் கண்டுள்ளேன்—10 வாரங்கள், 11 வாரங்கள் என. ஆனால் இதைப் போல் பார்த்தது இல்லை. இங்கு நிர்வாகம் வழங்கும் நிதி ஏதும் இல்லை. மற்றய இசைக்குழுவிலுள்ள ஒவ்வொரு மேலாளரும் தங்கள் அடுத்த ஒப்பந்தத்திற்கு எங்களை உதாரணமாகக் காட்ட உள்ளனர் என்று நாங்கள் அறிவோம்.

DSO கலைஞர்களுக்கான ஆதரவு பற்றியும் ஹார்ட் கூறினார். “அடுத்த வாரம் க்ளீவ்லாந்து இசைக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் இசைக்க வரவுள்ளனர் என்பது மகத்தான, மிக முக்கியமான நிகழ்வு ஆகும். அவர்கள் ஒன்றும் பேச்சளவு ஆதரவுடன் நின்றுவிடவில்லை. டெட்ரோயிட்டின் ஒப்ரா கலைஞர்களும் எங்களுக்குப் பேராதரவு கொடுத்துள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற வயலின் வித்துவான் சாரா சாங் வேலைநிறுத்த காலத்தில் DSO உடன் கொண்டிருந்த நிகழ்வை இரத்து செய்ய எடுத்த சமீபத்திய முடிவு பற்றியும் ஹார்ட் குறிப்பிட்டார். “அவர் அச்சுறுத்தும் மின்னஞ்சல்களைப் பெற்றார் என்று இவர்கள் கூறுகின்றனர், ஆனால் நாங்கள் ‘அந்த மின்னஞ்சல்களுக்கு சான்றுகளைக் கொடுங்கள்” என்கிறோம்’ ஏதும் இல்லை. இதன் பொருள் நிர்வாகம் இதைப் போலியாகத் தயாரிக்கிறது என்பதாகும். அவர்கள் எங்களை மோசமான முறையில் காட்ட முற்பட்டுள்ளனர். இது நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய அவமதிப்பு ஆகும்.”

WSWS: கடந்த 30 ஆண்டுகளில் நீங்கள் பெரும், முறையான கலாச்சாரப் பின்னடைவைக் கண்டுள்ளீர்கள். பின்னோக்கிப் பார்த்தால் லியோனர்ட் பேர்ன்ஸ்டைனின் இசை நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் கூடினர். அவை தேசியப் கலாச்சார நிகழ்வுகளாக இருந்தன.

ஹோல்மன் விடையிறுத்தார்: “நாங்கள் பீத்தோவன் இன்னிசையையும் அளித்துள்ளோம், தேசிய அளவில் ஒலிபரப்பியும் உள்ளோம். DVD க்கள் கொடுத்துள்ளோம். எனக்கு [ஆன்டால்] டோரடியுடன் மிக மதிப்பு உண்டு [அவர் DSO வின் ஏற்பாட்டாளராக 1977-1981ல் இருந்தார்]. அவருக்கு தன் தேவை என்ன என்பது தெரியும், ஒத்திகையின் போது அதை விளக்குவார். கலைஞர்களை ஒரு கலைப் படைப்பு கொடுக்குமாறு அவர் செய்தார். போர்ட் கலையரங்கின் வரவேற்பு கூடத்திலும் அதைச் செய்தார். எங்கள் படைப்புக்கள் சிலவற்றைப் பெரிதாக உயர்த்திக் காட்டினார்.

“டோரடி சிறிது கொடுங்கோலராகவும் இருந்தார், பழைய பயிலக நெறிப்படி. பிலடெல்பியாவில் நகைச்சுவை என்ன என்றால், பிலடெல்பியா இசைக்குழுவின் ஏற்பாட்டாளர் யூஜின் ஆர்மண்டி திரும்பி வந்தபின், மற்ற அனைவரும் நலமாயினர். ஆர்மண்டி மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டால் நேரடியாகப் போய் பார்ப்பார். “எப்படி இருக்கிறீர்கள்” என்று அவர் கேட்பார்….ஆனால் அவருடைய மனத்தில் வேறு எண்ணம் இருக்கும்.

“ஆனால் மீண்டும் உலகத் தரத்திற்கு வருவது பற்றிய கருத்தைப் பார்ப்போம். அதுதான் திறமை, அறிவின் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். அதனால் பெரும் பாதிப்பு உண்டு. என்னைப் பொறுத்தவரை அது பிலடெல்பியா இசைக்குழுதான்.

“ஒரு உலக இன்னிசைக்குழுவின் முக்கியத்துவம் இதுதான். இங்கு டெட்ரோயிட்டில் நாம் ஒரு உலகத் தர கலை அருங்காட்சியகத்தை, டெட்ரோயிட் கலைக்கூடத்தைக் கொண்டுள்ளோம். மிச்சிகன் ஒப்ரா தியேட்டர் ஒரு இரத்தினம் போன்றது. இதைத்தவிர நம் DSO வும் உள்ளது. நம்மிடம் உலகத்தர இசைப் பதிவுகளும் உலகத்தர இசைக்குழுவும் உள்ளன. இது போன்ற ஒரு அமைப்பு சரிந்து விழுந்துவிடக்கூடாது. வேறு இசைக்குழுவிடம் கேட்பது போல் எங்கள் இசை இருக்காது, மாபெரும் வித்தியாசம் இருக்கும். சரியான நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்கின்றனர்.

“DSO இசைக் கலைஞர்கள் இப்பகுதியில் இருக்கும் மற்ற இசைக்குழுக்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுகின்றனர். நான் 32 ஆண்டுகள் முக்கிய வயோலாவை Bloomfield-Birmingham இன்னிசைக் குழுவிற்கு வாசித்துள்ளேன். இதுதான் இப்பொழுது இடரில் உள்ளது. பல உலகத்தரம் வாய்ந்த இசைக் கலைஞர்கள் இப்பகுதியில் இருந்து வந்துள்ளனர்—[வயலின் வாசிப்போர், ஏற்பாட்டாளர்கள் என] ஜோ சில்வர்ஸ்டீன் இன்னும் பலரும்—இப்பகுதியில்தான் முழுக் குழுவினரும் வளர்ந்துள்ளனர்.”

WSWS ஆனது, DSO மீதான தாக்குதல் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதிதான் என்று குறிப்பிடுகிறது—அனைவரும் “வயிற்றை இறுகக் கட்டுமாறு கேட்கப்படுகின்றனர். வங்கியாளர்களைத் தவிர. இதையும் தவிர இலாப முறையுடன் கலைகளுக்குக் கௌரவமான இடம் என்பது ஒருக்காலும் பொருந்தாது.

“நாங்கள் ஒன்றும் பெரிய இலாபம் காணவில்லை. வணிகத்தில் உள்ளவர்கள் நஷ்டத்திலிருந்து பழக்கம் இல்லை. அனைத்துமே கறுப்பில் காணும் வகையில் ஊக்கம் கொடுக்கப்படுகிறது. கலை இயக்குனராக நீங்கள் இருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு அதில் பெரும் நேசம் இருக்க வேண்டும். நீங்கள் பணிபுரியும் மக்களை நீங்கள் அறிந்துள்ளதால், அது பெரிய ஊக்கம் கொடுக்கிறது, மக்கள் வாழ்வை மாற்றுகிறது. கலைதான் உங்களை மனிதனாகச் செய்கிறது, நம்மை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. ஒரு அறுவை மருத்துவர் போல் உயர் பயிற்சியை நாங்கள் பெற்றவர்கள். நாங்கள் உயிர்களைக் காப்பாற்றவில்லை, ஆன்மாக்களைக் காப்பாற்றுகிறோம்.

“உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள மாணவர்கள் தான் உங்கள் சிறந்த மாணவர்கள் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. நாம் செய்வது அனைத்திலும் இது இயைந்து நிற்கும். மாணவர்களிடேயே செல்வாக்கைப் பெற முயல்கிறோம். வகுப்பறைகளுக்குச் செல்கிறோம். மாணவர்கள்தான் அமெரிக்காவின் வருங்கால இன்னிசை இயக்கத்திற்கு முக்கியம். துரதிருஷ்டவசமாக, எடுத்தவுடன் அவர்கள் கலைகளில்தான் வெட்டுகளைக் கொண்டுவருகின்றனர். கறுப்பைக் காட்டவில்லை என்பதால் சிகப்பைக் காட்டுகின்றனர். ஐரோப்பாவில் அரசாங்கங்கள் கலைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இத்தாலிக்குச் செல்லுங்கள்—தெருவிலுள்ள ஆடவர் கூட ஒப்ரா இசைக்கின்றனர்.

“கலை உங்களுக்குப் பலவற்றைச் செய்ய ஊக்கம் அளிக்கிறது. நான் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து, கால்பந்து, பேஸ்பால், மற்றும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு பெற்றேன். என்னுடைய இடுப்பு மாற்று சிகிச்சை வரை நான் 6 மரதன் ஓட்டங்களிலும் 15 டிரையத்லோன்களிலும் பங்கு பெற்றுள்ளேன். 34 ஆண்டுகளாக அதே குழு நண்பர்களுடன் நான் விளையாடி வருகிறேன். நாட்டில் ஒவ்வொரு மலைப்பகுதியிலும் நாங்கள் ஏறியிருக்கிறோம், இருமுறை ஐரோப்பாவிற்கு அதற்காகச் சென்றுள்ளோம்.

“நான் நாள் ஒன்றிற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் புகைப்படக் கலைக்கும் செலவிடுகிறேன். ஒரு நூலுக்காக பல்லாயிரக்கணக்கான நெகடிவ்களைச் சேகரித்துள்ளேன். உண்மையில் எங்களுக்கு உதவ ஒரு வெளியீட்டாளர் உள்ளார்.

WSWS: கலையை அணுகும் வாய்ப்புக்கள் பரந்து இருக்க வேண்டும், அதையொட்டி அனைவரும் கலையை அணுக இயல வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இப்பொழுது அது எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறது.

“இன்னிசைக்குழு கட்டண விலைகளில் நடைபெறுவது அதை அணுகும்படி செய்வதில்லை. ஆம், மாணவர்களுக்குச் சில சலுகைகள் உள்ளன, ஆனால் அப்படியும் பெரும்பாலான மக்கள் இவ்வளவு செலவு செய்ய முடியாது. இது ராக் இசை போல் இல்லை. அங்கு $100 இருந்து $150 வரை செலவழித்து ஆண்டு ஒன்றிற்கு ஒரு உயர்தர கலைஞரை வரவழைக்க முடியும். ஆனால் இன்னிசைக் குழு இசையைப் பொறுத்தவரை அது ஒரு வாராந்திர நிகழ்வு. இதையொட்டி எங்கள் இசை நிகழ்ச்சிகளிலிருந்து பலர் ஒதுங்கி இருக்க வேண்டியுள்ளது.” என்றார் ஹோல்மன்.

“இந்த நாட்டில் நடப்பதை எளிதில் கண்டிருக்க வேண்டும், இந்த இசை நிகழ்ச்சிகள் செல்வந்தர்களுக்கு விளையாட்டுக் கருவி போல் ஆகிவிட்டது. அவர்கள் இதில் பணத்தைப் போடுகின்றனர். எனவே நீண்ட கால நோக்கில், அவர்கள் தாங்கள் தான் இன்னிசைக் குழுவிற்கு ஆதரவு தருபவர்கள் எனக்கூற முடியும். தாங்கள் உயர்வகுப்பினர், எங்கள் பொருட்களை வாங்க முடியும் என்று கூறுவர்.”

ஹார்ட்டை அவருடைய அரசியல் கருத்துக்களை விவாதிக்குமாறு WSWS கேட்டுக் கொண்டது.

“உண்மையில் நான் அதிக அரசியல் ஈடுபாடு இல்லாதவன், ஆனால் நடக்கும் சிலவற்றைப் பார்த்துச் சீற்றம் அடைந்துள்ளேன். உண்மை என்னவென்றால் கலைகளுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அவை ஆதரவிற்கு உட்பட வேண்டும். எல்லா பணத்தையும் பத்திரங்களில் அவர்கள் முடக்குகிறார்கள், அரசியல் பிரச்சாரங்களில் போடுகிறார்கள். அவர்கள் செலவழிக்கும் பணம்—என்னால் நினைத்தும் பார்க்க முடியாதது. அந்தப் பணம் மக்களுக்கு உதவச் செலவழிக்கப்பட்டால் எவ்வளவு நன்மை?”

“பொருளாதாரச் செல்வம் விரிந்து செல்வது என்பது மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அதில் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளோம். எனக்குப் பெரும் சீற்றத்தைக் கொடுப்பது இந்த அளவு போனஸ் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதுதான். மக்கள் ஏராளமாகப் பணிநீக்கம் செய்யப்படும்போது, திடீரென இவர்கள் அனைவருக்கும் தங்கப் பாரச்சூட்டுக்கள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் Bloomfield Hills செல்லுங்கள். மாபெரும் வீடுகள் அங்கு இப்பொருளாதார நிலையிலும் கட்டப்படுகின்றன. வெகு சிலரிடமே பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடு உள்ளது.

“மருத்துவப் பாதுகாப்பு சரியாக அளிக்கப்பட வேண்டும். உலகில் இது இல்லாத வெகு சில நாடுகளில் நம்முடையதும் ஒன்றாகும். இங்கு மருந்து இலாபத்திற்குத்தான் விற்பனையாகிறது. ஆம்ஸ்டர்டாமில் லியோனர்ட் ஸ்லாட்கி இசைநிகழ்ச்சி நடத்தினார். அவர் நடத்திக் கொண்டிருக்கும்போது சிறிய அளவு இதய நோய்த் தாக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனே stents ல் அனுமதித்தனர். வெளியே வரும்போது அவர் கேட்டார். “நான் உங்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?” அதற்கு அவர்கள் விடையிறுத்தனர்: “ஏதும் கொடுக்க வேண்டாம்”. இது அமெரிக்காவில் இருந்து வருபவருக்கு. இங்கு அதற்கு எவ்வளவு செலவாயிருக்கும்? இங்கு எல்லாமே இலாபத்திற்காகத்தான் மருந்துகள். இந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில் இலாபங்களைப் பாருங்கள்.”