World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Major cuts throughout Britain’s National Health Service

பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவைகளில் பாரிய வெட்டுக்கள்

By Julie Hyland
20 October 2010

Back to screen version

சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் பெரும் வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் பலவும் முந்தைய கோர்டன் பிரௌனின் தொழிற்கட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகும். அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன, பலரும் தேவையற்ற கஷ்டங்கள், ஏன் இறப்பிற்குக்கூட தள்ளப்பட்டுள்ளனர்.

றோயல் தாதியர் கல்லூரி (Royal College of Nursing -RCN) சேகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தேசிய சுகாதாரச் சேவைகள் பிரிவில் 15,000 வேலைகள் இழந்துள்ளன. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டுவிட்டன அல்லது இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து சேவைகள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன.

அவசரகால வரவு-செலவு திட்டங்கள் மே மாத பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மந்தநிலையானது சுகாதாரப் பிரிவு செலவுகளில் முடக்கத்தை கட்டாயப்படுத்தும் என்று தொழிற்கட்சி கூறியுள்ளது. 20 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு குறைகையில் 10 மூலோபாய சுகாதார அதிகார சபைகள் (SHA), அதிக வேலை இழப்புக்கள், நோயாளிகளுக்கான பராமரிப்பு இடங்கள் மூடல் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கான திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும் சிக்கன நடவடிக்கைகளுக்கு “பாதுகாப்பு வளையம்” கொடுக்கப்படும், அது தேவை என்ற உறுதிமொழியைக் கொடுத்தபின்னரும் இது நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பற்றாக்குறை “திறமையான சேமிப்புக்கள்” மூலம் ஈடுசெய்யப்படும், முன்னணியில் கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் வெட்டிற்கு உட்படாது என்று தொழிற்கட்சி அறிவித்துள்ளனர். ஆனால் முக்கிய பணிகளில் வெட்டுக்கள் பற்றி இரகசியத் தயாரிப்பிலுள்ள தென்கிழக்குக் கடலோரப் பகுதி SHA விற்குள் உள் ஆவண சுற்று அறிக்கையில் மார்ச் மாதம் Telegraph வெளிப்படுத்தியது. அந்த ஆவணம், “புதிய நிதியச் சூழ்நிலை தொழிலாளர் தொகுப்பு வளர்ச்சியிலுள்ள போக்கு திருப்பப்பட வேண்டும்” என்று கூறியது. மேலும் ஊழியர் எண்ணிக்கை 10 சதவிகிதம் அல்லது “இன்னும் அதிகமாக” குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. மருத்துவமனைகளில் “ஊழியர் எண்ணிக்கை விரைவாகவும், அதிகமாகவும் பிற இடங்களைக் காட்டிலும் இருக்கக் கூடும்” என்றும் எச்சரித்தது.

இது RCN மற்றும் பிற அறிவிப்புக்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களில் உறுதிபடுத்தப்படுகிறது. ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுவிட்ட கணிசமான வேலை இழப்புக்களைத் தவிர வெட்டுக்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

Queen Mary’s, Sidcup ஆகியவற்றில் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகள் நவம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து மூடப்படும் என்பதுடன், டிசம்பரிலிருந்து மகப்பேறு வசதிகளும் மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்படும்.

Gloucestershire மருத்துவமனைகள் NHS Trust அதனுடைய பகுதியான 30 மில்லியன் பவுண்டுகள் சிக்கன நடவடிக்கைகளுக்காக 45 படுக்கையறைகளை குறைப்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

Southend University Foundation Trust பொது மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூடப்படுவதோடு ஒரு முதியோருக்கான பிரிவு மூடப்படும் திட்டங்களும் உள்ளன.

Portsmouth மருத்துவமனை NHS Trust ல் கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர், Leicester பல்கலைக்கழக NHS Trust ல் 325 பணிகள் தகர்க்கப்பட உள்ளன. Nottingham பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு Trust அடுத்த இரு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 60 மில்லியன் பவுண்டுகளை சேமிக்கும் வகையில் 400 பணிகளை நீக்கவுள்ளது.

இன்னும் பல வெட்டுக்களும் திட்டமிடப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் இனிக் கிடைக்காது என்ற தகவல்களும் உள்ளன. உதாரணமாக, Telegraph இல் மேற்கோளிடப்பட்டுள்ள ஒரு ஷெபீல்ட் டாக்டர் கருத்துப்படி நகரத்தின் சுகாதார அதிகாரி “அசாதாரண சூழ்நிலையில்” நீண்டகால வேதனையில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் மட்டுமே நகரவை நிதி கொடுக்கும் என்று கூறியதாகத் தகவல் வந்துள்ளது.

இந்தக் குறைப்புக்கள் இன்று கன்சர்வேட்டிவ்/லிபரல் டெமக்ராடிக் அரசாங்கத்தின் விரிவான செலவு பற்றிய பரிசீலனைகள் வெளிவருமுன்னரே நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இக்கூட்டணி NHS உடைய ஆண்டு வரவு-செலவு திட்டத்திற்கான 100 பில்லியன் வரவு-செலவு திட்ட சிக்கன நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்கு கொடுப்பதாக உறுதி கொடுத்திருந்தது—இது பொதுச் செலவில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். மேலும் சுகாதார பராமரிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் இன்னும் கூடுதலான நிதிகளைப் பெறும் என்றும் கூறியிருந்தது. ஆனால் உண்மையான கணக்கில் 1 பில்லியன் பவுண்டுகள் என்று ஆகும் “அதிகச் செலவுகள்” மருந்துகள் மற்றும் பெருகியுள்ள சுகாதாரப் பிரச்சினைகளின் கூடுதல் செலவினங்களுக்குப் போதுமான நிதியைத் தராது. NHS “குறைந்த பணத்தில் அதிகம் செய்யவேண்டும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக கார்டியன் கூறியுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிப் பிரிவுகள் சில சமயம் பல வாரங்கள் பணத்தை சேமிப்பதற்காக மூடப்பட்டு வருவதையும் இது மேற்கோளிட்டுள்ளது. “மருத்துவரீதியாக தேவை” என்னும் அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான நிதிகளையும் அறக்கட்டளைகள் கொடுப்பதில்லை” என்று மருத்துவ ஆலோசகர்கள் புகார்கள் கூறியுள்ளதாகவும் எழுதியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள NHS அறக்கட்டளைகளில் ஐந்தில் ஒரு பகுதி பிரதான சேவைகள், விபத்து, அவசரக்காலச் சிகிச்சை போன்றவற்றை மூடுகின்றன அல்லது மூடுவதாகப் பரிசீலிக்கின்றன என ஒப்புக்கொண்டுள்ளன. “அரசாங்க சுகாதாரப் பிரிவினுள் இருப்பவர் கார்டியனிடம் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்று NHS செய்யும் அனைத்திலும் ஐந்தில் ஒரு பகுதி நிறுத்தப்பட்டுவிடும்” எனத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

உள்ளூர் அதிகாரிகள் செலவுகளைக் குறைக்க வழிவகை காண்கையில், முக்கிய சமூகப் பாதுகாப்புக் குறைப்புக்கள்—முதியோர் மற்றும் மாவட்டச் செவலியர் முறைக்கான ஒதுக்கீடு போன்றவை—எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் சுமை NHS இடம் விழும். இருக்கும் நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் மீது இன்னும் பெரிய அழுத்தங்கள்தான் கொடுக்கப்படும்.

இதைத்தவிர, கூட்டணி அரசாங்கம் கணிசமாக தனியார் மயமாக்குதல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை “சந்தை முறையாக்குதல்” ஆகியவற்றை செய்துவருகிறது. இதன் வெள்ளை அறிக்கையான “NHS ஐ விடுதலை செய்தல்” என்று ஜூலையில் வெளியிடப்பட்டது, SHA க்களையும், அனைத்து 152 சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளைகளையும் 2013 ஆண்டையொட்டி நீக்கிவிடும் திட்டங்களை முன்வைத்துள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளைகள் இப்பொழுது NHS வரவு-செலவு திட்டத்தில் 80 சதவிகிதத்தைக் கையாள்கின்றன. சேவைகள் ஏற்பாடு செய்தல், பொது மருத்துவர்களை நியமித்தல், மருத்துவமனைகள் நடத்துதல், மனநலச் சுகாதார வசதிகள் அளித்தல் மற்றும் உள்ளூர் மருத்துவ வசதிகளை நடத்துதல் என்பவை இதில் அடங்கும். அவைகள் இங்கிலாந்திலுள்ள GP கூட்டமைப்புக்களால் செயல்படுத்தப்படும், அவை வரவு-செலவு திட்டப் பொறுப்பையும் நேரடியாக ஏற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே நிழல் கூட்டமைப்புக்கள் நடைமுறையில் வந்துள்ளன. பொது மருத்துவர்களிடமிருந்து மலிவான வசதிகளை நோயாளிகள் பெறுவதற்கான திட்டங்கள் வந்துள்ளன. சமீபத்தில் இரு கூட்டமைப்புக்கள் NHS Cambridgeshire உடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இவை பெரும்பாலான உள்ளூர் சுகாதார செயற்பாடுகளை எடுத்துக் கொள்ளும். இந்த நடவடிக்கைகள் பொதுவான பொது மருத்துவ சேவைகளுடன் நின்றுவிடவில்லை. NHS Hertfordshire ஒரு GP கூட்டமைப்புடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி மருத்துவமனை வரவு-செலவு திட்டங்களின் முழுப் பொறுப்பும் அவற்றால் எடுத்துக் கொள்ளப்படும்.

மருத்துவமனைகளை “சமூக முயல்வோர் நிறுவனங்களாக” மாற்றுவதற்கான திட்டங்களையும் வெள்ளை அறிக்கை முன்வைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தனியார் வருமான வரம்பு அகற்றப்பட்டு, மருத்துவமனைகள் “ஊழியர் வழிநடத்தும்” அமைப்புக்களாக மாற்றப்படும். அதாவது சில்லறை விற்பனை பரஸ்பர நிறுவனமான John Lewis போல், பகுதி உரிமை அதன் ஊழியர்களிடம் இருக்கும். அரசாங்கம் கொண்டுவந்துள்ள பல தனியார் வணிகங்களில் இந்த நிறுவனமும் ஒன்றாகும். இது “புதிய தலைமுறை பொதுத் துறை அமைப்புக்கள்” எப்படிச் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறும்.

திங்களன்று முதல் 12 Pathfinder Mutuals (வழிகாட்டி பரஸ்பர உதவி நிறுவனங்கள்) அறிவிக்கப்பட்டன. இவை “முயல்வோர் பொதுத்துறை ஊழியர்களால்” நடத்தப்படும், அவர்கள் தான் தங்கள் சேவைகள் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். இத்திட்டத்தின் கீழ், “நவீன” மற்றும் “முயல்வோர் திறன்” கொண்ட ஊழியர்கள் சேவைகள் அளித்தலில் “பிணைப்பை” கொள்வர். அதில் வரவு-செலவு திட்டத்தின் மீது கட்டுப்பாடும் அடங்கும். “இத்தகைய வழிகாட்டும் அமைப்புக்கள்” எப்படிச் செயல்படும் என்பது குறித்த குறிப்பு BBC ஆல் கொடுக்கப்பட்டுள்ளது. NHS ல் செவலியர் தொகுப்பிற்கு உரிமை கொடுப்பது என்பது “சாதிப்பதற்கு சிக்கலைக் கொடுக்கும்” என்று அது கூறியுள்ளது. “மருத்துவமனைகள் கணிசமான சொத்துக்களை, கட்டிடங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளன, அவை அரசாங்கத்தின் உரிமை, விலைக்கு வாங்க வேண்டும்.”