World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan shanty dwellers form committee to fight evictions

இலங்கை குடிசைவாசிகள் வெளியேற்றத்தை எதிர்த்துப் போராட குழுவொன்றை அமைத்தனர்

By Vilani Peiris
11 October 2010

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) செப்டெம்பர் 26 கூட்டிய கூட்டமொன்றில் பங்கெடுத்துக்கொண்ட மத்திய கொழும்பு குடிசைவாசிகள், தலைநகரில் இருந்து வெகுஜனங்களை வெளியேற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தனர்.

வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழு இரு தீர்மானங்களை எடுத்தது. முதலில், ஒழுக்கமான வீடுகளுக்கான உரிமையை காப்பதன் பேரில் ஏனைய குடிசைவாசிகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு வேண்டுகோளை அது விடுக்கும். இரண்டாவதாக, இந்த நடவடிக்கை குழு, அமெரிக்காவில் இன்டியானாபொலிஸ் நகரில் உள்ள ஜெனரல் மோடர்ஸ் கம்பனி தொழிலாளர்கள் அமைத்துள்ள சுயாதீன உறுப்பினர் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அந்தத் தொழிலாளர்கள், ஜெனரல் மோடர்ஸ் கம்பனிக்கும், யுனைடட் ஓடோ வேர்கர்ஸ் தொழிற்சங்கத்துக்கும் எதிராக, தமது தொழிலையும் சம்பளத்தையும் பாதுகாத்துக்கொள்ள போராடுகின்றனர்.

தெற்காசியாவின் ஒரு வர்த்தக மையமாக கொழும்புத் தலைநகரை மாற்றும் திட்டத்தின் ஒரு பாகமாக, 66,000 வறிய குடும்பங்கள், அல்லது மத்திய கொழும்பின் 50 வீதமானவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்தது. சுமார் 390 ஹெக்டயரில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மாடிமனை சொத்துக்களை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்படவுள்ளன.

சோ.ச.க. குடிசைவாசிகள் மத்தியிலும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக ஏனைய தொழிலாள பகுதியினர் மத்தியிலும் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தியும் இந்தத் திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகின்றது. சோ.ச.க. கூட்டத்தில் சுமார் 30 குடிசைவாசிகள் பங்குபற்றியதோடு நடவடிக்கை குழுவொன்றை அமைப்பதற்கான அழைப்புக்கு உத்வேகத்துடன் ஆதரவளித்தனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில், வந்திருந்தவர்களை வரவேற்றதோடு திட்டமிடப்பட்டுள்ள வெகுஜன வெளியேற்றத்தின் வரலாற்றையும் தெளிவுபடுத்தினார். “கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம், முதலில் 1999ல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த போதிலும், மக்களின் எதிர்ப்பு வெடிக்கும் என்ற பயத்தினால் அதை ஓரத்தில் வைத்திருந்தது,” என அவர் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தேசத்தை கட்டியெழுப்ப என்ற பெயரில் “பொருளாதார யுத்தம்” ஒன்றை அறிவித்தார். இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக, தொழிலாளர்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு பொருளாதாரக் கொள்கையாகும்.”

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் பிரதான அறிக்கையை முன்வைத்தார். “குறி வைக்கப்பட்டுள்ள பல குடும்பங்கள் தமது வீடுகளில் பல தசாப்தங்களாக வாழ்கின்றன. பெரும்பாலான மக்கள் அந்த வீடுகளில் வசிப்பவர்களாக தேர்தல் இடாப்பில் பதியப்பட்டுள்ளதோடு கடந்த தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர். அவர்கள் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் செலுத்துகின்றனர். சிலருக்கு [நில] உரித்துக்கள் கூட உள்ளன. இப்போது இராஜபக்ஷ அரசாங்கம் இந்த வீடுகள் ‘அனுமதியற்றவை’ என தீடீரெனக் கண்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

ஒரு அசாதாரணமான நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, பொதுஜன சபைகளான நகர அபிவிருத்த அதிகார சபையையும் (யூ.டி.ஏ.) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையையும், தனது சகோதரரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார். ஆகஸ்ட் 12 அன்று, மக்களை பெருந்தொகையில் வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்தது, என பீரிஸ் விளக்கினார்.

பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டு யுத்தத்தின் போது பயன்படுத்திய இராணுவ வழிமுறைகளை நகரின் வறியவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்குகியுள்ளது என பீரிஸ் கூறினார். கடந்த மே மாத முற்பகுதியில், மத்திய கொழும்பின் கொம்பனி வீதியில் இருந்து 45 குடும்பங்களின் வீடுகளை அழிப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரையும் பொலிசாரையும் அணிதிரட்டியது. கடந்த ஜூலையில், கொழும்பு புறநகர் பகுதியான மட்டக்குளியில், பொலிசார் ஒரு உள்ளூர் இளைஞனை கைது செய்து தாக்கியதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிசாரும் சுமார் 8,000 குடிசைவாசிகளை சுற்றி வளைத்தனர்.

வெளியேற்றப்படுபவர்களுக்கு புதிய வீடுகள் கொடுக்கப்படும் என அரசாங்கம் கூறுவதெல்லாம் பொய் என பீரிஸ் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கொடுக்கப்படவில்லை. வெளியேற்றப்படும் அனைவருக்கும் வீடுகள் கொடுப்பதென்றால் அரசாங்கம் 66,000 வீடுகளை கட்டயெழுப்ப வேண்டும். ஆனால், அத்தகைய பெரிய திட்டங்கள் எதுவும் கிடையாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்கள் வெளியேற்றப்படுவதற்கான அறிகுறியாக டோகன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமது வீடுகளை இழந்தவர்கள் சட்டப்பூர்வமாக பரிகாரம் தேடுவதற்கான வழிகளைத் துண்டிப்பதற்காக அரசாங்கம் சட்டங்களையும் மாற்றுகின்றது என அவர் விளக்கினார். கொழும்பு மாநகர சபையை அகற்றி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்படாத அதிகார சபையை பதிலீடு செய்வதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. “மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றுவது, வீடமைப்பதற்கான அவர்களது மாற்றமுடியாத உரிமையை மீறுவதாகும்” என அவர் கூறினார்.

கொழும்பு நகரிலும் மற்றும் நாடு பூராவும் வறியவர்களுக்கு ஒழுங்கான வீடுகள் இல்லாமைக்கு, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் இந்த முதலாளித்துவ முறைமையுமே பொறுப்பு. “அரசாங்க அறிக்கைகளின் படி, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் வீடுகள் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகளிடம் குடிசைவாசிகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் கிடையாது. ஏனெனில் அவர்களும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் சந்தை சார்பு கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்”, என்று பீரிஸ் கூறினார்.

இந்த வெளியேற்றங்களை எதிர்ப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலமும் நகர்ப்புற வறியவர்களுக்கு உதவ முன்வருமாறு சோ.ச.க. தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என பீரிஸ் தெரிவித்தார். சகல வசதிகளையும் கொண்ட பொருத்தமான வீடுகளை அனைவருக்கும் வழங்க பில்லியன் ரூபாய்கள் தேவை. ஆனால் இலாப அமைப்பின் கீழ், இதை செய்ய முடியாது. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக, சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காவும் சோ.ச.க. போராடுகின்றது என அவர் விளக்கினார்.

பீரிஸ் உரையாற்றிய பின்னர், ஒரு நேரடி கலந்துரையாடல் நடந்தது. வருகை தந்திருந்தவர்களில் பலர் தமது சொந்த அனுபவங்களை விளக்க விரும்பினர்.

எமது நிருபர்களுடன் பேசிய இராஜா: “உங்களது கொள்கையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவர்களது ஆதரவு இன்றி எங்களால் எமது வீடுகளை காத்துக்கொள்ள முடியாது. யூ.என்.பி. தலைவர் ரவி கருணாநாயக்க நீதி மன்ற வழக்கு ஒன்றை பதிவு செய்யுமாறு எங்களுக்கு ஆலோசனை சொன்னார். ஆனால் ஒவ்வொரு வழக்கின் போதும், ஒவ்வொரு குடும்பமும் சட்டத்தரணிக்காக 1,500 ரூபா [14 டொலர்] கொடுக்க வேண்டியிருந்தது. பல குடும்பங்களது மாத வருமானமே 3,000 ரூபாவையும் விட குறைவுதான்,” என்றார்.

ஒரு ஆடைத்தொழிற்சாலை பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: “நாங்கள் புகையிரதப் பாதைக்கு அருகில் வாழ்வதால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு ஏற்கனவே எங்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுவிட்டது. புகையிரதப் பாதைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நாம் வாழ்வதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆம், நாங்கள் ரயில் பாதைக்கு அருகில்தான் வாழ்கின்றோம், அது ஆபத்தானது என்பது எங்களுக்குத் தெரியும். எந்த ஆபத்தும் இன்றி வசதிகளுடன் ஒரு பொருத்தமான இடத்தில் வாழ நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அரசாங்கம் எங்களை வெளியேற்றுவதற்கு முன்னதாக தக்க மற்றும் பொருத்தமான இடத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும்.”

ஒழுங்கான வீடுகளுக்காக போராடுவதற்கான ஒரு பிரச்சார நடவடிக்கையை திட்டமிட கூட்டத்தில் இருந்தவர்கள் உடன்பட்டனர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 3 நடந்த கூட்டத்தில் நடவடிக்கை குழு உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பு குடிசை பிரதேசங்களில் பரந்தளவில் பிரச்சாரம் செய்து ஆதரவை திரட்டுவதற்கான தேவையைப் பற்றி கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இன்டியானாபொலிஸில் ஜெனரல் மோட்டர்ஸ் முத்திரையிடும் தளத்தில் உள்ள தொழிலாளர்கள், சம்பள வெட்டு மற்றும் தொழில்களை அழிப்பதற்கு எதிராகப் போராடுவதற்காக ஒரு சுயாதீன உறுப்பினர்கள் குழுவொன்றை அமைக்கத் தீர்மானித்தமை பற்றி சோ.ச.க. உறுப்பினர்கள் பேசினார்கள். கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையையும் அடையாளங் கண்டுகொண்டதோடு, இன்டியானபொலிஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்மானமொன்றையும் குழு நிறைவேற்றியது. அது பின்வருமாறு:

இன்டியானாபொலிஸ் ஜெனரல் மோடர்ஸ் முத்திரையிடும் தல சுயாதீன தொழிலாளர் குழுவின் தோழர்களுக்கு,

இலங்கையின் தலைநகரான கொழும்பில், எமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள குடிசைவாசிகளான நாம், ஜெனரல் மோட்டர்ஸ், யுனைடட் ஓடோ வேர்கர்ஸ் யூனியன் மற்றும் ஜே.டி. நோர்மன் (இந்த வேலைத் தளத்தை வாங்கவுள்ளவர்) ஆகியோருக்கு எதிராக, சம்பளம் மற்றும் தொழிலை பாதுகாக்க போராடும் உங்களுக்கு, எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமெரிக்காவில் உங்களது வாழ்க்கைத் தரத்தை வெட்டிச் சரிப்பதற்கும் சம்பளத்தை வெட்டுவதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து நீங்கள் போராடும் அதே வேளை, இலங்கையில் கொழும்பில் உள்ள நாம், எங்களது வீட்டுரிமையை காத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் சர்வதேச மூலதனத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் “பொருளாதார யுத்தத்தின்” கீழ், கொழும்பு நகரம் தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றப்பட்டு வருகின்றது. இதன் பாகமாக, வறிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களாகிய எங்களது 66,000 குடும்பங்களை வெளியேற்றி, அந்த நிலங்களை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நீங்கள் முன்னெடுக்கும் உறுதிப்பாடான போராட்டம் எங்களை மேலும் மேலும் ஊக்குவிப்பதோடு எங்களுக்கு இன்றியமையாத வழிகாட்டும் வெளிச்சமாகவும் செயற்படுகின்றது.

உங்களது குழுவையும் அதன் வேலைத் திட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கைக்கான ஒரு சக்திவாய்ந்த முன்நகர்வாக நாம் காண்கின்றோம். அத்துடன், சர்வதேச மூலதனத்தின் நலனுக்காக உங்களது சம்பளத்தை வெட்டுவதற்கு உடந்தையாக இருக்கும், யுனைடட் ஓடோ வேர்க்கர்ஸ் யூனியனுக்கு எதிராக, உங்களை விடுவித்துக்கொள்வதற்காக நீங்களே உங்களது பாதையை தீர்மானித்துள்ளதை காண்கின்றோம்.

நாங்களும் கூட, வீட்டுரிமையை காப்பதற்கான எமது போராட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள் முன்னிலைப்படுத்தும், சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தல் என்ற திட்டங்களை நிராகரித்து, எங்களது சொந்த தலைமைத்துவம் மற்றும் எங்களது சொந்த வேலைத்திட்டத்துடன் ஒரு நடவடிக்கை குழுவின் ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தில், எங்களுக்கு உங்கள் ஆதரவும் உங்களுக்கு எங்கள் ஆதரவுமாக, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சர்வதேச ஆதரவு மற்றும் ஐக்கியத்தின் இன்றியமையாத பண்பை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அத்தகைய சர்வதேச ஒத்துழைப்பை நோக்கிய ஒரு புதிய நடவடிக்கையின் பாகமாகவே உங்களுக்கான எமது ஆதரவே நாம் காண்கின்றோம்.

தோழமையுடன்,
வீட்டுரிமையைக் காப்பதற்கான நடவடிக்கைக் குழு,
கொழும்பு, இலங்கை