World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Piyaseeli Wijegunasingha, a Sri Lankan Trotskyist, dies at 67

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டான பியசீலி விஜேகுணசிங்கா 67 வயதில் காலமானார்

By the Socialist Equality Party
6 September 2010

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) உறுப்பினரான தோழர் பியசீலி விஜேகுணசிங்காவின் அகால மரணத்தை ஆழ்ந்த இழப்புத் துயருடன் அறிவிக்கிறோம். பியசீலி வாழ்நாள் முழுவதும் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக, மார்க்சிச சிந்தனையாளராகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு போராடுபவராகவும் விளங்கினார்.

மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து முக்கிய உறுப்புக்கள் செயல்படாத நிலையில் வியாழன் அதிகாலையில் பியசீலி காலமானார். முன்னதாகப் பல ஆண்டுகள் அவர் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைப் பெற்றுவந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில் பல நோய்களாலும் அவதியுற்றார். அவருக்கு 67 வயதுதான் ஆகியிருந்தது.

பியசீலி சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸின் மனைவியும் துணைவியுமாவார். இவர் மகன் கீர்த்தி ரணபா விஜேகுணசிங்கா (42 வயது), மருமகள் அஞ்சனா மற்றும் 7 மாதப் பேத்தி ஜனார்த்தி ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

கட்சி உறுப்பினர்கள், சக ஊழியர்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்கள், குடும்பம் என்று பியசீலியை அறிந்தவர்கள் அனைவரும் அவருடைய பெருந்தன்மை, கலாச்சாரம் மற்றும் கண்ணியத்தைப் பாராட்டுவார்கள். அவருடைய அறிவுஜூவித்தன தீவிர ஆர்வமான இலக்கியக் கல்வியில் ஒரு தலைமுறை மாணவர்களுக்கு அவர் சவாலாகவும் ஆர்வத்துடனும் கற்பித்தார். அவருடைய அரசியல் மற்றும் கல்விசார்ந்த விரோதிகள்கூட அவரைப் பெரும் மதிப்புடன் நடத்தினர்.

கட்சித் தோழர்களிடையே பியசீலி ஒரு தாராள விருந்தோம்பல் செய்பவராக இருந்தார். இவருடைய இல்லம் எப்பொழுதும் பிறரை வரவேற்றுத் திறந்திருந்தது. பொதுவாக ஒதுங்கிச் செல்லும் இயல்பினராயினும், தேவைப்பட்டால் அவர் நாடகங்களில் நடிக்க ஊக்குவிக்கப்பட்டதுடன், தன்னுடைய இனிய குரலிலும் பாடினார். அவர் இலக்கியத்தின் மீது கொண்டிருந்த நேசத்துடன் பீத்தோவன் உட்பட பலதர இசைகளையும் ரசிப்பவராக இருந்தார்.

தென் இலங்கையின் காலிக்கு அருகில் ஹபுகல என்னும் கிராமத்தில் பியசீலி பெப்ருவரி 23, 1943ல் பிறந்தார். அவருடைய வாழ்வில் பெரும் தாக்கத்தைக் கொடுத்ததாக பின்னர் அவர் நினைவு கூர்ந்த காலி Southland பெண்கள் கல்லூரியில் கற்பதற்கு முன் அவர் மகாமோதர கிராமப் பாடசாலையில் பயின்றிருந்தார். ஆங்கில இலக்கியத்திற்கு அவர் அறிமுகப்படுத்தபட்டு, தன்னுடைய அறிவார்ந்த, வனப்புரை சொல்லாற்றல் திறமைகளை பாடசாலை விவாதக் குழுக்களுக்கு தலைமை தாங்கிய விதத்திலேயே முதலில் வெளிப்படுத்தினார்.

ஆனால் பியசீலியின் வாழ்வு, அடிப்படையில் ட்ரொட்ஸ்கிசத்தால் வடிவமைக்கப்பட்டது. பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு முன்பே அவர் அரசியலினால் ஈர்க்கப்பட்டு கல்லூரி விடுதி வசதியின்மை போன்றவற்றை எதிர்த்து, 1965லேயே மாணவர் எதிர்ப்புக்களுக்கு தலைவராக வெளிப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸ் தடிகளுடனும் கண்ணீர்ப்புகையுடனும் அடக்கியது. அவருடைய தோழராக அப்பொழுது இருந்த மாணவர் சங்கத் தலைவர் விஜே டயஸ் உட்பட மற்றவர்களுடன் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு நீக்கப்பட்டிருந்தார்.

திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் 1964ம் ஆண்டு லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) நுழைந்து, ட்ரொட்ஸ்கிசத்தை வரலாற்று காட்டிக்கொடுப்பிற்கு உட்படுத்தியதை புரிந்து கொள்ள முயன்று செயற்பட்ட தீவிரமயப்பட்ட இளைஞர்கள் குழுவில் விஜே டயஸ் இருந்தார். இந்த சோசலிச சர்வதேசக் கொள்கைகளை அடிப்படையில் கைவிட்டது ஒரு சர்வதேச சந்தர்ப்பவாதப் போக்கின் விளைவாகும். அப்போக்கிற்கு மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமை தாங்கினர். அது லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பின்வாங்குதலுக்கு பல ஆண்டுகள் ஒப்புதல் கொடுத்திருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதற்கு 1953ல் நிறுவப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிகழ்த்திய போராட்டங்களில் இருந்து படிப்பினைகளை பெற்ற புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1968ல் அதன் இலங்கைப் பிரிவாக அமைக்கப்பட்டது. இதற்கு கீர்த்தி பாலசூரியா தலைமை வகித்தார். விஜே ஒரு ஸ்தாபக அங்கத்தவர். பியசீலி விரைவில் அதில் இணைந்தார்.

1967ல் பியசீலி விஜேயை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு துணை விரிவுரையாளர் ஆனார். மறுஆண்டு அதேபோன்ற பதவியை விஜேயும் பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர்களுடைய மகன் கீர்த்தி பிறந்தார். 1969ல் பியசீலியும் விஜேயும் பட்டப் பின்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றனர். ஆங்கில இலக்கியத்தில் சிறப்புப் பட்டத்தை லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் இருந்து பியசீலி பெற்றார்.

பியசீலி இங்கிலாந்தில் இருந்தபோது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவராக இருந்தார். அது 1961-63ல் பப்லோவாத முகாமுடன் கொள்கையற்ற முறையில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) மறு ஐக்கயத்தை எதிர்த்த போராட்டத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. SLL (சோசலிச தொழிலாளர் கழகம்) இன் பிரச்சாரங்களிலும், கல்வி முகாம்களிலும் தான் பங்கு பெற்றது தன்னுடைய சர்வதேச பார்வையை வலிமைப்படுத்தியது என்று அவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.

1972ல் விஜேயும் பியசீலியும் இலங்கைகுத் திரும்பினர். 1971ல் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஆயுதமேந்திய எழுச்சியை நசுக்குவதற்கு இராணுவத்தை பண்டாரநாயக்காவின் கூட்டணி அரசாங்கம் பயன்படுத்தி பின்னர் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து இருந்த அரசியல் கொந்தளிப்பின் போது அவர்கள் நாடு திரும்பியிருந்தனர். அந்த அடக்குமுறையில் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 15,000 இளைஞர்களை கொன்றிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சிங்கள தேசியவாத, கெரில்லாவாத அரசியலுடன் அடிப்படை வேறுபாடுகள் இருந்தாலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியை பாதுகாத்தது. இதன் விளைவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பத்திரிகைகள் தடைக்குட்பட்டன. இரு உறுப்பினர்கள் பொலிஸ் காவலில் இருக்கையில் கொல்லப்பட்டனர். அப்படி இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அரசாங்கத்தின் விரிவான சூனிய வேட்டைக்கு எதிராக அதன் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருந்தது.

1973ல் கூட்டணி அரசாங்கம் பற்றி விமர்சித்திருந்த, தடைசெய்யப்பட்ட படைப்புக்களை இயற்றிய ஆசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் ஆகியோரை பாதுகாத்த கட்சிப் போராட்டத்தில் பியசீலி ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். தம்ம ஜகோடாவின் Dead Rise Again, சிமோன் நவகத்தஹமவின் Puslodan (Empty Cookied), மற்றும் சமராஜ் சுசிரியின் Wessanthara ஆகியவை அடங்கும். கட்சியின் கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடு கலைஞர்கள் உட்பட பலரின் நன்மதிப்பைப் பெற்றது.

மானெல் கப்புஹால என்ற புனைபெயரில் கட்சியின் செய்தித்தாள்களில் கலை, இலக்கியம் பற்றி பியசீலி எழுதிவந்தார். இத்துறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசூரியாவும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தயாரித்திருந்த அரசியல் தலைப்பு நாடகங்களிலும் பங்கு பெற்று நடித்தார். அவற்றுள் ஒன்று இழிவான மாஸ்கோ போலி விசாரணைகளில் ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி அம்பலப்படுத்தியிருந்தது.

ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்று பணியாற்றிய முறையில், பியசீலி ஒரு மார்க்சிச, அதாவது சடவாத அணுகுமுறையை இலக்கியம், இலக்கியத் திறனாய்வு ஆகிவற்றில் விரிவாகக் கையாண்டார். அவருடைய முதல் நூல்—A Materialist Study of Literature—1982ல் வெளியிடப்பட்டது. இலங்கையில் இலக்கியத் திறனாய்வில் மேலாதிக்கம் கொண்டிருந்த மெய்யியல் கருத்துவாத சிந்தனை மற்றும் –மத கருத்தாய்வுகளை சாடியது. “பல இலங்கை முதலாளித்துவ திறனாய்வாளர்கள் தங்கள் திறனாய்வு முறையை [இந்தியாவில்] உள்ள அழகியல் Rasavada School (ரசவாத பள்ளி) கருத்தியலால் தொடரப்படும் கருத்துவாதக் கருத்தாய்வுகள், அவற்றின் வழிவகைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளனர். இயங்கியல் சடவாத நிலைப்பாட்டில் இருந்து இந்நூல் பல தற்காலக் கருத்தாய்வுகளை திறனாய்கிறது” என்று முன்னுரையில் எழுதியிருந்தார்.

நூலில் விமர்சிக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய இலங்கை இலக்கிய வல்லுனரான எதிரிவீரா சரச்சந்திரா இதற்கு விடையிறுக்கும் வகையில் பியசீலிக்கு மெய்யியல் பற்றி ஏதும் தெரியாது என்று அறிவித்தார். இதற்கு விடையிறுக்கும் வகையில் பியசீலி தன் இரண்டாவது நூலை—A Marxist Study of Modern Sinhala Liberary Criticism—என்பதை வெளியிட்டார். இது சரச்சந்திராவின் மெய்யியல் வழிவகையின் வறிய நிலையை இன்னும் அம்பலப்படுத்தியதுடன், மார்ட்டின் விக்ரமசிங்கா மற்றும் குணதாச அமரசேகரா என்னும் இரு மற்ற முக்கிய இலங்கை எழுத்தாளர்களின் படைப்பு பற்றியும் திறனாய்ந்தார்.7

1964 இல் LSSP யின் காட்டிக் கொடுப்பின் கொடூர அரசியல் விளைவுகள், சிங்கள மேலாதிக்க நிலைக்கு அதன் அடிபணிவு ஆகியவை 1977 ல் பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் தோல்வியை அடுத்து நன்கு வெளிப்பட்டன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) சந்தைச் சார்பு மறு சீரமைப்பிற்கு திரும்பி தீவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்து விட்டது. பெருகிய எதிர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ஜெயவர்த்தனா தமிழர் எதிர்ப்பு சோவினிச வெறியைத் தூண்டி தொழிலாள வர்க்கத்தை பிரித்து, 1983 இன் இறுதியில் தீவின் நீண்ட, கடுமையான உள்நாட்டுப் போரையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக ஆரம்பித்தார்.

இந்த ஆண்டுகள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் சவாலாக இருந்தன. பிரிட்டனில் SLL இன் பிந்தைய கட்சியான WRP, 1973ல் அமைக்கப்பட்டதானது அரசியல்ரீதியாக பின்வாங்கி 1960களின் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்த அதே பப்லோவாத அரசியலுக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தலைப்பட்டது. சர்வதேச இயக்கத்திற்குள் இருந்த அரசியல் அதிகாரத்தினால் இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பல பிரிவுகளிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உட்பட பாதிப்புக்குரிய தாக்கத்தை கொடுத்தது. ஆனால் 1982ல் இருந்து, அமெரிக்க வேர்க்கஸ் லீக்கானது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமையின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து ஒரு அரசியல் போராட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து, இது 1985-86ல் ஒரு பிளவு என்ற உச்சக்கட்டத்தை அடைந்தபோது பியசீலி உறுதியுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் நின்றார். அதற்குப் பின் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் நடைபெற்ற மார்க்சிச மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைக் கொடுத்தார்.

டிசம்பர் 1987ல் பெரும் சோகம் ததும்பும் வகையில் கீர்த்தி பாலசூரியா திடீரென தன் 39 வது வயதில் பெரும் மாரடைப்பினால் காலமானார். இந்த கடினமான சூழலில், விஜே டயஸ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் புதிய பொதுச் செயலாளர் என்னும் முறையில் பொறுப்பை ஏற்றார். தன்னுடைய பணியில் ஈடுபட்டிருக்கும் போதே பியசீலி அவருடைய இடைவிடாத ஆதரவை அளித்து வந்தார்.

இலங்கை உள்நாட்டுப் போர் தீவிரமானவுடன், 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையை ஜெயவர்த்தனா ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இது இந்திய அரசாங்கத்தின் முனைப்பில் நடந்தது. மக்கள் விடுதலை முன்னணி இதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தீய வகுப்புவாதப் பிரச்சாரத்தை நடத்தி, ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்று கண்டித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கி ஏந்தியவர்கள், நூற்றுக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களை, அதன் சோவனிசப் பிரச்சாரத்தை ஏற்காத புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட, பலரைக் கொன்றனர். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரச பயங்ரவாதம் தொடர்கையில் விஜே டயஸும் மற்றய முக்கிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர்களும் தலைமறைவாக இயங்கினர். பியசீலியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

1990 களில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினராக இருந்திருந்த, பல இலக்கிய திறனாய்வு நூல்களை எழுதியிருந்த பேராசிரியர் சுசரித்ரா கம்லத்திற்கு எதிராக முக்கிய விவாதப் போரை நடத்தினார். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைவர் ஜெரி ஹீலியின் தலைமையில் உருத்திரிந்த மார்க்சிச மெய்யியலுக்கு ஆதரவைக் காட்டும் வகையில் கம்லத் கட்சியை விட்டு நீங்கினார். அவர் பியசீலியின் முந்தைய நூல்களைத் தாக்கிப் பிரச்சாரம் நடத்தினார். அதற்கு பியசீலி முகங்கொடுக்கும் விதத்தில் மூன்றாவது நூலை எழுதினார். சுசரித்ரா கம்லத்திற்கு ஒரு பதில்; கலையின் மீதான விமர்சனம் பற்றிய மார்க்சிச கொள்கைகள் (A Reply to Sucharitha Gamlath: Marxist Principles on Criticism of the Arts) என்ற இது 1995ல் வெளியிடப்பட்டது.

“The God of small things : A review and a reply” என்னும் தன் நான்காவது நூலில் பியசீலி மீண்டும் மார்க்சிச கோட்பாடுகளை பாதுகாத்தார். இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய “The god of small things” தொடர்பாக தன் திறனாய்வு பற்றிய பரிசீலனைக்கு சுசரிதா கம்லத் எதிர்ப்புத் தெரிவித்தார். கம்லத்தின் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் அவருடைய மேம்போக்கான இலக்கிய திறனாய்வு பற்றிய அணுகுமுறைக்கும் இடையே உள்ள உறவை பியசீலி தன்னுடைய நீண்ட விடையிறுப்பில் கொடுத்தார். கம்லத், ராயின் அரசியல் வரம்புகளை மிகைப்பட வலியுறுத்தி, நூலின் இந்தியச் சமூகம் பற்றிய குறிப்பிடத்தக்க உட்பார்வைகளுக்கு போதிய கவனமின்மையை செலுத்தியதாக நிரூபித்தார்.

பியசீலியின் படைப்புக்கள் கணிசமான செல்வாக்கைப் பெற்றன. கொழும்பு பல்கலைக் கழகத்தில் மார்க்சிச இலக்கியத் திறனாய்வு பற்றிய ஒரு பாடத்திட்டத்தை நிறுவ அவர் காரணமாக இருந்தார். 1997ம் ஆண்டு சிங்கள மொழி இலக்கியத் துறையின் தலைவர், பேராசிரியர் என்று பதவி உயர்வைப் பெற்றார். அந்தப் பதவியை 2009ல் ஓய்வுபெறும் வரை அவர் வகித்து வந்தார்.

அதே நேரத்தில் பியசீலி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பல அரிய நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்த்தார். இதில் லியோன் ட்ரொட்ஸ்கியின் மார்க்சிசத்தை பாதுகார் (In Defence of Marxism) என்பதில் இருந்த ஒரு பகுதி, நாம் காக்கும் மரபியம் (The Heritage We Defend) என்னும் டேவிட் நோர்த்தின் நூல், ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவருடைய இடம் என்னும் டேவிட் நோர்த்தின் மற்றொரு நூல், டேவிட் வால்ஷ் எழுதிய “Post-Soviet Bolshevism and the Avant Garde Artists”, The Aesthetic Component of Socialism ஆகியவை அடங்கியிருந்தன. உலக சோசலிச வலைத் தளத்திற்கு தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளையும் பியசீலி அளித்தார். அவற்றில் இந்திய துணைக்கண்டத்தின் திரைப்படங்கள் பற்றிக் கவனக்குவிப்பு காட்டப்பட்டிருந்தது.

ஒரு மாதத்திற்கும் முன்புதான் பியசீலி வாராந்திர ஏடான ரவயாவால் அவருடைய உத்தியோகத்தைப் பற்றி பேட்டி காணப்பட்டார். பேட்டி கண்டவர் அவரை இலங்கையின் இலக்கியத் திறனில் அவரையும், கீர்த்தி பாலசூரியா மற்றும் பேராசிரியர் சுசரிதா கம்லத் ஆகியோரைக் கொண்ட “பொற்காலம்” குறித்து கருத்துக்கள் கூறுமாறு கோரிய வகையில், “அவர்களுடைய சிந்தனைப் போக்குப் போராட்டம் ஒரு பெரிய எழுச்சியைக் கொண்டுவந்தது. இச்சகாப்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

தனக்கே உரிய இயல்பான அடக்கத்துடனும் புறநிலைப் பார்வையுடனும் பியசீலி விடையிறுத்தார். “இந்நாட்டில் கலை விமர்சன சகாப்தத்தின் பொற்காலம் பற்றி நாம் பேச முடியாது அல்லது இயலாது என்றே நினைக்கிறேன். மார்க்சிச கலைத் திறனாய்வு சர்வதேச அளவில் நடைபெறுகின்றது. சமீப காலத்தில் கலைத் துறைத் திறனாய்வுப் பிரிவில் முன்னோடியில்லாத வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. [அதுவும்] நீங்கள் மார்க்சிச கலைத் திறனாய்வின் பொற்காலம் என்று குறிப்பிடும் காலத்தைவிட. இன்று மார்க்சிச கலையுலகத் திறனாய்வின் கருவி உலக சோசலிச வலைத் தளம் தான்” என்றார்.

பியசீலியின் பதிலில் அவருடைய முழு வாழ்விலும் ஊடுருவி நின்ற சர்வதேச கருத்தாய்வுகள் நிரம்பியிருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய நம்பிக்கையும் பிரதிபலித்தது -- அதாவது சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் ஒரு மனிதத்தன்மை, நீதி நிறைந்த உலகைத் தோற்றுவிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்குவதற்கு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் முக்கிய பணியாக கலைத்துறைத் திறனாய்வைக் கொண்டுள்ளது என்பதே அது.

சோசலிச சமத்துவக் கட்சி பியசீலி விஜேகுணசிங்காவின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது.