World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Thilo Sarrazin and the SPD

திலோ சராஸினும் சமூக ஜனநாயகக் கட்சியும்

By Justus Leicht
15 September 2010

Back to screen version

சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) முக்கிய உறுப்பினர் திலோ சராஸினை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் கட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக மாறிவிட்டன. அவருடைய புதிய புத்தகமான ஜேர்மனி தன்னை அழித்துக்கொள்கின்றது என்பதில் அறிவிக்கப்பட்டுள்ள இனவெறிக் கருத்துக்களைக் பாதுகாப்பதற்கு ஜேர்மனியில் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் வளர்ந்துள்ளது.

ஹாம்பேர்க் மேயர் கிளவுஸ் வொன் டோனானி, முன்னாள் பாதுகாப்பு மந்திரி பீட்டர், மற்றும் முன்னாள் நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் போன்ற முக்கிய சமூக ஜனநாயகவாதிகள் சராஸினுடன் பகிரங்கமாக ஒற்றுமையை தெரிவித்துள்ளனர் அல்லது கட்சித் தலைமையை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியதற்காக குறை கூறியுள்ளனர். கட்சித் தலைமையிடமான Willy-Brandt-Haus சராஸினுக்கு ஆதரவு கொடுக்கும் சமூக ஜனநாயகக் கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்களிடம் இருந்து நிறைய மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாறு தெரிந்த எவரும் மற்றும் அதன் சமீபத்திய செயற்பாடுகளைக் காணுவோர் எவரும் சராஸின் பெற்றுள்ள ஆதரவைக் கண்டு வியப்படைய மாட்டார்கள். சமூக ஜனநாயகக் கட்சி 1990 ஜேர்மனிய மறுஐக்கியத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட அதன் உறுப்பினர்களில் பாதிப்பேரை மொத்தம் 900,000 என்பதில் இருந்து 400,000 என்று இழந்துள்ளது. உத்தியோகத்தார்கள் மற்றும் சதாரண தொழிலாளர்கள் கட்சியைவிட்டு நீங்கியுள்ளனர். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தன்மையினால் தங்கள் பதவிகளில் தொடர்ந்தும் இருக்கும் போக்கை தொடர்பவர்கள் மட்டுமே நீடிக்கின்றனர். அவர்கள் முடிவில்லாத பொநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். இதைச் செயல்படுத்தியதில் டோனானி, ஸ்ருக், ஸ்ரைன்புரூக் இன்னும் குறிப்பாக சராஸின் ஆகியோர் அடையாளச் சின்னமாக உள்ளனர். இப்பொழுது அவர்கள் ஏற்பட்டுள்ள சமூக வறுமைக்கு குடியேறுபவர்களையும், முஸ்லிம்களையும் பலிகடாக்கள் ஆக்கும் சராஸினின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சியின் நீண்ட கால மரபுகளில் சராஸின் தங்கியிருக்க முடிகிறது. இவற்றில் தீவிர நாட்டுவெறி, இனவெறி மற்றும் இனத்தூய்மைப்படுத்துதல் கூட அடங்கியுள்ளன.

சராஸினின் எச்சரிக்கைகளை ஒருவர் நம்பினால், ஜேர்மனி முஸ்லிம்மயமாதல், கீழ்நோக்கிச் செல்லுதல் என்ற முறைகளில் சரிவைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளது. அவருடைய கருத்தின்படி, முட்டாள்களும் சோம்பேறிகளும் பொதுவாக, முஸ்லிம்கள் குறிப்பாக மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கின்றனர், உழைக்கும், அறிவார்ந்த ஜேர்மனிய உயர்கல்விக்கூடத்தினர், மத்தியதர, உயர்வர்க்கங்களில் இருப்போர் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை. Taz பத்திரிகையில் கோர்ட் றீசெல்மான் ஒரு கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ள விதத்தில் சமூக ஜனநாயகக் கட்சியில் பெரும் செல்வாக்கை செலுத்திய கருத்தாய்வுகளின் அடிப்படையில் தன் கருத்தை இவர் வளர்த்துள்ளார்.

றீசெல்மான் எழுதுகிறார்: “சராஸின் பின்பற்றும் சமூக ஜனநாயக மரபுகள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வைத்தியரும், பேர்லினில் சமூக இனத்தூய்மை பேராசிரியராகவும் இருந்த அல்பிரட் குரோட்ஜான் (1969-1931) வகுத்த கருத்துக்கள் ஆகும். குரோட்ஜான் சமூக ஜனநாயகக் கட்சிக்காக 1921 முதல் 1924 வரை ரைஸ்டாக்கில் (பாராளுமன்றத்தில்) உறுப்பினராக இருந்தார். வைமார் குடியரசில் சமூக ஜனநாயகக் கட்சியின் சுகாதாரத் தொடர்புடைய கொள்கைகளுக்கு அவர் கணிசமான பங்களிப்புக்களை கொடுத்தவராவர். 1926ல் தன்னுடைய பாடநூலான மனித இனப்பெருக்கத்தின் சுகாதாரம். நடைமுறை இனச்சுத்திகரிப்புக்கான முயற்சி (“The health of human reproduction. An attempt at practical eugenics.”) என்பதை வெளியிட்டார். இது இப்பொழுது சராஸின் முன்வைக்கும் முக்கிய ஆய்வுக்கருத்துக்களை நிறுவியது. சராஸினின் குரோட்ஜானுடனான உடன்பாடு “மேற்கோளிடப்பட்டுள்ள ஆதாரங்களும்” அடங்குகின்றன.

1931ல் இறந்த குரோட்ஜான் இனவாத இனச்சுத்திகரிப்புக்கான அமைப்பு (Society for Racial Hygiene) உடைய உறுப்பினர் ஆவார். அந்த அமைப்பு பின்னர் நாஜி ஆட்சிக்கு உதவியது. நாஜிக்கள் இனத்தூய்மை நெறியை வளர்த்து, “பயனற்ற வாழ்வு அழிக்கப்பட வேண்டும்” என்பதை உள்ளடக்கி குறைபாடுகள் இருந்த மக்கள் ஏராளமானவர்களைக் கொன்றது. தன்னுடைய 1926ம் ஆண்டு நூலான மனித இனப்பெருக்கத்தின் சுகாதாரம் என்பதில் குரோட்ஜான் அந்த அளவிற்குச் செல்லவில்லை. ஆனால் பரம்பரையான சூழ்நிலைகளை “காவலில்வைத்து மற்றும் கட்டாயமாக குழந்தைகள் பெறும் உரிமையை இல்லாதுசெய்வதற்காக வாதிட்டார். அவருடைய கோரிக்கைகள் வைமார் குடியரசின் தீவிரமான இனத்தூய்மைக் கோட்பாடுகளில் ஒருவராக அவரை ஆக்கியது. “எண்ணிக்கையிலும், தரத்திலும்”, மனித இனப்பெருக்க முறையை பகுத்தறிவார்ந்ததாகச் செய்யும் விதத்தில் அவர் மக்கள்தொகையில், மனித சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் “நோய், விகாரம், தாழ்ந்தவை இவை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கோரினார்.

பிறப்பிலேயே மூளைத்தளர்ச்சியுடையவர்கள், வலிப்பு உடையவர்கள், குடிபோதைக்குட்பட்டவர்கள், கைகால் முடங்கியவர்கள் ஆகியோர் கட்டாயமாக கருத்தடைக்கு உட்பட வேண்டும் என்றும் குரோட்ஜான் வாதிட்டார். மக்களில் ஒரு சதவிகிதத்தினர் “நீடித்த காலம் வெளியேற்றப்பட வேண்டும்” என்றும் கூறினார். இவர்தான் பின்னாள் சமூக ஜனநாயகக் கட்சியின் Gorlitz 1922 திட்டத்தில் சுகாதாரக் கொள்கைகளை இயற்றிவர் ஆவார்.

அந்த நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மார்க்சிசம் மற்றும் சர்வதேசியவாதம் ஆகியவற்றிற்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றாண்டின் திருப்பத்தில் நன்கு தெரியக்கூடிய, பெருகிய வலதுசாரித் தன்மை காணப்பட்டது. ஏற்கனவே 1899ல் மார்க்சிச-எதிர்ப்பு திருத்தல்வாதத்தின் கோட்பாட்டுத் தலைவரான எட்வார்ட் பேர்ன்ஸ்ரைன் “ஜேர்மனிய கலாச்சார அரசின்” காலனித்துவ வகைகளிலான வெற்றிகள் தேவை என்று இனவாத விவாத்ததை தன்னுடைய புத்தகமான சோசலிசத்திற்கான வரையறைகளும் சமூக ஜனநாயகத்தின் கடமைகளும் (The Premises of Socialism and the Tasks of Social Democracy) என்பதில் வாதிட்டிருந்தார். “இதைத்தவிர, காட்டுமிராண்டிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய உரிமையை மட்டுமே அவர்கள் தங்கியுள்ள நாட்டில் கொடுக்கப்பட முடியும் என்றும் கூறினார். மிகத்தீவிரமான நிலையில், உயர்ந்த கலாச்சாரத்திற்கு உயர்ந்த உரிமை உண்டு.” என்றார்.

இறுதியாக, 1914 ல் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அத்துடன் இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் முதல் உலகப் போரில் ஜேர்மனிய பேரசிற்கு ஆதரவைக் கொடுப்பதற்குச் செல்வாக்கைப் பயன்படுத்த முடிந்தது. போர் முடிந்த பின் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் நெருக்கமுடன் பழைமைவாத தளபதிகளுடனும் மற்றும் வலதுசாரி Freikorps உடன் ஒத்துழைத்து புரட்சிகரத் தொழிலாளர்களின் எழுச்சிகளை குருதியில் மூள்கடித்தனர். “நம் சொந்த” நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு தேடுதல் என்பது தனது சொந்த தர்க்கவியலாக அபிவிருத்தியடைந்த்து. சமூக ஜனநாயகக் கட்சி இவற்றை கண்டு திகைப்படையவில்லை. இப்பின்னணியில் இனத்தூய்மை, தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றில் தன் கருத்தைக்களை கொண்டிருந்த குரோட்ஜான் கட்சியில் இருந்தது மட்டும் இல்லாமல் கணிசமான செல்வக்கையும் பெற்றிருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

ஸ்வீடனில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஒரு விரிவான அரசாங்க இனத்தூய்மை திட்டத்திற்கு வாதிட்டுள்ளது; இதில் கட்டாய கருத்தடையும் உண்டு. இது 1934ல் இருந்து 1970கள் வரை நடைமுறையில் இருந்தன.

ஸ்வீடனின் தம்பதிகள் ஆல்வா, கன்னர் மிர்டல் (மிர்டல் பாராளுமன்ற உறுப்பினராகவும், சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மந்திரியாகவும் இருந்தவர்) ஸ்வீடன் தேசிய அரசிற்கு “சிறந்த மனிதத் தொகுப்பு” தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். Die Zeit பத்திரிகையில் பிரான்ஸ் வால்டர் எழுதியது போல், “மக்களில் குறைந்த பக்குவமுடைய பிரிவினர் இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் குழந்தை பெறும் உரிமைகள் கிடையாது. ஏனெனில் தற்கால பணி வழிவகைகளில், விரைவு, திறமை, பகுத்தறிவார்ந்த தன்மை ஆகியவை தேவை; “மட்டமான மக்கள் தரத்தை” தொடர்வது என்பது கூடாது.”

டென்மார்க்கிலும் பின்லாந்திலும் கூட, 1960கள் அல்லது 1970 களின் கடைசிப் பகுதிகள் வரை இனத்தூய்மை வகைக்கான சட்டபூர்வ அடித்தளம் தொடர்ந்திருந்தது.

ஜேர்மனியில் நாஜி சர்வாதிகாரத்திற்கு பின்னர், இனத்தூய்மைப்படுத்தல் இழிவிற்கு உட்பட்டன. ஆனால் இனவெறித் தன்மையுடன் கூடிய தேசியவாதம் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் தழைத்துத்தான் இருந்தது. வில்லி பிரண்ட்டின் கீழ் நடந்த 1972 பொதுத் தேர்தலில் கட்சி பங்கு பெற்றபோது உள்நாட்டுப் பாதுகாப்புத் வேலைத்திட்ட பிரிவில்தான் குடியேறியவர்கள் பற்றி குறிக்கப்பட்டிருந்தது. மேற்கு ஜேர்மனி “மோதல்கள் பகுதியாக மாறுவதைத் தடுக்க அது தேவை என்றும், இதன் வேர்கள் பிற நாடுகளில் உள்ளன” என்றும் கூறப்பட்டது. எனவே சமூக ஜனநாயகக் கட்சி “வெளிநாட்டவர் பற்றிய சட்டத்தை” இன்னும் கடுமையாக செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

ஓராண்டிற்குப் பின்னர் பிராண்ட் தன்னடைய அரசாங்க அறிக்கையில், “நம் சமூகத்தின் உள்வாங்கிக்கொள்ளும் திறைமை” நிறைந்துவிட்டது என்றார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுவதில் முடக்கம் அவருடைய அரசாங்கத்தால் செய்யப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து சமூக, அரசியல் நெருக்கடிகளால் பாதிப்பிற்கு உட்பட்ட வெளிநாட்டு “விருந்தினர்-தொழிலாளர்கள்” திரும்பிவரலாம் என்ற நம்பிக்கைகளும் 1970 களில் தோற்றன. குடியேறியவர்களின் எண்ணிக்கை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்ததால் அதிகமாயிற்று. ஹெல்முட் ஷ்மித்தின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் தொழிலாளர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான “ஊக்குதல்களையும் உந்துதல்களையும்” அளித்தது. வெளிநாட்டினர் ஜேர்மனியில் இருந்து தாங்களாகவே திரும்பிச் சென்றால் பணம் பெறலாம் எனக் கூறியது.

“இரண்டாம் தலைமுறை வெளிநாட்டினர்” -அதாவது ஜேர்மனியில் பிறந்து வளர்க்கப்படுபவர்கள், இயல்பாகக் குடியுரிமை பெறும் கருத்தையும் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் நிராகரித்தது. ஹெல்முட் கோஹ்லின் கீழ் இருந்த பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய (CDU)/தாராளவாத ஜனநாயகக் கட்சி(FDP) கூட்டணி இக்கொள்கையைச் செயல்படுத்தியது.

1990களின் தொடக்கத்தில் ஜேர்மனிய மறுஐக்கியம் ஒரு சமூக நெருக்கடியை ஏற்படுத்திய போது, பழமைவாத அரசியல் வாதிகளும் செய்தி ஊடகமும் பாரிய தேசியவெறியைத் தூண்டி, “புகலிடம் கோருவது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று மேற்கோளிட்டு வெளிநாட்டினரை அகற்றும் உணர்வை அதிகரித்தனர்; மோலன், சோலிங்கன் போன்ற நகரங்களில் நவ-நாஜிகளின் கொலைகள் சில இறப்புக்களுக்கு வகை செய்தன. சமூக ஜனநாயகக் கட்சி இவற்றை எதிர்க்க ஏதும் செய்யவில்லை. இறுதியில் 1993ம் ஆண்டு கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும்,கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து புகலிடம் நாடும் அடிப்படை உரிமையைப் பெரிதும் அகற்றிவிட்டது.

இதைச் செய்வதற்கு பழமைவாதிகள் அதிக அழுத்தத்தை சமூக ஜனநாயகக் கட்சிக்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. 1980 களில் இருந்தே கட்சி அதன் திட்டத்தில் “புகலிட உரிமை தவறாகப் பயன்படுத்துவது” தடுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளது. இதைப்பற்றி 1980ல் துருக்கியில் ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதற்கு சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவு இருந்தும், அதையொட்டி ஜேர்மனிக்கு ஏராளமான அகதிகள் வந்தபோதும் இதில் அது உறுதியாக இருந்தது.

1998 ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் சமூக ஜனநாயகக் கட்சி பசுமைவாதிகளுடன் இணைந்த அரசாங்கம் அமைத்தது. அப்பொழுது அவர்கள் “திறமை வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” குடியேறுவதற்கு ஒப்புதல் கொடுத்தனர்; ஆனால் “தேச முன்னுரிமை” என்பது இன்னும் செயல்படுத்தப்பட்டது, அதாவது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நலன்கள் குறைந்த நிலையில்தான் இருந்தனர்.

ஷ்ரோடரின் செயற்பட்டியல் 2010 பொதுநல மற்றும் தொழிலாளர் “சீர்திருத்தங்கள்” என்பதின் பொருள் பெருகிய வறுமை, குறைவூதிய வேலை, மோசமான பணி நிலைமை என்ற பொருளைத் தந்தது. அதே நேரத்தில் சமூகத்தின் எதிர்முனையில் செல்வந்தர்கள் தங்கள் செல்வங்கள் பெருகுவதைக் கண்டனர். பேர்லின் நகர அரசாங்கத்தின் நிதி செனட்டராக இருந்த சராஸின் இந்நிலைக்குக் கணிசமான பொறுப்பு உடையவர் ஆவார். பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் குற்றத்தைச் சுமத்தினார். அவருடைய கருத்தின்படி, வறுமைக்கும் அதையொட்டிய கொலை வன்முறை போன்ற சமூகப் பிரச்சினைக்களுக்கும் சமூகநலக் குறைப்புக் கொள்கைகள் காரணம் அல்ல, ஏழைகள்தான் காரணம் என்று இருந்தது.

கடந்த ஆண்டு இத்தகைய கருத்துக்களை, வர்க்க வெறுப்பு, இனவெறி கலந்த கருத்துக்களைத் தன் இகழ்வுற்ற முக்காடுபோட்ட பெண்கள் என்று Lettre International இதழுக்கான பேட்டி ஒன்றில் வெளியிட்டார். அப்பொழுது அவர் துருக்கியர்கள், அரேபியர்களுக்கு எதிராகத் தாக்கிப் பேசினார்; “அவர்களுடைய எண்ணிக்கை தவறான கொள்கைகளினால் அதிகரித்துவிட்டது”, “உற்பத்தித் திறன் அற்றவர்கள், பழங்கள், காய்கறிகள் வணிகம் செய்யும் நோக்கம் உடையவர்களால் ஒருபோதும் எந்த முன்னோக்கையும் வளர்க்க முடியாது” என்றார். இது “ஜேர்மனியின் தாழ்ந்த வர்க்கங்களின் பிரிவுகளுக்கும் பொருந்தும்”, இவர்கள் ஒருகாலத்தில் ஆலைகளில் அற்ப வேலைகளைச் செய்து வந்தனர் என்றார்.

இவருடைய இனத்தூய்மை பற்றிய கருத்துக்கள் ஏற்கனவே தெளிவானவைதான்: “அரேபியர்களும் துருக்கியர்களும் மக்கள் தொகையில் அவர்களுடைய விகிதத்துடன் ஒப்பிடும்போது அதிக அளவு பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் அதிக பிரிவினர் ஒருங்கிணத்துக் கொள்ளத் தயாராக இல்லை, அவர்களால் இயலவும் முடியாது.” இவருடைய நூலை வெளியிடுவதற்கு ஓராண்டிற்கு முன் அவர் குழப்பத்திற்கு இடமின்றி Lettre Internationale இடம் கூறினார்: “கொசோவர்கள் கொசோவோவை வெற்றி கொண்டது போலவே, துருக்கியர்கள் அதிக பிறப்பு விகிதத்தின்மூலம் ஜேர்மனியை வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

இவை அனைத்தும் அவரை வெளியேற்றுவதற்கு சமூக ஜனநாயகக் கட்சிக்கு போதவில்லை. கட்சியின் பேர்லின் நடுவர் குழு வெளிப்படையாக சராஸின் வெளியேற்றப்படுவதை நிராகரித்துள்ளது. தன் கட்சி முடிவினால் ஊக்கம் பெற்றுள்ள சராஸின் இன்னும் தெளிவாகத் தன்னுடைய கொள்கையில் உள்ள இனவெறி உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்.