World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US budget cuts and the fight for socialism

அமெரிக்க வரவுசெலவுத்திட்ட வெட்டுக்களும், சோசலிசத்திற்கான போராட்டமும்

Joseph Kishore
3 August 2011

Back to screen version

சமூக செலவினங்களில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வெட்ட, ஒபாமா நிர்வாகத்தாலும் குடியரசுக்கட்சியாலும் இணைந்து கொண்டுவரப்பட்ட உடன்படிக்கை, அமெரிக்காவில் சமூக எழுச்சியினதும் வர்க்கப்போராட்டத்தினும் ஒரு புதிய காலகட்டத்தை முன்னறிவிக்கின்றது.

கட்டுக்கடங்காத ஊகவணிகத்தால் தூண்டப்பட்ட நிதியியல் பொறிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அது அமெரிக்காவையும் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பொருளாதார மந்தநிலையினுள் மூழ்கடித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு பிரதிபலிப்பாக ஆளும்வர்க்கம், 20ஆம் நூற்றாண்டில் வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக சீர்திருத்தத்தையும் பின்வாங்கச் செய்ய முனைந்து கொண்டிருக்கிறது.

செவ்வாயன்று, ஒபாமாவால் கையெழுத்திடப்பட்டு சட்டமாக்கப்பட்ட அந்த உடன்படிக்கை, அடுத்த பத்து ஆண்டுகளில் $900 பில்லியனை உடனடி செலவின வெட்டுக்களாக கொண்டு வரும். இதுதவிர, 2011 இறுதிவாக்கில் $1.5 ட்ரில்லியன் வெட்டுக்களும் கொண்டு வரப்பட இருக்கின்றன. கல்வி, உணவு மற்றும் எரிபொருள் உதவி, மத்திய அரசின் முக்கிய சுகாதார மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் இருந்த மானியங்கள், பெருநிறுவன நெறிமுறைகள் ஆகியன வெட்டுக்குள்ளாக்கப்பட இருக்கின்றன.

சமூக நெருக்கடி மிகவும் மோசமடைந்து வருவதை சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. பொருளாதாரம் ஸ்தம்பித்து வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நீண்டகால வேலைவாய்ப்பின்மையைக் காண்கின்றனர். நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் திவாலாகி உள்ளன. அவை பள்ளிகளை மூடியும், சுகாராத நலன்களைக் குறைத்தும் விடையிறுப்பைக் காட்டுகின்றன. மத்திய அரசின் செலவினங்களில் செய்யப்படும் வெட்டுக்கள் இந்த நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும்.

வேலைவாய்ப்பற்றோர் நலன்கள் மற்றும் தொழிலாளர்களின் விடுமுறைகால சம்பளம் மீதான வரிக்குறைப்பை நீடிப்பது கடன் மட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகளால் இல்லாதுபோவதாலும் இந்த வெட்டுக்களின் விளைவாலும் அடுத்த ஆண்டில் மொத்தம் 1.8 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும் என்று திங்களன்று பொருளாதார கொள்கை பயிலகம் (Economic Policy Institute) வெளியிட்ட ஓர் அறிக்கை மதிப்பிடுகிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. தன்னுடைய சொந்த கைகளை நம்பி வாழும் ஒரு நாடாக நாம் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான, ஒரு முக்கியமான முதல் படியாகும் இது,என்று இந்த சட்டமசோதாவில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக ஒபாமா தெரிவித்தார்.

கடன் உச்சவரம்பை கட்டுப்படுத்துவது பற்றிய விவாதத்தின் விளைவு, ஒபாமாவின் தாராளவாத ஆதரவாளர்களை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. வாஷிங்டனில் நடந்த உத்தியோகபூர்வ "விவாதத்தின்" மட்டுப்படுத்தப்பட்ட வார்த்தைப்பிரயோகங்களில்கூட, 'குடியரசு கட்சி கேட்டிருந்த அனைத்தையும் இறுதி உடன்படிக்கை வழங்குகிறது' என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு "சமப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்காக", பெருநிறுவனங்களுக்கு ஒருசில வரிவெட்டுக்களை கோருவதை கைவிட்டு, முற்றிலுமாக வெட்டுக்களைக் கொண்டிருக்கும் ஒரு முறைமையை சட்டமாக்குதலுக்கு அவர் கையெழுத்திட்டார்.

ஒபாமாவின் "பரிதாபகரமான சரணடைவு" குறித்த புலம்பலோடு, தாராளவாத பொருளாதார விமர்சகர் போல் க்ருக்மான் New York Timesஇல் திங்களன்று ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தார். கடந்த ஆண்டு ஜனநாயக கட்சியினர் காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த போது, இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் விட, அதாவது கடன் உச்சவரம்பை உயர்த்துவது அல்லது கடன் உச்சவரம்பை படிப்படியாக கொண்டு வர சட்டத்தினை விலகிச்செல்லும் அச்சுறுத்தலை முன்வைப்பது உட்பட, ஏனைய பல சாத்தியக்கூறுகள் ஜனாதிபதி வசம் இருந்தன என்று க்ருக்மான் குறிப்பிட்டு காட்டினார்.

Times இதழின் கட்டுரையாளர் ஜோ நொசீரா செவ்வாயன்று எழுதுகையில், கடன் உச்சவரம்பை ஒருதலைபட்சமாக உயர்த்த, ஒபாமா 14வது சட்டதிருத்தத்தைப் பயன்படுத்தி இருக்கலாம்" என்றும், ஆனால் காரணமே இல்லாமல் குடியரசு கட்சியின் தீவிர கொள்கையினரை அதிகப்படியாக சார்ந்திருக்கும் விதத்தில் அவர் ஒரு நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்தார்,என்றும் குறிப்பிட்டார்.

இந்த முடிவில், "விளங்கிக்கொள்ளமுடியாததோ" அல்லது ஆச்சரியப்படும் அளவிற்கோ கூட ஒன்றும் கிடையாது. ஒபாமா அவர் விரும்பாத ஏதோவொன்றை ஏதோவொருவிதத்தில் செய்ய நிர்பந்திக்கப்பட்டுவிட்டார் அல்லது அதற்கு பலியாகிவிட்டார் என்பதைப் போல எடுத்துக்காட்டுவது, Times கட்டுரையாளர்களின் மற்றும் அவர்களின் எதிர்பலத்தில் இருக்கும் Nation மற்றும் ஏனைய தாராளவாத மற்றும் "இடது" பதிப்பகங்களின் ஓர் அடிப்படை மோசடியாகும். அமெரிக்க மக்களின் மீது புனித யுத்தத்தை நடத்திய" Tea Part குடியரசு கட்சியினரை" நொசீரா குற்றஞ்சாட்டினார். கடன் உச்சவரம்பு நிர்ணயம் மீது நடந்த விவாதத்தின் இறுதிவிளைவு, [குடியரசு கட்சியின்] கொள்ளையடிக்க அச்சுறுத்துவது செயற்பட்டதையும் மற்றும் அதற்கு அரசியல் விலை எதுவும் கொடுக்கப்படவில்லை, என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று கிரக்மேன் கவலைப்படுகிறார்.

உண்மையில், மத்திய அரசின் கடன் உச்சவரம்பு நிர்ணய உயர்வில் இடம்பெறும் ஒவ்வொரு டாலரும் சமூக செலவினங்களில் வெட்டப்பட வேண்டுமென்ற குடியரசு கட்சியினரின் கோரிக்கையை,  ஒபாமா நிர்வாகம் இன்னும் அதிகப்படியாக வலதுசாரி கொள்கையைப் பின்தொடர்வதற்குரிய ஒரு வாய்ப்பாக கருதி வரவேற்றது. பற்றாக்குறை குறைப்பு என்ற பெயரில், ஒட்டுமொத்த திட்டங்களில் சமூக பாதுகாப்பு குறைப்புகளும் சேர்க்கப்படும் என்று ஒபாமா முன்மொழிந்து, அவர் குடியரசு கட்சியினரையும் ஒருபடி மிஞ்சி விட்டார்.

இது 2010 இடைக்கால தேர்தல்களைத் தொடர்ந்து நிர்வாகம் வலதிற்கு சாய்ந்து வருவதன் ஒரு தொடர்ச்சியாகும். அத்தேர்தல்களில் ஜனநாயக கட்சி கணிசமான அளவிற்கு தோல்விகளைத் தழுவியது. செல்வந்தர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த புஷ்ஷின் வரி வெட்டுக்களை நீடிப்பதையும் மற்றும் சட்ட அமைப்புமுறையில் ஒரு புதிய கட்டத்தை எட்டியிருக்கும் இந்த வாரம் கொண்டு வரப்பட்ட ஒரு வரவு-செலவு வெட்டு பிரச்சாரத்தை நியாயப்படுத்தவும், ஜனநாயக கட்சியினரால் அந்த தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டன.

க்ருக்மன் அவருடைய கட்டுரையை கவலைத்தோய்ந்த கருத்தோடு குடியரசு கட்சியினர் எவ்வித பாதிப்புமில்லாமல்  தப்பித்து கொண்டமை நம்முடைய ஒட்டுமொத்த அரசு அமைப்புமுறையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.என முடிக்கிறார். குடியரசு கட்சி மற்றும் ஒபாமாவிற்கு இடையில் இருக்கும் உறவு குறித்த அவர் பகுப்பாய்வு தவறு என்றபோதினும், அவர் கவலைகள் நியாயமானவையே. அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறையும் அமெரிக்க மக்களின் கண்களுக்கு முன்னே மதிப்பிழந்து வருகிறது.

மில்லியன் கணக்கான மக்கள், தேர்தலில் ஒபாமாவின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். சமூக பிற்போக்கிற்கும் புஷ் காலத்திய இராணுவவாதத்திற்கும் ஒரு முற்போக்கான மாற்றீடாக அவர் நிலைநிறுத்தப்பட்டிருந்தார். அவரைக் குறித்த அந்த ஒட்டுமொத்த பிரச்சாரமும் மோசடியானது என்பதையும், இன்னும் அதிகப்படியாக வலதுசாரி முறையை மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளைத் தொடர்வதற்காக எந்த நிதியியல் கோஷ்டியால் புஷ் நிர்வாகம் ஆதரிக்கப்பட்டதோ அதனாலேயே தான் ஒபாமாவும் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் அவர்கள் இப்போது கண்டு கொண்டார்கள்.

தொழிலாள வர்க்கம் வரலாற்றுரீதியாக சந்தியில் வந்து நிற்கிறது. 'தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறைக்குள் எதையும் மாற்றுவதென்பது சாத்தியமே இல்லை' என்ற புரிதலுக்கு தொழிலாளர்களும், இளைஞர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வெட்டுக்கள் அனைத்தும் முற்றாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே தொழிலாளர்கள் எதிர்த்து போராட ஆரம்பித்துவிடுவார்கள். 

எவ்வாறிருந்த போதினும், இந்த போராட்டங்களில் வெல்ல வேண்டுமானால், தொழிலாளர்கள் தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளின் வேர் முதலாளித்துவ அமைப்புமுறையே என்ற புரிதலோடு தொடங்கவில்லையானால் இந்த நெருக்கடிக்கு எவ்வித தீர்வும் இல்லை. இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ், பொருளாதாரமானது பிரதான வங்கிகளின் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களுக்கு அடிபணிய செய்யப்படுகிறது.

ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இருகட்சிகளாலும் இந்த அமைப்புமுறை இரக்கமே இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கடன் உச்சவரம்பு ஒரு நாசகரமான வெடிப்பாகும். ஒபாமாவை இடதிற்கு திரும்ப அழுத்தமளிக்க முடியும் என்ற கற்பனைகளைத் தூண்டிவிட்டவர்கள் அனைவரையுமே இது அப்பலப்படுத்திக்காட்டுகின்றது. நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களில் மிகவும் அதிகாரம் படைத்த பிரிவுகள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பிலும் பலமான பிடியைக் கொண்டிருக்கின்றன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சர்வதேச நிகழ்வுபோக்கின் ஒரு பாகமாக நடக்கிறது. ஒவ்வொரு நாடும் அதன் சொந்த தாக்குதலை விரிவாக்க, ஒபாமாவின் இந்த வரவு-செலவு கணக்கு வெட்டுக்கள், அவற்றின் ஆளும் வர்க்கங்களை ஊக்குவிக்கும். அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் முக்கிய கூட்டாளி, சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும்.

ஆளும் வர்க்கத்தால் திருப்பப்பட்டு கட்டவிழ்ந்துவரும் சமூக எதிர்புரட்சி, அதற்கு எதிராக ஒரு சமூக புரட்சியின் அவசியத்தை முன்னிறுத்துகிறது. அரசியல் தலைமையே அடிப்படை கேள்வியாக உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் ஆரம்பத்திலிருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி அதன் வர்க்க குணாம்சத்தையும், அதன் கொள்கைகளின் தர்க்கத்தையும் விளக்கியுள்ளது. ஆளும் வர்க்கத்தால் எடுக்கப்படும் முறைமைகள், அமெரிக்காவில் தொழிலாள வர்க்க போராட்டத்தை மீள்-எழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் கணித்துள்ளோம்.

இந்த பகுப்பாய்வு ஊர்ஜிதப்பட்டுள்ளது. ஒரு பரந்த சோசலிச இயக்கதைக் கட்டியெழுப்பும் தருணம் வந்துள்ளது. எதிர்வரும் வாரங்களிலும், மாதங்களிலும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகள் மத்தியிலும்அதாவது, தங்களின் ஊதியங்களும் நலன்களும் அழிக்கப்பட்டதை கண்ட உற்பத்தி தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வரும் மற்றும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பலிக்கடாவாக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உயிர்வாழ போதியளவு சம்பளம் பெற முடியாதுள்ள சேவைத்துறை தொழிலாளர்கள், கடனைச் சுமந்து கொண்டிருக்கும் இளம் தொழிலாள வர்க்கத்தினர், வேலைவாய்ப்பிற்கான எந்த வாய்ப்பையும் காணவியலாத வேலைவாய்ப்பற்றோர் என அனைத்து பிரிவுகளிடையேயும் சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேலைகளை தீவிரப்படுத்தும்.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், எழுந்துவரும் போராட்டங்களில் தலைமையை எம்மால் வெல்ல முடியுமென்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். எவ்வாறிருந்த போதினும், அத்தகைய ஒரு போராட்டத்திற்கு சோசலிசத்தின் தேவையோடு உடன்படும் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவசியமாகும். ஆகவே சோசலிச சமத்துவ கட்சியில் சேர்வது குறித்து முடிவெடுக்க இதுவே சரியான நேரமாகும்.