World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Oppose state repression of British youth

Statement of the Socialist Equality Party (UK)

பிரிட்டிஷ் இளைஞர்கள் மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்

சோசலிச சமத்துவ கட்சியின் (இங்கிலாந்து) அறிக்கை
11 August 2011
use this version to print | Send feedback

சமீபத்திய நாட்களில் இலண்டன் மற்றும் ஏனைய பிரிட்டிஷ் நகரங்களில் எழுந்திருக்கும்  சமூக கோபத்தின் ஆரம்ப வெடிப்பானது, பல தொழிலாளர் வர்க்க இளைஞர்கள் தினந்தோறும் முகங்கொடுத்துவரும் ஆழமாக வேரோடியுள்ள வறுமை, பாகுபாடு மற்றும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த அரசியலமைப்பு முறையின் மற்றும் ஊடகங்களின் விடையிறுப்பானது, இந்த நிலைமைகளைக் குறித்த எவ்வித விவாதத்தையும் புறக்கணிப்பதாக உள்ளது. கலகங்களுக்கும், நிகழ்ந்த கொள்ளை சம்பவங்களுக்கும் முற்றிலுமாக நகரங்களின் உள்பகுதியில் "பரவியிருக்கும்" இளைஞர்களின் ஒரு பாரிய "குற்றம்மிக்க அடிமட்டவர்க்கமே" காரணமென ஒரேமாதிரியாக  அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது இளைஞர்களுக்கு எதிராக கூறப்படும் அவதூறாகும். தங்களைத்தாங்களே நியமித்துக்கொண்ட நீதிநெறி போதிக்கும் கணவான்கள் (இவர்கள் தான் முதல்தர போலிகளாகும்) அவர்கள் கூறும் சொந்த பொய்களின் தாக்கத்தை உணர்வதில்லை. ஓர் ஒட்டுமொத்த தலைமுறையையும் குற்றவாளிகளாக உருவாக்கும், ஒரு சமூக அமைப்புமுறையைக் குறித்து என்ன தீர்மானத்திற்கு வர முடியும்?

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆளும் மேற்தட்டும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் சமூகத்திற்கு எதிரான ஒரு யுத்தத்தை நடத்தியுள்ளனர் என்பதே உண்மை. கட்டுப்பாடில்லாமல் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்துள்ள, மற்றும் அவர்களின் சொந்த தேவைக்காக அதிகபட்சமாக சமத்துவமின்மையையும், இழப்பையும் ஏற்படுத்தியுள்ள ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் மேற்தட்டின் நலன்களுக்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் அடிபணிய செய்யப்பட்டுள்ளது.

தற்போது மேலோங்கி இருக்கும் ஆழ்ந்த சமூக அழுத்தம் இன்னும் படிப்படியாக மோசமடைய உள்ளது. உலக பங்குச்சந்தைகளின் ஒரு புதிய நிலைகுலைவு தான் இளைஞர் கிளர்ச்சிகளின் பின்புலம் என்பது பொருத்தமற்றது. எண்ணிக்கையில் சிறியளவில் உள்ள பெரும் செல்வசெழிப்பான ஒரு மேற்தட்டின் தரப்பில் இருந்த பேராசை மற்றும் ஊகவணிக பேராசை ஒரு பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய இடங்களைப் போலவே, பிரிட்டனிலும், பத்து மில்லியன் கணக்கான மக்களை இன்னும் அதிகப்படியாக வறுமையில் தள்ளும் சிக்கன முறைமைகளைத் திணிப்பதன் மூலமாக, ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்தின் நிலைமுறிவிற்கு தனது பிரதிபலிப்பை  காட்டுகிறது. இந்த வர்க்க போர்க்கொள்கையே, அரசியலமைப்புமுறை மற்றும் ஊடகங்கள் காட்டும் வக்கிரமான விடையிறுப்பின் அடியில் தங்கியுள்ளது. பாரிய அரசு ஒடுக்குமுறையை மற்றும் சமூக நிலைமைகள் மீதான இன்னும் கொடூரமான தாக்குதல்களை நியாயப்படுத்த மிகவும் பிற்போக்கான பிரிவினரை ஏவிவிடுவதே அவற்றின் நோக்கமாகும்.

அதனால் தான் பிரதம மந்திரி டேவிட் கேமரோன் நீர்பீய்ச்சிகளையும், பிளாஸ்டிக் தோட்டக்களையும் பயன்படுத்த, “சட்ட விதிகளைத்" தூண்டிவிட்டு வருகிறார். அதே காரணத்திற்காக தான் அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோதும் ஓரளவு காரணமான தற்போது உருவாகியுள்ள மோசமான சமூகநிலைமைகளுக்கு கிளர்ந்தெழுந்து வரும் இளைஞர்களுக்கு எதிராக தொழிற்கட்சி தலைவர் எட் மிலிபான்ட், “சாத்தியமான அளவிற்கு பலமான பொலிஸ் விடையிறுப்பைக்" கோருகிறார்.

இளைஞர்கள் "குற்றவாளிகளாகவும்", “நெறிபிறழ்ந்தும்" போயுள்ளனர் என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்கள், அவர்களின் வெறுப்பிலும், போலித்தனத்திலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், இப்போது அன்றாடம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் லிபியாவிலும் எந்த முதலாளித்துவ பிரதிநிதிகள் குற்றத்தனமாக ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ அவர்களால் தான் இந்த இளைஞர்களும் உருவாக்கப்பட்டார்கள். கேமரோனில் இருந்து தொடங்கி, நீதிநெறி குறித்து தேனொழுக பூசிமெழுகும் ஒவ்வொரு அரசியல்வாதியும், விதிவிலக்கின்றி இளம் தொழிலாள வர்க்கத்தை இலண்டன் வீதிகளில் எந்த துருப்புகள் விரட்டுகின்றனவோ அதே மகாநகர பொலிஸிற்கு திட்டமிட்டு இலஞ்சம் அளித்தமை உட்பட, தொழில்துறை வட்டாரத்தில் குற்றத்தனத்தில் ஈடுபட்டிருந்த News of the World இதழின் பலகோடி பில்லினியரும், பரம-பிற்போக்குவாதியுமான ருப்பேர்ட் மேர்டொக்கின் அரசியல் தரகர்களாக அம்பலப்பட்டுள்ளனர்.

மேர்டொக்கிற்கு எதிராகவோ அல்லது அவரின் நிர்வாகிகளுக்கு மற்றும் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அல்லது அவ்வாறான ஒரு முறையீடும் கூட அங்கே இல்லை. மேர்டொக்கும் அவருடைய மகன் ஜேம்ஸூம், அனைத்து உத்தியோகப்பூர்வ கட்சிகளின் அரசியல்வாதிகளாலும், அத்தோடு ஊடகங்களாலும் உள்ளார்ந்த மரியாதையோடு கவனிக்கப்படுகிறார்கள்.

சட்டமீறல்" குறித்த அனைத்து கண்டனங்களிலும், பெயரளவிற்கு கூட மார்க் டக்கன் குறித்து குறிப்பிடப்படவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான 29 வயது டக்கனை, கடந்த வியாழனன்று பொலிஸ் கொடூரமாக சுட்டுக் கொன்றமை, கலகங்களைத் தூண்டிவிட்டது. அவரைக் கொன்ற பொலிஸ் அதிகாரியை நீதியின் முன் கொண்டுவர அங்கே எந்த அழைப்பும் இல்லை.

அல்லது நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாரிய கைது நடவடிக்கைகள் குறித்தும் அங்கே ஒரேயொரு விமர்சன வார்த்தைகளும் இல்லை. பாரிய பொலிஸ் பாய்ச்சல்களுக்கு இடையிலும் இதுவரையில் ஏறத்தாழ 2,000 மக்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இதில் இளம் எதிர்ப்பாளர்கள்  கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். அற்பமான குற்றங்களோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு நடத்த நீதிமன்றங்கள் தற்போது இரவு முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையினருக்கு பிணை மறுக்கப்படுகிறது.

காட்டு எலிகள்" என்று வர்ணிக்கப்படுபவர்களிடம் இருந்து "வீதிகளைத் திரும்ப கட்டுப்பாட்டில் கொண்டு வர" “சொத்து உரிமையாளர்களுக்கும்" மற்றும் "மதிப்பார்ந்த குடிமக்களுக்கும்" அளிக்கப்படும் தொடர்ச்சியான அறிவிப்புகளில், பாசிச நாற்றத்தையும் விட மோசமானது அங்கு காணப்படுகிறது. Daily Mailஇல் மக்ஸ் ஹாஸ்டிங் எழுதுகையில், இடைஞ்சல்கள் செய்துவரும் இளைஞர்களை, "இயற்கையான விலங்கு உந்துதல்களுக்கு மட்டுமே விடையிறுப்பு காட்டும்" "காட்டு மிருகங்கள்" என்று வர்ணித்தார். “அடிமட்ட வர்க்கத்திடமிருந்து திடீர்திடீரென வெளிப்படும் வன்முறைகளை", துருப்புகளையும், கடுமையான சட்டங்களையும் கொண்டு கையாள வேண்டும்; அவர்களில் முன்னனியில் இருப்பவர்களுக்கு பெரும் தண்டனைகள் வழங்கி, காலனித்துவ நாடுகளுக்கு நாடுகடத்த வேண்டும் என, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கருத்துவேறுபாடற்ற ஒப்புதலோடு, ஹாஸ்டிங் எழுதினார்.

இன்று அவர் கசப்பாக குறைகூறுகிறார்: “இன்று சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய மூதாதையர்களைவிட சிறப்பாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் மக்கள்நலன் விரும்பும் அரசு அவர்களை பசியிலிருந்தும், அவர்களின் நிஜமான தேவைகளில் இருந்தும் விடுவித்துள்ளது,” என்கிறார்.

இதுபோன்ற இனவாத, பாசிச கூச்சல்கள் சட்டப்பூர்வமாக உள்ளதோடு, இவை "மதிப்பார்ந்த" முதலாளித்துவ பத்திரிகைகளால் பரப்பப்படுகின்றன. அதேவேளை, “தாராளவாத" பௌல் ஸ்டெய்னெஸ் போன்ற வலதுசாரி சக்திகள், மரண தண்டனையைத் திரும்ப கொண்டு வரவேண்டுமென கோரி மின்-மனுக்களை வினியோகித்து வருகின்றனர்.

கலகங்களில் ஈடுபட்டுள்ள வேலைவாய்ப்பற்றவர்களின் சமூகநல உதவிகளை வெட்டுவதையும், அதேவேளை இந்த சம்பவங்களால் முன்வரக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டங்களுக்கு செய்ய வேண்டிய தயாரிப்புகளாக இந்த கலகங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு கிளர்ச்சி-எதிர்ப்பு முறைமைகளைப் பரிசோதிப்பதையும் விவாதிக்க பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டுள்ளது.

இளைஞர்களின் இந்த கிளர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களைத்தாங்களே "தாராளவாதிகள்" என்றும், “இடதுகள்" என்றும் காட்டிக்கொள்பவர்களின் அலட்சிய மற்றும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை வெளியில் கொண்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த சலுகைப்படைத்த மத்தியதட்டு வர்க்க அடுக்குகள் அதிகரித்துவந்த சமூக சமத்துவமின்மைக்குள் தங்களைத்தாங்களே உள்ளடக்கி உள்ளன. பரந்த மக்கள் அடுக்கின் வறுமையை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, அவற்றின் "முற்போக்கான" நம்பிக்கைத்தன்மைகள் ஒட்டுமொத்தமாக அவர்களின் வாழ்க்கைமுறைக்கு உகந்த அரசியல் வெற்றிபெறுவதையும், குட்டிமுதலாளித்துவ அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களையும் அடிப்படையாக கொண்டிருந்தன.

நகர-உள்பகுதி கிளர்ச்சிகளுக்கு ஒருவித ஆழ்ந்த அச்சமும், வெறுப்புமே அவற்றின் பிரதிபலிப்பாக உள்ளது. நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்த முதலில் அழைப்புவிடுத்தவர்களில், ஒருகாலத்தில் "Red Ken” என்று அழைக்கப்பட்ட தொழிற்கட்சியின் கென் லிவிங்ஸ்டோனும் ஒருவராவார். அதேவேளை கறுப்பின மற்றும் ஆசிய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் தங்களின் வாழ்க்கையையும், வங்கி இருப்பையும் செழிக்கசெய்ய தீவிர அரசியலைப் பயன்படுத்திக்கொண்ட குறிப்பிட்ட "சமூக தலைவர்களும்", "கலகம் செய்வதற்கு வறுமையைக் காரணம் காட்ட முடியாது; அதற்கு பொலிஸ் அதன் பலத்தைப் பிரயோகித்து விடையிறுப்பு காட்ட வேண்டும்" என உரக்க கூச்சலிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

politics.co.uk இன் இதழாசிரியர் ஐயன் டன்ட், இத்தகைய குட்டி முதலாளித்துவ தட்டுகளின் கண்ணோட்டத்தை மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார். முன்னர் அவர் எழுதியது: “யாரெல்லாம் நம்மைநாமே சமூக விடுதலைக்கான ஆதரவாளராக கருதுகிறோமோ" அத்தகையவர்கள் சட்டம், ஒழுங்கிற்கு அழைப்புவிடுக்கப்பட்டபோது அவநம்பிக்கையுடன் பார்த்தோம். ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது. அவர் தொடர்ந்து எழுதுகையில், “தெளிவாக கூறுவதானால், சமூகம் உடைவதற்கான ஒரு மங்கலான மினுக்கொளியை பார்க்கிறோம். பொதுமக்களைக் காப்பாற்ற கடுமையான கட்டுப்பாடுகள் நியாயமாக தேவைப்படும் போது, அவற்றின் தேவையை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் காட்டவேண்டும். அல்லது அப்படியில்லையென்றால் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் விடாப்பிடியர்களாகத்தான்  இருக்கிறோம் என்பதாகும்,” என்றார்.

இதுபோன்ற அறிக்கைகள் இளைஞர்கள் அரசியல்ரீதியில் பரிதாபகரமாக இருப்பதைப் பேசுகிறது. தொழிற்கட்சி மற்றும் பல்வேறு "இடது" போக்குகள் திவாலாகியும், முற்றிலும் சீரழிந்துபோயும் உள்ளதால், இளைஞர்களின் முற்றிலும் நியாயமான சீற்றம் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட, முற்போக்கான வெளிப்பாட்டைக் காணமுடியாமல் இருக்கிறது. இத்தகைய அமைப்புகளை அடிப்படையிலேயே பழமைவாத கட்சியிலிருந்தும், இன்னும் பொதுவாக வலதுசாரியில் இருந்தும் பிரித்து நிறுத்துவதற்கு என்று எதுவுமே இல்லை. அவை அதே சலுகைப்படைத்த மேற்தட்டின் வெவ்வேறு பிரிவுகளுக்காக பரிந்து பேசுகின்றன.

தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கும், அதன் சிக்கன முறைமைகளுக்கும் எதிராக எழும் எவ்வித எதிர்ப்பையும் நசுக்கவும், அடிபணிய செய்யவும், செய்யும் அவற்றின் திட்டமிட்ட முயற்சிகள், இளைஞர்களை விரக்திக்குள்ளாக்கி, ஆதரவின்றி தவிக்கவிட்டு, அவர்களைத் தனிமைப்படுத்துவதில் ஒரு மைய பாத்திரம் வகித்துள்ளன.

இளைஞர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொலிஸ் தாக்குதலை சோசலிச சமத்துவ கட்சி தங்குதடையின்றி  கண்டிப்பதுடன், கலக-ஒடுப்பு பொலிஸ் தற்போது ஆக்கிரமித்துள்ள  பகுதிகளில் இருந்து உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென கோருகிறது. அற்பத்தனமான குற்றச்சாட்டுகளோடு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மேற்படி எவ்வித எதிர்விளைவுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இளைஞர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் கூறுவது: பெருஞ்செல்வந்தர்கள் மற்றும் அவர்களின் மூன்று அரசியல் கட்சிகள் (பழமைவாத கட்சி, தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி) சமூகத்தின் மீது வைத்திருக்கும் ஏகபோகத்திற்கு சவாலாக நிற்பதன் மூலமாக மட்டுமே நீங்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள், இலவச கல்வி மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை அணுகுவதற்கான வழிகள் என உங்களுக்கு சொந்தமான, நிறைவான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் அனைத்தையும் பெற முடியும்.

பிரிட்டனிலும், சர்வதேச அளவிலும் உள்ள உழைக்கும் மக்களே இந்த போராட்டத்தில் உங்களின் கூட்டாளிகளாவர். உங்களின் வர்க்கமான தொழிலாள வர்க்கம் மட்டுமே முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறியவும், தனியார் இலாபத்தின் அடிப்படையில் இல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மாற்றியமைக்கவும் தகுதிப்படைத்த ஒரே சமூக சக்தியாகும்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தில் நேர்மையாக அக்கறை கொண்டவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நாங்கள் கூறுவது, இதுதான்: இளைஞர்களைப் பாதுகாக்க வாருங்கள். முதலாளித்துவம் வழங்கும் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தத்தின் இருண்ட எதிர்காலத்திலிருந்து அவர்கள் வெளியே வர வழிகாட்டுங்கள்.

இதேபோல தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாங்கள் கூறுவது: சோசலிசம் மற்றும் மார்க்சி இயக்கத்தின் வரலாறு குறித்து படித்து ஆய்வு செய்யுங்கள்; தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தைக் கையிலெடுங்கள்.