World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government seeks compromise with anti-corruption campaigner

இந்திய அரசாங்கம் ஊழல்-எதிர்ப்பு பிரச்சாரகரோடு சமரசம் கோருகிறது

By Sarath Kumara and Peter Symonds
23 August 2011

Back to screen version

தம்மைத்தாமே ஊழல்-எதிர்ப்பு சிலுவையுத்தத்தில் நியமித்துக்கொண்ட அன்னா ஹசாரேவின் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தை எதிர்கொண்டு வரும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், லோக்பால் அல்லது ஓம்பட்ஸ்மென் அமைப்பை ஸ்தாபிக்க வேண்டுமென்ற அவரின் கோரிக்கையின்மீது அவசரஅவசரமாக சமரசத்தையெட்ட கோரி வருகிறது. சனியன்று, லோக்பால் சட்டமசோதா குறித்து குறிப்பிடுகையில், "கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் நிறைய வாய்ப்புகள்" இருப்பதாக பிரதம மந்திரி மன்மோகன்சிங் அறிவித்தார்.

ஹசாரே மற்றும் அவரின் ஆதரவாளர்கள்மீது ஒரு பொலிஸ் ஒடுக்குமுறை நடத்திய பின்னர், போராட்டங்கள் பெருகத் தொடங்கியதும் சிங்கின் சமரச அறிக்கையானது ஓர் எதிர்பாரா மாற்றமாக இருந்தது. ஹசாரேவை விடுவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான அரசாங்கம், மத்திய-டெல்லியின் பூங்காவில் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் அனுமதிக்க வேண்டியதானது. கடந்த வாரம் தான், அன்னா குழுவினர் என்றும் அழைக்கப்படும் "ஊழக்கு எதிரான இந்தியர்களை", “சாய்வு-நாற்காலி பாசிசவாதிகள், நடமாடும் மாவோயிஸ்டுகள், மறைமுக அராஜகவாதிகள்,” என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி விவரித்திருந்தார்.

ஞாயிறன்று, ஆயிரக்கணக்கான ஹசாரேவின் ஆதரவாளர்கள் ராம்லீலா மைதானத்தில் (புது டெல்லியிலுள்ள பொது மைதானம்) குவிந்தனர்; அத்தோடு ஏனைய நகரங்கள் மற்றும் சிற்றூர்களிலும் ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஹசாரே கூட்டத்தில் கூறியது: “பிரதம மந்திரியே வந்தாலும் கூட, ஜன் லோக்பால் மசோதா [ஓம்பட்ஸ்மென் சட்டமசோதாவின் அவருடைய பதிப்பு] நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத வரையில் எனது உண்ணாவிரத போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை. நான் சாகவும் தயார்; ஆனால் வளைந்து கொடுக்க மாட்டேன்,” என்றார்.

தன்னைத்தானே காந்தியின் பிம்பத்தில் நிறுத்திக்கொள்ளும் 74 வயது முதிய ஹசாரே, "இரண்டாவது சுதந்திர போராட்டத்தை" (இது இந்தியாவின் காலனித்துவ-எதிர்ப்பு போராட்டத்தோடு சம்பந்தப்பட்டது) முன்னெடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் வெகுஜன பேச்சில் ("அன்னை பாரதம் வாழ்க போன்ற) இந்திய தேசியவாத முழக்கங்கள் பலமாக இழைந்தோடும்; ஞாயிறன்று சம்பவத்திலும் தேசபக்தி பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 30க்குள் அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென ஹசாரே அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்துள்ளார்.

இந்த அனைத்து பிரச்சினைகள் மீதும் ஓர் அர்த்தமுள்ள விவாதம் நடத்த" திங்களன்று சிங் மற்றொரு முறையீடு செய்தார். இது சிங் அறிவிப்பு: “கவலையடைந்துள்ள அனைத்து தனிநபர்களும் அரசாங்கத்தின் மசோதாவில் உள்ள கருத்துவேறுபட்ட விஷயங்கள் குறித்த தங்களின் கவலைகளை, நாடாளுமன்றத்திலுள்ள அவர்களின் பிரதிநிதிகளிடமும், நிலைக்குழுவிடமும் தெரிவிக்கலாம்”. அரசாங்கத்தின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், பிரதம மந்திரியையும் நாட்டின் உயர்மட்ட நீதித்துறை அதிகாரிகளையும் விசாரிப்பது உட்பட, வலுவான அதிகாரங்களைக் கொண்ட ஓர் ஓம்பட்ஸ்மெனைக் கோரி ஹசாரே அரசாங்கத்தின் மசோதாவை நிராகரித்திருந்தார்.

தாம் வளைந்து கொடுக்கப் போவதில்லை என்று ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் ஹசாரே தெரிவித்திருந்த போதினும், அன்னா குழுவின் பிரதிநிதிகள் வெளிப்படையான விவாதத்திற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ஹசாரேவின் ஆதரவாளர் பிரஷாந்த் பூஷன் Hindustan Timesக்கு கூறுகையில், தங்களின் அமைப்பு "அரசியல் அதிகாரத்தில் சுத்தமாக இருப்பவர்களோடு" பேச தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் கூறியது: "ஹசாரேவின் ஜன் லோக்பால் சட்டமசோதா 13 திருத்தவரைவுகளைக் கடந்து வந்துள்ளது, அதன் 14வது வரைவும் சாத்தியமாகும்”. எவ்வாறிருந்தபோதினும், “வெறுமனே உத்தாரவாதங்கள்" இல்லாமல்எழுத்துபூர்வமான உடன்படிக்கை" இருக்க வேண்டுமென்று பூஷன் வலியுறுத்தினார்.

சிங் அரசாங்கத்தையும் மற்றும் மிக சமீபத்தில் இந்து மேலாதிக்க எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியையும் (பிஜேபி) தாக்கியுள்ள தொடர்ச்சியான ஊழல் மோசடிகள் மீது பரவலாக எழுந்துள்ள வெறுப்பை ஹசாரே போராட்டத்தின் வலதுசாரி வெகுஜன குணாம்சம் கைப்பற்றியுள்ளது என்பதையே, "ஊழல்" மீதான ஹசாரேவின் ஒருமுனைப்பு எடுத்துக்காட்டுகிறது. 2ஜி மோசடி என்றழைக்கப்பட்டது தான் இதில் மிகவும் பிரபலமான விவகாரமாகும். அது செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் 2ஜி அலைக்கற்றை உரிமத்தின் இலாப ஒதுக்கீட்டில், வணிகங்கள் மற்றும் அரசாங்க பிரபலங்களை அம்பலப்படுத்தியது.

பெருவணிகங்கள் அதன் சொந்த செயல்முறைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு கருவியாகவும், உறுதியான சந்தை-சார் சீர்திருத்தங்களைக் கொண்டுவர சிங் அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்கும் விதத்திலும் ஊழல்-எதிர்ப்பு பிரச்சாரத்தில் அவை குதித்துள்ளன. இந்த ஊடகங்களில் ஹசாரேவிற்கு பாலிவுட் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. ஊடகங்கள் அவரை, ஊழலுக்கு எதிராக ஒரு "புரட்சியை" முன்னெடுக்கும், புதிய காந்தியாக தூக்கிவிடுகின்றன. இந்த பிரச்சினை ஏனைய விஷயங்களை விட்டுவிடும் வகையில் இந்திய பத்திரிகைகளை ஆக்கிரமித்துள்ளது.

ஹசாரேவின் முறையீடு, குறிப்பாக பட்டதாரிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் சுயதொழில்முனைஞர்கள் என இந்தியாவின் புதிய மத்தியதட்டு வர்க்க இளைஞர்களின் அடுக்கை (இவர்கள், கடந்த இரண்டு தசாப்தங்களின் பொருளாதார மறுகட்டமைப்பால் எழுச்சி பெற்றுள்ளவர்கள்) நோக்கி திசைதிரும்பி உள்ளது. “ஊழலுக்கு" எதிரான இவரின் பிரச்சாரமானது, அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் அவர்களின் சொந்த முன்னேற்றம் மற்றும் செறிவிற்கு ஒரு தடையாக செயல்படுகிறது என்ற அவர்களின் சொந்த விரக்தியை வெளிப்படுத்துகிறது.

சான்றாக, Hindustan Times குறிப்பிட்டதாவது: கடந்த வாரம் டெல்லியில் பணியாளர்கள் ஹசாரேவின் போராட்டங்களில் பங்கெடுக்க நேரம் ஒதுக்கியதால் ஹரியானாவின் தகவல்தொழில்நுட்ப துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தகவல்தொழில்நுட்ப வணிக கூட்டமைப்பின் தலைவர் பிரதீப் யாதவ் அப்பத்திரிகைக்கு கூறுகையில், நிறுவன வருகை விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக வியாபாரங்கள் குறைபட்டுள்ளன; இது தகவல்தொழில்நுட்ப துறையை ஆழமான சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்றார்.

அன்னா குழுவின் உறுப்பினர்கள் இதற்கு முன்னர் "இடஒதுக்கீடு-எதிர்ப்பு" போராட்டங்களில் பங்கெடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “இடஒதுக்கீடு போராட்டங்கள்" என்பது பல்கலைக்கழகங்களிலும் மற்றும் வேலைகளிலும் கீழ்ஜாதி மக்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுபவர்களுக்கு "ஒதுக்கீடு" வழங்குவதைக் கைவிடக்கோரும் உயர்-ஜாதி அடுக்குகளின் கோரிக்கைகளாகும். இந்தியாவில் இடஒதுக்கீடு முறை ஜாதிய ஒடுக்குமுறையை மற்றும் ஏழ்மையை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஒன்றும் செய்துவிடவில்லை என்றபோதினும், “இடஒதுக்கீடு-எதிர்ப்பு" போராட்டங்கள் செல்வசெழிப்பான, மேல்-ஜாதி மேற்தட்டின் இடத்தை பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஹசாரேவின் கவனம் "ஊழல்" மீது ஒருமுகப்பட்டிருப்பதானது, இலாப அமைப்புமுறைக்குள்ளேயே தங்கியுள்ள, குறிப்பாக 1991இல் செய்யப்பட்ட சந்தை-சார் சீர்திருத்த சாகசங்களுக்குப் பின்னர், அரசாங்கத்திற்கும் பெருவணிகங்களுக்கும் இடையிலுள்ள உள்கூட்டின் உண்மையான ஆதாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிறது. அனைத்திற்கும் மேலாக, “ஊழலுக்கு எதிரான இந்தியர்கள்" வேலைவாய்ப்பின்மை, ஒருதலைபட்சமாக நிலவும் வறுமை, விலைவாசி உயர்வுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைக்கப்பெறாமை போன்ற, மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக பிரச்சினைகளுக்கு அழுத்தம் அளிக்க எந்த அக்கறையும் காட்டவில்லை.

அவருடைய வலது-சாரி திட்ட விமர்சனங்களுக்கு விடையிறுக்கும் விதத்தில், தண்ணீரைத் திருப்பிவிடுவதில் ஏற்பட்ட விவசாயிகளின் போராட்டத்தில் மூன்று விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஹசாரே முதல்முறையாக சனியன்று முன்கொணர்ந்தார். “பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சக்கூடாது,” என்று அறிவித்து, “தொழிலாளர்கள்-விரோத" மற்றும் "தொழிலாளர்கள்-எதிர்ப்பு" பெருநிறுவன கொள்கைகளை அவர் விமர்சித்தார். ஆனால் எப்போதாவது வெளிப்படும் இதுபோன்ற வீராவேச அறிக்கைகள், ஏழைகளை வென்றெடுக்க ஹசாரே பாசாங்குத்தனத்தையும் கூட காட்டவில்லை என்பதையே அடிக்கோடிடுகிறது. இந்திய இராணுவத்தின் ஒரு முன்னாள் உறுப்பினரான ஹசாரே, அவருடைய ஏதேச்சதிகார முறைகளால் ராலேகான் சிந்த்தி கிராமத்தை ஒரு "முன்மாதிரி கிராமமாக" மாற்றியமைக்காகவும், இந்து மேலாதிக்க வலதோடு அவருக்கிருந்த தொடர்புகளாலும் அறியப்பட்டவர்.

ஹசாரேவால் முன்மொழியப்பட்ட ஜன் லோக்பால் வரைவு மசோதா, அதீத பொலிஸ் அதிகாரங்களையும் மற்றும் நீதித்துறை, அரசு அதிகாரத்துவம் மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க மற்றும் தண்டிக்க கூடியளவிற்கு கணிசமான வளங்களைக் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்படாத ஓம்பட்ஸ்மென் அமைப்பை ஸ்தாபிப்பதை மையமாக கொண்டுள்ளது. நாடாளுமன்ற கண்காணிப்பிலிருந்து வெளியில் சுதந்தரமாக செயல்படக்கூடிய இந்த கருவி, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு அழுத்தம் அளிக்கவும், அவற்றில் திருத்தங்கள் செய்யவும் அல்லது அவற்றை தூக்கியெறியவும் கூட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஒரு வாகனமாக மாறக்கூடும். முக்கியமாக, பெருநிறுவன மேற்தட்டுக்கள் அதன் கட்டுப்பாட்டின்கீழ் வராது.

ஊழல்-எதிர்ப்பு போராட்டத்திற்கு பெரிய வணிகங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் காட்டும் மனோபாவம் இருமனதாக உள்ளது. அரசின்மீது அழுத்தம் அளிக்க ஒரு கருவியாக ஆகும்பட்சத்தில் மதிப்புடையதாக இருக்கும் என்கின்ற அடிப்படையில் ஹசாரே நிகழ்வுபோக்கிற்கு பாலூற்றினாலும் கூட, வேலை வெட்டுக்கள், வேலை நிலைமைகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் நிலவும் சந்தை-சார் திட்டத்திற்கு எதிரான தங்களின் கோரிக்கைகளோடு தொழிலாள வர்க்கம் அதன் குரலை உயர்த்தத் தொடங்க, இந்த போராட்டங்கள் தூண்டிவிடக்கூடும் என அங்கே ஒரு கோணத்தில் நடுக்கமும் உள்ளது.

இந்த கவலைகளை வெளிப்படுத்திய Times of India நாளிதழ், அரசாங்கத்திற்கும் ஹசாரேவிற்கும் இடையிலுள்ள பிளவை முடிவுக்குக் கொண்டுவரும் அதன் சொந்த முன்மொழிவுகளைக் கடந்தவாரம் முன்கொண்டு வந்தது. “அரசாங்கமும், அன்னாவும் இருதரப்பும் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ, அதை "மக்களுக்காக" செய்கிறோம் என்று கூறி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறாயின், இருதரப்பும் அவர்களின் தன்முனைப்புகளை விட்டுவிட்டு, ஊழல் சாபக்கேட்டை சமாளிக்கும் மற்றும் இந்தியாவின் மற்றும் அதன் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு தீர்வின் பாதைக்கு வரவேண்டும்,” என்று எழுதியது.

பிஜேபி-இல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கட்சி (CPM) வரையில் அனைத்து எதிர்கட்சிகளும் வெளிப்பார்வைக்கு, ஹசாரே மீதான கடந்த வார அரசாங்க கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதேவேளை, அவை "நாடாளுமன்ற பாதுகாவலர்களாகவும்", ஒரு சட்டமசோதாவை "திணிக்கும்" ஹசாரே முயற்சியின் எதிர்ப்பாளர்களாகவும் எழுந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திதொடர்பாளர் D. ராஜா கூறியது: “சட்டமசோதா நாடாளுமன்றத்தால் தான் கொண்டு வரப்பட வேண்டும்.” இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியது: “இங்கே அரசியலமைப்பு விஷயங்களும் உள்ளன; சட்டமாக்கப்படுவதற்கான நிகழ்முறைகளைக் கைவிட்டுவிட முடியாது.” முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி விதிமுறைகளைக் காப்பாற்றும் நிலைப்பாட்டிலிருந்து வரும் ஹசாரேவிற்கு எதிரான விமர்சனங்கள், எந்தளவிற்கு ஸ்ராலினிஸ்டுகள் இந்திய அரசியல் அமைப்புமுறையின் ஓர் உள்ளார்ந்த பாகமாக செயல்படுகிறார்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

பல தசாப்தங்களாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் -மார்க்சிஸ்ட் கட்சியும், ஒன்றன்பின் ஒன்றாக வந்த இந்திய முதலாளித்துவத்தின் பிரிவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைத்துள்ளன. 2004 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து, ஸ்ராலினிச கட்சிகள் வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சியைத் தடுக்கும் வேஷத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் அரசியல்ரீதியாக ஆதரவு அளித்தன. உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை இன்னும் கூடுதலாக பேரழிவுக்கு உள்ளாக்கிய சந்தை-சார் சீர்திருத்தங்களை காங்கிரஸ் அதிகரித்த போதும் கூட, CPI மற்றும் CPM அவற்றின் ஆதரவை தொடர்ந்தன.

இப்போது CPI மற்றும் CPM கட்சிகள் மதவாத மற்றும் ஜாதிய அரசியலின் அடிப்படையில் முதலாளித்துவ கட்சிகளின் கூட்டில் லோக்பால் முழக்கதிற்குள் குதித்துள்ளன. தமிழ் இனவாதத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் அதன் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அரசியலுக்காக இழி பெயர்பெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் (AIADMK) இதில் உள்ளடங்கும். இந்த ஒன்பது கட்சிகளின் கூட்டணி ஒரு "பலமான" லோக்பால் மற்றும் "ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான துல்லியமான முறைமைகளுக்கு" அழைப்புவிடுத்து இன்று (23.08.2011) அகில இந்திய அளவில் போராட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளன.

துல்லியமாக CPI மற்றும் CPMஇன் காட்டுகொடுப்புகள் தான், தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீனமான போராட்டத்தையும் தடுத்துள்ளன. இதன்மூலம் அவை ஹசாரே போன்ற வலதுசாரி பிரமுகர்கள் எழுச்சி பெறுவதற்கு கதவைத் திறந்து வைக்கின்றன. சிங் அரசாங்கத்திற்கு எதிராகவும், ஊழல்மிக்க இலாப அமைப்புமுறைக்கு எதிராகவும் ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தொழிலாளர்களின் ஓர் ஒருமித்த அரசியல் போராட்டம் மத்தியதட்டு வர்க்கங்களின், விவசாயிகளின் மற்றும் சிறுவர்த்தகங்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளின் ஆதரவை வெல்லும்; அது வேகமாகவே சக்திகளின் சமநிலையை மாற்றியமைக்கவும் கூடும்.