World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Uneasy truce between Indian government and anti-corruption campaigner

இந்திய அரசாங்கத்திற்கும் ஊழல்-எதிர்ப்பு பிரச்சாரகருக்கும் இடையில் சங்கடமான சமரசம் ஏற்பட்டது

By Sarath Kumara
29 August 2011

Back to screen version

அரசியல் திணறலை முடிவுக்குக் கொண்டு வர பெருநிறுவனங்களிடமிருந்து வந்த அழுத்தத்தின்கீழ், தன்னைத்தானே ஊழலுக்கு எதிரான பிரச்சாரகராக அறிவித்துக்கொண்ட இந்தியாவின் அன்னா ஹசாரே நேற்று அவருடைய 12 நாள் உண்ணாநிலையை ராம்லீலா மைதானத்தில் (புது டெல்லியில் உள்ள ஒரு பொது மைதானம்) முடித்துக் கொண்டார். முன்மொழியப்பட்ட லோக்பால் அல்லது ஓம்பண்ட்ஸ்மென் சட்டமசோதாவில் ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளையும் உள்ளடக்க வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசாங்கம் சனியன்று "வழிமுறையில் இல்லாத" ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. பதட்டங்கள் தணிந்தன என்றாலும், எதுவும் தீர்க்கப்படவில்லை.

பாரிய ஊழல்-எதிர்ப்பு போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய ஹசாரே, அவருடைய சொந்த ஜன் லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 30க்குள் அரசாங்கம் கொண்டு வரவேண்டுமென்ற அவரின் முந்தைய முறையீட்டிலிருந்து பின்வாங்கினார். ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்து போராட்டங்களை அடக்கிவிடலாம் என்று ஆரம்பத்தில் கருதிய அரசாங்கம், இந்த மூன்று நிபந்தனைகளும் சட்டத்தில் சேர்க்கப்படும் என்ற உறுதிமொழியை அளிக்க நிர்பந்திக்கப்பட்டது.

ஒரு தலித்தும் (முன்னர்தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்பட்டவர்கள்), ஒரு முஸ்லீம் சிறுமியும் அளித்த இளநீர் மற்றும் தேனை ஏற்றுக்கொண்டு ஹசாரே அவரின் உண்ணாநிலையை நேற்று முடித்துக் கொண்டார். 'அவர் பெரும்பான்மையாக இந்திய மத்தியதட்டு வர்க்கங்களின் செழிப்பான பிரிவுகளிடமிருந்து ஆதரவைப் பெறுகிறார்' என்ற உண்மையையும், மற்றும் அவரும், அன்னா குழுவினர் என்றழைக்கப்படும் அவருடைய ஆலோசகர்களும் வலதுசாரி இந்து வகுப்புவாத அமைப்புகளோடு தொடர்புபட்டுள்ளார்கள் என்ற உண்மையையும் அந்த பகட்டு காட்சிகளால் மறைக்க முடியவில்லை. “ஊழல்" மீதான அவருடைய ஒருமுனைப்பு, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து கவனத்தை விலக்கிவிட்டுள்ளது.

ஹசாரேவின் ஊழல்-எதிர்ப்பு முனைவானது, அரசாங்கங்கள் தங்களின் விருப்பங்கள் மற்றும் செழிப்புக்குத் தடையாக உள்ளன என்ற மத்தியதட்டு வர்க்கங்களின் உணர்வை பிரதிபலிக்கிறது. பெருவியாபாரங்களும், பெருவணிக பத்திரிகைகளும் சந்தை-சார் மறுகட்டமைப்பிற்கு ஓர் உந்துதலை அளிக்க லோக்பால் பிரச்சினையைக் கைப்பற்றியுள்ளன. எவ்வித நாடாளுமன்ற தலையீடும் இல்லாமல், அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலுள்ளவர்களையும் விசாரிக்கும் மற்றும் தண்டிக்கும் பரந்த அதிகாரத்துடனான ஓர் ஓம்பட்ஸ்மென் கருவி ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஹசாரே எதிர்பார்க்கிறார்.

ஹசாரேவின் மூன்று நிபந்தனைகள்: அனைத்து 28 இந்திய மாநிலங்களிலும் ஊழல்-எதிர்ப்பு ஓம்பட்ஸ்மென் அமைப்பை உருவாக்குவது, அரசு அதிகாரத்துவத்தின் கீழ்பிரிவையும் கூட லோக்பால் சட்டத்திற்குள் கொண்டுவருவது, சரிவர செயல்படாத மற்றும் ஊழல் செய்வோருக்கு அபராதங்களை விதிப்பதைத் தெளிவாக பட்டியலிடும் "மக்கள் சாசனம்" அனைத்து அரசு துறைகளிலும் தயாரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது.

ஹசாரே இயல்நிகழ்வை இந்திய அரசியலின் முக்கிய பிரச்சினையாக ஊதிப்பெரிதாக்கியதற்கு காரணமான ஊடகங்கள், அரசாங்கத்திற்கும் ஹசாரேவிற்கும் இடையில் ஏற்பட்ட சமரசத்தை வரவேற்றுள்ளன. Times of India அதன் ஞாயிறு பதிப்பின் முதல் பக்கத்தில், “அன்னா, மக்களுக்காக அதை வென்றார்,” என்று அறிவித்தது. நேற்று, “மாபெரும் வெற்றி" என்ற தலைப்பில் Hindu இதழில் வெளியான தலையங்கம், அந்த விளைவை, “நாட்டில் ஊழலுக்கு-எதிரான மனோநிலைக்கும், மக்களின் முக்கிய பிரச்சினைகள் மீது பரந்த எதிர்ப்பு காட்டுவதற்கான காந்திய அஹிம்சை வழிமுறைக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்று வர்ணித்தது.

எதார்த்தத்தில், வேலை இழப்புகள், அதிகரித்துவரும் ஏழ்மை மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது சமூகத்தின் ஏனைய அடுக்குகளின், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைத் தூண்டிவிடாமல், வெற்றிகரமாக பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் மீது அழுத்தத்தைக் கொண்டு வந்ததற்காக இந்த இதழ்கள் அவற்றை அவையே பாராட்டிக் கொள்கின்றன. 1930கள் மற்றும் 1940களில் காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்கள் இந்திய முதலாளித்துவ கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடாமல் தடுக்க, மகாத்மா காந்தி "அஹிம்சை" மற்றும் அவருடைய உண்ணாநிலை உத்திகளைப் பயன்படுத்தியதைப் போன்றே, ஹசாரேவும் அவருடைய வலதுசாரி வெகுஜன போராட்டத்தைக் கையாள அதேபோன்ற "உத்திகளைப்" பயன்படுத்தியுள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) உட்பட அனைத்து பிரதான கட்சிகளும் நாடாளுமன்ற வழிமுறைகள் அல்லாத முறைகளின் பயன்பாட்டால் முன்நிற்கும் அரசியல் ஸ்திரமின்மையிலுள்ள அச்சுறுத்தலுக்கு அவற்றின் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளன. நாட்டின் இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்) முதலாளித்துவ ஆட்சியைத் தக்கவைக்கும் முதன்மை இயக்கமுறையாக உள்ள நாடாளுமன்ற வழிமுறைகளைப் பாதுகாப்பதில் முன்நின்றன.

கடந்த வெள்ளியன்று, இந்தியாவின் காந்தி-நேரு பரம்பரையின் வாரிசும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல்காந்தி, ஹசாரே போராட்டம் "ஜனநாயகத்திற்கு ஓர் அபாயகரமான முன்மாதிரியை" அமைத்துவிடுமென்று எச்சரித்து, பரந்த போராட்டங்கள் குறித்த அந்த அச்சத்தையும் எச்சரிக்கையாக வெளிப்படுத்தி இருந்தார். அவர் கூறியது: “இன்று முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்டம் ஊழலுக்கு எதிராக உள்ளது. நாளை சர்வவியாபக அளவிற்குக் குறைவில்லாமல் வேறு ஏதாவது இலக்கில் கொண்டு வரப்படும்.”

சனியன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் உட்பட அனைத்து கட்சிகளும், ஹசாரேவின் மூன்று நிபந்தனைகளையும் உள்ளடக்க, "நாடாளுமன்றத்தில் தீர்மானமாக" கொண்டுவரும் வாக்கெடுப்பில், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஒருமனதாக ஒன்றுசேர்ந்திருந்தன. நாடாளுமன்ற உரைகளின் கட்சி வேறுபாடற்ற" குணாம்சத்தைப் பாராட்டியதோடு, காங்கிரஸிற்கும் இந்து மேலாதிக்க பிஜேபி-க்கும் இடையில் கருத்துவேறுபாடின்றி நிலவிய ஊக்கத்திற்காகவும் Times of India புகழ்ந்து தள்ளியிருந்தது. மேலும், “அனைத்து பிரதான பிரமுகர்களாலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு விட்டுகொடுக்கப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்றும் அது குறிப்பிட்டது.

ஹசாரேவை ஒரு "புதிய காந்தியாக" காட்டுவதில் பிரதானமாக இருந்த அந்த இதழ், ஏனைய "சீர்திருத்தங்களுக்கும்" இந்த கட்சி பேதமின்மை நீடிக்கும் என்று தெளிவாக நம்புகிறது. நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிராகரிக்கும் மற்றும் பதவியிலிருந்து இறக்கும் உரிமை உட்பட, “தேர்தல் சீர்திருத்தம்" “அன்னாவின் அடுத்த சிலுவையுத்தத்திற்குரிய" விஷயமாக இருக்கும் என்று முன்மொழிந்ததற்காக அன்னா குழுவினரை அது பாராட்டியது. அதன் ஆகஸ்ட் 19 பதிப்பில், “ஊழலைக்" கட்டுப்படுத்துவதற்கான 10-புள்ளி நிரலை Times of India அமைத்தளித்தது. அதில் தேர்தல் விதிகளை மாற்றுவதும் உள்ளடங்கும்.

வாரயிறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த பலவீனமான சமரசம் உடையக்கூடும் என்பதை நன்கு அறிந்துள்ள அந்த இதழ், அரசாங்கமும், அன்னா குழுவினரும் "இப்போது கருத்து முரண்பாட்டிலிருந்து இணக்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றும்", “பேச்சுவார்த்தைகளில் புதிய உடைவு எதுவும் ஏற்படாமல்" உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அழைப்புவிடுத்தது. சனியன்று தீர்மானத்திற்கு அரசாங்க வாக்கு பதிவுசெய்யப்பட்ட போதினும், அது வாக்கு மாறினால் அதற்காக ஓர் அரசியல் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற போதினும், அது ஹசாரேவின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த எவ்வித சட்டரீதியிலான அல்லது நாடாளுமன்ற விதிமுறைகளோடு பிணைந்திருக்கவில்லை. அவருடைய தரப்பில், ஹசாரே அவர் ஆதரவாளர்களுக்கு நேற்று கூறியது: “நான் என்னுடைய போராட்டத்தை தற்காலிகமாகவே விலக்கிக் கொண்டுள்ளேன். நான் காணும் மாற்றங்களை எட்டும் வரையில் ஓயமாட்டேன்.”

மக்கள்தொகை மிகுந்த மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட அடுத்த ஆண்டு பல மாநில தேர்தல்களை காங்கிரஸ் முகங்கொடுக்க வேண்டியுள்ளதும், மத்தியதட்டு வர்க்கங்களின் ஆதரவைக் கட்டாயமாக தக்கவைக்க வேண்டியிருப்பதும் இந்த பிளவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருப்பதில் அரசாங்கத்தின் கணக்குகளில் ஒன்றாக உள்ளது. ஒரு கணிப்பின்படி, மாத வருமானம் ரூ. 20,000க்கும் 100,000க்கும் இடையில் (300இல் இருந்து 1,500 அமெரிக்க டாலர் வரையில்) பெறுபவர்களாக வரையறைக்கப்படும் மத்தியத்தட்டு வர்க்கம், 1996இல் 25 மில்லியன் என்பதிலிருந்து தற்போது 160 மில்லியனாக குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.

இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில்முனைவோர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுனர்களின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ள கடந்த இரண்டு தசாப்தங்களில் வெளிநாட்டு முதலீட்டிற்கு இந்திய பொருளாதாரத்தைத் திறந்துவிட்டதிலிருந்து அந்த அடுக்குகள் ஆதாயமடைந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் நிலைமைகளில் ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் அடுத்த சுற்று சந்தைசார் மறுகட்டமைப்பு முனைவிற்கு உதவியாக அவர்களின் ஆதரவை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

பகுப்பாய்வின் இறுதியாக, லோக்பால் சட்டமசோதாவின் இறுதி வடிவம் என்னவாக இருந்தாலும் கூட, அது உள்நாட்டு ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிகக் குறைந்த பங்களிப்பையே செய்யும். ஊழல் இலாபகர அமைப்புமுறையின் ஒரு விளைபொருளாக உள்ளது. அரசாங்கங்களுக்கும் பெருவியாபாரங்களுக்கும் இடையில் உள்ள இழிவான உறவுகள், சந்தைசார் சீர்திருத்தம், மறுகட்டமைப்பு மற்றும் தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் தான் ஆழமடைந்துள்ளது.

வேண்டுமானால் உடனடியாக அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அது விரைவிலேயே மீண்டும் சீறிவரும். ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், ஹசாரே போராட்டமானது, பொருளாதாரம் மந்தமாவது தொடர்வதாலும், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையின்மீது அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்துவதாலும் நிச்சயமாக கூர்மைப்படவிருக்கும் வர்க்க பதட்டத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு உதவியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.