World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: plantation workers strike against increasing workload

இலங்கை: வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

By M. Vasanthan
24 December 2011
Back to screen version

மத்திய மலையகப் பகுதியில் ஹட்டனுக்கு அருகில் உள்ள வெலி ஓயா தோட்டத்தில் சுமார் 2,600 தொழிலாளர்கள் டிசம்பர் 14 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அதிகரிக்கப்பட்டுள்ள வேலைப் பளுவைத் திணிக்க இராணுவத்தை அழைப்பதாக தோட்ட முகாமையாளர் அச்சுறுத்தியதை எதிர்த்தே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

டிசம்பர்13 அன்று தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நடத்தப்பட்ட கூட்டத்தில், அன்றாடம் பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்தின் அளவை 17 கிலோவில் இருந்து 20 கிலோ வரை அதிகரிப்பதற்கு கம்பனி முடிவெடுத்திருப்பதாக தோட்ட முகாமையாளர் மதுர மதுகமகே அறிவித்தார். தொழிற்சங்க தலைவர்கள் தயக்கம் காட்டிய போதிலும், முதுகை உடைக்கும் புதிய தொழில் இலக்குகளை தொழிலாளர்கள் பலமாக எதிர்த்தனர்.

தோட்டம் பெரும் நட்டங்களை எதிர்கொள்வதால் கம்பனி தோட்டத்தை கைவிட்டுவிடும் என தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களை அச்சுறுத்தினார். “கம்பனி தோட்டத்தை கைவிட்டால், அரசாங்கம் அதைப் பொறுப்பெடுத்து விற்றுவிடும். ஏற்கனவே அமைச்சர் மேர்வின் சில்வா இந்த தோட்டத்தை எடுக்க விரும்புகிறார். (மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதில் இழிபுகழ் பெற்றவர்) அவர் தோட்டத்தை பொறுப்பெடுத்தால் நீங்கள் அடிமைகள் போல் வேலை செய்ய வேண்டிவரும், என முகாமையாளர் எச்சரித்ததாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) தொழிலாளர்கள் கூறினர்.

நிர்வாகம் தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக துணைப்படையான விசேட அதிரடிப் படையை தோட்டத்துக்குள் அழைத்துள்ளது. இந்தப் படை ஈவிரக்கமற்றதாகும். யுத்த காலத்தில் மத்திய மலையகத்தில் நுவரெலியாவில் அதன் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் கூறியவாறு 18 விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் தோட்டத்துக்குள் வந்தனர். நாம் முகாமையாளரைக் கேட்டபோது அவர் அவர்களை அழைக்கவில்லை என மறுத்தார். ஆனால் நிர்வாகத்துக்குத் தெரியாமல் அவர்களால் தோட்டத்துக்குள் வர முடியாது, என ஒரு தொழிலாளி கூறினார். பின்னர் அதிரடிப் படையினர் திரும்பிச் சென்றனர்.

மறுநாள் தொழிலாளர்கள் புதிய இலக்குகளை இரத்துச் செய்யுமாறு கோரி வேலை நிறுத்தம் செய்த போதிலும், தொழிற்சங்கங்கள் தோட்ட முகாமையாளரை அகற்றும் கோரிக்கையை சேர்த்தன. வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலின் பாகமாக, தோட்டத்தின் நான்கு தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டளை அனுப்பிய வட்டவளை பொலிஸ், போராட்டம் சம்பந்தமாக அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றன. பிரதான தொழிற்சங்கமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) வேலை நிறுத்தத்தை முழுமையாக எதிர்த்தது. ஆயினும், அதன் உறுப்பினர்கள் தலைமைத்துவத்தை அலட்சியம் செய்து வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் வரை பிரச்சினை பற்றி நிர்வாகத்துடன் பேசப் போவதில்லை என இ.தொ.கா. தலைவர்கள் வெளிப்படையாகவே தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

ஆர். திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), எஸ். சதாசிவத்தின் இலங்கை தொழிலாளர் முன்னணி (CWA) மனோ கனேசனின் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (DWC), வி. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய தொழிற்சங்கங்கள், பிரச்சினைக்குத் தீர்வாக தோட்ட முகாமையாளரை அகற்றும் கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களின் சீற்றத்தை திசை திருப்புவதற்காக தலையீடு செய்துள்ளன.

இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், ம.ம.மு. ஆகியவை ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளாகும். அவை சந்தை-சார்பு பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை நேரடியாக ஆதரிக்கின்றன. DWC மற்றும் CWA போன்ற ஏனைய தொழிற்சங்கங்கள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பீ.) கூட்டுச் சேர்ந்துள்ளன.

வேலைச் சுமையை அதிகரிப்பது என்பது வெறுமனே ஒரு முகாமையாளரின் தீர்மானம் அல்ல. இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரவி பீரஸ் மற்றும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் லலித் ஒபேசேகரவும் கூறியவை ஜூலை 24 வெளியான சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் பதிவாகியுள்ளன. தென்னாபிரிகா, இந்தியா, கென்யா மற்றும் சீனா போன்ற ஏனைய தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தேயிலை உற்பத்திச் செலவு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் உற்பத்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தை திணிப்பதன் மூலம் வேலைச் சுமையை அதிகரிக்க வழிவகுத்துக் கொடுத்துள்ளன. தோட்ட மட்டத்தில் தோட்டத் துறைமாருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை குழுக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் மூலம் உற்பத்தியை மேம்படுத்த ஒத்துழைக்க தொழிற்சங்கங்கள் பொறுப்பேற்றுள்ளதுடன் தோட்ட மட்டங்களில் மாறுபடக்கூடிய விதிகள் பயன்படுத்தப்படலாம்... என கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு கூறுகின்றது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதோடு, அந்த ஒப்பந்தங்களுடன் இந்த பிரிவுகளும் நடைமுறைக்கு வருகின்றன. இந்த உண்மை தொழிற்சங்கத் தலைவர்களால் தொழிலாளர்களுக்கு கூறப்படுவதில்லை. அண்மையில் கடந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், சகல கொடுப்பணவுகளுடன் 405 ரூபா என்ற வறிய மட்டத்திலான நாள் சம்பளத்துக்கு மீண்டும் தொழிற்சங்கங்கள் உடன்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் மேலும் மேலும் துயரமான நிலைமையிலேயே வேலை செய்கின்றனர். வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்த இரு பெண் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு தமது நிலைமைகளை விளக்கியதோடு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் மீது தமது சீற்றத்தையும் வெளிப்படுத்தினர்.

அண்மைய காலங்களாக தோட்ட நிர்வாகம் எங்களை அதிக வேலை செய்யுமாறு நெருக்குகிறது. இப்போது அவர்கள் அதிக கொழுந்து பறிக்கச் சொல்கிறார்கள். எங்களால் அதைச் செய்ய முடியாது. காலை, பகல் மற்றும் மாலை என ஒரு நாளுக்கு மூன்று முறை அவர்கள் கொழுந்து நிறுக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் கொமிஷன் என்ற பெயரில் (ஈரமான கொழுந்துகளுக்கு) மூன்று கிலோவை வெட்டிக்கொள்கின்றனர். மொத்தமாக ஒரு நாளில் நாங்கள் 9 கிலோவை இழக்கின்றோம். முன்னர் இது ஒரு முறைக்கு ஒரு கிலோவாக இருந்தது.

நான் இதை எதிர்த்ததால் ஒரு கிழமை எனக்கு வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த வெட்டுக்களின் பின்னர், 10 கிலோவுக்கு குறைவாக எடுத்தால் எங்களது சம்பளம் பாதியாக வெட்டப்படுகிறது. அவர்கள் வேலை செய்யும் நேரத்தையும் ஒரு மணித்தியாலம் கூட்டியுள்ளனர். நாங்கள் காலை 8 மணிக்கு வேலைக்கு நிற்க வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமாகச் சென்றால் அன்று எங்களுக்கு வேலை இல்லை. அத்தகைய நாட்களில் நாங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பின்னால் செல்ல வேண்டும். ஊக்குவிப்பு கொடுப்பணவைப் பெறுவதற்கு நாங்கள் கட்டாயமாக ஒரு மாதம் 18 நாள் வேலை செய்திருக்க வேண்டும். இதனாலேயே நாங்கள் எங்களது எதிர்ப்பைக் காட்ட வேலை நிறுத்தம் செய்கின்றோம். எங்களை அச்சுறுத்துவதற்காக நிர்வாகம் இராணுவத்தை அழைத்தது, ஆனால் நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. 

இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக இ.தொ.கா. ஆற்றிய பாத்திரத்தை இன்னொரு தொழிலாளி கண்டனம் செய்தார். அரசாங்கத்தைப் பற்றி கருத்துக் கூறிய அவர் தெரிவித்ததாவது: இந்த அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலுக்குத் தயாராகின்றது. அண்மையில் இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம் பேசிய ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். பெருந்தோட்ட நிலங்களில் 37,000 ஹெக்டர்களை பொறுப்பேற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 2 ஏக்கர் நிலங்களை கொடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் கூறினார். இந்த அரசாங்கம் எங்களுக்கு நிலம் கொடுக்கும் என நான் நம்பவில்லை.

இந்த நிலங்களை வெளியார் வாங்கும் சாத்தியம் உள்ளது. அவர்கள் எங்களுக்கு நிலம் கொடுத்தாலும் அதில் பயிர் செய்ய எங்களிடம் பணம் ஏது? இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் நாங்கள் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்வோம். எங்களது தொழில்களோடு எங்களது பிள்ளைகளின் தொழிலும் இல்லாமல் போகும். இ.தொ.கா. இந்த திட்டத்தை ஆதரிப்பது தொழிலாளர்களுக்கு பெரும் ஆபத்தானது.

நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதற்காக 37,000 ஹெக்டயர் நிலங்களை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் பற்றி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அரசாங்கம் இந்த நிலங்களை வறிய சிங்கள விவசாயிகளுக்கு கொடுத்து சிறிய கிராமங்களை உருவாக்கி அவர்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இருத்தலாம் என்ற நியாயமான பீதி உள்ளது. கடந்த கால கொழும்பு அரசாங்கங்கள் இத்தகைய திட்டங்களை அமுல்படுத்தியுள்ளன.

வெள்ளிக் கிழமை ம..மு. தலைவர் வி. இராதாகிருஷ்ணனுடன் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 21 நாட்களில் முகாமையாளரை இடம் மாற்றுவதாக வாக்குறுதியளித்து தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு கூறினார். ஆயினும், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல மறுத்துள்ளனர். இந்த நிலையில் நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று திங்களன்று தொழில் அமைச்சின் ஊடாக நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டம் ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் என அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் பீதியடைந்துள்ளன. வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் இதே போன்ற முயற்சிகளுக்கு எதிராக ஏனைய தோட்டங்களிலும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கை நிலைமைகள் சீரழிவது சம்பந்தமாக தோட்டத் தொழிலாளர்கள் சீற்றத்துடன் உள்ளனர்.

கம்பனிகள் குறைந்த சம்பளத்துடன் சுரண்டலை அதிகரிக்கின்ற அதே வேளை, அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் அதே போல் ஏனைய பகுதியினரின் தவிர்க்க முடியாத போராட்டங்களை நசுக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. அரசாங்கம் பயிர்ச்செய்கைக்கும் மற்றும் சுற்றுலா மையங்களுக்கும் காணிகளை ஒதுக்க பெருந்தோட்டங்களை பல்வகைப்படுத்தி மறுசீரமைக்க திட்டங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான ஜனவசம தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுக்கத் தொடங்கியுள்ளது. தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் தொழில், சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான பொலிஸ் அரச வழிமுறைகள், இராணுவமயமாக்கம் தொடர்கின்றது. இதன் பாகமாக அரசாங்கம் பெருந்தோட்டங்களில் இராணுவ முகாங்களை ஸ்தாபிக்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே தலவாக்கலையில் வட்டகொடையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெலி ஓயா உட்பட தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் தாம் எதிர்கொண்டுள்ள தீர்க்கமான பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகம் அல்லது தொழில் திணைக்களத்துக்கு இடையிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று அவர்கள் நம்பக்கூடாது. மாறாக, தொழிலாளர்களின் எதிரிகளாகி கம்பனிகளையும் அரசையும் பாதுகாக்கின்ற தொழிற்சங்கங்களில் இருந்து அவர்கள் பிரிய வேண்டும். தொழிலாளர்கள் தமது தொழில், வேலை நிலைமைகள் மற்றும் ஏனைய உரிமைகளை காக்கும் போராட்டத்துக்காக சகல தோட்டத் தொழிலாளர்களையும் ஏனைய தொழிலாள வர்க்கத் தட்டினரையும் ஐக்கியப்படுத்துவதற்கு நடவடிக்கை குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது ஒரு சில செல்வந்தர்களுக்கு மட்டுமே நன்மையளிக்கின்ற பொருளாதாரத்தை, வெகுஜனங்களின் நன்மைக்காக, சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களின் உரிமைகளை காக்க முடியும். இந்த வேலைத் திட்டத்தினால் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முடியும். இதே போன்ற ஈவிரக்கமற்ற நிலைமைகளுக்கு அடிமைகளாக்கப்பட்டிருக்கும் ஏனைய நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த இந்த போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த முன்நோக்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே அபிவிருத்தி செய்கின்றது.