World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Manufacturing slowdown in China triggers more strikes

உற்பத்தி மந்தநிலை சீனாவில் அதிக வேலைநிறுத்தங்களை தூண்டுகிறது

By John Chan 
3 December 2011
Back to screen version

சீனா முழுவதும் உற்பத்தியில் கூரிய மந்தநிலை முதலாளிகளை ஊதியங்கள், வேலைகளைக் குறைப்பதற்கும், புதிய வேலைநிறுத்த அலைகளுக்கு ரியூட்டவும் உந்துதல் கொடுத்துள்ளது.

இந்த வாரம் ஷாங்காயில் சிங்கப்பூர் உடைமையான Hi-P International  ஆலையில் 1,000 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் பொலிசால் இரக்கமற்ற முறையில் முறிக்கப்பட்டது. Hi-P இன் வலைத் தளம் நிறுவனத்தைதந்தியில்லாத் தொலைதொடர்புகள், நுகர்வோர் மின்கருவிகள் மற்றும் கணினி, வாகனத் தொழிற்துறைகளுக்கு உதவும் ஒரு உலக அளவில் அதிகமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள உற்பத்தியாளரின் ஒரு பகுதி என விவரிக்கிறது. இதன் முக்கிய சர்வதேச வாடிக்கை நிறுவனங்களில் Apple, BlackBerry தயாரிப்பாளர் Research in Motion, Motorola , Hewlett-Packard  ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த வேலைநிறுத்தம் Hi-P இன் அளவைக் குறைத்து கூடுதல் உற்பத்திப் பிரிவுகளை தொழிலாளர் செலவினங்கள் குறைவாக இருக்கும் டியான்ஜின் மற்றும் சுஜௌக்கு மாற்ற முடிவு எடுத்துவுடன் வெடித்தது. தொழிலாளர்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை, புதிய உற்பத்தி ஆலைகளில் வேலைமாற்றத்திற்கான உறுதிமொழிதான் கொடுக்கப்பட்டது. இதை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர் பிரிவினர் ஆலையை ஆக்கிரமித்து வாயிற்கதவுகளையும் தடைக்கு உட்படுத்தினர். “எனக்கு நீதி கொடு!”, என்று ஊழியர்கள் முழக்கமிட்டதாக ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்துள்ளது; மேலும் தொழிலாளர்கள்எங்களுக்கு விளக்கம் தேவை, உண்மையை கூறுக என்று பதாகைகளை ஏந்தியதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். “சில நேரங்கில் அவர்கள் நாள் ஒன்றிற்கு 18 அல்லது 19 மணி நேரம் வேலை செய்யச் சொல்லுகிறார்கள் என்று ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “சிலவேளைகளில் மேலதிகவேலை நேரம் சாதாரண 8 மணி நேர நாள் உழைப்பைவிட அதிகமாகும்.”

வேலைநிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாயன்று பொலிஸ் வாகனங்கள் அருகில் இருந்த முக்கிய சாலைகளை தடைகளை ஏற்படுத்தினர். அதற்கு மறுநாள் நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் எதிர்ப்பை பலவந்தமாக நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டனர். தொழிலாளர்களை பொலிசார் அடித்து, தலை முடியைப் பிடித்து இழுத்தனர். இதில் பெண் தொழிலாளிகளும் அடங்குவர். பல தொழிலாளர்கள் காயமுற்றனர், ஒரு டஜனுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர் அசோசியேட்டட் பிரஸ் கூற்றின்படி, தொழிலாளர்கள் நேற்றும் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர், “வாகனங்களில் இருந்தும் சாதாரணக் கார்களில் இருந்தும் பொலிசார் கண்காணித்தனர், ஆனால் குறுக்கிடவில்லை.”

இது Hi-P தொழிலாளர்களின் முதல் வேலைநிறுத்தம் அல்ல. ஜூலை-ஆகஸ்ட்டில் தொழிலாளர்கள் நிறுவனத்தின் திட்டமான இரு உற்பத்திப் பிரிவுகளை சூஜௌ ஆலைக்கு மாற்றப்படும் திட்டத்தை எதிர்த்து 10 நாட்கள் போராடினர். அந்த நடவடிக்கையும் பொலிசாரால் முறிக்கப்பட்டது.

சமீபத்திய வாரங்களில் சீனாவின் தென் மாநிலமான குவாங்டோங்கில் பல உற்பத்தி மையங்களில் அலையென வேலைநிறுத்தங்கள் நடந்தன.

ஜப்பானுக்கு சொந்தமான ஷென்ஜேன்னில் இருக்கும் சிட்டிசன் கைக்கடியார ஆலையில் 1,100 தொழிலாளர்கள் செய்த வேலைநிறுத்தம் நவம்பர் 19 அன்று ஒரு மாதக் காலப் போராட்டத்திற்கு பின் முடிவடைந்தது. அக்டோபர் மாதம், இந்த ஆலை ஊதிய முறையை உற்பத்தி செய்யும் எண்ணிக்கை அடிப்படைநாக கொள்ளாமல் மணிநேர ஊதியமாக மாற்ற முடிவெடுத்தது. குறைவூதியத் தொழில்துறையான கைக்கடிகார உதிரிபாக உற்பத்தித் தொழிலில் தொழிலாளர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தைப் பெறுவதற்கு அதிக உற்பத்தியைத்தான பெரும்பாலும் நம்பியுள்ளனர். நிர்வாகத்தால் வழங்கப்படுவதாக கூறப்பட்ட குறைந்த மணிநேர ஊதியவிகிதம் தொழிலாளர்களின் வருமானங்களைப் பெருமளவில் குறைத்துவிடும்.

மணி-நேர முறையை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்கள் நிர்வாகம் அவர்களுக்கு 2005ம் ஆண்டில் இருந்து கழிப்பறை, குடிநீர் குடிக்க என்று அன்றாட பணிநேரத்தில் 40 நிமிடங்களுக்கான குறைக்கப்பட்ட ஊதியங்களை நிர்வாகம் தருமாறு கோரினர். ஆனால் உரிய நேரத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் அவர்கள் 70%தான் பெற்றனர். தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பிற்கு உட்பட்டு ஒவ்வொரு உற்பத்திப் பிரிவிலும் பணி செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

கிழக்கு ஜியாங்சு மாநிலத்தில், தைவான் உரிமையான மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் லிஷெங் ஆலையில் 1,200 தொழிலாளர்கள் (மடிக்கணினிகள், மௌஸ்கள், கைபேசிகள் தயாரிப்பு அடங்கும்) நவம்பர் 22ம் திகதி மிக அதிக தொழில் நேரத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகம் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்குப் பொலிசாரைக் கூப்பிட்டது; பல தொழிலாளர்கள் இதையொட்டிக் காயம் அடைந்தனர்.

உள்ளூர் வலைத் தளத்தில் லிஷெங் தொழிலாளி ஒருவர் வலைப் பதிவு ஒன்றை வெளியிட்டு, நிர்வாகம் எந்த இழப்பீடும் கொடுக்காமல் பணிநேரங்களை விரும்பியபடி மாற்றுவதாக விளக்கினார். தொழிலாளர்கள் மாத அடிப்படை ஊதியமாக 1,140 யுவான்கள் (அமெரிக்க$179) மட்டும் கொடுக்கப்பட்டனர். ஆனால் ஆலை வழங்கும் உணவிற்காக 450 யுவான், 120 யுவான் சமூகப் பாதுகாப்பு நிதிகள், 400 யுவான் வாடகைக்கு எனக் கழிக்கப்பட்டபின், “வீட்டிற்கு அனுப்புவதற்கு எங்களிடம் பணம் மிச்சம் ஏதும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 22ம் திகதி வேலைநிறுத்தம் வெடித்தபோது, 30-40 சிறப்புப் பொலிஸ் மற்றும் சாதாரணப் பொலிஸ் அதிகாரிகளும் வந்தனர். கலகக் கட்டுப்பாடு உட்பட உள்நாட்டு அடக்குமுறையில் தேர்ச்சி பெற்ற சிறப்புப் பொலிசார் துணை இராணுவப் படையினராவர். நாங்கள் எங்களுக்கு நீதி வழங்க அவர்கள் வந்தது எவ்வளவு பெரிய செயல் என்று நினைத்தோம். தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கியவுடன் எதிரே தென்பட்டவர்கள் அனைவரையும் அவர்கள் அடித்து நொறுக்குவர் என எவர் கற்பனை செய்திருக்கமுடியும்? தவறாகப் பேசிய ஒரு இளைஞர் பொலிஸ் காருக்குள் இழுத்துத்தள்ளப்பட்டு, அடிக்கப்பட்டார். அவர்களுக்கு அருகே நின்றிருந்த ஒரு பெண்ணும் பலத்த தாக்குதலுக்கு உட்பட்டார், அவருடைய செவிப்பறை கிழிந்து போயிற்று, தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. இரண்டு மணி நேரம் தரையில் அவர் படுத்திருந்தார், பொலிசார் அவரைப் புறக்கணித்தனர்.”

வலைப்பதிவு செய்தவர் சீனாவில், மில்லியன் கணக்கான பெரும் சுரண்டலுக்குட்பட்டுள்ள குடியேறிய தொழிலாளர்களின் நிலைமை பற்றிச் சீற்றத்தை வெளியிட்டுள்ளார். “தொழிலாளர் அமைச்சு எங்களைப் புறக்கணிக்கிறது பொலிசார் சிறிதும் கவலைப்படவில்லை! முதலாளிகள் விருப்பப்படி எங்களை அவர்கள் மிரட்ட முடியும். நீதி எங்கே உள்ளது? சட்டம் எங்கு உள்ளது?”

சீனத் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் இரக்கமற்ற ஒரு பொலிஸ் அரசாங்கத்தை எதிர்கொள்ளுகின்றனர். உலகின் முக்கிய நிறுவனங்கள் மிக நெருக்கமாக எழுச்சி பெற்று வரு முதலாளித்துவ வர்க்கத்துடனும் ஊழல் மிகுந்த சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடனும் சேர்ந்துகொண்டு கூட்டாகத் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டுகின்றன.

இந்த அடிப்படை சமூக உறவுதான்  BYD எனப்படும் ஒரு தனியார் உடமை மின்கல, மின்கார் உற்பத்தியாளர் பற்றிய விசாரணை அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது அக்டோபர் கடைசியில் நியூயோர்க்கை தளம் கொண்ட China Labour Watch னால் வெளியிடப்பட்டது. அமெரிக்க பில்லியனர் வாரன் பபேயினால் பகுதி உரிமை உடைய இந்த BYD 130,000 தொழிலாளர்களை நியமித்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் வாங் சாங்பூ, 2009ல் சீனாவிலே அதிக செல்வந்தராக இருந்தார்.

BYD சென்ஜென் ஆலையில் தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு $204 தான் ஊதியம் பெறுகின்றனர். இது ஷென்ஜென்னின் குறைந்தப்பட்ச வாழ்க்கைத் செலவுத்தேவை மதிப்பிடப்பட்டுள்ள $243 ஐவிடவும் குறைவாகும். தொழிலாளர்கள் ஆலை கொடுக்கும் வீடு, உணவு இவற்றில் கட்டுண்டு உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 144 மணி நேரக் கூடுதல் வேலை அவர்கள்மீது சுமத்தப்படுகிறது; தங்களுக்குக் கல்வியை அளித்துக் கொள்ளவோ நல்ல வேலை தேடிக்கொள்ளவோ அவர்களால் முடியாது.

China Labour Watch  அறிக்கை கூறுவதாவது: BYD மிக அதிக இலாபங்களை மிகக் குறைந்த உற்பத்திச் செலவுகள் செய்வதின் மூலமே எப்படி ஈட்டுவது என்பது குறித்துத்தான் அக்கறை கொண்டுள்ளது BYD சர்வதேச நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான நோக்கியா, மோடோரோலா, சாம்சுங் போன்றவை மிகக்குறைந்த செலவில் மிகத்தரமான பொருட்களை உற்பத்தி செய்வது குறித்துத்தான் அக்கறை கொண்டுள்ளன. சந்தையில் பொருட்களை விரைவாகக் கொண்டுவருவதற்கு நிறுவனங்களுக்கு உற்பத்தி வேகம் அதிகமாகத் தேவை. எனவே தொழிலாளர்கள் நீண்ட பணி நேரத்தில் நம்பமுடியாத அதிக உற்பத்தி வேகத்திற்காகப் போராட வேண்டியுள்ளது.”

தொழிலாளர்கள் பெரும் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளனர், வருங்காலம் பற்றிச் சிறிதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியவில்லை என்றால், ஆலைக்குள் கடுமையான சமூக மோதல்கள் தோன்றும் என்று அறிக்கை எச்சரிக்கையுடன் முடிக்கிறது.

சீனா முழுவதும் உள்ள கணக்கிலடங்கா கடின உழைப்பு ஆலைகளில் BYD ஒரு சிறு நிறுவனம்தான்; ஒவ்வொரு இடத்திலும் நிலைமை மோசம் என்பதில் இருந்து மிகமோசம் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது.

மே-ஜூ 2010ல் தென்சீன மாநிலமான குவாங்டோங்கில் ஹோண்டா கார்த்தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் தொடக்கிய வேலைநிறுத்த அலை அதிக ஊதியங்களுக்கான கோரிக்கையால் பெரிதும் உந்துதல் பெற்றது. சீனா, ஐரோப்பா அமெரிக்கா ஆகியவற்றில் பாரிய ஊக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலைமையில், சீன உற்பத்தித் துறை தொடர்ந்து விரிவாக்கம் பெறுகிறது. இதையொட்டி முதலாளிகளும் ஸ்ராலினிச ஆட்சியும் பரந்த அமைதியின்மையைத் திசைதிருப்புவதற்குக் குறைந்தப்பட்ச சலுகைகளைக் கொடுக்க முடிகிறது.

பெருநிறுவன உயரடுக்கு அதே நிலையில் இப்பொழுது இல்லை. சீனாவில் வெளிப்பட்டுவரும் வேலைநிறுத்துங்களுக்கும் சமீபத்திய உத்தியோகபூர்வ பொருட்கள் வாங்கும் மேலாளர் குறியீட்டிற்கும் (PMI- உற்பத்தி, சேவை, கட்டுமானத்தை மதிப்பீடு செய்யும்) இடையே தெளிவான தொடர்பு உண்டு. இது நவம்பர் மாதத்தில் உற்பத்திச் சுருக்கத்தை காட்டுகிறது. இந்தச் சரிவு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்னும் சீனாவின் இரு பெரிய ஏற்றுமதிச் சந்தைகளிலும் தேவைக் குறைவை ஒட்டி நடந்துள்ளது. சமீபத்திய நவம்பர் PMI 49தான்இது லெஹ்மன் பிரதர்ஸின் சரிவு ஏற்பட்டிருந்த பெப்ருவரி 2009க்குப் பின் மிகக் குறைவாகும். அப்பொழுது கிட்டத்தட்ட 23 மில்லியன் வேலைகள்—(பெரும்பாலானவை குடியேறிய தொழிலாளர்களின்) 2008-09ல் தகர்க்கப்பட்டன.

மற்றொரு ஆலை மூடல் அலை சீனத் தொழிலாள வர்க்கத்தில் மற்றொரு சமூக வெடிப்பை தூண்டும் அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. எதிர்வரவிருப்பதை காட்டும் வகையில் Federation of Hong Kong Industries பின்வருமாறு தெளிவாகக் கூறுகிறது; சமீபத்தில் அது குவாங்டோங் மாநிலத்தில் உள்ள ஹாங்காங்கிற்கு உரிமையான 5,000 ஆலைகளில் மூன்றில் ஒன்றில் பணியாளர்கள் குறைப்பிற்கு உட்படலாம் அல்லது ஆண்டு இறுதிக்குள் மூடப்படலாம் என்று அது எச்சரித்துள்ளது.