World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Obama backs Mubarak’s bid to retain power

அதிகாரத்தில் நீடிப்பதற்கான முபாரக்கின் முயற்சியை ஒபாமா ஆதரிக்கிறார்

By Peter Symonds
2 February 2011

Back to screen version

எகிப்தில் சண்டைக்கான வரையறைக் கோடுகள் வரையப்படுகின்றன. ஒரு பக்கத்தில், கெய்ரோவிலும் மற்ற நகரங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பங்குபெற்றிருக்க மதிப்பிடப்பட்டிருக்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் எகிப்தின் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கும் அவரது ஆட்சியும் உடனடியாய் அகல வேண்டும் என்று கோரின. இன்னொரு பக்கத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களை அலட்சியத்துடன் புறந்தள்ளி விட்டு முபாரக் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் வரை தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

முபாரக் உரையாற்றிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க தனது எகிப்தியக் கூட்டாளி கொண்டிருக்கும் திட்டத்தை வழிமொழிந்தார். முபாரக்கிடம் 30 நிமிடங்கள் பேசி விட்டிருந்த பின் தான் வழங்கிய சுருக்கமான வெள்ளை மாளிகை உரையில், ஒபாமா, அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையில் நெடுங்காலமாய் இருக்கும்கூட்டை மீண்டும் வலியுறுத்தினார்; ஜனநாயக சீர்திருத்தத்திற்கு உடனடியாகவும் ஒழுங்குற்ற வகையிலும் மாறுவதன் அவசியத்தை பேசினார்; அத்துடன் முபாரக் பதவியிறங்கக் கோரும் வெகுஜனக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க அவர் குறிப்பாய் மறுத்து விட்டார்.

ஒபாமாவின் நோக்கம் மிகத் தெளிவாய் உள்ளது, அதாவது முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்கும் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் தாங்கிப் பிடிப்பதற்குமான ஒரு ஆட்சியை வடிவமைக்கும் அதேநேரத்தில் சாத்தியமான அளவுக்கு முபாரக்கை பதவியில் வைத்துக் காப்பாற்றுவது. வெகுஜன எதிர்ப்பை நசுக்க இராணுவத்தை நம்புவது என்பது தான் தவிர்க்கவியலாமல் இதன் அர்த்தமாகும்.

முபாரக்கை ஆதரிப்பதில் ஒபாமா காட்டும் தீர்மானமான உறுதி ஜனநாயகத்திற்கும் மற்றும் எகிப்திய மக்களின் உரிமைகளுக்கும் ஆதரவளிப்பதான அவரது அறிவிப்புகளின் அப்பட்டமான இரட்டைவேடத்தை அம்பலப்படுத்துகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்க கொள்கையின் ஒரு பிரதான எல்லைக்கல்லாக எகிப்திய சர்வாதிகாரியின் மீது அமெரிக்கா நம்பிக்கை வைத்து வந்திருக்கிறது. அவரது ஆட்சியின் அடக்குமுறைக்கு மவுனமாக ஒப்புதலளித்ததோடு கைதிகளை சித்திரவதை நாடுகளிடம் ஒப்படைக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு அதன் சித்திரவதையாளர்களையும் பயன்படுத்தியிருக்கிறது.

நடப்பு ஆட்சிக்கு உடனடியாய் முற்றுப்புள்ளி வைப்பதற்கு செவ்வாயன்று நூறாயிரக்கணக்கில் திரண்ட எகிப்திய மக்களின் உணர்வுகளுக்கு நேரெதிரான வகையில் அமெரிக்க நிலைப்பாடு அமைந்துள்ளது. கெய்ரோவின் தரிர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்: “அவர் [முபாரக்] தான் போகிறார், நாங்களல்ல”; “புரட்சி! வெற்றி கிட்டும் வரை புரட்சி!”. வெறுமனேஆட்டம் முடிந்தது”, “செக்மேட் மற்றும்வெளியே போ ஆகிய அறிவிப்புகளை தாங்கிய அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்திருந்தனர். ஒரு 19 வயது மாணவர் புளூம்பேர்க்கிடம் தெரிவித்தார்: “எங்களுக்கு வேண்டியது ஹோஸ்னி முபாரக் தொடங்கி மொத்த ஆட்சியும் மாற வேண்டும். ஓமர் சுலைமானோ [துணை ஜனாதிபதி] அல்லது வேறு எவருமோ எங்களுக்குத் தேவையில்லை.”

நாளின் ஆரம்பத்தில், தொடர்வண்டி மற்றும் பேருந்து சேவைகளை நிறுத்துவதன் மூலமும் சாலைத்தடைகளை உருவாக்கியும் நகருக்குள் பயணிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மற்ற பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தவண்ணமாய் இருந்தனர். சூயஸ் மற்றும் அலெக்சாண்டிரியா ஆகியவை உள்ளிட்ட மற்ற பெரிய நகரங்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அங்கும் பத்தாயிரக்கணக்கில் மக்கள் பங்குபெற்றனர். ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான அழைப்பின் பாதிப்பு குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை என்றாலும் பல கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. அலெக்சாண்டிரியா மற்றும் டமியேட்டா துறைமுகங்களில் சரக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. “சுங்க அதிகாரிகள் இல்லை. கிரேன்களை இயக்க ஆளில்லை. நாடே ஒட்டுமொத்தமாய் கடையடைப்பு செய்திருந்தது என்று நீங்கள் சொல்ல முடியும் என்று லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனத்தின் முகவரான டேன் டெலானி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிடையே எதிர்பார்ப்பு மிக அதிகமாய் இருந்தது. செய்தி நிறுவனங்கள் ஒரு விழாக்கால சூழலாக வருணித்தன. ஆனால் முபாரக்கின் உரையைத் தொடர்ந்து அந்த மனோநிலை துரிதமாய் அவநம்பிக்கையாகவும் கண்டனமாகவும் மாறியது. கூட்டத்திடம் அத்தகையதொரு கோபத்தை தான் இதற்குமுன் கண்டதில்லை என்று தரிர் சதுக்கத்தில் இருந்த சிஎன்என் செய்தியாளர் அறிவித்தார். சிலர் இந்த உரையை அவமதிப்பாக அறிவித்தனர். பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த தங்களது காலணிகளை உயர்த்திக் காட்டினர். இரவு நேர ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் பெரும் கூட்டம் சதுக்கத்திலேயே தொடர்ந்து இருந்தது.

முபாரக்கின் உரை ஒரு திட்டவட்டமான மிரட்டலைக் கொண்டிருந்தது. இந்தப் போராட்டங்களுக்கு முன்முயற்சியளித்த இளைஞர்கள் நியாயமான காரணங்களைக் கொண்டிருந்தனர் என்று அறிவித்த ஜனாதிபதி அதே சமயத்தில், அரசியல்சட்டத்தை அழிக்க விரும்பிய அரசியல் குழுக்களாலும் சூறையாடலில் ஈடுபட்ட இன்னும் சிலராலும் எதிர்ப்பு இயக்கம்சுரண்டப்பட்டிருந்ததாய் மேலும் சேர்த்துக் கொண்டார். செப்டம்பர் தேர்தலில் தான் ஒதுங்கிக் கொள்ளவிருப்பதாக அறிவித்த பின்னர், முபாரக், வரும் மாதங்களில்ஸ்திரநிலையை ஸ்தாபிப்பது தனது பொறுப்பு என்று அறிவித்ததோடு குற்றவியல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை கையாளுவதற்கான நடவடிக்கைகள் குறித்து சூசகம் செய்தார்.

தொடர்ந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை இராணுவம் கட்டுப்படுத்தும், இறுதியாக ஒடுக்கி விடும் என்று முபாரக்கும் ஒபாமா நிர்வாகமும் தெளிவாக கணக்குப் போடுகின்றனர். இன்றைய தேதி வரை, சீர்திருத்தத்திற்கானநியாயமான கோரிக்கைகளை வாயடைப்பதற்கு, படைவலிமையைப் பயன்படுத்தப் போவதில்லை என்று இராணுவம் அறிவித்திருக்கிறது. ஆனால் ஒரு அமெரிக்க அதிகாரி அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதைப் போல, ஆர்ப்பாட்டக்காரர்கள்தாங்களாகவே களைத்து ஓய்வதற்கு அனுமதிக்க இராணுவத் தலைமை திட்டமிட்டிருக்கிறது. திரைமறைவில், தாங்கள் சரியானதாகக் கருதும் நேரத்தில் அடக்குமுறையை மேற்கொள்வதற்கு தளபதிகள் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

ஒபாமா நேற்றுக் கூறிய கருத்துகளில், “எகிப்தின் தலைவர்களைத் தீர்மானிப்பது வேறெந்த நாட்டின் வேலையும் அல்ல என்று வேசம் போட்டு அறிவித்தார். ஆனால் அதனைச் செய்வதில்தான் நாள் முழுவதும் அமெரிக்க அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர். அமெரிக்க சிறப்புத் தூதரான பிராங்க் விஸ்னர் முபாரக் அரசாங்கத்தின் முன்னணி நபர்களிடம் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில், பாதுகாப்புச் செயலரான ராபர்ட் கேட்ஸ் தனது எகிப்திய சகாவான பீல்டு மார்ஷல் உசைன் தந்தாவியுடன் ஒரு தொலைபேசி உரையாடல் செய்து இராணுவ அடுக்கு குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். இந்த ஆலோசனைகளின் விளைபொருள் தான் ஒபாமாவின் சிறு உரை. முகமது எல் பரடெய் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சோதிக்கப்படாத ஒரு கூட்டணியை நோக்கித் திரும்புவதைக் காட்டிலும் நடப்பு ஆட்சிக்குப் பக்கபலமாய் நிற்பதே சிறந்தது என வெள்ளை மாளிகை தீர்மானித்துள்ளது.

மாற்ற நிகழ்முறை இப்போதே தொடங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி ஆட்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் ஒபாமா அழைத்திருக்கும் அதே சமயத்தில் எந்த பங்கேற்பும் அமெரிக்கா கூறும் வழிகளில் தான் இருக்கும். இதன் விளைவாய், அரசியலமைப்பு மாற்றத்தையும் புதிய நாடாளுமன்ற தேர்தலையும் மேற்பார்வை செய்வதற்கு துணை ஜனாதிபதி சுலைமான் மற்றும் இராணுவப் படைத் தலைவரான லெப்டினண்ட் ஜெனரல் சமி அனான் ஆகியோர் கொண்ட ஒரு அவசரகால இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி வரிசையை சேர்ந்த மாற்றத்திற்கான தேசிய கழகம் அளித்த ஆலோசனைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

முபாரக் உரைக்கான எல் பரடேயின் பதிலிறுப்பில், ஆட்சி தனது அங்கீகாரத்தை இழந்து விட்டிருக்கிறது என்று அறிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் இராஜினாமா மட்டுமே ஸ்திரநிலையைக் கொண்டு வரும் என்று மேலும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், எகிப்துக்கான அமெரிக்கத் தூதரான மார்கரெட் ஸ்காபே உடன் அவர் ஒரு தொலைபேசி உரையாடலும் செய்திருந்தார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் முபாரக் முதலில் வெளியேற வேண்டும் என்று முன்பு அறிவித்திருந்த போதிலும் கூட துணை ஜனாதிபதி சுலைமான் உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பதாக அல் அரேபியா தெரிவிக்கிறது.

இந்த எதிர்க்கட்சிக் குழுக்கள் எல்லாம், உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வெகு அப்பால், முபாரக்-எதிர்ப்பு எழுச்சியைத் தணித்து விடுவதற்கான முக்கிய பாதுகாப்பு வால்வுகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த மக்கள் இயக்கம் தீவிரமான அபாயங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளும் கண்ணியமான வாழ்க்கைத் தரங்களும் கோரி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் கோரிக்கைகளை எகிப்திய முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பிரிவினாலும் (முபாரக் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்களானாலும் சரி அல்லது இப்போதுஜனநாயகவாதிகளாக காட்சிதரும் பல்வேறு எதிர்க்கட்சி ஆசாமிகள் அல்லது கட்சிகளானாலும் சரி) பூர்த்தி செய்ய முடியாது. தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலமும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கும் சோசலிசக் கொள்கைகளுக்குமான புரட்சிகரப் போராட்டத்தில் இளைஞர்களையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளையும் தன்பக்கமாய் இழுப்பதன் மூலமாகவும் மட்டுமே தனது நலன்களுக்காய் போராட முடியும்.