World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Moroccan government fears outbreak of mass protests

வெகுஜன எதிர்ப்புக்கள் வெடிக்கக் கூடும் என்று மொரோக்கோ அரசாங்கம் அஞ்சுகிறது

By Alejandro López
3 February 2011

Back to screen version

எகிப்திய நகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கையில், முன்னாள் சர்வாதிகாரி ஜைன் எல் அபிடைன் பென் அலியை அகற்றியபின் எதிர்ப்புக்கள் துனிசியாவில் தொடரும் நிலையில், மொரோக்கோ முடியாட்சி மக்கள் எதிர்ப்புக்களை அடுத்ததாக முகங்கொடுக்க வேண்டியிருக்கலாம் என அஞ்சுகிறது.

ஸ்பெயினின் பொதுத் தொலைக்காட்சி கொடுத்துள்ள தகவல்களின்படி, மொரோக்கோத் துருப்புக்கள் காசாபிளாங்கா, ராபா உட்பட பல முக்கிய மொரோக்கோ நகரங்களுக்கு அவற்றின் மேற்கு சகாராத் தளங்களிலிருந்து அனுப்பப்படுகின்றன. இந்த அறிக்கையை மாட்ரிட்டிலுள்ள மொரோக்கோ தூதரகம் கண்டித்துள்ளது.

மொரோக்கோவிலுள்ள அரசாங்க சார்பு செய்தித்தாள்களும் பிரெஞ்சு செய்தி இதழான Le Nouvel Observateur இலும் எதிர்த்தரப்புச் செய்தியாளர் அபுபக்கர் ஜமை விடுத்துள்ள அறிக்கைகளை குறைகூறியுள்ளன. எதிர்ப்புக்கள் மொரோக்கோவில் வெடித்தால், “நாட்டில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயுள்ள மிகப் பெரிய இடைவெளி துனிசியப் புரட்சியை விட அதிக குருதியைக் கொட்ட வைக்கும்என்று ஜமை கூறியிருந்தார்.

ஆனால் மொரோக்கோவின் அரச குடும்பத்தினரால் கூட வெகுஜன சமூக எதிர்ப்பு பற்றிய அச்சங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஸ்பெயினின் நாளேடான El Pais க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் இளவரசர் முலய் ஹிச்சம், அரசர் ஆறாம் மஹமத்தின் ஒன்றுவிட்ட சகோதரர், “இந்த எதிர்ப்பு அலையினால் கிட்டத்தட்ட சர்வாதிகார முறைகள் அனைத்துமே பாதிப்பிற்கு உட்படக்கூடும், மொரோக்கோ ஒன்றும் விதிவிலக்காக இருக்காதுஎன்று எச்சரித்துள்ளார்.

துனிசியாவிற்கும் மொரோக்கோவிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, இளவரசர் விளக்கினார்: “சமூக வர்க்கங்களுக்கு இடையேயுள்ள இடைவெளி அரசியல் மற்றும் பொருளாதார முறையில் சட்டரீதியாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.” மொரோக்கோவின் அரசியல் ஸ்தாபனமே மோசமாக பிளவுகளிலுள்ளது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்: “பெரும்பாலான சமூக முகவர்கள் முடியரசிற்கு அங்கீகாரம் கொடுத்தாலும், அப்படியும் அவர்கள் நிர்வாகத்தின் கைகளில் வலுவான அதிகாரக் குவிப்பு பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர்.”

மக்கள் சீற்றம் வெடிப்புத் தன்மை அடைவதை ரபா தடுக்கும் வகையில் அடிப்படைப் பொருட்களின் விலை உறுதியாக இருக்க இது உத்தரவாதம் அளிக்க முற்படுகிறது. அரசாங்கத்தின் பொதுத் தொடர்புத்துறை மந்திரியும் செய்தித் தொடர்பாளருமான ஜலிட் நசிரி விலைகளின் உறுதிப்பாடு இழப்பீட்டு நிதியத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படும், அந்த நிதி மூலம் மொரோக்கோ சந்தைகளில் தலையிட்டு மாவு, சர்க்கரை, புடேன் எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் விலைகளைக் குறைக்கும் என்று அறிவித்துள்ளார்.

மொரோக்கோ அரசாங்கத்தின் அச்சங்கள் சிறு எதிர்ப்புக்களுக்கு எதிராக அது பெரும் பொலிஸ் நிலைநிறுத்தலை ஏற்படுத்தியுள்ளதிலிருந்து தெரிய வருகின்றன. எதிர்ப்புக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ஞாயிறு இரவு, நூற்றுக்கணக்கான மக்கள் Fez மற்றும் Tangier பகுதிகளில் ATTAC எனப்படும் குடிமக்களுடையை உதவிக்கான நிதிய நடவடிக்கைகள் மீது வரிவிதிப்புச் சங்கம் என்னும் உலகமயமாக்கலை எதிர்க்கும் குழு அழைப்புவிடுத்திருந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். இது எகிப்திய எதிர்ப்புக்களுடன் ஒற்றுமை உணர்விற்கு என்று கூறப்பட்டது. “முபாரக், முபாரக், சௌதி அரேபியா உங்களுக்குக் காத்திருக்கிறதுஎன்று அவர்கள் கோஷமிட்டனர்இது சௌதி அரேபியா பென் அலிக்கு புகலிடம் கொடுத்துள்ளது பற்றிய குறிப்பு ஆகும்.

திங்களன்று மொரோக்கோ மனித உரிமைகள் சங்கம் அழைப்புவிடுத்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் 100 முதல் 150 மக்கள் ரபாவிலுள்ள எகிப்திய தூதரகத்தின் முன் ஆர்ப்பரித்தனர். எதிர்ப்பாளர்கள்முபாரக்கே, விலகு”, “அரபு மக்களுக்கு ஜனநாயகம் தேவைஎன்று கோஷமிட்டனர். இச்சிறிய ஆர்ப்பாட்டத்தைப் பெரும் பொலிஸ் பிரிவினர் சூழ்ந்து நின்றனர்.

அதே தினத்தில் 40 ஆசிரியர்கள் ரபாவில் கல்வி அமைச்சரகத்திற்கு முன்பு அவர்களை 2008ல் பணிநீக்கம் செய்ததை எதிர்த்து தங்களையே தீக்கிரையாக்கிக் கொள்ள முற்பட்டனர். ஒருங்கிணைக்கப்படாத தன்னார்வ ஆசிரியர்களின் தேசிய அமைப்பின் தலைவரான ஹபின் லிபியின் கருத்துப்படி இந்த ஆசிரியர்கள்எந்த உதவியையும் பெறவில்லை, நிரந்தர வேலை கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லைஎன்றார். பொலிஸ் தீக்குளித்தலை குறுக்கிட்டு தடுத்தாலும்கூட, பெண்கள் சிலர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துனிசியாவில் கடந்த டிசம்பர் மாதம் மஹ்மத் பௌவாஜிஜி தன்னையே தீக்கிரையாக்கிக் கொண்டதானது இப்பொழுது அரபு உலகையே அதிர்விற்கு உட்படுத்தும் எதிர்ப்பு அலைகளை தொடக்கியுள்ளது.

மொரோக்கோவில் சமூக நிலைமையும் வெடிப்புத் தன்மையில் தான் உள்ளது. ஐரோப்பிய சர்வதேச நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பாக நாடு வெளிப்பட்டுள்ளது. வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மிக உயர்ந்த அளவில் சுரண்டப்படுகின்றனர். வேலையற்றோர் விகிதம் 9 முதல் 10 சதவிகிதம் என்று உள்ளதுஉண்மையான விகிதம் உயர்வாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இளைஞர்களிடையே வேலையின்மை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் என்று உத்தியோகபூர்வமாக உள்ளது.

அலவி குடும்பம் மற்றும் மக்செனும் (வணிகர்கள், செல்வம் படைத்த நிலக்கிழார்கள், பழங்குடி மக்கள் தலைவர்கள், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆட்சித் துறையினர் அடங்கிய மொரோக்கவின் ஆளும் உயரடுக்கு) மேலைத்தேய ஏகாதிபத்தியத்துடன் வலுவான பிணைப்புக்களை கொண்டுள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி இரண்டிலும் பிரான்ஸ்தான் மொரோக்கோவின் மிகப் பெரிய வணிகப் பங்காளி நாடாகும். மொரோக்கோவின் வெளிநாட்டு முதலீட்டில் 60 சதவிகிதத்திற்கும் மேலானவற்றை கட்டுப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின் உள்ளது. அமெரிக்காவுடனும் ரபா நெருக்கமான அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளது. அதனிடம் இருந்துதான் இது தனக்குத் தேவையான ஆயுதங்களை அதிக அளவில் வாங்குகிறது. நேட்டோவில் இல்லாத நட்பு நாடுகளில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமானது என்று மொரோக்கோ கருதப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று அரசர் ஆறாம் முகம்மது பிரான்ஸுக்குப் பயணித்து, திங்கன்று மொரோக்கோவிற்கு திரும்பி வந்தார். இவர்விடுமுறைக்காகசென்றார் என்று El Pais கூறினாலும், பிற Hespress போன்ற ஆதாரங்கள் அவர் பிரான்சிற்கு உயர்மட்ட பாதுகாப்பு, இராணுவ அதிகாரிகள், அரசரின் ஆலோசகர்கள் ஆகியோர் அடங்கிய குழுவுடன் சென்றார் எனக்கூறியுள்ளன.

பிரெஞ்சு செய்தி இதழான Rue89 கூறுவது: “துனிசிய நிகழ்வுகள் தோற்றுவித்த எதிர்ப்பை மொரோக்கோ இப்பொழுது தவிர்த்துள்ளது எனத் தோன்றினாலும்கூட, மொரோக்கோ அரசர் தன் நாட்டை விட்டு நீங்கி அவருடைய பிரெஞ்சு இல்லத்தில் புகலிடம் கொள்ள வேண்டும் என்ற தேவையை உணர்கிறாரா? மொரோக்கோ செய்தியாளர் அலி லம்ரபெட், வாராந்திர Le Journal ன் முன்னாள் தலைமை ஆசிரியர் பேஸ்புக்கில் மொரோக்கோ அரசர் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் மொரோக்கோ நிலைமை பற்றிஇரகசியப்பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று குறிப்புக் காட்டியுள்ளார்.”

ஸ்பெயின் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களும் மொரோக்கோ வெகுஜன புரட்சிகர எதிர்ப்பின் தீவிரமயமாதல் பாதிப்பு உள்நாட்டில் வருவது பற்றி அஞ்சுகின்றன. ஸ்பெயினில் மொரோக்கோவிலிருந்து குடியேறியுள்ள மக்களின் எண்ணிக்கை 710,000 என்றும் பிரான்சில் 1,110,000 என்றும் உள்ளன. ஆனால் பரந்த எதிர்ப்புக்கள் மொரோக்கோ குடியேற்றச் சமூகத்தினருக்கும் அப்பாலும் பரவக்கூடும்.

2010ல் சார்க்கோசி மற்றும் ஸ்பெயினின் பிரதம மந்திரி ஜோஸ் லூயி சாப்பாத்தேரோவும் ஜனநாயக நெறி நம்பகத் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள், ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை வெகுஜன எதிர்ப்பை மீறிச் சுமத்தினர். அதே நேரத்தில் கலகமடக்கும் பொலிஸ் பிரிவும் வேலைநிறுத்தங்களை முறியடிக்கப் பயன்படுத்தினர். சாப்பாத்தேரோ பாசிச சகாப்தஎச்சரிக்கை நிலைமை சட்டத்தைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முறியடித்தார்.

கடந்த இலையுதிர்காலத்தில் ஸ்பெயினிலும் பிரான்சிலும் மில்லியன் கணக்கான மக்கள் சமூக நலன்களை எதிர்த்த கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு அணிவகுத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.