World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s Congress-led government unable to quash 2G scandal

இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தால் 2 ஜி ஊழலை மறைக்க முடியவில்லை

By Kranti Kumara 
11 January 2011

Back to screen version

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம், 2008இல் கம்பியில்லா 2ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை உரிமங்களை, ஏலம் இன்றி வழங்கியது சம்பந்தமான ஊழலை மறைக்க முடியாமல் உள்ளது.

இந்த ஊழல் குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் தலைமை, இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்பதைக் காட்டிலும், நவம்பர் மாதத்திலிருந்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கச் செய்வதையே விரும்பியதனால் அனைத்து நாடாளுமன்ற பணிகளும் முடங்கின.

இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) யின் அதிகாரபூர்வ தலைமையில் எதிர்கட்சிகள், தங்களது சுய பிற்போக்கு ஆதாயங்களுக்காக அரசாங்கத்தின் ஊழலை வெளிப்படுத்துவதனை வஞ்சமாக பயன்படுத்துகின்றன என்பது மட்டுமே நிச்சயம்.

முதலாளிகளுக்கு சார்பான "புதிய பொருளாதார கொள்கை" யை இந்தியா சுவீகரித்துக்கொண்டதன் இருபதாம் ஆண்டையொட்டி ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ள அந்த ஊழலின் வெளிப்பாடானது  இந்தியாவின் புதிய கோடீஸ்வர முதலாளிகளுக்கு ஏவலாளிகளாக எந்தளவுக்கு அரசாங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் செயல்பட்டன என்பதற்கான கண்டனம் மிக்க ஆதாரமாகவே விளங்குகிறது.

2ஜி விவகாரம் தொடர்பான புலன்விசாரணையில் போலீஸ் தொலைபேசி தொடர்புகளை பதிவு செய்த பதிவுகள் பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டது  தரகர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற மந்திரிசபை  அமைச்சர்களையும், அரசாங்க கொள்கைகளையும் உத்தரவாக பிறப்பிப்பதை அம்பலப்படுத்துகிற அதேநேரத்தில், அரசாங்க ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் தெரிகிறது. இதனிடையே பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாசிரியர்கள் நிறுவன தரகர்களுக்கு ஆதரவாக கதைகளை உருவாக்குவதும் அநேகமாக பணம் மற்றும் இதர ஆதாயங்களுக்காகத்தான் இருக்கும்.

கடந்த நவம்பர் 10 ல், இந்திய தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2ஜி உரிமங்களை தன்னிச்சையான முறையில் வழங்கப்பட்டதால் அரசு நிதித்துறைக்கு 13 பில்லியன் டாலர் முதல் 40 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குற்றம்சாட்டியிருந்தார். 2008 இல் நடந்த உரிமங்கள் ஒதுக்கீடு "வெளிப்படையாக இல்லாமல், தன்னிச்சையாகவும், நியாயமற்றதாகவும், முறைகேடாகவும்" நடந்ததாக அந்த அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய தொலைபேசி சந்தை வளர்ச்சியடையாமல் இருந்த காலமான 2000இல் இருந்த அதன் மதிப்பின் அடிப்படையில், அலைக்கற்றையை வாங்க குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அழைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், அந்த நிறுவனங்கள் உடனடியாக தங்களது உரிமங்களை அரசாங்கத்திற்கு என்ன விலை செலுத்தினார்களோ அதற்கு மூன்று மடங்கு அதிகமாக மீண்டும் விற்றுவிட்டது. மற்ற நிறுவனங்கள், அவர்கள் கடைசியாக செலுத்திய தொகையைவிட மிக அதிகமான விலையில் அலைக்கற்றையை  வாங்க முதலிலேயே கோரிக்கை வைத்தனர். அலைக்கற்றை எவ்வாறு மிகமலிவான விலையில் விற்கப்பட்டுள்ளது என்பது குறித்த கவனத்தை ஈர்த்து விடக்கூடாது என்பதற்காகவே அநேகமாக தொலைதொடர்பு துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கலாம்.

சிஏஜி அறிக்கை வெளியான நான்கு தினங்கள் கழித்து, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராஜா, இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். 2ஜி ஊழல் குறித்து சிஏஜி பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும், ராஜா தன்னிச்சையான முறையில் உரிமங்களை வழங்கியது விதம் குறித்து அரசியல் மற்றும் தொழிற்துறை வட்டாரங்களுக்குள் நீண்ட காலமாகவே புகார்கள் இருந்துவந்தன. இருந்தும் நிறுவன ஊடகங்களால் நேர்மையின் தூணாக வர்ணிப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், 2009 மே மாத தேர்தலுக்கு பின்னர் அவரையே தமது அமைச்சரவையில் மீண்டும் அமர்த்திக்கொண்டார்.

சிஏஜி அறிக்கை வெளியானதையொட்டி, அரசியல் தொடர்புள்ள நிறுவன தரகர் நீரா ராடியாவுக்கும் இந்தியாவின் செல்வசெழிப்புள்ள தொழிலதிபர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் இதர அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பிரபல ஊடக புள்ளிகள் ஆகியோருடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் அரசாங்க பதிவுகளின் எழுத்து வடிவங்களை பல்வேறு இந்திய ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.

பத்தாண்டுகளுக்கும் குறைவான காலக்கட்டத்தில் 3 பில்லியன் ரூபாய் ( 67 மில்லியன் டாலர்) மதிப்பிலான தரகர் வியாபாரங்களை கட்டியெழுப்ப முடிந்த ராடியா, 2ஜி உரிமங்கள் வழங்கலின் மூலம் ஆதாயமடைந்த டாடா குழுமத்தின் ரத்தன் டாடா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி போன்ற குறைந்தது இரண்டு கோடீஸ்வரர்களின் பிரதிநிதியாக இருந்தார். 

குறிப்பிடத்தக்கது என்னவெனில், முகேஷ் அம்பானியின் சகோதரரும், அவரது எதிரியுமான மற்றொரு கோடீஸ்வர முதலாளியான அனில் அம்பானி கொடுத்த பணத்திற்காக, ராடியாவின் முன்னாள் ஊழியரான மூத்த அதிகாரி ஒருவரது உதவிக்கு பின்னர் ராடியாவின் வரி ஏய்ப்பு குறித்த விசாரணை தொடங்கியது முக்கியத்துவமானது.

இதுநாள் வரை, இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ) பதிவு செய்யப்பட்ட ராடியா உரையாடல்கள் 5,800 இல் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் ஊடகங்களுக்கு கசிந்துள்ளன. ராடியா குறித்த சிபிஐ-யின்  தொலைபேசி பதிவுகள், 2008 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான 120 நாட்கள் மற்றும் 2009 ஜூலையுடன் முடிவடைந்த 90 நாட்களுடையதாக இருந்தது. ஓர் ஆண்டின் காலாண்டுக்கும் அதிகமான நாட்களில் அந்த தொலைபேசி பதிவுகள் ஏன் துண்டிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்பதற்கோ அல்லது ஏன் புலன் விசாரணை திடீரென்று நிறுத்தப்பட்டது என்பதற்கோ எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. சிஏஜி அறிக்கை வெளியானது மற்றும் கசிந்த தொலைபேசி பதிவுகளின் எழுத்து வடிவங்கள் வெளியானதன் எதிரொலியாக, அதனை புதுப்பிப்பதற்காக மட்டுமே, ராடியாவின் இடங்களில் கடந்த மாதம் போலீஸாரால் சோதனை நடத்தப்பட்டன. 

இந்தியாவின் உள்துறை அமைச்சக உயரதிகாரியும், ராடியாவின் தொலைபேசியை பதிவு செய்வதற்கு அதிகாரமளித்தவருமான ஜி.கே.பிள்ளை, நவம்பர் மாதம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தொலைபேசி பதிவுகள் கசிந்ததை நிராகரித்ததோடு, இதுவரை என்ன "சாரம்சங்கள்" வழங்கப்பட்டனவோ, அவையெல்லாம் ஊடகங்களின் "பரபரப்பு தூண்டுவதற்கு" என்றார். கசிந்த தொலைபேசி பதிவுகள், அரசாங்க புலன் விசாரணையின் மையமாக இருக்கும்" "மொத்த பொருளின் வெறும் சுரண்டி எடுக்கப்பட்ட பகுதிதான் அதுவும் என்று அவர் கூறினார்.

பிள்ளை கூறியதை இந்தியாவின் தொழில்துறை உயர்தட்டினரும், டாடாவும் பொய்யெனக்கூறி கோபமான பிரதிபலிப்பை காட்டினர். அதேசமயம் 2ஜி உரிமங்களை இந்திய அரசாங்கம் எந்தளவுக்கு மலிவாக  வழங்கின என்பது குறித்த முழுக்கதை பற்றிய கேள்விக்கு இன்னமும் பதிலளிக்கப்படாததோடு, உலகின் மிக பிரபலமான ஜனநாயகமாக கருதப்படும் அரசியலின் இதயமாக உள்ள பணத் தொடர்பை அந்த தொலைபேசி பதிவுகள் வெளிச்சம்போட்டு காட்டியது.

கசிந்த சில தொலைபேசி உரையாடல்களில் பெரும்பாலானவை, 2009 மே தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் அமைச்சரவையை தேர்ந்தெடுப்பதை சுற்றியே இருந்தன. ராடியா மற்றும் இதர தொழில்நி்றுவன பேச்சாளர்கள் அதிகார தரகர்களாக பங்காற்றியதையும், பல்வேறு அமைச்சரவை வேட்பாளர்களை முன்னிறுத்தவும், கவிழ்க்கவும் செய்ததையும் அந்த உரையாடல்கள் காட்டின.

தமிழகத்தை சேர்ந்த திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) சார்பில் அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்ட ராஜாவின் தலையெழுத்து, திமுகவில் அதிகாரம் செலுத்துவதில் கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடந்த கடுமையான உள்குத்துவெட்டு காரணமாக சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்குவதற்காக ராடியா மற்றும் இதர தொழில்நிறுவன நலவாதிகள் கடுமையான அழுத்தம் கொடுத்தனர். 

2009 மே தேர்தல் முடிந்த குறுகிய நாட்களிலேயே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், ராசாவை மீண்டும் தொலை தொடர்பு துறை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் "சம்மதித்துவிட்டார்" என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஓய்வு பெற்ற தலைவர் தருண் தாஸிடம் ராடியா தெரிவிக்கிறார்.

பதிலுக்கு, மற்றொரு அதிகாரமிக்க தொலைதொடர்பு துறை தொழிலதிபரான சுனில் மிட்டலின் விரோதத்தை ராஜா சம்பாதித்துக் கொண்டதால், அவர் ராஜாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று தாஸ் கூறுகிறார்.

அதற்கு பிறகு ராடியா, "ராஜா தனக்குத்தானே நியாயமாக நடந்துகொள்வார். என்னை நம்புங்கள் அவர் நியாயமாக நடந்துகொள்வார்... நான் வாக்குறுதியளித்தால், ராஜா வாக்குறுதியளித்ததாகும், அவர் மிட்டலிடம் பேசி இந்த விவகாரத்தை முடிப்பார். அதனை என்னிடம் விட்டுவிடுங்கள்" என்று தெரிவிக்கிறார். 

அதன் பின்னர் தருண் தாஸ், தாம் ராஜா குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசிவிட்டு, மீண்டும் அவரிடம் தொடர்புகொள்வதாக கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து நடந்த உரையாடல்களில், மிகுந்த முயற்சிகளுக்கு பின்னர் பரிசுத்தவாதி மற்றும் நாகரீகமான தொழிலதிபர் என்று தம்மீது மதிப்பை ஏற்படுத்த செய்த டாடா, ராஜா மீண்டும் தொலைதொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதால் ஆறுதல் அடைந்துள்ளார் என்று ராடியா அறிவிக்கிறார்.

மற்றொரு உரையாடலில், முந்தைய அரசில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னணி காங்கிரஸ் அரசியல்வாதியான கமல்நாத்தை தாம் "பெரிய வாய்ப்புக்கு" தள்ளியுள்ளதாகவும், அவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாகவும் ராடியாவிடம் தருண் தாஸ் தெரிவிக்கிறார். உள்நாட்டு மற்றும் அன்னிய வர்த்தகம் ஆகிய இரண்டுக்குமே உதவும் என்பதால்,"முதலீட்டிற்கு சாதகமான" பொது மற்றும் தனியார் கூட்டுக்கு முன்னுரிமை அளிக்கும்விதமாக சிஐஐ மற்றும் பெரும் தொழிலதிபர்கள் ஒன்றாக சேர்ந்து நெடுஞ்சாலை அமைப்பதை விரைவாக்குவதற்காக நீண்டகாலமாகவே முயற்சித்து வருகின்றனர்.

தாஸ் விரும்பியபடியே இறுதியில் அந்த பதவியை பெற்ற கமல்நாத்தை ஒரு "சுறுசுறுப்பான நபர்" என்று வர்ணிக்கும் தாஸ், மேலும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக அவரால் "15 சதவிகிதம்" ஈட்ட முடியும் என்று அதாவது ஒப்பந்தங்களுக்கான லஞ்சம் மற்றும் இதர ஊழல்கள் பற்றி குறிப்பிட்டு கூறுகிறார்.

தாஸ் கருத்துரைக்கிறார், "நீங்கள் தேசத்திற்கு சேவையாற்றியபடியே பணமும் சம்பாதிக்கலாம்... மற்றும் உண்மையிலேயே இங்கே ஏதாவது பயனுடையதாக செய்யலாம்." அதற்கு பதிலளிக்கும் ராடியா, "இது கலம்நாத்திற்கு இன்னும் ஒரு ATM (தானியங்கி பணம் எந்திரம்)" என்று கூற, அதற்கு தாஸ், "முற்றிலும் சரி" என்று பதிலளிக்கிறார். 

மற்றொரு உரையாடலில், எதிர்கட்சி நாடாளுமன்றவாதியும், முன்னாள் நிதிச் செயலருமான என்.கே. சிங், முரளி தியோரா அநேகமாக பெட்ரோலியத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார். ஏனெனில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பெட்ரோ இரசாயன தொழிலை கொண்டுள்ளதால், "அதனை அவருக்காக ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்" என்று ராடியாவிடம் கூறுகிறார்.

கமல்நாத்திற்கு நீண்ட காலத்திற்கான ATM இருப்பதால் அவருக்கு "மற்றொரு ATM தேவையில்லை" என்று சிங் மேலும் குறைகூறவும் செய்கிறார்.

முகேஷ் அம்பானியின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியின் எல்லைக்குட்பட்டு மட்டுமே இருக்கவில்லை. நவம்பர் 28 ஆம் தேதியன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு, பிஜேபி இன் நீண்ட கால மூத்த தலைவரான அருண் ஷோரி அளித்த பேட்டியில், 2009இல் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது, அம்பானிக்காக வேண்டுமென்றே எழுதப்பட்ட வரி மீறலை எதிர்த்து பேசுவது பதிவு செய்யப்பட்டுவதை விரும்பாத கட்சித் தலைமை, பிஜேபி இன் முதல் பேச்சாளராக தமக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்று குற்றம்சாட்டினார்.

என்.கே. சிங்குடனான உரையாடலில், இந்த ஒற்றை வரி மீறல் முகேஷ் அம்பானிக்கும், அவரது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் 810 பில்லியன் ரூபாய் அல்லது 18 பில்லியன் டாலர் மதிப்புடையது என்று ராடியா கூறினார்.

அரசியல்வாதிகளைப் போன்றே, தொழிலதிபர்களின் நலன்களுக்காக முன்னணி ஊடக பிரபலங்களும் முன்னணி நபர்களாக நின்று செயல்பட்டார்கள் என்பதை ராடியா தொலைபேசி பதிவுகள் நிரூபிக்கின்றன.

கசிந்த உரையாடல்களில் ஒன்றில், இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் டைம்ஸ் (HT), இன் ஆசிரியர்குழுவின் இயக்குனராகவும், ஆசிரியராகவும் சமீப காலம் வரை இருந்த வீர் சங்வி, இயற்கை எரிவாயு விலை தொடர்பாக முகேஷ் அம்பானிக்கு அவரது சகோதரர் அனில் அம்பானியுடன் உள்ள பிரச்சனை குறித்து முகேஷ் அம்பானிக்கு சாதமாக ஹிந்துஸ்தான் டைமில் கட்டுரை ஒன்றை எழுதியதாக ராடியாவிடம் கூறுகிறார்.

"சரி, அதை எழுதிவிட்டேன்," என்று தெரிவிக்கிறார் சங்வி. நமது வளங்கள் சுரண்டப்படுவதை பொதுமக்கள் எப்படி பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்பது போன்று கட்டுரையில் அதனை 'நான் காட்டியுள்ளேன்." அதன் பின்னர் அந்த கட்டுரையை ராடியாவிடம் அவர் விளக்குகிறார்:" அலைக்கற்றை எவ்வாறு ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்ற உதாரணத்தை இதற்கு நான் கொடுத்துள்ளதோடு, இந்த நாட்டில் ஊழலுக்காக பொதுமக்களிடம் நிச்சயம் சகிப்புத்தன்மை உள்ள அதே நேரத்தில், நமது சொத்துக்கள் மற்றும் நமது அரிய வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லை என்றும் நான் கூறியுள்ளேன். நமது நாட்டிற்கு நடக்கப்போவது என்னவென்றால், யாராலும் கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை போன்று சிறு குழுவினரால் நடத்தப்படும் நாடாக நாம் ஆகப்போகிறோம். அதனால் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும், ஏனெனில் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை அவர் அடிப்படையிலேயே கைவிடுகிறார்."  

அதற்கு நீரா ராடியா பதிலளிக்கிறார்: "மிக நன்றாக உள்ளது." சங்வி மேலும் விளக்குகிறார்: மன்மோகன் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் போன்று அதனை நான் காட்டியுள்ளேன், எனவே தெரிந்தவர்களை தவிர அது அம்பானிகளுக்கு இடையேயான சண்டையாக தெரியாது."

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ம் கூட, அதன் இடது முன்னணி மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிகிற போதிலும்,தனது சுய தம்பட்ட "முதலீட்டாளர்களுக்கு ஆதரவான" தொழிற்துறை கொள்கையின் ஒரு பகுதியாக ராடியாவையும், அவரது நிறுவனத்தையும் பயன்படுத்திக்கொண்டது. கசிந்த உரையாடல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்றாலும், ராடியாவின் நிறுவனம் மேற்குவங்க தொழில் வளர்ச்சி கழக மற்றும் மேற்கு வங்க தகவல் தொழில்நுட்ப துறையின் பிரதிநிதியாக உள்ளதாக நவம்பர் 28 ஆம் தேதியிட்ட டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ராடியா தனிப்பட்ட முறையில் மேற்கு வங்க முதலமைச்சரும், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி அரசியற்குழு  உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி மற்றும் தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் ஆகியோருடன் பேசிவருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   

ரத்தன் டாடா மற்றும் பட்டாச்சார்ஜி ஆகியோரை ஒன்றுசேர்த்து மேற்குவங்கத்தின் சிங்கூர் நகரில் டாடா "நானோ" (Nano) கார் தொழிற்சாலை திட்டத்தை கொண்டு வருவதற்காக ராடியா முக்கிய பங்காற்றியுள்ளது தெரிகிறது. "2007 ல் ஒரே நாள் இரவில் வைஷ்ணவி - ராடியாவின் நிறுவனம் - மேற்குவங்க தொழிற் வளர்ச்சி கழகத்தின் பொதுஜன தொடர்பு ஏஜென்சியாக மாறியதோடு, அரசு மற்றும் டாடாக்களுக்கு தகவல் பரப்புவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

நானோ தொழிற்சாலைக்கான தொழிற் பூங்காவுக்காக தங்களது நிலத்தை கொடுக்க வேண்டும் என்று மேற்குவங்க அரசு அச்சுறுத்த முயற்சித்ததற்கு விவசாயிகளிடமிருந்து கிளம்பிய கடும் எதிர்ப்பு காரணமாக, டாடா கடைசியில் சிங்கூரில் கார் உற்பத்தி செய்யும் தனது திட்டங்களை கைவிட நேர்ந்தது.

2ஜி நெருக்கடிக்கு CPM இன் பிரதிபலிப்பு, இந்திய அரசியல் வாழ்க்கையில் பெரிய தொழிலதிபர்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கிற்கு எதிரான கருத்துக்களுக்கு ஆதரவாகவும், தீவிர வலது-சாரி- தொழில்நிறுவன ஆதரவு பாரதீய ஜனதாவுடன் ஒன்றாக சேர்ந்து பொதுவான பாதையை கடைப்பிடிப்பதற்காக பாராளுமன்ற கூட்டு குழுவின் (JPC) விசாரணைக்கு அழைப்பு விடுவதை பொது விவாதத்திற்கான குறிமையமாக்கியது.

வரி குறைப்புகள், தனியார்மயமக்கல், மற்றும் பெரிய தொழிலதிபர்களை வளமாக்கும் நோக்கிலான எண்ணற்ற இதர கொள்கைகளை பாராளுமன்றம் அமல்படுத்தியும், நிர்வாகங்களின் தனி உரிமைகளை பலப்படுத்தி வேலைநிறுத்த மற்றும் எதிர்கருத்து தெரிவிக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை தாக்கியும் குழப்பமான தீர்ப்புகளை வழங்கும் இந்திய நீதிமன்றங்கள் என இந்தியாவின் அனைத்து அமைப்புகளுமே பெரிய தொழிலதிபர்களின் ஏவலாளிகளாக உள்ளன என்பது நிரூபணமாகி உள்ள சூழ்நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மீது நப்பாசைகளை அதிகரிக்க தீவிரமாக கோருகின்றனர்.  

இவ்வாறு, ஜேபிசி விசாரணைக்கு முதலில் அழைப்பு விடுத்தவரான, CPM அரசியற் குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி "அனைத்து சமுதாயத்தவர்களின் விருப்பத்தின் பிரதிநிதியாக" சமீபத்தில் பாராளுமன்றத்தில் பூசி மெழுகி பேசி முழங்கிய அதே நேரத்தில், இந்தியாவின் சமத்துவமற்ற சமூக- அரசியல் வரிசையை அமல்படுத்தும் நீதித்துறையையும் புகழ்ந்தார். யெச்சூரி எழுதினார்," சிலர் கேட்கிறார்கள்: நீதித் துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஆமாம், நிச்சயமாக எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நமது அரசியல் சாசனம் உருவாக்கிய சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற நீதித் துறையாக அது சட்ட மொழிபெயர்ப்பாளராகவும், நீதித்துறை மறுஆய்வு மூலம் குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாகவும் இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்."