World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Hamas and PLO suppress solidarity action for Egypt

ஹமாஸும் PLO வும் எகிப்திற்கான ஒற்றுமை நடவடிக்கையை அடக்குகின்றன

By Peter Schwarz
10 February 2011

Back to screen version

பல ஆண்டுகளாக இஸ்லாமியவாத ஹமாஸும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கமும் ஒன்றோடொன்று பெரும் விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. ஆயினும் கூட இரு அமைப்புக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வகையில்தான் எகிப்து மற்றும் துனிசிய எழுச்சிகளை எதிர்கொள்கின்றன. எகிப்திய மக்களுடனான ஒற்றுமைக்கான ஆர்ப்பாட்டங்களை ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காசாப் பகுதியிலும் PLO ஆட்சி செய்யும் மேற்குக் கரையிலும் இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு எகிப்திற்கான ஒற்றுமைக்காக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றை ஹமாஸ் கலைத்து விரட்டியது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மற்றும் Spiegel Online கருத்துப்படி 6 பெண்களும் 10 ஆண்களும் தனியே பிரிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டனர்.

அரைமனதுடன் எகிப்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புகளை ஹமாஸ் கொண்டாலும் கூட, மக்கள் இயக்கம் விரைவில் காசாவிற்குப் பரவி தன்னுடைய ஆட்சியையே அச்சுறுத்தக்கூடும் என்று இந்த அமைப்பு அஞ்சுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

காசாவில் சமூக நிலைமைகள் பேரழிவுத் தன்மையுடையனவாக உள்ளன. மொத்த 1.5 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் 18 வயதிற்கும் குறைந்தவர்கள். “காசாவில் இளம் வயதினர் என்றால் பெரும்பாலும் வேலையில்லை, திருமணத்திற்கு தேவையான பணத்தைச் சேகரிக்கும் வாய்ப்பு, வழிவகையும் இல்லை என்றுதான் பொருள்என்று Spiegel நிருபர் Ultrike Putz எழுதியுள்ளார். “இளைஞர்கள் தங்கள் ஓய்வுநேரத்தைப் பயனுடன் கழிக்க வகை ஏதும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கான வழிவகையும் இல்லை. நீங்கள் பிரயாணம் செய்ய விரும்பினால், அதற்கு ஒரு அனுமதி தேவை. அவை 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் கொடுக்கப்படும்.”

ஒரு மாற்றத்திற்கான பிரகடனம்என்று பேஸ்புக்கில் பாலஸ்தீனிய இளைஞர் ஒருவரால் வெளியிடப்பட்டது குறுகிய காலத்தில் 19,000 நண்பர்களை ஈர்த்தது. இப்பிரகடனம் காசாவில் பொறுத்துக் கொள்ள இயலாமலுள்ள சமூக நிலைமைகள் பற்றி கசப்புடன் புகார் கூறியுள்ளது: “நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த விரும்புகிறோம். ஒரு அமைதியை விரும்புகிறோம். இது அதிகமான ஆசையா?’

எங்களுக்குள் ஒரு புரட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது, மகத்தான அதிருப்தி மற்றும் பெரும் திகைப்புடன் கூடியது. இந்த ஆற்றலை இருக்கும் நிலையை மாற்றி எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய சவாலை எதிர்கொள்ளும் வகையில் இதைத் திருப்பாவிட்டால் அவை எங்களை அழித்துவிடும்என்று அது தொடர்ந்து கூறியுள்ளது.

இப்பிரகடனம் ஆளும் ஹமாஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு இளைஞர் மையத்தை மூடியதை எதிர்கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டது. இந்த மூடலை எதிர்த்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகையில், அது வன்முறை கையாளப்பட்டு ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவினரால் கலைக்கப்பட்டது. கலந்துகொண்ட 16 இளைஞர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

மேற்குக் கரையில் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸின் தலைமையிலுள்ள பாலஸ்தீனிய அதிகாரம் எகிப்திற்கு ஒற்றுமை உணர்வு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தின் மீதும் முழுத் தடையைச் சுமத்தியுள்ளது. அப்பாஸுக்கும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவைத்தான் இத்தடை அடித்தளமாகக் கொண்டுள்ளது. அவர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால் ரமல்லாவிலுள்ள ஆட்சியையும் கணிசமான இடருக்கு உட்படுத்தி, PLO ஆட்சிக்கு எதிரான எழுச்சி வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கும் அங்குபோல் தான் ஊழலும் சர்வாதிகாரமும் இணைந்துள்ளன.

பாலஸ்தீனியப் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஆர்ப்பாட்டங்கள் மீதான தடையை நியாயப்படுத்திய வகையில் மேற்குக்கரையின் உறுதிப்பாடு காக்கப்பட வேண்டும் என்று கூறினார். எதிர்ப்புக்கள்பெரும் குழப்பங்களை விளைவிக்கக் கூடும்என்றார் அவர்.

ஆயினும்கூட, பல நூற்றுக்கணக்கான மக்கள் பெப்ருவரி 5ம் தேதி ரமல்லாவிலும் தெருக்களுக்கு வந்து எகிப்திய ஆர்ப்பாட்டங்களுடன் தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். “ரமல்லாவிலிருந்து தஹ்ரிர் சதுக்கம் வரை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்என்று அவர்கள் கோஷமிடுகையில், ஆட்சியின் கூலிப்படைக் குண்டர்கள் விரைந்து கூட்டத்திற்குள் ஊடுருவி ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் வகையில்அப்பாஸ் நம் ஜனாதிபதி, நமக்கு இன்னொரு தலைவர் வேண்டாம் என்றனர்.

ஹமாஸ் மற்றும் PLO இரண்டும் எகிப்திய எதிர்ப்புக்களுக்குக் காட்டிய விடையிறுப்பு இந்த அமைப்புக்களின் வர்க்கத்தன்மை பற்றி நிறைய எடுத்துரைக்கின்றன. இவற்றிற்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், இரு அமைப்புக்களும் பாலஸ்தீனிய முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளின் நலன்களைத்தான் பிரதிபலிக்கின்றன. இரண்டுமே எகிப்திய எழுச்சி பற்றி ஆழ்ந்த அதிர்ச்சியைக் கொண்டுள்ளன. எகிப்திய எழுச்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுக்களின் ஆதரவு உள்ளது. பல அடிப்படை சமூகப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.

PLO 1964ம் ஆண்டு அப்பொழுது எகிப்திய ஜனாதிபதியாக இருந்த கமால் அப்தெல் நாசரின் முன்முயற்சியால் ஒரு முதலாளித்துவ தேசிய இயக்கமாக நிறுவப்பட்டது. எல்லா தேசிய இயக்கங்களைப் போலவே, இதுவும் ஜனநாயகப் புரட்சியின் மூலம் தீர்க்கப்படாத பிரச்சனைகளானதேசிய சுயநிர்ணயம், ஜனநாயகம் மற்றும் விவசாயப் பிரச்சினை போன்றவைமுதலாளித்துவ அமைப்பிற்குள் முதலாளித்துவச் சக்திகளின் தலைமையின் கீழ் தீர்க்கப்படமுடியும் என்று கூறிவந்தது/பேணிவந்தது. இது போலி என்பதைத்தான் நிருபித்திருக்கிறது. இன்று PLO வும் அதன் மிகப் பெரிய பிரிவான அப்பாஸ் தலைமையிலான பத்தா குழுவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலிய ஆட்சிக்கு உவந்து பணிபுரியும் கருவிகளாகப் போய்விட்டன. பாலஸ்தீனிய மக்களின்பால் தீவிர விரோதப் போக்கைக்  கொண்டுள்ளன

ஹமாஸ் 1988ம் ஆண்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பாலஸ்தீனியக் கிளையாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பு சற்று நம்பகத் தன்மையைப் பெற முடிந்தது. அதற்குக் காரணம் PLO வின் சரிவு மற்றும் அதன் சமூக நலச் செயற்பாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது கூடுதலான போராளித்தனப் போக்கு நிலைப்பாடு ஆகியவற்றால். அரசியலிலும் சமூகத்திலும் ஒரு கன்சர்வேடிவ் இயக்கமாக ஹமாஸ் உள்ளது. அதன் பிரிவுகள் பாலஸ்தீனிய முதலாளித்துவம் மற்றும் மத்தியதர வர்க்கத்தில் தளத்தைக் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய சுயாதீன இயக்கம் பற்றியும் அது ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளது.

துனிசியா மற்றும் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் வெளிப்பாடு மத்திய கிழக்கில் நசுக்கப்பட்ட அரசியல் உறவுகளில் ஒரு புதிய தென்றலைக் கொண்டுவந்துள்ளது. அரசியல் அமைப்புக்களின் உண்மை வண்ணங்களை இது வெளிப்படுத்தியுள்ளது. PLO மற்றும் ஹமாஸின் எகிப்திய எழுச்சி பற்றிய விரோதப் போக்கு அவற்றின் உண்மையான வர்க்கத் தன்மையைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு உண்மையான தொழிலாள வர்க்கக் கட்சி கட்டமைக்கப்படுவதற்கான பாதைக்கு வழிவகுக்கிறது. அது சோசலிச வேலைத்திட்டத்தையும் நான்காம் அகிலத்தின் முன்னோக்கையும் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும் மத்திய கிழக்கு முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தை ஒருங்கிணைக்கும் திறனைக் கொள்ள வேண்டும்