World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Arson attack on Sri Lankan opposition web site

இலங்கை எதிர்ப்பு இணையத் தள அலுவலகத்துக்கு தீ மூட்டி தாக்குதல்

By our correspondents
4 February 2011

Back to screen version

கொழும்பு புறநகர் பகுதியான மாலபேயில் இருந்த லங்கா ஈ நியூஸ் (Lankaenews.com) என்ற எதிர்தரப்பு இணையத் தள அலுவலகத்துக்கு திங்கட் கிழமை விடியற்காலை தீ மூட்டப்பட்டது. இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க மறுத்துள்ள அதே வேளை, அது ஊடகம் உட்பட அதை விமர்சிப்பவர்கள் மீது குண்டர் தாக்குதல்களை நடத்துவதில் இழிபுகழ்பெற்றதாகும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசிய ஊடகவியலாளர் சஞ்ஜய தசநாயக்க, கிட்டத்தட்ட காலை 2 மணியளவில் ஒரு கும்பல் உடைத்துக் கொண்டு நுழைந்தது. அவர்கள் முன் கதவை உடைத்து நொறுக்கிவிட்டு அலுவலகத்துக்கு தீ வைத்ததோடு நூலகம், ஒரு பக்ஸ் இயந்திரம் மற்றும் ஒரு போட்டோகொப்பி இயந்திரத்தையும் அழித்தனர். சத்தம் கேட்டு விரைந்த அயலவர்கள் தீயை அனைத்துள்ளனர். சுமார் விடயற்காலை 5 மணியளவிலேயே லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர்கள் இருவர் அங்கு வந்தனர்.

அடையாளந்தெரியாத நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வந்துகம்பியூட்டரில் வேலை செய்யும் அலுவலகம் எங்கே இருக்கின்றது என இடத்தைக் கேட்டதாக அயலவர்கள் தசநாயக்கவிடம் கூறியிருந்தனர். பின்னர் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்த பொலிசார், விசாரணை நடந்துகொண்டிருப்பதாக கூறி நிர்வாகிகளைக்கூட அங்கு நுழைய அனுமதிக்கவில்லை. எவ்வாறெனினும், வழங்கப்பட்டுள்ள 16 மணித்தியால கால அவகாசத்துக்குள் அரசாங்க சட்ட இரசாயண பரிசோதகர் குற்றம் நடந்த இடத்துக்கு சோதனைக்கு வரவில்லை.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் ஏனைய உயர்மட்ட தலைவர்களை மோசடி சம்பந்தமாக விமர்சித்ததன் காரணமாக லங்கா ஈ நீயூஸ் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டது. இந்த இணையம் 2010 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தது.

இணையத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு அவர் பிரிட்டனுக்கு சென்றுவிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக காணாமல்போய்விட்டதோடு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த நூற்றுக்கணக்கான காணாமல் போன சம்பவங்கள் மற்றும் கொலைகளுக்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளே பொறுப்பாகும். ஏனைய வழக்குகளைப் போலவே, தங்களது விசாரணைகளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பல தடவைகள் இலங்கையில் இந்த இணையத்தை அரசாங்க அதிகாரிகளும் தடுத்துள்ளனர்.

எக்னலிகொட காணமல் போனதோடு எமது ஆசிரியர் சந்தருவன் வெளிநாட்டில் வாழத் தள்ளப்பட்டுள்ள போதிலும், நாங்கள் எங்களது எழுதும் முறையை மாற்றிக்கொள்ளவில்லை. நாங்கள் தொடர்ந்தும் எழுதுகிறோம். அவை அரசாங்கத்தை சீற்றமடையச் செய்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்... தனிப்பட்ட காரணங்களுக்காக எங்களை தாக்குபவர்கள் எவரும் இல்லை. [எங்களது எழுத்துக்களால்] அரசியல் ரீதியில் காயப்பட்ட ஒருவரே இதற்குப் பின்னால் இருக்க வேண்டும், என ஊடகவியலாளர் தசநாயக்க WSWS க்குத் தெரிவித்தார்.

சாத்தியமான தூண்டுதல்களாக இரு அண்மைய செய்திகளை தசநாயக்க மேற்கோள்காட்டினார். அவற்றில் ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பொன்சேகாவின் வகிபாகத்தை மூடிமறைக்கின்றமைக்காக ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவை விமர்சித்த ஒரு கட்டுரை. மற்றையது ஜனாதிபதி இராஜபக்ஷவின் அண்மைய அமெரிக்க விஜயம் மற்றும் அவரது ஆரோக்கியம் பற்றிய செய்தியாகும்.

அரசாங்கத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது... அரசாங்கத்தை ஆதரிக்காத இணையத் தளங்களை மௌனமாக்குவதற்கு அது கூட்டாக முயற்சிக்கின்றது என இணையத்தின் ஆசிரியர் சேனாதீர ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ்ஸுக்குத் தெரிவித்தார்.

அரசாங்கம் விமர்சனத்தை திசை திருப்புவதற்காக வரையப்பட்ட ஒரு நன்கு ஸ்தாபிக்கப்பட்ட எடுத்துக்காட்டை பின்பற்றி பிரதிபலித்தது. ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டின் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு ஒரு அவசர விசாரணையை நடத்துமாறு அறிவுறுத்தியதோடு, மறுபக்கம் பாலசூரிய விசாரணைகளை முன்னெடுக்க ஒரு விசேட பொலிஸ் குழுவை நியமித்தார்.

கடந்த காலத்திலும் ஜனாதிபதியால் இத்தகைய அவசர விசாரணைகள் அறிவிக்கப்பட்டதோடு விசேட விசாரணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டி தண்டனை வழங்குவது ஒரு புறம் இருக்க, இத்தகைய சம்பவங்களில் எந்தவொரு குற்றவாளியும் கைதுசெய்யப்படவே இல்லை. இந்த புதிய தீவைக்கும் தாக்குதலிலும் மாற்றங்கள் எதுவும் வரும் என தான் நம்பவில்லை என தசநாயக்க WSWS க்குத் தெரிவித்தார்.

2005 கடைப் பகுதியில் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, 14 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பல எதிர்தரப்பு ஊடகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. 2009 ஜனவரியில், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த போது பட்டப் பகலில் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரால் காவல் செய்யப்படும் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், கொலைகாரர்கள் எந்த சிரமமும் இன்றி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

அதே மாதம், சிரச டீ.வீ. மற்றும் வானொலிச் சேவைக்குள் உடைத்துக்கொண்டு நுழைந்த ஆயுதக் கும்பல் அலுவலகத்தை நாசமாக்கி தீ மூட்டியது. கடந்த ஜூலையில் கொழும்பில் உயர்-பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இன்னுமொரு தொலைக் காட்சி மற்றும் வானொலிச் சேவையான சியத அலுவலகத்துக்கும் விடியற்காலை தீவைக்கப்பட்டது.

திங்கட் கிழமை நடந்த தீ வைப்பு தாக்குதலை அடுத்து, அத்தகைய சம்பவங்களின் போது நிரந்தரமாக விடுக்கும் அறிக்கையை ஊடக அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல விடுத்தார். “மக்களின் கண்களின் முன்நிலையில் அரசாங்கத்தின் நன்மதிப்பை சேதமாக்க முயற்சிப்பதாக அவர் அரசாங்கத்தின் எதிரிகளைக் குற்றஞ்சாட்டினார். ஏனைய ஒவ்வொரு சம்பவங்களிலும் போலவே, தனது வலியுறுத்தலுக்கு ரம்புக்வெல்ல ஆதாரங்களை வழங்கவில்லை.

செவ்வாய் கிழமை, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கமும் இந்த தாக்குதல் சம்பந்தமாக கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த பகல் உணவுவேளை போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இணைந்துகொண்டனர்.

பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, அரசாங்கத்தை விமர்சித்த செய்தி இணையத்தை அடக்கும் இந்த தாக்குதலின் சூழ்நிலை பற்றி உடனடியாக பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது.

ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனத்தின் (IFJ) ஆசிய-பசுபிக் இயக்குனர் ஜாக்குலின் பார்க் தெரிவித்ததாவது: “சுயாதீன ஊடக அமைப்புக்களை அச்சுறுத்தி அடக்கும் முறையிலான தோல்வி கண்ட முயற்சிகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் அலுவலகங்கள் மீதான தாக்குதல்களையிட்டு நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம்.”

அரசாங்கம் எந்தவொரு அரசியல் எதிர்ப்புக்கும், குறிப்பாக இப்போது திணிக்கப்படும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் சம்ந்தமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்புக்களுக்கு எதிராக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்காது என்ற இன்னுமொரு எச்சரிக்கையே லங்கா ஈ நியூஸ் மீதான தாக்குதலாகும்