World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Popular anger boils over in Iraq

Further protests in Algeria, Tunisia and Yemen

ஈராக்கில் மக்கள் ஆக்ரோஷம் கொந்தளிக்கிறது

அல்ஜீரியா, துனிசியா, யேமனிலும் போராட்டங்கள் தொடர்கின்றன

By David Walsh
12 February 2011

Back to screen version

துனிசிய சம்பவங்களால் தூண்டப்பட்டதில் வெடித்த எகிப்து புரட்சி, மத்தியகிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா எங்கிலும் உள்ள மக்களைத் தூண்டிவிட்டு வருகிறது.

பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, சமூக நிலைமைகள் மீதெழுந்த போராட்டம் இந்தவாரம் ஈராக்கிலும் பரவியது. இதற்கிடையில், அல்கிர்ஸில் சனியன்று ஒரு பாரிய பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துனிசியாவிலேயே கூட, ஜைன் எல் அபிடைன் பென் அலி நாட்டைவிட்டு ஓடிவிட்ட போதினும், அங்கே இப்போதும் இருந்துவரும் அதே எதேச்சாதிகார கட்டமைப்புகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கின்றனர். ஜோர்டான், யேமன் மற்றும் மொரோக்கோவிலும் போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

ஈராக் மக்கள், எட்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி ஆக்கிரமிப்பாலும், அத்துடன் சிறிய சிறிய கன்னைகளின் வெறுப்பான பூசல்களாலும், தோற்றுவிக்கப்பட்ட இழிந்த நிலைமைகளுக்கு எதிராக வெளிப்படையாக அவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.

மின்சாரம், உணவு மற்றும் வேலைகளின் பற்றாக்குறைக்கும், அத்துடன் அரசியல் ஊழலுக்கும் எதிராக, தெற்கு ஈராக்கிலுள்ள வறுமைநிறைந்த, அதிகளவில் ஷியைட் சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், கடந்த வாரயிறுதியில், ஹம்ஜாவிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்தையும், அரசு கட்டிடங்களையும் தாக்கினர். பாதுகாப்பு அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமாக துப்பாக்கிசூடு நடத்தியதில், ஒருவர் கொல்லப்பட்டார்; நான்கு நபர்கள் படுகாயமடைந்தனர்.

அந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய உதவியதாக கூறப்படும் அபு அலியின் கருத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வெளியாகும் National இதழ் வெளியிட்டது: “எகிப்தில் ஏற்பட்டதைப் போலவே, ஈராக்கிலும் பசி மற்றும் வேலையின்மையால் ஒரு புரட்சி வெடிக்கக்கூடும். [பிரதம மந்திரி] நெளரி அல் மலிக்கும், புதிய அரசாங்கமும் மற்றொரு சர்வாதிகாரமாக உருவாகி வருவதாக பார்க்கும் நம்பிக்கையிழந்திருப்பவர்களால், வேலைவாய்ப்பில்லாதவர்களால் நடத்தப்பட்ட ஒரு பேரணியாகும் அது.”

பெப்ரவரி 10இல், பாக்தாத், பாஸ்ரா, மொசூல், கார்பாலா, திவானியாஹ், கட், ரமடி, சமவாஹ் மற்றும் அமரா ஆகிய இடங்களில் வெவ்வேறு அளவுகளில் போராட்டங்கள் நடந்தன. பாக்தாத்தின் சதர் நகரில், போதிய பொதுச்சேவைகள் இன்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசாங்க ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். பொதுத்துறை தொழிலாளர்களும் குடியிருப்போருடன் போராட்டத்தில் சேர்ந்தனர். தொழில்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒரு கூட்டம், தங்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தை வெட்டுவதற்கான முடிவுக்கு கண்டனம் தெரிவித்தது.

கர்பாலாவில், முனிசிப்பல் சேவைகளை மேம்படுத்தவும், உள்ளூர் அரசாங்கத்தின் மீது ஒரு விசாரணையைத் தொடங்கவும் நகரமக்களும் கூட வலியுறுத்தினர். ஒரு போராட்ட பதாகையில், “எங்களிடம் ஒன்றுமேயில்லை. எங்களுக்கு எல்லாமே தேவைப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு: எங்களை நாங்களே கொளித்திக் கொள்வது தான்" என்று எழுதப்பட்டிருந்ததுஇது துனிசிய எழுச்சியைத் தூண்டிவிட்ட ஓர் இளைஞரின் தற்கொலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. நஜாஃபில், அரசாங்க உதவி மற்றும் உள்ளூர் அரசாங்க தலைமையின் இராஜினாமாவை விவசாயிகள் கோரினர். பாஸ்ரா ஆர்ப்பாட்டக்காரர்கள், சமீபத்திய மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சுமார் இரண்டு மடங்கிற்கு உயர்ந்துள்ள நிலையில், உணவு வினியோக கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களால் குடும்பங்கள் போதிய உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பதாக விவரித்தனர்.

வியாழனன்று நடந்த பெரும் போராட்டங்கள் ஒன்று, சன்னி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 வழக்கறிஞர்களை வீதிக்கு இழுத்து வந்தது. அவர்கள் சட்டத்துறை ஊழல் மற்றும் ஈராக் சிறைகளில் கைதிகள்மீது துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினர். பாக்தாத்தில் உள்ள ஈராக் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் காதிம் அல்-ஜூபைதியின் கருத்தை The Canadian Press மேற்கோளிட்டது: “ஈராக் மக்கள் ஐக்கியத்துடன் கூடியது இது.… ஊழலில் மாட்டியிருக்கும் நீதிபதிகளை அரசாங்கம் நீக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம். மேலும் உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம், [சமீபத்தில் திறக்கப்பட்ட] இரகசிய சிறைகளுக்குள் நுழைய எங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம் இந்த சிறைகளைக் குறித்த தகவல்களை நாங்கள் பெற விரும்புகிறோம்.”

கார்பாலாவில், உள்ளூர் வழக்கறிஞர்கள் கழக தலைவர், சமையல் எண்ணெய், அரிசி, மாவு, சர்க்கரை உட்பட குடும்ப வினியோக பொருட்களுக்குப் பதிலாக, மாதந்தோறும் அரசாங்கம் அளிக்கும் அற்பத்தொகையை எடுத்துக்காட்டி நையாண்டி செய்தார். Agence France-Presse (AFP)இன் செய்திப்படி ராபியா அல்-மசௌதி கூறியது, “இந்த பணத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். தேசியளவில் அரசாங்க வினியோக நுகர்பொருட்களை நம்பியிருக்கும் ஆறு மில்லியன் குடும்பங்களில் பல, அவற்றிற்கு கிடைக்க வேண்டிய முழு வினியோகங்களுக்குப் பதிலாக மாதத்திற்கு வெறும் 12 டாலரை பெற்று வரும் நிலையில், மத்திய மந்திரிகளுக்கு மாதந்தோறும் 11,000 டாலர் அளிக்கப்படுகிறது.”

வெள்ளியன்று, ஈராக் முழுவதிலும் மேலும் பல போராட்டங்களும் நடத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்த வேண்டுமென கோரி, அரசு கட்டிடங்களும், தூதரகங்களும் இருக்கும் பசுமை மண்டலத்தை நோக்கி பாக்தாத் போராட்டங்களில் ஒன்று அணிவகுத்துச் சென்றது. ராய்டர்ஸ் செய்தியின்படி, “உங்கள் தேர்தல் வாக்குறுதிகள், உணவு வினியோகம், அத்தியாவசிய சேவைகள் எல்லாம் எங்கே?” மற்றும் (கெய்ரோ சம்பவங்களை மேற்கோளிட்டு காட்டும் வகையில்) "இரண்டாவது தஹ்ரிர் சதுக்கம்" என்பன உட்பட பல்வேறு செய்திகளைத் தாங்கிய குறிப்புப் பலகைகளை ஏந்தியிருந்தனர்.

கடந்த ஞாயிறன்று பாக்தாத்தில் உள்ள வறுமைநிறந்த பாப்-அல்-ஷாம் மாவட்டத்தில், ஒரு போராட்டக்காரர் ஊடகத்திடன் தெரிவித்தார், “அது பரிதாபகரமானது. மத்தியகாலங்களில் கூட மக்கள் இந்த நிலைமையில் வாழ்ந்திருக்க மாட்டார்கள்.” ராய்டர்ஸ் குறிப்பிடுகிறது, “அமெரிக்க தலைமையிலான தாக்குதல் நடத்தப்பட்டு ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, ஈராக்கின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டே இருக்கின்றன. அந்நாடு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டுள்ளது, மின்வினியோகம் சீராக இல்லை, கழிவுநீர் வீதிகளில் சேர்ந்துள்ளன.”

அல்ஜீரியாவில், ஜனாதிபதி அப்தெல்லாஜிஜ் பௌடெப்லிக் ஆட்சியால் சகித்துக்கொள்ளப்பட்ட மனித உரிமை அமைப்புகள், சங்கங்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ "எதிர்கட்சிகளைக்" கொண்ட ஒரு குழுவான National Coordination for Change and Democracy (CNCD)ஆல் பெப்ரவரி 12இல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கருவிகள் தயாராகி வருகின்றன. இதில் ஒருவேளை ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்க கூடும்.

அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அப்பேரணிக்குத் தடைவிதித்திருக்கின்றது. அப்போராட்டத்தைத் தடுக்க சுமார் 30,000 பொலிஸ் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஓர் எதிர்கட்சி செய்தி தொடர்பாளர், சயத் ஷைதி, ஊடகத்திடம் கூறுகையில், மக்கள் அதில் பங்கேற்காமல் இருக்க செய்யும் முயற்சியாக அதிகாரம் தலைநகரைச் சுற்றி வளைத்துள்ளது. அவர் தெரிவித்தார், “ரயில்களும், ஏனைய பொது போக்குவரத்துகளும் கூட தடுக்கப்பட்டுள்ளன.”

AFP குறிப்பிட்டது: “பெரும் எண்ணிக்கையிலான கண்ணீர் புகைகுண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, என்றவர் [ஷைதி] தெரிவித்தார். சனியன்று பேரணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள சதுக்கத்திற்கு அருகில் கலக-தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மேலும் வீதிகளில் சீருடை அணிந்த பொலிஸ்காரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.”

பெப்ரவரி 8இல் பல அல்ஜீரிய நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்தன. அல்ஜீரிஸிற்குக் கிழக்கில் 600 கிலோமீட்டரில் உள்ள அன்னாபா நகரில், ஒரு நூறு வேலையற்ற இளைஞர்கள் நகர எல்லையினுள்ளேயும், வீதிகளிலும் போராட்டத்தில் இறங்கினர். ஷிடி அம்மாருக்கு அருகிலுள்ள நகரில், ஒரு குறிப்பிடத்தக்க மூர்க்கத்தனமான நடவடிக்கையாக, ஏழு வேலையற்ற இளைஞர்கள் அவர்களைஅவர்களே கத்தியால் கீறிக் கொண்டு, நகரசபைக்கு வெளியில் கூட்டு-தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.

அதே பகுதியில், ராஃபோர் கிராமவாசிகளும் வீதிகளில் இறங்கியதாக ஓர் அல்ஜீரிய செய்தித்தாள் குறிப்பிட்டது. கடந்த சில வாரங்களில், சுமார் 20 நபர்கள் தங்களைத்தாங்களே கொளுத்திக்கொள்ள முயன்றுள்ளனர். அதில் மூன்று பேர் அவர்களின் காயங்களால் உயிரிழந்துள்ளனர்.

பெரும் போராட்டங்களுக்குக் களம் அமைக்க உதவும் வகையில், டிசம்பர் மாதமத்தியில் 26 வயது நிரம்பிய மொஹமத் பொவ்ஜிஜ் தன்னைத்தானே பலியிட்டுக் கொண்ட துனிசியாவில், நீண்டகால சர்வாதிகாரி ஹபீப் பௌர்குபா பிறந்த இடமான மோனாஸ்திரில் உள்ள அரசாங்க அரசாங்கங்கள் முன்னால் வியாழனன்று தன்னைத்தானே எரித்துக் கொண்டார். துனிசியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஸ்பாக்ஸைச் சேர்ந்த அந்த பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவருக்குத் தேவையான மருந்துகளை வாங்க முடியாததால், அவ்வாறு செய்ய நேரிட்டது. தற்போது அவர் மூன்றாம்-நிலை நெருப்பு காயங்களுடன் "மிக மோசமான" நிலையில் உள்ளார்.

பென் அலி ஆட்சியோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இராஜினாமா செய்ய வலியுறுத்தி, இந்த வாரத்தில் துனிசியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. துனிசிலிருந்து 250 கிலோமீட்டர் தென்மேற்கில் உள்ள கேசெரினில், தங்களின் சமூக பிரச்சினைகளின்மீது கவனத்தைத் திசைத்திருப்பிக் காட்ட மக்கள் ஒரு முக்கிய சாலையை மறித்தனர். காஃசாவிலும், புதிய ஆளுனர் பதவி விலக, செவ்வாயன்று போராட்டக்காரர்கள் கோரினர்.

யேமனில், சானா தலைநகரிலும் ஆடென் துறைமுக நகரிலும் வெள்ளியன்று எகிப்திய புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இரண்டு பேரணிகள் நடத்தப்பட்டன. ஏடெனில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மதியத்தில் ஒன்று கூடினர். வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் குறிப்பிட்டது, “பொலிஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். மேலும் சுமார் ஒரு டொஜன் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நடவடிக்கை எடுத்ததாக, ஏடெனில் ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.”

வெள்ளியன்று சானா பல்கலைக்கழக மாணவர்களும் சுமார் மூன்று மணி நேரம் முக்கிய சாலைகளை மூடி, ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவர்கள் எகிப்திய தூதரகத்திற்கு அருகில் அவர்களின் ஆர்ப்பாட்டத்தை முடித்தனர். எகிப்திய மக்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்த அந்த போராட்டம், அமெரிக்க ஆதரவு-பெற்ற சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெஹ் இராஜினா செய்ய கோரியும் அழைப்பு விடுத்தது. இரகசிய பொலிஸ் தலைமையகங்களில் உள்ள கைதிகள் சித்திரவதைப்படுத்தப்படுவது மற்றும் மோசமாக நடத்தப்படுவதற்கும் போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தெற்கு யேமனில், பிரிவினைக்கு ஆதரவாக வெள்ளியன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சலெஹ் பதவிவிலக வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ராய்டர்ஸ் குறிப்பிடுகிறது, “அல்கொய்தா போராளிகள் தீவிரமாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் அப்யான் தலைநகர் ஜின்ஜிபாரினுள் இராணுவ டாங்கிகள் களமிறங்கின. அங்கே வெள்ளியன்று ஓராயிரம் போராட்டக்காரர்கள் குழுமினர். சாவுக்கும் அஞ்சாமல் போராட தாங்கள் தயாராக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் வெள்ளைநிற சவச்சீலைகளை அணிந்துகொண்டு, தெற்கு யேமனின் முன்னாள் தலைவர் வீட்டிற்கு வெளியில் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்தனர்.

 “ 'அலி, அலி, பென் அலியோடு சேர்ந்து கொள்' என்று அவர்கள் கூச்சலிட்டனர். இது சவூதி அரேபியாவிற்கு ஓடிய முன்னாள் துனிசிய ஜனாதிபதி ஜைன் அல்-அபிடைன் பென் அலியைப் போன்று சலெஹூம் ஓட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக இருந்தது.”

ஜோர்டானின் அம்மானில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. இடதுசாரி இயக்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்று, புதிய பிரதம மந்திரி மௌருஃப் அல்-பாக்ஹித்தின் இராஜினாமைக் கோரியது. மற்றொன்று, முபாரக்கைக் கவிழ்க்கும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தது. இஸ்லாமியவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவதில், முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான இஸ்லாமிய நடவடிக்கை முன்னனியின் (IAF) பொதுச்செயலாளர் ஹம்ஜெஹ் மன்சூர் கூட்டத்தை நோக்கி கூறுகையில், “அரேபிய ஆட்சியாளர்கள் அவர்களின் மக்களின் குரல்களுக்கு செவிமடுக்க வேண்டும்; அமெரிக்கவோடு பேரம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

கொள்முதல் விலைச்சரிவுக்கு எதிராக கராக்-அகூபா நெடுஞ்சாலையில் தக்காளி பெட்டிகளை வீசியெறியும் ஒரு போராட்டத்திற்கு, வெள்ளியன்று ஜோர்டான் விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

வெள்ளியன்று ராபத் தலைநகர் மொரோக்கனில், ஆயிரத்திற்கும் மேலான போராட்டக்காரர்கள் அரசு வேலைக்களைக் கோரி பேரணி நடத்தினர். அப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர், ஜனவரி 24இல் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியது, அப்பிராந்தியத்தில் நிலவும் அதிருப்தியால் அரசாங்கம் இடைநிறுத்த காலக்கெடுவைக் கேட்டுக்கொண்டிருந்தது. உயர்கல்வி முடித்த 4,500 பட்டதாரிகளை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் காலக்கெடுவோடு, பெப்ரவரி 10 இல் இடைநிறுத்த காலமும் முடிவுக்கு வந்தது.

தொலைதொடர்பு மந்திரி காலிட் நாசிரியின் கருத்துப்படி, சமூக சமத்துவமின்மை மற்றும் அரசாங்க ஊழல் ஆகியவற்றால் ஏற்பட்ட ஒரு தேசிய குழப்பத்தால், மொரோக்கோவில் நாள்தோறும் குறைந்தபட்சம் 21 போராட்டங்கள் நடந்து வருகின்றன.