World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Libyan government massacres demonstrators as uprising spreads

எழுச்சி பரவுகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை லிபிய அரசாங்கம் படுகொலை செய்கிறது

By Patrick O’Connor
21 February 2011

Back to screen version

முயம்மர் கடாபியின் லிபிய அரசாங்கம் நாட்டின் கிழக்கு நகரங்களிலும் சிறுநகரங்களிலும் மையம் கொண்டுள்ள எழுச்சியை வன்முறை அடக்குமுறையை கையாண்டு நசுக்க முற்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு கடந்த வியாழனன்று தொடங்கிய இந்த எதிர்ப்புக்களையொட்டி 173 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதைத் தான் உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் சில தகவல்கள் ஆட்சியாளரின் படைகளினால் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன.

கடாபியின் மகன்களில் ஒருவரான சைப் எல் இஸ்லாம் கடாபி அரச தொலைக்காட்சியில் இன்று காலை 1 மணி அளவில் தோன்றி, “நாம் ஒன்றும் துனிசியும் எகிப்தும் அல்லஎன்று அறிவித்ததுடன், உள்நாட்டுப் போர் குறித்தும் எச்சரித்தார். “நாங்கள் கடைசி நிமிடம் வரை, கடைசித் தோட்டா இருக்கும் வரை போராடுவோம்என்று அச்சுறுத்தல் தரும் வகையில் அறிவித்தார்.

பெரும்பாலான கொலைகள் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் நிகழ்ந்தன. இது வடகிழக்குக் கடலோரப்பகுதியில் உள்ளது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் தணிக்கை முறை மற்றும் தடைகளினால் தகவல்கள் குறைவாகத்தான் கிடைக்கின்றன. அல் ஜசீராவின் செய்திகள் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இணையத்தளம் அநேகமாக முற்றிலும் மூடப்பட்டுவிட்டது
.

கடாபி அரசாங்கத்தை எதிர்த்து பெங்காசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு வெளிப்படையான எழுச்சியாக வளர்ந்துள்ளன. நகரத்தில் செய்தி ஊடகத்திடம் பேச முடிந்த பலர் நிலைமை ஒரு போர்ப் பகுதியைப் போல் காட்சி அளிக்கிறது, கெரில்லா முறைப் போர் அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு சக்திகளுக்கும் இடையே நடக்கிறது என்றும் கூறினர்.

அல் ஜசீராவிடம் உள்ளூர்வாசிகள் தாங்கள் குப்பைகள் போன்றவற்றினால் தடுப்புக்களை அமைத்துள்ளதாகக் கூறினர். ஒரு இராணுவப் பிரிவும் எழுச்சியில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, “எதிர்ப்பாளர்கள் அரசாங்கத் தளங்களில் இருந்து ஆயுதக் குவியலை கைப்பற்றி அரசாங்க முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகப் பல அறிக்கைகள் வந்துள்ளன. இராணுவச் சிப்பாய்கள் ஓடிவிட்டனர், குடிமக்கள் அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்என்று ஒரு பெங்காசிக் குடிமகன் ஒரு தொலைப்பேசிப் பேட்டியில் கூறினார். “குடிமக்களிடம் இப்பொழுது ராக்கெட் மூலம் இயக்கக்கூடிய எறிகுண்டுக்கள் உள்ளன, கிளாசினிக்கோக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை வைத்துள்ளனர். நான் தோட்டாக்களின் ஒலியைக் கேட்கிறேன், RPG ஓசையைக் கேட்கிறேன். மக்கள் தங்கள் காரின் ஹார்ன் ஒலியைக் களிப்புடன் முழக்குகின்றனர்.”

மேற்கே துனிசியா, கிழக்கே எகிப்து ஆகியவற்றை லிபியா எல்லையாக கொண்டுள்ளது. சமீப ஆண்டுகளில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளின் அங்கீகாரத்திற்காக தீவிரமாக பாடுபட்டுவரும் முயம்மர் கடாபியும் நெருக்கமாக அனைத்து முக்கிய எண்ணெய் பெருநிறுவனங்களுடனும் உழைத்து வருகிறார். இப்பொழுது அவர் துனிசிய ஜனாதிபதி ஜைன் அலி அபிடைன் பென் அலி மற்றும் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோருக்கு நேர்ந்த கதியைத் தவிர்க்கும் வகையில், வன்முறையையும் அரச தூண்டுதல்களையும் பயன்படுத்தி அதிகாரத்தின் மீது தனக்குள்ள வலுக்குறைந்த பிடியை தக்க வைத்துக் கொள்ள முற்படுகிறார்.

பெங்காசியிலும் மற்ற இடங்களிலும் கொல்லப்பட்ட பலர் ஆயுதமற்றவர்கள். அவர்களுள் பலர் பெண்கள், குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. அரசாங்கச் ஸ்னைப்பர்கள் கட்டிடக்கூரைகளில் இருந்து சுட்டனர். டாங்குகள், ஹெலிகாப்டர்கள் என்பனவற்றிருந்து துப்பாக்கிச் சூடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. பெங்காசியில் ஒரு வட்டார மருத்துவத்துறை ஒருங்கிணைப்பாளர் அல் ஜசீராவிடம், “விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் ஏனையவர்களின் உடல்கள் பெரும் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டுத் தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்தனஎன்றார்.

பெங்காசி மருத்துவமனையிலுள்ள மருத்துவர் ஒருவர் தொலைக்காட்சி செய்தி இணையத்திடம் கூறினார்: “இங்கு படுகொலை நடக்கிறது. இராணுவம் எதிர்ப்பாளர்கள் மீது உண்மையான தோட்டாக்களை பயன்படுத்துகின்றனர். என் கண்களினாலேயே இவற்றைப் பார்த்தேன். எல்லா இடங்களிலும் இராணுவப் பிரிவுகள் உள்ளன. நான் பணிபுரியும் மருத்துவமனையில்கூட. இங்கும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அன்று தலையில் தோட்டாவினால் அடிபட்ட ஒரு 8 வயதுச் சிறுவன் இறந்து போனான்அவன் என்ன செய்தான் இந்த முடிவிற்காக?’

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது: “கடாபி விசுவாசிகள் கார்களில் சுற்றிவந்து ராக்கெட் மூலம் இயங்கும் கிரனேட் குண்டுகளையும், இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் தெருக்களில் தென்படுவோர் மீது சுடுகின்றனர் என்று நகர மக்கள் கூறுகின்றனர்.”

இந்த ஆயுதங்களில் பலவும் பிரிட்டன் மற்றும் பிரான்சினால் ஏற்றுமதி செய்யப்பட்டவை. சனிக்கிழமையன்று பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் அரசாங்கம் லிபியாவிற்கு ஏற்றுமதிகள் வழங்கப்பட்டிருந்த எட்டு உரிமங்களை நிறுத்தி வைத்தது. இது பஹ்ரைன் அரசாங்கத்துடனான 24 ஒப்பந்தங்களுக்கான தடையையடுத்து வந்துள்ள செயலாகும். கடந்த ஆண்டு மே மாதம் பதவிக்கு வந்ததிலிருந்து, காமெரோன் அரசாங்கம் கடாபி ஆட்சிக்குகண்ணீர்ப்புகை குண்டுகள், சிறு ஆயுதங்களுக்கான வெடிமருந்து, இராணுவ வாகனங்கள் மற்றும் வெப்பம் மூலம் கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவற்றை வழங்க பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு உரிமங்களைக் கொடுத்ததுஎன்று Independent பத்திரிகை கூறியுள்ளது.

முன்னதாக அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொண்ட கூட்டத்தின் மீதும் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பல ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இப்படைகளில் இருக்கும் பலரும் வெளிநாட்டுக் கூலிப்படையினர் என்றும் அவர்கள் காட், துனிசியா இன்னும் பிற ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். வேலையின்றியிருக்கும் 26 வயது பட்டி என்னும் பெங்காசி வாசி பல வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் பிரெஞ்சு மொழி மட்டுமே பேசினர், அரேபிய மொழி அல்ல, “இதனால் அவர்களோடு நியாயம் பேச முடியவில்லைஎன்று அல் ஜசீராவிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: “அவர்கள் கேள்விகள் கேட்பதில்லைஉண்மையான தோட்டாக்களைக் கொண்டு உடனடியாகச் சுடுகின்றனர். நிரபராதிகள் இவற்றில் அகப்பட்டுக் கொள்கின்றனர். அவர்கள் வீட்டில் வெறுமனே இருந்தாலும் கொலை செய்யப்படுகின்றனர். வீட்டிற்கு வீடு சோதனை என்பவை நடைபெற்று வருகின்றன, பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் உள்ளனவா என்று சோதனையிடுகின்றனர்.”

கிழக்கே மற்றய நகரங்கள், சிறு நகரங்களிலும் சண்டை குறித்து தகவல்கள் வந்துள்ளன. கிட்டதட்ட 200,000 மக்கள் உள்ள எகிப்திய எல்லைக்கு அருகேயுள்ள பேடா நகரத்தில், உள்ளூர் பொலிசாரும் அரசாங்க எதிர்ப்புச் சக்கதிகளுடன் சேர்ந்து இராணுவத்தின் இரண்டாவது பிரிகேட்டை தாக்கி, படையினரை நகரத்திற்கு வெளியே ஓடச் செய்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். பெங்காசிக்குத் தெற்கே 160 கி.மீ. தொலைவிலுள்ள அஜடபியா என்னும் ஊரினை எதிர்ப்பாளர்கள் ஒருசுதந்திர நகரம்என்று அறிவித்தனர். கடாபியின் புரட்சிக்குழுவினதும் மற்றும் 14 பிற அரசாங்கக் கட்டிடங்களை எதிர்ப்பாளர்கள் எரித்ததன் பின் இது நிகழ்ந்தது என்று அல் ஜசீரா தகவல் கொடுத்துள்ளது.

அமைதியின்மையானது கிழக்கிலிருந்து தலைநகரான ட்ரிபோலிக்கும் மற்றய மேற்கேயுள்ள நகர்ப்புற மையங்களுக்கும் பரவியுள்ளது. நேற்று இரவு கிட்டத்தட்ட 2,000 எதிர்ப்பாளர்கள் அரசாங்கத் தடையை மீறி டிரிபோலியில் கூடி காடபியின் உருவப்படத்தை எதிர்த்து, அரசாங்க எதிர்ப்பு கோஷங்களை முழக்கியதாகவும் கூறப்படுகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் கூறுகிறது: “சங்கிலிகள், எஃகுக் குழாய்கள், அகலக்குழாய்கள் இவற்றை இளைஞர்கள் ஆயுதங்களாக வைத்திருந்தனர். பொலிசார் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கினர். எதிர்ப்பாளர்கள் பொலிசாரின் தடிகள், ஹெல்மெட்டுக்கள், றைபிள்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டனர். டம்ப்ஸ்டர்ஸிற்கு எதிர்ப்பாளர்கள் தீ வைத்ததுடன், சில பகுதிகளில் சாலைகளைத் தடுப்பிற்கு உட்படுத்தினர். மாலையில் நகரத்தின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டின் ஒலி மற்றும் வாசனையும்தான் எஞ்சியிருந்தது. இரவானதும் கொள்ளையடித்தல் துவங்கியது.”

டிரிபோலிக்குத் தெற்கேயுள்ள ஜேன்டன் நகரத்தில் பல அரசாங்கக் கட்டிடங்கள் மோதல்களின் போது தீக்கிரையாக்கப்பட்டன என்று AFP கூறியுள்ளது.

கடந்த ஞாயிறன்று லிபியாவின் 6.4 மில்லியன் மக்கட்தொகையில் ஒரு பெரிய பிரிவான வார்பலா பழங்குடி தான் கடாபிக்கு எதிரான இயக்கத்தில் சேர்வதாக அறிவித்துள்ளது. 500,000 பேர் அடங்கிய தௌரக் பழங்குடியும் இதேபோல் அரசாங்கத்தை எதிர்த்துள்ள அணியில் சேர்ந்துள்ளது. அல் ஜசீரா கூறுகிறது: “காட் மற்றும் உபரியில், லிபிய தௌரக் குழுக்களுக்கான தாயகம், நடக்கும் எதிர்ப்புக்களில் அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை தாக்குகின்றனர்.”

அரசாங்கத்தின் நெருக்கடி ஆளும் உயரடுக்கிற்குள் பிளவுகள் வெளிப்படுதலை தூண்டியுள்ளது. நேற்று கடாபியின் இராஜதந்திரிகள் இருவர் ஆட்சிக்கு தங்கள் எதிர்ப்பை அறிவித்தனர். சீனாவிலுள்ள லிபிய தூதர் ஹுசைன் சாதிக் அல் முஸ்ரடி அல் ஜசீராவின் அரபு இணையத்தில் தோன்றி தன் இராஜிநாமாவை அறிவித்தார். இராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். கெய்ரோவில் லிபிய அரபு லீக்கின் பிரதிநிதியாகவுள்ள அப்தல் மொனிம் அல் ஹௌனி தான்தன் பதவிகள் அனைத்திலிருந்து இராஜிநாமா செய்துவிட்டு மக்கள் புரட்சியில் சேர்ந்துவிட்டதாகஅறிவித்தார்.

துனிசியா மற்றும் எகிப்திய புரட்சிகளால் ஊக்கம் பெற்றுள்ள லிபிய தொழிலாள வர்க்கத்தினரும் மாணவர்களும் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் நிலவும் அதே சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லிபியாவில் வேலையின்மை விகிதம் 30 சதவிகிதம் என்று உள்ளது. நாட்டின் பெரும் எண்ணெய் வளம் ஒருபுறம் இருந்தாலும், பொதுவாக வறுமை ஆழ்ந்துள்ளது, பரந்துள்ளது. ஆனால் இந்த எதிர்ப்புக்களில் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற வறியவர்கள் கொண்டுள்ள சமூக குறைபாடுகளில் துல்லியமான பங்கு தெளிவாக இல்லை.

இயக்கத்திற்குள், குறிப்பாக கிழக்குப் பகுதியில், பல பழங்குடித் தலைமைகள் தங்களுக்கே எண்ணெய் வருமானத்தில் கூடுதல் சதவிகிதம் பெறுவது பற்றி மிகவும் கருத்துக் கொண்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று கூறியது: “நாட்டின் கிழக்குப் பகுதி, பெங்காசிதான் இதற்கு மையம் எனலாம், வெளிநாட்டவருக்கும் அதேபோல் டிரிபோலியிலுள்ள கடாபி அரசாங்கத்திற்கும் இது எதிர்ப்பு பற்றிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1969ல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து திரு கடாபி பிராந்தியத்தின் பழங்குடிகளை ஒதுக்கி தன்னுடைய க்வடாபா பழங்குடிக்கு முக்கிய அரசாங்கப் பதவிகளில் இடமளித்துள்ளது. நாட்டின் எண்ணெய் செல்வத்தில் பெரும் பகுதி கிழக்கில் இருந்தாலும், இப்பகுதி விகிதத்திற்கும் குறைவான வகையில்தான் அரசாங்க முதலீடு ஆதாரங்கள் ஆகியவற்றைக் கண்டுவருகிறது.”

கிழக்கு லிபியாவில் அல்-ஜுவயா பழங்குடியின் தலைவரான ஷேக் பரஜ் அல் ஜுவே அல் ஜசீராவிடம் அரசாங்கம் வன்முறையை நிறுத்தாவிட்டால்நாங்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு எண்ணெய் அனுப்பவதை 24 மணி நேரத்தில் நிறுத்திவிடுவோம்என்றார்.

இன்று காலை தொலைக்காட்சி உரை ஒன்றில் செய்ப் அல் இஸ்லாம் கடாபி அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஊக்கம் கொடுத்து உள்நாட்டுப் போர் மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் வகையில் கூறினார். “லிபியாவிற்கு எதிராக ஒரு சதி உள்ளது. மக்கள் பெங்காசியில் ஒரு அரசாங்கத்தை நிறுவ முற்படுகின்றனர். வேறு சிலர் பேடாவில் ஒரு இஸ்லாமிய எமிரேட்டை நிறுவ விரும்புகின்றனர். இவர்கள் அனைவரிடமும் தத்தம் சதித்திட்டங்கள் உள்ளன…. நாடு வட மற்றும் தென் கொரியா போல் பிளவு அடையலாம், ஒரு வேலி மூலம் தான் நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். ஒரு விசா வாங்குவதற்குக் கூட பல மாதங்கள் பிடிக்கும்.”

கடாபியின் கருத்துக்கள் அதிகாரத்தின் மீது ஆட்சி கொண்டுள்ள பெருகிய முறையிலுள்ள நலிந்த பிடிப்பு நழுவுவதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்வாதிகாரியின் மகன் இராணுவம் பல குடிமக்களை கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்—“கலகங்களைசமாளிக்க முடியாமல் இருப்பதற்கு படையினர்களைக் குறைகூறினார். ஆர்ப்பாட்டக்காரர்களும் ஆயுதமேந்தியுள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டார்.  அமைதியின்மைக்குக் காரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள லிபியர்கள், அவர்கள்தான்நாம் ஒருவரை ஒருவர் ஈராக்கியர்கள் போல் கொன்றுவிட வேண்டும், பின்னர் தாங்கள் ஆளவேண்டும் என்று நினைக்கின்றனர்என்றார். ஆனால் புதிய செய்தி ஊடக சட்டங்கள், ஒரு திருத்தப்பட்ட அரசியலமைப்பு, ஒருபுதிய தேசிய கீதம்,“ ஒருபுதிய தேசியக் கொடிஆகியவைகூட தருவதாக அவர் உறுதியளித்துள்ளார். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் குறைக்கும் வகையில், கடாபி ஊதியங்களை உயர்த்துவதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளார்.