World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Sanmina workers strike for higher wages and union recognition

இந்தியா: சம்பள உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் கோரி சான்மினா தொழிலாளர்கள் போராட்டம்

By Sasi Kumar and Nanda Kumar
22 February 2011
Back to screen version

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் உள்ள சான்மினா எஸ்சிஐ இந்தியா நிறுவனத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, சுகாதார காப்பீடு, நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை, ஒப்பந்த பணியாளர்களை முறைப்படுத்துதல், மற்றும் தாங்கள் புதிதாக அமைத்துள்ள தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.   

சான்மினா எஸ்சிஐ இந்தியா நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த சான்மினா எஸ்சிஐ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். உலகளாவிய மின்னணு தயாரிப்பு சேவைகள் நிறுவனமான இது, உலகம் முழுவதும் 40,000 க்கும் அதிகமான தொழிலாளர்களையும், ஆண்டுக்கு 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை வருமானத்தையும் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர், தொலைபேசி, மருத்துவம், விண்வெளி மற்றும் வாகனத் துறைகளை சேர்ந்த ஏராளமான உபகரணங்கள் தயாரிப்பாளர்களுக்கான துணை ஒப்பந்ததாரராக சான்மினா எஸ்சிஐ சேவையாற்றுகிறது.    

இதன் தமிழ்நாடு பிரிவு ஆலை ஆண்டொன்றுக்கு 400-500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை, முக்கியமாக இந்திய உள்நாட்டு சந்தைக்காக, தயாரிக்கிறது என்று கூறுகிறார் இதன் இந்திய துணை நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹரி பிள்ளை.இந்த ஆலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஓரகடத்தில் இருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைந்திருக்கிறது

சான்மினாவின் ஓரகட ஆலையில் பணியாற்றும் ஏறக்குறைய 1,200 தொழிலாளர்களில் கால்வாசி பேர் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளனர். அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களிடம் பேசிய தொழிலாளர்கள், உணவுப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட பணவீக்க அதிகரிப்பு, மற்றும் கடந்த மூன்றாண்டுகளாக சம்பள உயர்வு அளிக்க நிர்வாகம் மறுத்துவருவது ஆகியவைதான் தங்களை போராட்டத்திற்குத் தள்ளியதாக தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பரில், சம்பளப் பிரச்சனை மற்றும் தொழிலாளர்களின் இதர கோரிக்கைகளை தீர்ப்பதாக சான்மினா நிர்வாகம் வாக்குறுதி அளித்ததால்தான், முன்பு நடந்த சிறிய வேலைநிறுத்தம் முடித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போதிருந்து நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கும், தொழிலாளர்கள் புதிதாக அமைத்த தொழிற்சங்கத்திற்குமிடையே (சிஐடியுவுடன் இணைந்த சங்கம்) நடைபெற்ற ஒரு டஜனுக்கும் அதிகமான கூட்டங்களில் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் எதையும் ஏற்றுக்கொள்ள சான்மினா மறுத்து வருகிறது.

தமிழகத்தின் நாடு கடந்த நிறுவனங்களில் பெருகி வரும் வேலைநிறுத்த அலைக்கு போலிஸ் அடக்குமுறையின் மூலமாகவும் முதலாளிகளுக்கு தங்களின் தொழிலாளர்களின் அதிருப்தியை அடக்குவதற்கும் அவர்களைக் கண்காணிப்பதற்குமான ஒரு வகைமுறையாக தொழிலாளர் முன்னேற்ற முன்னணி என்கிற தனது சொந்த தொழிற்சங்கத்தை ஊக்குவிப்பதன் மூலமாகவும் பதிலிறுப்பு செய்து வரும் மாநில திமுக அரசாங்கத்தின் செயல் இந்நிறுவன நிர்வாகத்திற்கு இக்கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுவதற்கு ஊக்கமளிப்பதாய் அமைந்துள்ளது.

"நாங்கள் ஒவ்வொரு நிறுவனமாக தமிழகத்திற்குக் கொண்டு வந்தால், நீங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அதனைத் திருப்பி அனுப்பி விடுகிறீர்கள்!" என்று தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் மு..ஸ்டாலின் கூறியதாக ஓரகடம் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் தெரிவிக்கிறார்.இந்தியாவின் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர்,தமிழகத்தில் காணப்படும் தொழிற்துறை கிளர்ச்சி அழிவுக்கு வித்திட்டுவிடும் என்று சமீபத்தில் கூறியுள்ளார்

.சோ... விடம் பேசிய எஸ்சிஐ தொழிலாளி துரைமுருகன் கூறினார்:" இந்த நிறுவனத்தில் நாங்கள் மூன்றாண்டுகளாக வேலை செய்கிறோம்.இங்கே எங்களது சம்பளம் 5,000 ரூபாய் (US $111) முதல் 6,000 ரூபாய் ($133) வரை உள்ளது.எனது தந்தைக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை. அவர் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியதிருந்தது. அதனால் நான் வேலை செய்ய தொடங்கினேன். எப்படியோ நாங்கள் சமாளிக்கிறோம். ஆனாலும் பணவீக்க உயர்வால், எங்களது குடும்ப செலவை சமாளிக்க நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.நீங்கள் என்ன போராடினாலும் உங்களுக்கு நாங்கள் எவ்வித  சம்பள உயர்வும் அளிக்கமாட்டோம் என்று நிர்வாகம் எங்களிடம் கூறுகிறது. இந்த குறைந்த சம்பளத்துடன் திருமணம் செய்துகொள்வதற்கு பல தொழிலாளர்கள் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்." 

தொழிற்சாலை மட்டத்திலான தொழிற்சங்கத் தலைவரான சசிகுமார் கூறினார்: "இந்த நிறுவனத்தில் மூன்றாண்டுகளாக நாங்கள் வேலை செய்துகொண்டிருந்தாலும், எந்த ஒரு புதிய தொழிலாளர்களுக்கும் உள்ளதைப் போன்றே எங்கள் சம்பளமும் இன்னமும் உள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம், தொழிலாளார்களுக்காக உணவுவிடுதி வசதி மற்றும் தொழிலாளர்களது வீடுகளுக்கு அருகே பேருந்து வசதி உள்ளிட்டவை எங்களது பல கோரிக்கைகளாக உள்ளன.பல தொழிலாளர்கள் அவர்களை அழைத்து வர அனுப்பப்படும் பேருந்துகளைப் பிடிக்க 5 முதல் 10 கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டியதுள்ளது." 

நிர்வாகம் பழிவாங்க வாய்ப்புள்ளது என்பதால் தனது பெயரை தெரிவிக்க விரும்பாத மற்றொரு தொழிலாளி உ.சோ...விடம் சொன்னார், "பல்வேறு நீண்ட தூரங்களிலிருந்து வரும் எங்களில் பலர் திருமணம் ஆகாதவர்கள். ஆலைக்கு அருகே வசிப்பதற்காக எங்களது செலவுகளை குறைத்துக்கொண்டதற்குப் பிறகு, எங்களால் எங்களது குடும்பத்திற்கு மாதத்திற்கு 2,500 ரூபாய் ($55) மட்டுமே அனுப்பமுடிகிறது .வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தால் குடும்பத்தை நிர்வகிப்பதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மாதத்திற்கு குறைந்தது 10,000 ரூபாயாவது ($222) தர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நிரிவாகம் மூன்று மாற்று பணிமுறைகளை(shifts) நடத்துகிறது. இரவு ஷிப்ட் 10 மணி நேரம், மற்ற இரண்டு பணிமுறைகளும் தலா 7 மணி நேரங்களாக உள்ளன. அனைவருக்கும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை நேரத்தை நாங்கள் கேட்கிறோம்."

சிபிஎம் அல்லது ஸ்ராலினிச இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள தொழிற்சங்கமான சிஐடியு சான்மினா தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில்,மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதன் எதிரியான, அஇஅதிமுக(அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்) ஆகிய இரண்டு கட்சிகளிடமும் அவநம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

சிஐடியு மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டுமே, ஓரகடம் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் தொழிலாளர்ளின் போர்க்குணத்தின் ஊற்றிடமாக உருவெடுத்துள்ள அதன் அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலம்  ஆகிய இடங்களில் இருக்கும் மற்ற பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளார்களிடத்திலிருந்து சான்மினா தொழிலாளர்களுக்காக ஆதரவை திரட்டவும் அவர்கள் அனைவரையும் முதலாளிமார்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொழில் மற்றும் அரசியல் மோதலுக்கு தயார்படுத்தவும் மறுத்து வருகின்றன.

சான்மினா போராட்டம் நீண்ட நாட்களுக்குச் சென்றால் அருகில் உள்ள ஃபாக்ஸ்கான், பிஒய்டி மற்றும் ஹூண்டாய் போன்ற தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை அழைத்து அவர்களது ஆதரவைப் பெற நடவடிக்கை எடுக்கலாம் என்று சிஐடியு தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்புகள் நம்பிக்கைக்கு உரியவையாய் இல்லை.சிஐடியு மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டுமே சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள பல்வேறு தொழிலாளர்களின் போராட்டங்களை தொடர்ந்து ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்தே வைத்தும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர் சக்திக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தியும், ஒவ்வொரு தொழிலாளர்கள் குழுக்களும் அரசாங்க-ஆதரவு பன்னாட்டு நிறுவன முதலாளியை தனியாகவே எதிர்த்துப் போராட விட்டுவிடுகின்றன.

கடந்த ஆண்டில் நடந்த வேலைநிறுத்த்த்தில் பங்கேற்றதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஃபாக்ஸ்கான், பிஒய்டி மட்டும் ஹூண்டாய் நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளன. ஆனால் ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது பாதுகாப்புக்காக எந்த பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக தொழிலாளர் ஆணையர், முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அடுத்த தேர்தல்களில் ஆட்சிமாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்குமாறு பலிகொடுக்கப்பட்ட தொழிலாளர்களிடத்தில் கூறியுள்ளனர்

ஆனால் சான்மினா போராட்டத்திற்கு ஆதரவான சில நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுக்குமாறு ஸ்டாலின்ஸ்ட்டுகள் கட்டாயப்படுத்தப்பட்டாலும் கூட, அது அவர்களது பிற்போக்கான மற்றும் பரவலான அவநம்பிக்கையை பெற்ற பல்வேறு வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுடன் போராட்டத்தை இணைப்பதற்கான நோக்கமாகவே இருக்கும்."மாநில தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருப்பதால், அரசாங்கம்"-போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையையும், பெருமளவிலான கைதுகளையும் திரும்பத்திரும்ப பயன்படுத்திய அதே அரசாங்கம்-போராடும் தொழிலாளர்களது கோரிக்கைகளில் கவனம் செலுத்த" அழுத்தம் கொடுக்க முடியும் என்று சான்மினா தொழிலாளர்களிடத்தில் சிஐடியு தலைவர்கள் கூறியுள்ளனர்

முன்னதாக ஃபாக்ஸ்கான் மற்றும் பிஒய்டியில் நடந்த போராட்டத்தின்போது, தேர்தலுக்குப் பிறகு தொழிலாளர்களுக்கான நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற அடிப்படையில் தொழிலாளர்களது எந்த ஒரு முக்கிய கோரிக்கைகளும் வெற்றிபெறாமலேயே சிஐடியு போராட்டத்தை வாபஸ் பெற்றதை நியாயப்படுத்தியது.

இந்த போராட்டங்களில் சிஐடியுவின் துரோகங்களினால் கிடைத்த பாடங்களை விளக்கி உ.சோ... விடுத்த அறிக்கையில்,"சிஐடியு தலைவர்கள்...ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களிடம் அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் உங்களது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறி அவர்களை மீண்டும் வேலையைத் தொடங்க இணங்க வைத்தனர். தற்போது சிபிஎம் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடத்தி வரும் திமுகவின் எதிரியான அஇஅதிமுக  மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என வேறு வார்த்தைகளில், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களிடம், ஸ்டாலினிஸ்ட்டுகள் வாதிட்டார்கள். அஇஅதிமுக ஒரு வலது-சாரி முதலாளித்துவ கட்சி. இக்கட்சி ஆட்சியில் இருக்கும்போதுதான் தொழிலாளர்களுக்கு எதிரான கடுமையான 'அத்தியாவசிய சேவைகள்' சட்டம் அமல்படுத்தப்பட்டு, 2003 ல் பெருமளவிலான துப்பாக்கிச்சூடு, ஏராளமானோர் கைது, 200,000 அரசாங்க தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்க வேலைநிறுத்த உடைப்பாளர்களைப் பயன்படுத்தியது போன்றவை நடந்தேறின என்பதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டாய் இல்லை."

இது எழுதப்பட்ட பின், இந்த கோடைகாலத்தில் வரும் தமிழக தேர்தலுக்காக அஇஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை சிபிஎம் முழுமைப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் அஇஅதிமுக அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்று ஸ்டாலின்ஸ்டுகள் அபத்தமாக கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் புதிய தாராளமயமாக்கல் கொள்கைகளுடன் அஇஅதிமுகவுக்கு மாறுபாடான தனித்துவ கொள்கைகள் ஏதுமில்லை. உண்மையில் கடந்த நவம்பரில்தான், அஇஅதிமுகவின் மேன்மை தங்கிய தலைவரான ஜெயலலிதா, திமுகவுடனான கூட்டணியை துண்டித்த அதே நாளில் ஐமுகூ உடன் சேர தாமும், தமது கட்சியும் தயாராக உள்ளதாக அறிவித்தார்.

வலதுசாரி அ..அதிமுகவுக்கு தாங்களாகவே அடங்கிப்போகும், ஸ்டாலின்ஸ்ட் சிபிஎம் மற்றும் சிஐடியு ஆகியவை தமிழக விஷேட பொருளாதார வலையங்களை சேர்ந்த தொழிலாளர்களின் அதிகரித்து வரும் போராட்டத்தை அடக்கவும், தணிக்கவும் மற்றும் இல்லாதொழிப்பதற்கான தங்களது முயற்சிகளை ஒரேவிதமாக தீவிரப்படுத்துவார்கள் என்பதோடு, அப்போராட்டத்தை தங்களது பாராளுமன்ற அரசியலுக்கு அடிபணியச் செய்வதற்கும் முயலுவார்கள்

சான்மினா தொழிலாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க, அவர்களது போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்து ஸ்ராலினிஸ்டுகள் இடும் தளைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு அப்போராட்டத்தை இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான மலிவு உழைப்பு உற்பத்திக் களமாய் மாற்ற முனையும் பெருவணிக முயற்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை தொழிற்துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அணிதிரட்டுவதற்கும் மற்றும் சமூகத்தை சோசலிசரீதியில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்குமான போராட்டம் என்கிற ஒரு புதிய அச்சில் இருத்த வேண்டும்.