World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama orders new Afghan surge

ஆப்கானில் புதிய மோதலுக்கு ஒபாமா உத்தரவிடுகிறார்

Bill Van Auken
7 January 2011
Back to screen version

ஆப்கானிஸ்தானில் மேலும் 1,400 அமெரிக்க கடற்படை சிப்பாய்களை நிறுத்தும் ஒபாமா நிர்வாகத்தின் தீர்மானமானது, ஒரு நீண்ட இரத்தந்தோய்ந்த யுத்தத்தின் வரவை அறிவிப்பதாக உள்ளதுடன் அடுத்த ஜூலையில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்ற ஜனாதிபதியின் 2009 டிசம்பர் உறுதிமொழி புறக்கணிக்கப்படும் என்பதற்கான ஓர் அறிகுறியாகவும் அமைந்துள்ளது.

ஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் மற்றும் ஏனைய பெண்டகன் தளபதிகளின் தன்னியல்பான நிலையாக இருக்கும் மூடத்தனமான நம்பிக்கைக்கு இடையில், அன்னிய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும்  மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு தங்கள் நாட்டை மறைமுக காலனியாக்கத்திற்கு அடிமைப்படுத்த மறுக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடனான ஒரு கட்டுக்கடங்காத மோதலில் அமெரிக்க இராணுவம் சிக்கியுள்ளது

படுகொலைகளைத் தீவிரப்படுத்துவது தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வியாழனன்று வெளியான ஓர் அறிக்கையின்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கண்டஹாரைச் சுற்றிலுமுள்ள பகுதிகளுக்குள் சிப்பாய்களின் கூடுதல் பிரிவு அனுப்பப்படும். சுமார் 500,000 மக்கள் வாழும் நகரமான கண்டஹார், நீண்டகாலமாக தலிபான்களின் இரும்புப்பிடியில் இருந்து வருகிறது.

அதிகரித்து வரும் கிளர்ச்சியை அடக்குவதற்கான ஒரு முயற்சியில், இரகசிய பொறிகளைக் கொண்டிருக்கும் அல்லது தலிபான் துப்பாக்கிசூடு நடத்துவதற்கான மறைவிடங்களைக் கொண்டிருக்கும் தளங்களாக இருக்கும் அந்த நகரைச் சுற்றிலுமுள்ள ஒட்டுமொத்த கிராமங்களையும் அமெரிக்க இராணுவம் தரைமட்டமாக்கியது. கண்டஹாரைச் சுற்றிலுமுள்ள குடிமக்களே கூட முற்றுகை இடப்பட்ட நிலையில், சோதனைச்சாவடிகளாலும், குண்டுதடுப்பு சுவர்களாலும் சூழப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், தொடர்ச்சியாக அவர்கள் ஆயுத துன்புறுத்தலுக்கும் முகங்கொடுத்து வருகிறார்கள்.

கடற்படை சிப்பாய்கள் நிறுவப்படுவதற்கு கூடுதலாக, “கெனட்டிக் நடவடிக்கை” ("kinetic activity") என்று எது அமெரிக்க இராணுவத்தால் மென்மையாக குறிப்பிடப்படுகிறதோ அதை அதிகரிப்பதற்காக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் உதவிப்படைப்பிரிவுகளுக்கு மாற்றாக தரைப்படைகளை நிறுத்தவும் பெண்டகன் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

USA Today இன் ஓர் அறிக்கையின்படி, “கூட்டு தாக்குதல் நடவடிக்கை கட்டுப்பாட்டாளர்களாக” (joint terminal attack controllers) ஆப்கானிஸ்தானில் இருத்தப்பட்ட விமானப்படையினரின் எண்ணிக்கையையும் விட அதிகமாக விமானப்படை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த படைகள் தரைப்படைப் பிரிவுகளுடன் இணைந்து விமானத் தாக்குதல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கான தயாரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாமல் அதிகளவிலான ஆப்கான் மக்களின் உயிர்களைப் பறிக்கும். கடந்த அக்டோபரில், அமெரிக்க விமானப்படையின் 1,000 விமானங்கள் பறந்தன; அதில் அவை ஆப்கான் இலக்குகளை நோக்கி குண்டு வீசின; ராக்கெட் வீசின அல்லது மிதமான வான்வழி தாக்குதல்களை நடத்தின. யுத்தம் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்டதில் இதுவே பெரும் எண்ணிக்கையாகும்.

இந்த கடுந்தாக்குதலுக்கு இடையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் வளர்ந்து வரும் மற்றும் பரவி வரும் எதிரெழுச்சியை ஒடுக்க அதன் முயற்சிகள் போதாது என்று அமெரிக்க இராணுவம் அஞ்சுகிறது. குறிப்பாக வசந்தகாலம் வந்ததும், அது பனிமூடிய மலைகளின் பாதைகளைத் திறந்துவிடும் என்று பெண்டகன் கவலைப்படுகிறது. வழக்கமாக இந்த நிலைமை ஆயுதந்தாங்கிய எதிர்பாளர்களின்எழுச்சி காலமாக பார்க்கப்படுகிறது. இது இன்னும் ஆழமான நெருக்கடியையும், காயமடைவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சூழலை ஏற்படுத்தும்.  

ஒரு தசாப்த அமெரிக்க தலையீட்டில், கடந்த ஆண்டு மிகவும் உயிர் சேதத்தைப் பெற்ற ஆண்டாக ஆனது. 2010இன் போது அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளின் சார்பில் 711 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆப்கான் மக்களின்மீது நடத்தப்பட்ட மனிதயின படுகொலை இதற்கும் அதிகமாக இருந்தது. AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செய்தியின்படி, அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட கைப்பாவை பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள், “போராளிகள்அல்லதுகிளர்ச்சியாளர்கள்என்று பட்டியலிடப்பட்டவர்கள், அத்துடன் அப்பாவி பொதுமக்கள் உட்பட, சுமார் 10,000 ஆப்கானியர்கள் கடந்த ஆண்டில் உயிரிழந்தனர்.    

சந்தேகத்திற்கு இடமின்றி, உண்மையான இறப்பு எண்ணிக்கையைவிட இது கணிசமான அளவிற்கு குறைமதிப்பீடாக உள்ளது. மேலும் நிச்சயமாக, சிறப்பு கொலைப்படைகளால் நடத்தப்பட்ட விமான தேடல்வேட்டைகள் அல்லது இரவுநேர தேடல்வேட்டைகளில் கொல்லப்பட்ட பல அப்பாவி குடிமக்களும், எதிர்போராட்டத்தில் கொல்லப்பட்டகிளர்ச்சியாளர்கள்பட்டியலில் இருந்தனர். (இந்த பட்டியல் அமெரிக்க இராணுவ உத்தரவின்கீழ் சுய-சேவை ஆதாரத்தின் (self-serving testimony) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்).

மோதல் அவதானிப்பு நிலையத்தால் (Conflict Monitoring Centre) தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இதேபோன்று பாகிஸ்தானின் எல்லைக்கருகில் நடந்த இரத்தந்தோய்ந்த தீவிர நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட டிரோன் ஆளற்ற விமானத்தாக்குதல்களில் 929 பேர் கொல்லப்பட்டனர்; இதில் மிகப் பெரும்பாலானவர்கள் சாதாரண குடிமக்களாவர்.

ஆப்கானிஸ்தானிற்குள் ஒபாமா நிர்வாகம் கூடுதல் துருப்புக்களை அனுப்பி வருகிறது என்றாலும் கூட, சிறப்பு படைப்பிரிவுகளைக் கொண்டு பாகிஸ்தானிற்குள் எல்லை தாண்டிய தேடல்வேட்டைகளை நடத்த அனுமதி அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகனுக்குள் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

எல்லையின் இரண்டு பக்கங்களிலும் நடக்கும் இந்த கொலை வெறியாட்டம், எதிர்ப்பின் அளவைக் குறைப்பதில், விரும்பிய விளைவைக் கொண்டு வந்துவிடவில்லை.

 “தெற்கிலும் கிழக்கிலும் அவர்களை நாம் முடிந்தளவிற்கு சம்மட்டி அடி அடித்து வந்தாலும் கூட, அவர்களின் எண்ணிக்கைகள் குறைந்து விடவில்லை. உரிமையிழந்த, செய்வதற்கு ஒன்றுமில்லாத பல இளைஞர்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்,” என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவித்தார்.

சந்தேகமேயில்லை, ஆப்கான் மக்களின் பெரும்பாலானவர்கள் எதிர்கொண்டிருக்கும் ஏழ்மையும் அடக்குமுறையும் தான், ஓர் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஆயுதமேந்திய எதிர்ப்பின் ஒரு சக்திவாய்ந்த உந்துவிசையாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை, ஜனாதிபதி ஹமித் கர்ஜாய் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் பிரதிநிதித்துவத்தில் இருக்கும் கைக்கூலி ஆளும் மேற்தட்டு ஆதரித்து வருகிறது.

ஆனால் இந்தசம்மட்டி அடியேகூட, கிளர்ச்சிக்கு எண்ணிலடங்கா புதியவர்களை உருவாக்குகிறது. அந்த அமெரிக்க அதிகாரி இறுமாப்போடு குறிப்பிட்டதைப் போல, இதுசெய்வதற்கு ஒன்றுமில்லாத இளைஞர்களைக் குறித்த விஷயமல்ல, மாறாக தங்களின் உறவினர்களின் படுகொலைக்குப் பழிக்குப் பழி தீர்க்க தீர்மானித்திருக்கும் ஆப்கானிய மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமார்கள் ஆவர்.

நவார் மாவட்டத்தில் அமெரிக்க இரவுநேர சிறப்பு நடவடிக்கை தேடல்வேட்டையில் கொல்லப்பட்ட மூன்று ஆப்கான் குடிமக்களின் சடலங்களுடன் தெற்கு காஜ்னி மாகாணத்தின் கிராமத்தவர்கள் மாகாண தலைநகருக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்ததே முன்னால் இருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டியது.

ஹெலிகாப்டர்களில் இருந்து இறங்கிய அமெரிக்க படைகள், அந்த பகுதியை முற்றுக்கையிட்டு, குலா--நாவ் கிராமத்தில் ஒரு மத பள்ளிக்கூடத்தைத் தாக்கியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் சடலங்களைச் சுற்றி நின்று, அமெரிக்கா ஒழிக என்று கோஷமிட்டனர். தாக்கப்பட்ட பள்ளியின் ஆசிரியரும், அந்த கிராமத்தின் ஒரு குடிவாசியுமான குலாம் அலி அக்லாஹி, குரானின் ஒரு நகலையும் அவருடன் எடுத்து வந்திருந்தார். அது தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்தது. அவர் கூறினார், “எங்களுடைய பகுதியில் தலிபான்களோ அல்லது கிளர்ச்சியாளர்களோ கிடையாது. ஆனால் தவறான தகவலின் அடிப்படையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அது எங்களின் புனித புத்தகத்தின் அவமதிப்பிற்கும் காரணமாயிற்று,” என்றார்.

திரும்ப திரும்ப நடத்தப்படும் இதுபோன்ற தேடல்வேட்டைகள், என்றும் தீராத வகையில், ஆயுதமேந்திய எதிர்ப்புகளுக்கான புதியவர்களை உருவாக்குகின்றன.

தாம் விரும்பிய விளைவுகளை உருவாக்குவதில் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தோல்வியானது, அமெரிக்க இராணுவ தலைமையகத்தில் ஒரு விரக்தியின் வெளிப்படையான தோற்றத்தை உருவாக்கியுள்ளது. இது, ஒரு முன்னாள் உதவி பாதுகாப்பு செயலாளரும், பெண்டகனின் ஆலோசகருமான பிங் வெஸ்டால் Newsweek இதழில் வெளியான ஒரு தலையங்கத்தில் பிரதிபலித்தது.

பாகிஸ்தான் எல்லையோர தலிபான்சரணாலயங்கள்குறித்த குற்றச்சாட்டுகள் வியட்நாம் தோல்விக்கு  கம்போடியா மற்றும் லாவோஸில் இருந்த தேசிய விடுதலை முன்னனியின் பாதுகாப்பு புகலிடங்கள்தான் காரணம் எனக் கூறிய அமெரிக்க இராணுவத்தின் முயற்சிகளின் ஓர் எதிரொலி போலுள்ளதுடன் மற்றும்ஆப்கானிஸ்தானின் படுபாதக தலைமை குறித்த வழக்கமான குறைகளையே வெஸ்ட்டும் மொழிகிறார்.

ஆனால் அவருடைய முக்கியமான கவலை, அமெரிக்க இராணுவம் ஆப்கானியர்களைக் கொல்வதில் போதியளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்பது தான். அவர்களை அவர் 19ஆம் நூற்றாண்டு அமெரிக்க மேற்கின் அப்பாச்சிகளுடன் (Apache) ஒப்பிடுகிறார். அவர் கூறுகிறார், “அமெரிக்காவின் முதன்மை மூத்த அதிகாரிகள் கிளர்ச்சியாளர்களைக் கண்டறிவதிலும், அவர்களைக் கொல்வதிலும் வைக்காமல் வெற்றிபெறுவதற்கான முழுக்கவனத்தையும், மனதையும் சிந்தனைகளையும் வெற்றுகொள்வதில் வைத்துள்ளார்கள். இந்த கொள்கை போர்வீரர் நம்பிக்கைகளை நசுக்குவதுடன், அபாயகரமான வெறுப்பையும் வளர்த்துவிடுகிறது.

இதுபோன்ற பாசிச வெறிபிடித்த உளறல்கள், தயாரிக்கப்படுபவை எவையோ அவை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மக்களின் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டவைகளை விட மிக பயங்கர அளவிலான யுத்த குற்றங்களாக இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடாமல் கொலை செய்தும், இறந்தும் வருகின்றன. அமெரிக்க இராணுவமும், உளவுப்பிரிவு அமைப்புகளும் கூட அந்த நாட்டில் தோற்றப்பாட்டளவில் அல்கொய்தா இல்லை என்பதை ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மத்திய ஆசியாவிலும், அதன் பரந்த எரிசக்தி மூலவளங்களின் மீதும் அமெரிக்க தலைமையைத் திணிப்பதன் மூலம் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் ஈடுகட்ட, இராணுவப் படையைப் பயன்படுத்துவதைத் தீர்மானிக்கும் ஓர் அமெரிக்க நிதியியல் மேற்தட்டின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.    

உள்நாட்டில் உழைக்கும் மக்கள் பெருந்திரளாக வேலையின்மையையும், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை சமூக சேவைகள் ஆகியவற்றில் மேலும் மேலும் கடுமையான வெட்டுக்களுக்கான கோரிக்கையையும் முகங்கொடுத்து வரும் நிலையில், ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்வதுடன் சேர்ந்து, இந்த கிரிமினல் யுத்தத்தையும் தாங்கிப்பிடிக்க நூறு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன.

பெருமளவிலான அமெரிக்க மக்கள் யுத்தத்தை எதிர்க்கின்ற போதினும், குடியரசு கட்சியின் ஆதரவுடன் இருக்கும் ஒபாமா நிர்வாகம், நிதி பிரபுத்துவத்தினரின் நோக்கங்களைப் பாதுகாக்க அதை தீவிரப்படுத்தவும், தொடரவும் தீர்மானித்திருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையிலும், பெரு வணிகங்கள் மற்றும் அதன் அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக வேலைகளையும், வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தில் ஐக்கியப்பட்டும், யுத்தத்திற்கு எதிராக ஓர் உண்மையான இயக்கத்தை உயிர்பிப்பதன் வாயிலாக மட்டும் தான் இந்த படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.