World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

British police trained Bangladeshi death squads

பங்காளதேஷின் கொலை படைக்கு பயிற்சியளித்த பிரிட்டிஷ் போலீஸ்

By Simon Whelan
7 January 2011
Back to screen version

அரசியல் எதிரிகளை கொல்வதில் சிறப்பு வாய்ந்த பங்காளதேஷ் அரசாங்கத்தின் பரா இராணுவப் படைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி பயிற்சி அளிக்கிறது என்பதை விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. 

இந்த அதிரடி நடவடிக்கைப் பட்டாலியனால் அண்மையில் கொல்லப்பட்டவர், அந்த நாட்டின் மேற்கு பிராந்தியத்திலுள்ள பங்காளதேஷ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அனீஷுர் ரஹ்மான் ஆவார்.

நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட இந்த கொலைகளை நிறுத்துவதாக பங்காளதேஷ் அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனாலும், பிபிசி-யால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வானொலி விவாதம் ஒன்றில், "அவை(கொலை) இந்த நாட்டின் சட்டங்களின் கீழ் செய்ய சாத்தியமில்லாத விசாரணை சம்பவங்கள். தீவிரவாத நடவடிக்கைகளும், பண பறிப்பு மிரட்டல்களும் அடியோடு ஒழிக்கப்படும் வரை  'பரஸ்பர துப்பாக்கிச் சூடு' என்றழைக்கப்படும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை அரசாங்கம் தொடரத்தான் செய்யும்" என்று மீன்பிடிப்புத் துறை அமைச்சர் சமீபத்தில் கூறியுள்ளார்.

ஒரு கொலையை வேறுவிதமாக கூறுவதுதான் "பரஸ்பர துப்பாக்கிச் சூடு" கொலைகளாக உள்ளன. நீதிபதி, நீதிமன்றம் மற்றும் தண்டனை நிறைவேற்றுபவராக செயல்படும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நட்சத்திர சபை, ஆளும் தட்டு குழுக்களுக்கு எதிரான அவர்களால் குற்றங்கள் என்றழைக்கப்படுபவற்றிற்காக, யார் இறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதன்பிறகு அதிரடி நடவடிக்கைப் பட்டாலியனுக்கு(RAB)உத்தரவுகள் போகின்றன. 

இந்த கொலைப் படைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பயிற்சி அளித்து உதவுவதையும், பிரிட்டிஷ் படைகளிடம் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிற மிருகத்தனமான நடத்தையின் உண்மையான இயல்பையும் மற்றும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் எப்படியோ ரகசியமாக இருந்த அதன் குரூரமான நடத்தையையும் விக்கிலீஸ் ஆவணங்கள் காட்டுகின்றன.

பங்காளதேஷ் RAB படையினர்களுக்கு பிரிட்டனில் West Mercia மற்றும் Humberside போலீஸ் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் பிரிட்டிஷ் தலைமை போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

பங்காளதேஷ் RAB க்கு அதன் மனித உரிமைகள் மீறல்கள் வரலாற்றை காரணம் காட்டி, வாஷிங்டன் பயிற்சியளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கசிந்த ஆவணங்களில் ஒன்றில்"கடந்த பத்தாண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீரழிவால் அச்சம் கொண்டிருந்த மக்களிடம் RAB க்கு மிகப்பெரும் மரியாதையும், பாராட்டும் கிடைக்கிறது" என்று பங்காளதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி James Moriarty கூறுகிறார்.

RAB குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ள Moriarty, "அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அலுவலகம் (FBI) போன்றவை போல் பங்காளதேஷின் கண்ணோட்டத்திற்கேற்ப, அந்த படை ஒரு நாள் நிச்சயம் உன்னத நிலையை அடையும்" என்று கூறியுள்ளார். 

மற்றொரு ஆவணத்தில், "புலனாய்வு விசாரணை கேள்விக்கான நுட்பங்கள் மற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான விதிகள் போன்ற துறைகளில் RAB க்கு 18 மாத பயிற்சியை" தாங்கள் அளித்ததாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்தனர் என்று Moriarty குறிப்பிடுகிறார்.

பிரிட்டனில் விக்கிலீஸ் ஆவணங்களை வெளியிட்ட கார்டியன் பத்திரிகை கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர், RAB க்கு பிரிட்டன் "மனித உரிமைகள் உதவி வகையிலானவற்றை அளிக்கிறது" என்று கூறினார்.  

அந்த படைக்கு அளிக்கப்படும் பயிற்சியின் தன்மை குறித்து கார்டியன் கேட்டபோது, RAB பயிற்சி தலைவரான மெஜ்பா உத்தீன்,  தான் கோடையில் தான் நியமிக்கப்பட்டேன் என்பதால் மனித உரிமைகள் பயிற்சி குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.

மேலும் நூற்றுக்கணக்கான கொலைகளை செய்த RAB, சித்திரவதை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் "பரஸ்பர துப்பாக்கிச் சூடு" கொலையை நடத்தாமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்றுக்கொள்வது போன்றவற்றையும் வழக்கமாக செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 2004 ல் RAB உருவாக்கப்பட்டதிலிருந்து நடந்த நூற்றுக்கணக்கான சாவுகளுக்கு தாம் தான் காரணம் என்று அது பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பரா இராணுவ பட்டாலியன் உருவாக்கப்பட்டதிலிருந்து தங்கள் கையால் நடந்த "பரஸ்பர துப்பாக்கிச் சூட்டினால்" 577 பேர் இறந்துள்ளனர் என்றும் அதன் தலைவர்(டைரக்டர் ஜெனரல்) ஒப்புக்கொண்டுள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 622 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தது 1,000 நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளுக்காவது RAB காரணமாக உள்ளது என்று மனித உரிமைகள் குழுக்கள் மதிப்பிட்டுள்ளன. 

விக்கிலீக்ஸ் வெளியிட்ட முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக, லண்டனிலுள்ள முன்னாள் காலனி எஜமானர்களுக்கும், பங்காளதேஷுக்கும் இடையேயான தற்போது தொடர்ந்துகொண்டிருக்கும் உறவு உள்ளது. 1997 ல்"நன்னடத்தை நெறி" என்றழைக்கப்பட்ட தனது வெளிநாட்டு கொள்கையை ஊக்குவித்துக்கொண்டிருந்த பிளேயர் அரசாங்கத்தின் கீழ் தொடங்கிய RAB க்கான பயிற்சிதற்போதைய கன்சர்வேட்டிவ்/லிபரல்-ஜனநாயக கூட்டணியிலும் தொடர்வதை, கசிந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகிறது. சமீபத்தில், அதாவது கடந்த அக்டோபரில் RAB படையினர்கள் பிரிட்டனில் பயிற்சியில் பங்கேற்றனர் என்று RAB உறுதிபடுத்தியுள்ளது.

டாக்காவிலுள்ள தற்போதைய நிர்வாகம் கடந்த தேர்தல்களின்போது, , பங்காளதேஷ் மக்களுக்கு எதிரான RAB யின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அவர்களின் பங்கிற்கு பிரச்சாரம் செய்தது. ஆனாலும், ஒருமுறை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த பாரிய கூட்டக் கொலைகள் தங்களது பயன்பாட்டுக்கானது அவ்வளவுதான் என அவர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஒரு ஆண்டுக்கு முன், RAB யால் நிகழ்த்தப்படும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று டாக்காவிலுள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் சராசரியாக வாரம் ஒரு கொலை என்ற கணக்கில் அவர்கள் அதனை முழு வீச்சில் தொடருகின்றனர். பெரும்பாலும் இளைய வயதினர்கள்-அடிக்கடி இடதுசாரிகள், ஆனால் எப்போதும் அல்ல, இரவில் தான் கொல்லப்படுகிறார்கள்.

RAB யால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கொலைக்கு கூட யாரும் குற்றஞ்சாட்டப்படவில்லை.

அச்சமுறுத்தும் வகையில், பிரிட்டனில் குடியேறிய முஸ்லிம் சமூகத்தின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அமெரிக்க அரசாங்கம் கணக்கெடுத்து ஆய்வு செய்துவருவதாகவும் விக்கிலீஸ் மேலும் தெரிவிக்கிறது. முஸ்லிம்களிடையே செல்வாக்குள்ள பிரிட்டிஷ் பங்காளதேஷ் சமுதாயத்தினரின் எண்ணிக்கை அளவின் தகவல் மற்றும் அவர்களது வளர்ச்சியையும் அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.