World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US Federal Reserve chief rules out loans to the states

அமெரிக்க மத்திய வங்கிகூட்டமைப்புத் தலைவர் மாநிலங்களுக்கான நிதியுதவிகளை நிராகரிக்கிறார்

Barry Grey
13 January 2011
Back to screen version

கடந்த வெள்ளியன்று செனட் வரவு-செலவு கணக்கு குழுவின் முன் அறிக்கை அளிக்கையில், மத்திய வங்கிகூட்டமைப்பு தலைவர் பென் பெர்னான்கி நாட்டின் மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு (state & local governments) எவ்வித உதவியையும் நிராகரித்தார். அவை வரவு-செலவு திட்டத்தில் பெரும் பற்றாக்குறையை முகங்கொடுத்து வருகின்றன. “மாநில மற்றும் உள்ளாட்சி நிதிகளிலிருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை; அவற்றில் தலையிடவும் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை,” என்று தெரிவித்த பெர்னான்கி, பின்னர் கூறுகையில், மாநிலங்கள் "மத்தியிலிருந்து நிதியுதவிகளையும் எதிர்பார்க்கக்கூடாது என்றார்.

பெர்னான்கிக்கு முன்னர் ஜனநாய கட்சியைச் சேர்ந்த அந்த குழுவின் தலைவர் வடக்கு டகோடாவின் கென்ட் கோன்ராட் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். பிரதிநிதிகள் சபையோ அல்லது செனட்டோ "மாநிலங்களுக்கு பிணையெடுப்புகளை அளிக்க ஆர்வப்படவில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்க முடியாது என்று முற்றிலுமாக நிராகரித்திருப்பதானது, அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமூக முன்னுரிமைகளையும், வர்க்க நலன்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

வோல் ஸ்ட்ரீட் வங்கிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்க கருவூலத்தை திறந்து வைத்துவிட்டு, நிதியியல் மேற்தட்டை பிணையெடுக்க ட்ரில்லியன் கணக்கான டாலர்களை தேசிய செல்வவளத்திலிருந்து சூறையாடிய பின்னர், மத்திய வங்கிகூட்டமைப்பும் ஒபாமா நிர்வாகமும்கல்வி, கழிவுநீர் வெளியேற்றம், தீயணைப்பு சேவை போன்றஅடிப்படை சமூக சேவைகளை நிர்வகிக்கவும் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்குத் தேவையான சுகாதார திட்டங்கள், வீட்டுவசதி திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்குவதற்குரிய அனைத்து ஆலோசனைகளையும் சிறிதும் மதிப்பளிக்காமல் நிராகரிக்கிறது.

சுமார் 6,600 குடும்பங்களுக்கு கூடுதலாக 23 பில்லியன் டாலரை அளிக்கக்கூடிய எதிர்பாரா வருமான (windfall) எஸ்டேட் வரிவெட்டுக்களுடன், பணக்காரர்களுக்கான புஷ்-சகாப்த வரிவெட்டுக்களை நீடிக்க, குடியரசு கட்சியினருடன் ஒபாமா உடன்படிக்கை செய்து கொண்ட சில வாரங்களிலேயே இது வெளியில் வந்துள்ளது.

இதற்கிடையில் பெர்னான்கி வட்டிவிகிதங்களைப் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக தக்க வைத்து வருகிறார் என்பதுடன் பங்குச்சந்தையில் நுழைப்பதற்காகவும், வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் தோற்றப்பாட்டளவில் வட்டியில்லா கடன்களை அளிப்பதன்மூலம் சாதனை அளவிற்கு பெருநிறுவனங்களின் இலாபங்களைக் உயர்த்திக் காட்ட நூறு பில்லியன் கணக்கான டாலர்களை மின்னணு முறையில் அவர் அச்சடித்து வருகிறார். இந்த கொள்கை வேலை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எவ்விதத்திலும் உதவாது என்பதை மௌனமாக ஒப்புக்கொண்டு, வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 9 சதவீதத்திற்கு நெருக்கமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என்று அவரே மனநிறைவோடு கணிக்கிறார்.

வரவிருக்கும் நிதியாண்டில் 50இல் 40 அமெரிக்க மாநிலங்கள் மொத்தம் 140 பில்லியன் டாலர் பற்றாக்குறையைக் கொண்டிருக்கும். மாநில வருவாய் பின்னடைவின் விளைவாக, 2008 மற்றும் 2009க்கு இடையில் மூன்று மடங்கிற்கு நெருக்கமாக வீழ்ச்சி அடைந்தது. மருத்துவ நிதியுதவி, ஏழைகளுக்கான மத்திய-மாநில சுகாதார திட்டம் போன்ற சமூக திட்டங்களின் செலவுகள் அதிகரித்திருந்தன. நகராட்சி அரசாங்கங்களும் இதேபோன்ற நெருக்கடியை முகங்கொடுத்து வருகின்றன.

சமூக திட்டங்கள் மற்றும் அடிப்படை சேவைகளை வெட்டுவதும், அரசாங்க தொழிலாளர்களின்மீது தாக்குதலைத் திணிப்பதும் தான் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி அதிகாரிகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. பெருமந்த நிலைமைக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான வேலை நெருக்கடியோடு சேர்ந்து, உள்ளாட்சி அரசாங்கங்கள் கடந்த ஆண்டு 212,000 வேலைகளைக் குறைத்தன. நாடு முழுவதும் தொழிலாளர்கள் சம்பளம் இல்லாமலும், சம்பளம் மற்றும் நலன்களின் குறைப்புகளாலும் பாதிக்கப்பட்டு, இடைக்கால விடுப்புக்கு ஆகியுள்ளனர்.

ஒபாமா நிர்வாகத்தின் 2009 ஊக்கநிதி மசோதாவில் (stimulus bill) அளிக்கப்பட்ட மாநிலங்களுக்கான குறைந்தபட்ச உதவியும் தீர்ந்துவிட்டதால், இது மாநிலங்களின் நிதிநெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் அவற்றின் வரவு-செலவு நெருக்கடிகளைச் சமாளிக்க உதவும் வகையில் புதிய மானியங்களை அளிக்கும் எந்தவித நோக்கமும் ஒபாமாவிற்கோ அல்லது காங்கிரஸில் இருக்கும் ஜனநாயக கட்சியின் தலைவர்களுக்கோ இல்லை.

 “மீள்கிறது" என்ற உத்தியோகப்பூர்வ பிதற்றல்களுக்கு இடையில், பொதுத்துறை தொழிலாளர்களை அதிக சம்பளம் பெறும் ஒட்டுண்ணிகளாக விளக்கும் பிரச்சாரத்தை ஊடகங்கள் இசைக்க தொடங்கி உள்ளன. சம்பளங்கள், ஓய்வூதியங்கள், ஒட்டுமொத்த பேரம்பேசும் உரிமைகள் மற்றும் வேலைநிறுத்த உரிமை ஆகியவற்றின் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டும், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கும் சமூக திட்டங்களில் நடத்தப்படும் ஆழமான வெட்டுக்களுக்கு எதிராக தோன்றும் பெரும் கோபத்தைத் திசைதிருப்புவதுமே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் தான் சமூக திட்டங்களை ஏலம் போட்டு வருகிறார்கள்.

ஜனவரி 2இல் New York Times அதன் முதல் பக்கத்தில், “Public Workers Facing Outrage in Budget Crisis” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்தது. அரசு தொழிலாளர்களின் வேலைகளிலும், சம்பளங்களிலும் இன்னும் கூடுதலாக வெட்டுக்களைக் கோரும் கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் வெகுஜன உணர்விற்குச் சாதகமாக விடையிறுப்பு காட்டி வருவதாக அந்த கட்டுரை போலியான முறையீட்டை செய்தது. இதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், பொதுத்துறை தொழிற்சங்கங்கள் மீது அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து மற்றொரு முதல்-பக்க கட்டுரை வெளியானது. “பொதுத்துறை பணியாளர்களுக்கு சலுகைகளும், வரிசெலுத்துவோருக்கு சலுகையின்மையும் அளிக்கப்படும் ஒரு சமூகத்தில் நம்மால் இனியும் வாழ முடியாது,” என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஸ்கான்சினின் குடியரசு கட்சி ஆளுநர் ஸ்காட் வால்கர் கூறியதாக அந்த கட்டுரை மேற்கோளிட்டது.

ஆளும் வர்க்கம் சிக்கன நடவடிக்கைகளுக்குத் திரும்புவதில் உள்ள சர்வதேச இயல்பை எதிரொலித்து, பிரிட்டனின் Economist இதழ்The Battle Ahead: Confronting the Public-Sector Unions” என்ற தலைப்பில், அதன் ஜனவரி 8ஆம் தேதி பதிப்பின் முதல் பக்கத்தை அலங்கரித்தது. “பொதுத்துறை தொழிற்சங்கங்கள் மற்றவர்களை விலையாக கொடுத்து எந்தளவிற்கு விருந்தைப் பெற்றிருக்கின்றன என்பதை தனியார்துறை மக்கள் இப்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்,” என்று அது குறிப்பிட்டது.

உண்மையில் அமெரிக்காவிலும் உலகின் மற்ற இடங்களிலும் உள்ள பொதுத்துறை தொழிற்சங்கங்கள், அவற்றின் உறுப்பினர்களின் மற்றும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பையும் கோபத்தையும் ஒடுக்கவும், சிக்கன முறைமைகளைத் திணிக்கும் அரசாங்கங்களுக்கு உதவுவதற்குமே முக்கியமாக வேலை செய்து வருகின்றன. இருப்பினும் அமெரிக்காவில் இன்றைய நிலையில் தனியார்துறை அளவிற்கு பொதுத்துறையில் சம்பள-வெட்டுக்கள் இன்னும் முழுவீச்சை எட்டவில்லை. இதைத் தான் அமெரிக்க ஆளும் மேற்தட்டு மாற்ற கோரி வருகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லெர் நிறுவனங்களைத் திவால்நிலைமைக்குள் தள்ளியதன் மூலமாகவும், புதிதாக சேர்க்கப்பட்ட வாகனத்துறை தொழிலாளர்களின் மீது 50 சதவீத சம்பள வெட்டுக்களைத் திணித்ததன் மூலமாகவும் ஒபாமா நிர்வாகம் தனியார்துறை முழுவதும் சம்பள-வெட்டுக்களைக் கொண்டு வருவதற்கான அறிகுறியை அளித்தது. தற்போது இராணுவம் தவிர்த்த ஏனைய மத்திய அரசுத்துறைகளில் சம்பள உயர்வின்மையைக் (wage freeze) கொண்டு, பொதுத்துறை தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அவரின் ஆதரவைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

நியூயோர்க்கின் ஆண்ட்ரூ குவோமோ மற்றும் கலிபோர்னியாவின் ஜெர்ரி பிரௌன் போன்ற ஜனநாயக கட்சி ஆளுநர்கள், அரசுத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தில் வெட்டுக்கள் அல்லது சம்பள உயர்வின்மை ஆகியவற்றுடன், மருத்துவநலன், கல்வி மற்றும் சுகாதார திட்டங்களில் காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களுக்கான அவர்களின் திட்டங்களை இந்த வாரம் அறிவித்திருந்தனர். எதிர்பலத்தில் நியூஜெர்ஸியில் கிரிஸ் கிறிஸ்டி, ஒஹியோவில் ஜோன் காஷிச் போன்ற குடியரசு கட்சியினரும் இதேபோன்ற முறைமைகளை முன்மொழிந்து வருகிறார்கள்.

குடியரசு கட்சியினர் நிறுவனங்களைப் போல கருதி தொழிற்சங்கங்களின்மீது தாக்குதல் நடத்துகின்றன, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நலன்களை அச்சுறுத்துகின்றனர், ஜனநாயக கட்சியினரோ தொழிற்சங்கங்களை இன்னும் துல்லியமாக பயன்படுத்தி பணிநீக்கங்களையும், சம்பள வெட்டுகளையும் திணிக்க தொழிற்சங்கத்திற்கு எதிரான வாய்ஜாலங்களை மட்டந்தட்டுகின்றன என்பது தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலிருக்கும் முதன்மை வித்தியாசமாக இருக்கிறது. இதனால் தான் மாநில, மாகாண மற்றும் மாநகரசபை தொழிலாளர்களின் அமெரிக்க கூட்டமைப்பின் (AFSCME) தலைவர் ஜெரால்டு மெக்கென்டி, மாநில மற்றும் உள்ளாட்சி தொழிலாளர்கள் மீதான தாக்குதலை முழுமையாக குடியரசு கட்சியினரிடம் ஒப்படைக்கிறார். அதை தொழிற்சங்கங்களின் நிதி-வசூலைச் சரிசெய்யும் மற்றும் ஜனநாயக கட்சியினருக்கான பிரச்சாரமாகவும் அது அதன் நடவடிக்கையை விளங்கப்படுத்துகிறது. “2010 தேர்தல்களில் நாங்கள் வகித்த பாத்திரத்திற்கு நன்றிகடனாக, நான் இதை பார்க்கிறேன்,” என்று அவர் நியூயோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு நிதியுதவி இல்லை என்ற மத்திய அரசின் நிராகரிப்பு, வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலைவாய்ப்பைக் குறைப்பது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளின் போலித்தனமான பாத்திரத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையில் மத்திய வங்கி மற்றும் ஒபாமா நிர்வாகம் இரண்டுமே ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஏனைய சலுகைகளை ஏற்றுக்கொள்ள தொழிலாளர்களை மிரட்டுவதற்காக, திட்டமிட்டே வேலைவாய்ப்பின்மையை உயர்ந்த அளவில் தக்கவைத்து வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு இடையில், இலாபங்களை சாதனை அளவிற்கு எடுத்துச் செல்வதற்கு பெருநிறுவன செலவு-வெட்டுக்கள் முக்கிய காரணியாக உள்ளது.

செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரையில், அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளங்களில் கடுமையான குறைப்புகள் செய்யப்பட்டிருப்பதைக் குரூர திருப்தியுடன் நேர்மையாக குறிப்பிட்டது. ஜனவரி 2007க்கும் 2009 இறுதிக்கும் இடையில் வெளியேற்றப்பட்ட நீண்டகால தொழிலாளர்களும், முழு-நேர வேலைகளில் சேர்க்கப்பட்ட புதியவர்களும் 54.9 சதவீதம் குறைவான சம்பளங்களைப் பெறுவதாகவும் அது குறிப்பிட்டது. சம்பளங்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. “தொழிலாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிக்கலாக இருந்தாலும், குறைந்த கூலிகள் அமெரிக்க தொழில்துறைகளையும், நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாக போட்டிக்குத் தகுதியுடையவைகளாக மாற்றும்" என்று ஜெர்னல் குறிப்பிட்டது.

இதேபோல சமூக சேவைகள், தொழிலாளர் கூலிகள் மற்றும் சலுகைகளில் முன்னொருபோதும் இல்லாதவகையில் வெட்டுக்களை நிரந்தரமாக்குவதற்காக, வோல் ஸ்ட்ரீட்டும் அரசாங்கமும் மாநிலங்களையும், நகரங்களையும் கொடிய நிதியியல் பள்ளத்திற்குள் வைத்திருக்க விரும்புகின்றன.

அவற்றாலேயே சொந்தமாக உருவாக்கப்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் ஓரளவிற்கு நாகரீகமான கூலிகளையும், பொருளாதார பாதுகாப்பையும் ஒரு கடந்த கால விஷயமாக மாற்றுவதென்பது, அமெரிக்க முதலாளித்துவத்தின் வர்க்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஒபாமா நிர்வாகமும், இரண்டு கட்சிகளும் இந்த வர்க்க-யுத்த அட்டவணைக்கு முழுமையாக பொறுப்பேற்றுள்ளன. அவர்கள் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்கவும், நாசமாக்கவும் தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்கின்றனர்.

ஒரு வேலைக்கான, வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு வருமானத்திற்கான, ஓய்வூதிய மற்றும் சமூக திட்டங்களுக்கான உரிமையைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் ஜனநாயக கட்சியிலிருந்தும், அதன் தொழிற்சங்க துணைகளிடமிருந்தும் உடைத்துக் கொண்டு, சோசலிசத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தில் இறங்க வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய புரட்சிகர இயக்கத்தின் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய, சோசலிச சமத்துவ கட்சி ஏப்ரல் 9-10 தேதிகளில் மிச்சிகனின் அன் ஆர்பரிலும், ஏப்ரல் 16இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும், ஏப்ரல் 30இல் நியூயோர்க்கிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தின் அவசியத்தை உணரும் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.