World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Mars rovers mark seven years on the planet’s surface

செவ்வாய்கிரக ரோவர்கள் அந்த கோளில் தரையிறங்கி ஏழு ஆண்டுகள் ஆயின

By Patrick Martin
22 January 2011

Back to screen version

நாசாவின் இரண்டு ரோவர்கள் செவ்வாய்கிரகத்தில் இறங்கி, சூரியனிலிருந்து நான்காவதாக உள்ள அந்த கிரகத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்வதில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி, ஏழு ஆண்டுகள் ஆனதை இந்த மாதம் குறிக்கிறது. ஜனவரி 4, 2004இல் ரோவர் Spirit செவ்வாய்கிரகத்தில் இறங்கியது, அதேபோன்ற மற்றொன்று, Opportunity, அந்த கோளின் எதிர்புறத்தில் ஜனவரி 24இல் தரையிறங்கியது. அதற்குள்ளாக, அவை அக்கோளின் மேற்பரப்பின் 250,000 புகைப்படங்களை எடுத்திருந்துள்ளன. இது செவ்வாய்கிரகத்தின் புவியியல் அமைப்பை மனிதர்கள் புரிந்து கொள்வதில் ஒரு பெரும் முன்னேற்றப்படியை குறிக்கிறது.

கோல்ப் மைதான வாகனத்தின் அளவிற்கு இருக்கும் அந்த இரண்டு ரோபொட்களும், உண்மையில் மூன்று மாதங்களில் அவற்றின் ஆயுளை முடித்துக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் தான் உருவாக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டன, ஆனால் Spirit அதன் தற்போதைய குளிர்கால இடைநிறுத்தத்திற்கு முன்னர் வரை 8 கிலோமீட்டர் பயணித்திருந்தது. அதேநேரம், Opportunity 27 கிலோமீட்டருக்கு நெருக்கமாக பயணித்திருந்தது.

அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம், முற்றிலும் மாற்றியமைக்க தக்கவகையில் இருப்பதை நிரூபித்துள்ளது. Jet Propulsion ஆய்வகத்தின் பொறியாளர்களால் (JPL) அந்த திட்டத்தை இன்னும் 20 மடங்கிற்கு அதிகமாக நீட்டி எடுத்துச் செல்ல முடியும். அவர்களின் சமயோசித உத்திகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு சிறப்பாக உள்ளன: அதாவது ரோவரை சுற்றுமுற்றும் திருப்புவது, தேய்மானங்களை குறைக்க கடந்த பல ஆண்டுகளாக அவற்றை பிரத்யேகமாக பின்நோக்கிய கியரில் ஓட்டி வருவது, அல்லது அதிலுள்ள உணர்வி (sensor) பயன்படுத்தி வரும் சிறியளவிலான ரேடியோ-கதிரியக்க கோபால்ட்-57ஐ சிக்கனமாக செலவிட, (இதை ஓர் ஆண்டிற்கும் குறைவாக பாதி அளவிற்குத் தான் பயன்படுத்த முடியும்), பல நாட்களாக அவற்றில் உள்ள ஸ்பெக்ட்ரோமீட்டரைக் கொண்டு உபகரண அளவீடுகளை எடுத்தல் ஆகியவை.

2009இல் Spirit மண்ணில் மாட்டிக் கொண்டது, அக்கோளில் அடுத்து வரவிருந்த குளிர்காலத்தின் போது, சூரியன் இருக்கும் சரிவை நோக்கி நகர முடியாமல் அது அதன் சோலார் தகடுகளால் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பெருமளவிற்கு செலவிட்டிருந்தது. மார்ச் 22, 2010 அன்று நாசாவிற்கு அனுப்பிய அதன் கடைசி தகவலுக்குப் பின்னர், அந்த ரோவர் சக்தியைக் குறைவாக பயன்படுத்தும் குளிர்கால இடைநிறுத்தத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மார்ச்சில் அதிகபட்ச வெப்பநிலையை எட்டக்கூடிய செவ்வாய்கிரகத்தின் தற்போதைய கோடைகாலத்தின் போது, அதை மீட்டுக் கொண்டு வரமுடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Opportunity ரோவர், செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் மேலோங்கும் பல்வேறு நிலைமைகளிலும் தடைபடாமல் அதன் வேலையைத் தொடர்கிறது. இந்த மாதத்தின் மத்தியில், அது சுமார் 100 மீட்டர் விட்டமுள்ள சாந்தா மாரியா என்று பெயரிடப்பட்ட ஒரு எரிமலைமுகட்டின் தென்கிழக்கு விளிம்பை எட்டியது.

பூமியும் செவ்வாயும் அவற்றின் சுற்றுவட்ட பாதைகளில் சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் வரும்போது, அது ரேடியோ தொடர்பைப் பாதிக்கும் என்பதால் அந்த காலத்தில், ஜனவரி 27 தொடங்கி, 16 நாட்களுக்கு இந்த ரோவர் தொடர்புகொள்ள முடியாதபடிக்கு கட்டுப்பாட்டில் இருக்காது. செவ்வாய்கிரகத்தில் அந்த இரண்டு ரோவர்களும் இறங்கியதிலிருந்து இதுபோல தற்காலிகமாக தொடர்பிழந்து போவது, இது நான்காவது முறையாகும்.

இதேபோல சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் சமிக்ஞைகளைப் பாதித்து, தவறான புள்ளிவிபரங்களை உருவாக்கும் என்பதால் நாசாவும், செவ்வாய்கிரக சுற்றுவட்டப்பாதையில் செயல்பட்டு வரும் செவ்வாய்கிரக வேவுபார்ப்பு சுற்றுவட்டக்களம் (Mars Reconnaissance orbiter) மற்றும் செவ்வாய்கிரக ஓடிசி சுற்றுவட்டக்களம் (Mars Odyssey orbiter) ஆகிய இரண்டு விண்வெளிஓடத்திற்கும் கட்டளைகளை அனுப்புவதை நிறுத்திக்கொள்ளும். இருந்தபோதினும் இந்த இரண்டு சுற்றுவட்டக்களமும், குறுக்கீடுகள் காரணமாக குறைந்த வேகத்தில், பூமிக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பும்.

தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்காக, Opportunityஇல் இருந்து தகவல்கள் அன்றாடம் ஒடிசி சுற்றுவட்டக்களனுக்குப் பதிவேற்றப்படுகின்றன. நேரடி தொடர்பு இருக்காத அந்த 16-நாள் இடைநிறுத்த காலத்திலும் அதன் விஞ்ஞானபூர்வ செயல்பாடுகளை தொடர்வதற்குத் தேவையான கட்டளைகள் ஏற்கனவே அந்த ரோவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறிய எரிமலைமுகடு சாந்தா மாரியாவை ஆராய்ந்த பின்னர், அது 22 கிலோமீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய எரிமலைமுகட்டில் ஏறத்தொடங்கும். அதன் விளிம்பு இந்த வாரம் நாசாவால் வெளியிடப்பட்ட சாந்தா மாரியாவின் புகைப்படத்தில் கிடைமட்டமாக காணப்படுகிறது. நீரை உட்கொண்டிருக்கும் கனிமங்களுக்கு பக்கவாட்டில், சுற்றுவட்டப்பாதையிலிருந்து காணப்படும் பெரிய எரிமலைமுகட்டின் விளிம்பின் ஒரு பகுதி Opportunityஇன் இலக்கில் இருக்கும்.

செவ்வாய்கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆராய்வதே இந்த ரோவர் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இரண்டு ரோபொட்களும் சார்புரீதியில், அந்த கோளின் சமீபத்திய வரலாறில் முன்னர் கண்டறியப்பட்டிராத தண்ணீர் சுழற்சி இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டன. அந்த கோளின் மேற்பரப்பில் திரவநீர் ஒருகாலத்தில் ஓடியதாக 1970களில் இருந்தே அறியப்படுகிறது. இந்த இயல்நிகழ்வு பரந்தளவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை, Spirit மற்றும் Opportunity கண்டறிந்தன என்பதுடன், அந்த இரண்டு ரோவர்களும் தூரதூரங்களில் அவை தரையிறங்கிய இடங்களுக்கு அருகில், தண்ணீரின் தேவையோடு உருவாகக்கூடிய கனிமங்களையும் கண்டறிந்தன.

2006இல் Spirit தவறியக்கத்தால் (Malfunction) பாதிக்கப்பட்ட போது, அதாவது அதன் வலது முன் சக்கரத்தின் செயல்பாடு நின்று போன போது, JPL அதை பின்புறமாக செயல்பட வைத்து, செங்கோளின் மண்ணில் ஒரு குறுகிய பள்ளம் வெட்டி, மாட்டிக்கொண்ட அதன் சக்கரத்தை மேற்பரப்பிற்கு இழுத்து வந்தது. இந்த சிறிய பள்ளம் மண்ணின் கீழிருந்த சுத்தமான சிலிக்கான் சேமிப்புகளை வெளிப்படுத்திக் காட்டியது. சிலிக்கான் என்பது பாறைக்கும் சூரிய வெப்பத்தால் சூடான நீருக்கும் இடையில் ஏற்படும் ஓர் எதிர்வினையால் உருவாகும் ஒரு தனிமமாகும். இது இதன் உடன்நிகழ்வாக உயிர்கள் உருவாவதற்கு இரண்டு முக்கிய ஆக்கக்கூறுகளான வெப்பமும், திரவநீரும் இருப்பதை எடுத்துக்காட்டியது.

ரோவர்களின் ஏழுவருட செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்ட அறிவு, செவ்வாயின் மேற்பரப்பிற்கு அடுத்த விஞ்ஞான திட்டத்தை, அதாவது செவ்வாய்கிரக விஞ்ஞான ஆய்வகத்தை (MSL), செயல்படுத்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை அளிக்கிறது. இதை டிசம்பர் 2011இல் அனுப்பி, ஆகஸ்ட் 2012இல் செவ்வாயிலிருந்து மீண்டும் கீழே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த MSL, பாறைகளையும் மண்ணையும் உருக்கவும், அவற்றின் உட்கூறு பாகங்களை ஆராய்வதற்கும் ஓர் உள்ளமைக்கப்பட்ட லேசர் வசதியைக் கொண்ட, மற்றும் இன்னும் வேகமும் விஞ்ஞானத்திறனும் நிறுவப்பட்ட ஒரு நடமாடும் ஆய்வகமான Curiosity எனும் ஒரு ரோவரை அங்கே இறக்கிவிட்டு வரும். இந்த MSL உயிர்ஜீவிகள் வாழ்வதற்கான ஆதாரங்களை, குறிப்பாக பூமியில் வாழும் உயிர்களைப் போல கார்பன் அடிப்படையில் வாழ்பவனவற்றை பற்றிய ஆதாரங்களைத் தேடுவதில் கவனம் செலுத்தும்.

Mars Exploration Roverஇன் திட்ட மேலாளர் ஜோன் கல்லாஸ் Space.com உடனான ஒரு நேர்காணலில் விவரிக்கையில், அந்த கோளைக் குறித்து விஞ்ஞானபூர்வமாக புரிந்துகொள்வதில் அவ்விரு ரோவர்களின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அவர் கூறியதாவது: “என்னைப் பொறுத்தவரையில், இந்த ரோவர்கள் செவ்வாய்கிரகத்தின் வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுதியுள்ளன. எல்லாவித விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் கூடுதலாக, மிகச்சிறந்த மறைமுக நன்மைகளில் ஒன்றாக இந்த ரோவர்கள் செவ்வாய்கிரகத்தை ஒரு பரிச்சயமான இடமாக மாற்றியுள்ளன. செவ்வாய் கோள் இப்போது நம்முடைய அண்டைவீட்டை போல் ஆகியுள்ளது,” என்றார்.