World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Secret Palestine documents expose sham peace process

இரகசிய பாலஸ்தீன ஆவணங்கள் "அமைதிப் பேச்சுவார்த்தைகளின்" போலித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன

By Bill Van Auken
25 January 2011

Back to screen version

பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலின் ஒரு நிரந்தர சதியின் ஒரு பாகமாக இருந்த சுமார் 1,700 இரகசிய ஆவணங்களின் வெளியீடு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் என்று அழைக்கப்பட்டதை ஒரு குற்றவியல் கேலிக்கூத்தாக அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.

2009லிருந்து 2010வரை நடந்த பேச்சுவார்த்தைகளின் உள்ளடக்கங்கள், இராஜாங்க விவகார பரிமாற்றங்கள், குறிப்புகள், வரைபடங்கள், இன்னும் இதர விஷயங்களைக் கொண்டிருக்கும் அந்த ஆவணங்கள், அல்-ஜசீரா தொலைக்காட்சி வலையமைப்பிற்கு கிடைத்தது. அவை கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவின் தரகுவேலையுடன் இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் இருந்த அனைத்து தரப்பினரதும்  நாசகரமான சித்திரத்தையும் அளிக்கின்றன.

மஹ்முத் அப்பாஸினது பாலஸ்தீன அதிகாரம் முற்றுமுதலாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களின் துணைக்கருவி என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அது, ஒரு சிறிய செல்வம் கொழிக்கும் அடுக்கின் தனிச்சலுகைகளை உறுதிப்படுத்திக்கொள்ள, அது அடக்கிவரும் அந்த பாலஸ்தீன மக்களின் வரலாற்றுரீதியிலான ஒவ்வொரு தேவையையும் விலையாக கொடுத்து, ஒரு பாலஸ்தீன அரசு என்ற கட்டுக்கதையை பாதுகாக்கும் ஓர் உடன்பாட்டை அழியாமல் காப்பாற்றுவதில் மூர்க்கத்தனமாக உள்ளது.

மேற்கூறியதை எட்டுவதற்காக, அந்த ஆவணங்கள் தெளிவுபடுத்துவதைப் போலவே, பாலஸ்தீன அதிகாரத்தின் பேச்சுவார்த்தையாளர்கள் சியோனிச குடியிருப்புகள் மூலமாக கிழக்கு ஜெருசலேமை விட்டுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ளவும், நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்கள் அவர்களின் நாட்டிற்குத் திரும்பி வரும் உரிமையை மறுத்ததன் மூலமாகவும், மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் "யூத அரசை" காப்பாற்றிக் கொள்ள நினைத்த இஸ்ரேலின் நோக்கத்தை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் இனச்சுத்திகரிப்பு வகையிலான பெருந்திரளான அரேபிய மக்களை வெளியேற்றுவதில் பங்குபெறவும் தயாராக இருந்தனர். இவை அனைத்துமே பாலஸ்தீன மக்களின் முதுகிற்குப் பின்னால் மறைமுகமாக செய்யப்பட்டன.

இஸ்ரேலியர்களின் பங்கிற்கு, பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதிலும், சாத்தியப்பட்ட ஒரு குண்டூசி அளவு நிலத்தை அபகரிக்கவும் அவர்கள் கொண்டிருந்த தீர்மானத்தில் இஸ்ரேலியர்கள் இரக்கமற்றும், காட்டுமிராண்டித்தனமாகவும் மேலெழும்பினர். எந்த உடன்படிக்கையையும் எட்டுவதில் துளியும் ஆர்வமில்லாமல், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டிருக்கும் சியோனிச குடியிருப்புகள் என்றவகையில் புதிய "உண்மைகளின் அடித்தளத்தை" உருவாக்கி கொண்டு அவர்களுக்கு வளைந்துகொடுக்கும் எதிர்ப்பலத்திலிருந்த பாலஸ்தீனியர்களிடம் இருந்து இன்னும் பெரும் சலுகைகளைப் பிரித்தெடுக்க அவர்கள் அந்த பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தினர்.

பில் கிளின்டன், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா போன்றவர்களின் கீழ் வாஷிங்டனைப் பொறுத்தவரையில், அமெரிக்க இராஜதந்திரம் மத்தியகிழக்கு முழுவதிலும் செய்வதைப் போன்றே, பாலஸ்தீன பிரச்சினையிலும் ஒரு குற்றவியல் பாத்திரத்தை வகிக்கிறது. பேச்சுவார்த்தையாளர்களோ பாலஸ்தீனர்களை வெளிப்படையாகவே அவமதித்து, நிலைத்திருக்கும் எல்லாவித பிரச்சினைகளிலும் வழக்கமாக இஸ்ரேலின் பக்கம் சாய்கிறார்கள். பாலஸ்தீனர்கள் சர்வதேச சட்டத்தைக் குறித்தோ அல்லது முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்தோ அல்லது அவை முறையின்றி மீறப்பட்டதன் மீதோ ஏதாவது அடிப்படை பிரச்சினைகளை எழுப்ப முயன்றால், அவை "யதார்த்தத்திற்கு முரணானவை" என்றும் முட்டாள்தனமானவை என்றும் புறக்கணிக்கப்படுகின்றன.

ஏகாதிபத்தியம் பாலஸ்தீனர்களை மட்டும் இவ்வாறு இறுமாப்புடனும், குரோதத்துடனும் கையாளவில்லை, மாறாக ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்களையும், உலகமெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் இவ்வாறு தான் கையாள்கிறது. இது அப்போதைய அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலாளர் கொண்டலீசா ரைஸின் கருத்துகளில் தொகுப்பாக இருந்ததுடன், ஓர் பிரதியிலும் இது பதிவு செய்யப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட, நாடில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட, இழிந்தநிலையில் அகதிகள் முகாம்களில் பிழைத்துக் கிடக்கும் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்களின் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தூக்கியெறிந்துவிட்டு, ரைஸ் கூறினார், “உலகம் முழுவதும் எல்லா காலக்கட்டங்களிலேயும் மக்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. நீங்கள் அதைக்கடந்து முன்னோக்கி பார்க்க வேண்டும்.”

பாலஸ்தீனர்களின் பரிதாபத்தை நோக்கிய இந்த வக்கிரமான மனோபாவத்தின் தொடர்ச்சி, ரைஸைத் தொடர்ந்து அந்த பதவிக்கு வந்த ஹில்லாரி கிளிண்டனாலும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. "எப்போதும் கிரேக்க துன்பியலின் ஓர் அத்தியாயமாக இருப்பதாக" ஏன் அவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புவதாக, 2009இன் இலையுதிர் காலத்தில், அவர் ஓர் பிரதியிலும் பதிவு செய்துள்ளார்.

இந்த விஷயங்கள் எதுவுமே மேற்கு கரையிலும் காசாவிலும் வாழும் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்களுக்கும் மற்றும் லெபனான், ஜோர்டான், இன்னும் எங்கெங்கோ நாட்டைவிட்டு வெளியேறி மில்லியன் கணக்கில் சிதறிக்கிடப்பவர்களுக்கும் ஒரு அறிவிப்பாக சென்று சேராது. இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள், சாலைமறியல்கள், நில அபகரிப்புகள், எண்ணிலடங்கா அவமதிப்புகளோடு இருக்கும் அவர்களின் வாழ்க்கை அனைத்தும்  அமைதிப்பேச்சுவார்த்தைகள்" என்றழைக்கப்படுவதன் தோல்வியையும், மோசடியையும் எடுத்துக்காட்டும் உறுதிப்பத்திரங்களாக உள்ளன.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி ஜைன் அல் அபடின் பென் அலியின் ஆட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊழல் மற்றும் சித்திரவதை குறித்து, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க கசிவுகள் மக்களின் புரட்சிகர எழுச்சியைத் தூண்டிவிட்டு அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்ததைப் போல, அல் ஜீசீராவினால் வெளியிடப்பட்ட ஆவணங்களும் ரமல்லாஹில் உள்ள மஹ்முத் அப்பாஸ் தலைமையிலான ஊழல் மற்றும் எதேச்சதிகார ஆட்சி நீடிப்பதற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது.

பாலஸ்தீன ஆணையம் அவற்றை "பொய் மூட்டை" என்றும், “ஜோடிக்கப்பட்டவை" என்றும் கூறி, அந்த ஆவணங்களின் வெளியீட்டிற்கு ஆக்ரோஷமான எதிர்வினையைக் காட்டியது. கெய்ரோவில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் உடனான சந்திப்பில், பாலஸ்தீன அதிகாரத்தின் ஜனாதிபதி அப்பாஸ், பாலஸ்தீன அதிகாரத்தின் சொந்த பேச்சுவார்த்தையாளர்களுக்கு இஸ்ரேலிய பேச்சுவார்த்தை நிலைப்பாடுகளின் இயல்புக்குணத்தை விளக்கிக்கூறி, அல் ஜீசீராவினால் வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் "போலியாக" "தயாரிக்கப்பட்டவை" என்று குற்றஞ்சாட்டினார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) பொதுச்செயலாளர் யாசர் அபெத் ரப்போ கூறுகையில், அல் ஜீசீரா வெகுஜனங்களை ஏமாற்றவும், தவறாக வழிகாட்டவும் முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியதுடன், அது இஸ்லாமிய இயக்கமும், காஜா பகுதியை ஆளும் பாலஸ்தீன விடுதலை  இயக்கத்தின் எதிரியுமான ஹமாஸின் வழிகாட்டலின்பேரில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னணி பத்தாஹ் (Fatah) கன்னை, ரமல்லாஹில் நாசவேலைகளால் பாதிக்கப்பட்டிருந்த அல் ஜீசீரா அலுவலகங்களுக்கு வெளியில் ஓர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. சில அதிகாரிகள் மேற்கு கரையில் இருக்கும் அதன் நிலையம் மூடப்படும் என்றுரைத்துள்ளனர்.

அதன் பங்கிற்கு ஹமாஸ், பாலஸ்தீனியர்களின் நோக்கத்தை ஒழித்துக்கட்டும் முயற்சிகளிலும் (குறிப்பாக, ஜெருசலேம் மற்றும் அகதிகளின் பிரச்சினைகளில்), மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் உள்ள எதிர்ப்புகளுக்கு எதிராகவும் பத்தாஹ் அதிகாரிகள் எந்தளவிற்கு ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன என்று கூறியது.

ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டவை அல்லது பாலஸ்தீன தரப்பு பேச்சுவார்த்தையாளர்களின் நிலைப்பாடுகளைப் போன்றே இஸ்ரேலிய நிலைப்பாடுகளும் தவறாக எடுத்துக்காட்டப்படுகின்றன என்பன போன்ற வாதங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லை. மிகவும் குற்றமிகுந்த விஷயங்கள் பேச்சுவார்த்தைகளின் குறிப்புகளில் உள்ளன. இவற்றிலிருக்கும் அவர்களின் நிலைப்பாடு குறித்த ஆதாரம் மிக துல்லியமாக உள்ளது. அல் ஜீசீராவிற்கு அப்பாற்பட்டு, விஷயங்களை அந்த வலையமைப்பு எதனோடு பகிர்ந்து கொண்டிருந்ததோ அந்த பிரிட்டனின் Guardian இதழும், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் பேச்சுவார்த்தையாளர்கள் விட்டுக்கொடுத்த முக்கிய பிரச்சினைகளும், அல் ஜீசீராவால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் வெளியீடுகளில் உள்ள மிக முக்கியமானவைகளில் உள்ளடங்கி உள்ளன. இவை பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய போராட்டத்தால் முன்வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளுக்கு மிகவும் முரண்பட்டு நின்றது.

 

அவற்றில் உள்ளடங்கி இருந்தவை:

· கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலின் குடியிருப்புகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தின் மீதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை தக்கவைக்க அனுமதித்தது, முக்கியமாக பாலஸ்தீனிய தலைநகராக ஆகவேண்டிய அனைத்தையுமே இஸ்ரேலிற்கு அதன் கட்டுப்பாட்டில் அளித்த ஓர் விட்டுக்கொடுப்பு. சர்வதேச விதிகளின்கீழ், இந்த குடியிருப்புக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவையாகும். பாலஸ்தீனத் தரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் அஹ்மத் க்யூரி, மே 2008 பேச்சுவார்த்தையின் ஓர் குறிப்பில் அந்த சலுகையை விளக்கும்போது, அதை "முன்னிகழ்ந்திராத" ஒன்றாகவும், கேம்ப் டேவிட்டில் "நாங்கள் உடன்பட மறுத்த" ஒன்று என்றும் அறிவித்தார்.

· 1948இல் வெளியேற்றப்பட்ட "ஒரு குறிப்பிட்ட அளவிலான" அகதிகளை மீண்டும் இஸ்ரேலிற்குள் அனுமதிக்க உடன்பட்டது, இது 10 ஆண்டுகளில் 100,000 நபர்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுபோன்ற ஓர் உடன்படிக்கை ஐந்து மில்லியன் நாடிழந்த பாலஸ்தீனியர்களின் உரிமையைத் துல்லியமாக கைவிடுவதாகும்.

ஜெருசலேமின் பழைய நகரத்தில் ஹராம் அல்-ஷரீப்/மலைக்கோவில் இடத்தைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதில் உடன்பட்டது, இதில் Dome of the Rock மற்றும் அல் அக்சா மசூதிகளை கூட்டுக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததும் உள்ளடங்கும். முன்னதாக பாலஸ்தீனிய தலைவர் யாசர் அரபாத்தால் காப்பாற்றப்பட்ட கோரிக்கைகளை கைவிட்டிருந்த, இந்த உடன்பாட்டை ஒப்புக் கொண்ட போது, பாலஸ்தீனதரப்பு பேச்சுவார்த்தையாளர் சயீப் எரிகத் எரிச்சலோடு குறிப்பிடுகையில், “என்னால் செய்ய முடியாத ஒரேயொரு விஷயம், சியோனிசத்திற்கு திருப்ப முடியாது என்பது தான்,” என்றார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் எழுந்த போர்குணமிக்க பிரிவுகளை ஒடுக்குவதிலும், காசாவிலிருந்த ஹமாஸைத் தூக்கியெறிய சூழ்ச்சி செய்வதிலும் பாலஸ்தீன அதிகாரத்திற்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவை இதர ஆவணங்கள் விளங்கப்படுத்துகின்றன. 2008-2009இல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து பாலஸ்தீன அதிகாரத்திற்கு முன்னெச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்ததையும், அதன் இஸ்லாமிய எதிரிகளின் முன்னால் பாலஸ்தீன அதிகாரத்தின் மதிப்பை உயர்த்திக்காட்டும் வெளிப்படையான நோக்கத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேலியர்களுடன் பேரம் பேசப்பட்டிருந்ததையும் அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டின.

இத்தகைய சலுகைகள் அனைத்தும் இஸ்ரேலிடமிருந்தோ அல்லது அதன் அமெரிக்க கூட்டாளியிடமிருந்தோ சிறப்பாக எதையும் உருவாக்கிவிடவில்லை. ஒபாமாவின் மத்திய கிழக்கு தூதர் ஜோர்ஜ் மிட்செலுக்கு வாஷிங்டனில் நடைபெற்ற அக்டோபர் 2009 கூட்டத்தின் போது காட்டப்பட்ட வெளிப்படையான ஓர் உணர்வுப்பூர்வ எதிர்ப்பில் எரிகாத் (Erekat) கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது: “பத்தொன்பதாண்டு கால வாக்குறுதிகளுக்குப் பின்னரும், எங்களுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் இன்னும் நீங்கள் உங்களுடைய மனதைத் தயார்படுத்தவில்லைநாங்கள் எங்களுடைய கடமைகளை நிறைவேற்றினோம். யூவால் டிஸ்கினும் கூட [இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு சேவையின் இயக்குனர் ஷபாக்] பாதுகாப்பிற்காக அவருடைய புஜத்தை உயர்த்துகிறார். ஆனால் அவர்களால் [குடியிருப்புகள் பற்றி] மூடிமறைக்கப்பட்டிருந்ததை ஓர் ஆறு-மாதங்களுக்குக் கூட நிறுத்தி வைக்க முடியவில்லை.”

வாஷிங்டன் "செய்தி தொடர்புகளிலும், முக்கிய செய்திகளிலும் மட்டும் தான் ஆர்வமாக இருந்தது, ஆனால் எங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை" என்று அவர் குற்றஞ்சாட்டினார். "பாலஸ்தீனியர்களுக்கு எதையாவது அளிக்கக்கூடிய "அமைதிப்பேச்சுவார்த்தையின்" தோல்வியென்பது அமெரிக்க கொள்கையை முன்னெடுப்பதில் இருக்கும் பயனை குழிதோண்டி புதைத்துவிடுவதாக இருக்கும்" என்று அவர் எச்சரித்தார். “நான் மிகவும் பலவீனமாக இருந்தால், என்னுடைய மனைவிக்கும் கூட நான் ஏளனமாக தான் இருப்பேன்,” என்றார்.

இஸ்ரேலிய தரப்பைப் பொறுத்த வரையில், அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை மந்திரி திஜிபி லிவ்னி (Tzipi Livni), 2007இல் நடந்த ஒரு சந்திப்பில் டெல் அவீவிற்கு பேச்சுவார்த்தை மூலோபாயத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு பட்டவர்த்தனமாக விளக்குவதை அந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அது ஒரு நிலையான பாலஸ்தீன அரசை ஏற்படுத்துவதற்கான எல்லாவித சாத்தியக்கூறையும் தடுப்பதை நோக்கமாக கொண்டு வழிகாட்டப்பட்டிருந்தது. “ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் நிலத்தை அபகரிப்பது தான் இஸ்ரேலிய கொள்கை, இறுதியில் 'அது சாத்தியமில்லை, ஏற்கனவே நிலம் எங்களிடம் தான் உள்ளது, ஆகவே எங்களால் [பாலஸ்தீனிய] அரசை உருவாக்க முடியாது' என்று கூறுவோம்,” என்று அந்த பெண்மணி கூறியிருந்தார்.

இதேபோல அந்த "அமைதிப்பேச்சுவாத்தையின்" நயவஞ்சகமான மற்றும் ஒருதலைபட்சமான பாத்திரத்திற்கு ஒரு வெளிப்படையான மதிப்பீட்டை, ஒரு முன்னாள் இஸ்ரேலியதரப்பு பேச்சுவார்த்தையாளர் Guardian இதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அளித்திருந்தார்.

எது மிகவும் கருத்தை ஈர்ப்பதாக உள்ளதென்றால், அதிகளவில் இருக்கும் சலுகைகளின் இயல்பல்ல, மாறாக ஆண்டாண்டாக அவர்கள் ஒரே மூலோபாயத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பது தான் கருத்தைக் கவர்கிறது, இதுவே அது தோல்வி அடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதோடு மட்டுமில்லாமல், அது தொடர்ச்சியான பாலஸ்தீனிய சரிவையும் எடுத்துக்காட்டுகிறது,” என்று முன்னாள் பேச்சுவார்த்தையாளர் டேனியல் லெவி தெரிவித்தார். “இஸ்ரேலியர்கள் புதிய குடியிருப்புகளை கட்டிக்கொண்டு, பின்னர் "எங்களுக்கு நிறைய இடம் வேண்டும்" என்று கூறிக் கொண்டு, அவர்கள் எதை அளித்தாலும், இஸ்ரேலியர்கள் தங்கள் பைகளில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

லெவி தொடர்ந்து கூறுகையில், “பாலஸ்தீனியர்கள் தாம் மட்டுமே  பேச்சுவார்த்தைகளில் நியாயமானவர்கள் என்று பாஸ்தீனியர்கள் நினைத்திருந்ததை அமெரிக்கர்கள் இஸ்ரேலுக்கு விளக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பிலிருந்து அவர்களை அவர்களே ஒருபோதும் பிரித்துக் கொள்ளவில்லை. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை, நடக்கப்போவதும் இல்லை. அந்த அமெரிக்கர்கள் தொடர்ச்சியாக நியாயமில்லாத பக்கத்திற்குச் சாய்ந்தார்கள்; பாலஸ்தீனியர்களோ இந்த சீர்கெடுக்கும் உத்தேசங்களோடு இன்னும் இன்னும் ஆழமாக அவர்களுக்கு அவர்களே குழிதோண்டிக் கொண்டார்கள்.”

இந்த மதிப்பீடு பிரதம மந்திரி பின்யமின் நெதன்யாஹூவின் தற்போதைய அரசாங்கம், அல் ஜசீரா அறிக்கைக்குக் காட்டியிருக்கும் எதிர்வினையால் உறுதிப்பட்டது. அது உடனடியாக அந்த ஆவணங்களை, அதாவது கிழக்கு ஜெருசலேமில் மேலும் கட்டுவதை  தொடராமல் தடுக்க கோரும் பொதுமக்களின் கோரிக்கைகளை முன்மொழியும் பாலஸ்தீன ஆணைத்தால் அளிக்கப்பட்ட ஆவணங்களை, "கேலிக்குரியவைகளாக" சித்தரித்து பறிமுதல் செய்தது. அவை கிழக்கு ஜெருசலேமோடு தொடர்புபட்ட விஷயத்தில் பாலஸ்தீன அதிகாரத்தால் விட்டுக்கொடுக்கப்பட்ட சலுகைகளோடு சம்பந்தப்பட்டிருந்தது.

"ஏற்கனவே அவர்கள் ஓல்மெர்டின் (Olmert) பதவி காலத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலேயே, குறிப்பிட்ட அண்டைப்பகுதிகள் விஷயத்தில் உடன்பாட்டை எட்டியிருந்தார்கள் என்பது தெளிவாக இருப்பதால், கிழக்கு ஜெருசலேமில் யூத அண்டைப்பகுதிகளில் கட்டமைப்பு செய்வதை நிறுத்த கோரும், பாலஸ்தீனத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கடந்த ஒன்றரை ஆண்டு கோரிக்கைகளை எடுத்துக்காட்டும் அந்த ஆவணங்கள், கேலிக்குரியவையாக உள்ளன" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக இஸ்ரேலிய நாளிதழ் Haaretz குறிப்பிட்டது.

பாலஸ்தீன தரப்பிலிருந்து எந்தளவிற்கு பெரிய விட்டுக்கொடுப்புகள் அளிக்கப்பட்டன என்பது விஷயமில்லை, இஸ்ரேலோ அல்லது வாஷிங்டனோ தீர்வைக் கொண்டு வருவதில் ஆர்வப்படவில்லை என்பது தான் உண்மை. புதிய உடன்படிக்கைகளில் ஒரு தற்காலிக மற்றும் பகுதியாக விட்டுக்கொடுக்கவும் கூட இஸ்ரேல் மறுத்ததால் தற்போது உடைவில் நிற்கும் இந்த "அமைதிப்பேச்சுவார்த்தைகள்", பாலஸ்தீன மக்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணிக்கும் முயற்சியுலும், மத்திய கிழக்கில் இன்னும் பரந்தமட்டில் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தவதற்கான ஒரு கருவியாக மட்டுமே உபயோகப்பட்டுள்ளது.

வாஷிங்டனைப் பொறுத்த வரையில், அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை அதனால் உறுதிப்படுத்த முடியாது என்று கூறிய வெளிவிவகாரத்துறை, அதேசமயம் அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது. “இந்த வெளியீடுகள், குறைந்தபட்ச காலத்திற்காவது, நிலைமையை அதற்கு முன்னர் இருந்ததை விடவும் இன்னும் மோசமாக்கும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை,” என்று தெரிவித்த செய்தி தொடர்பாளர் பிலிப் கிரௌலெ, “ஆனால் மீண்டும், நாங்கள் இதுவிஷயத்தில் மிகத் தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறோம். இதுவொரு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால் இது நம்முடைய ஒட்டுமொத்த நோக்கத்தையும் மாற்றியிருக்கவில்லை-மாற்றிவிடவும் முடியாது,” என்றார்.

ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுடன் புஷ் நிர்வாகத்தையும் விட மிக நெருக்கமாக அதன் கொள்கையை வடிவமைத்தது என்பதும் ஆவணங்களிலிருந்து வெளிப்பட்ட விஷயங்களில் உள்ளடங்கி உள்ளன. 2009இன் இலையுதிர் காலத்தில் ஒபாமா தூதர் மிட்செலுக்கும், பாலஸ்தீனதரப்பு பேச்சுவார்த்தையாளர் எரிகாத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில், பாலஸ்தீன அரசு குறித்த பேரங்களின் அடித்தளத்தில், 1967 எல்லைகளை அங்கீகரிப்பதில் இஸ்ரேலின் மறுப்பிற்கு பாலஸ்தீன அதிகாரத்திற்கு விட்டுக்கொடுக்க செய்ய மிட்செல் அழுத்தம் அளித்தார்.

1967 எல்லைகள் 2003 திட்டங்களின் பாகங்களாக இருந்தன என்பதுடன் வெறும் ஓர் ஆண்டிற்கு முன்னர்தான் புஷ் நிர்வாகத்தால் குறிப்பாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்று எரிக்காத் எதிர்த்த போது, மிட்செல் 'வாஷிங்டன் அந்த வாக்குறுதிகளுக்கு கட்டுப்படவில்லை' என்று தெரிவித்தார்.

நான் மீண்டும் கூறுகிறேன், புஷ்ஷால் எடுக்கப்பட்ட முந்தைய முடிவுகளை ஜனாதிபதி ஒபாமா ஏற்றுக் கொள்ள மாட்டார்,” என்று அமெரிக்க தூதர் அறிவித்தார். “இதை பயன்படுத்தாதீர்கள் ஏனென்றால் இது உங்களைப் பாதிக்கக்கூடும். நாடுகள் உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு உள்ளனவே தவிர-பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது அறிக்கைகளுக்கோ அல்ல,” என்றார்.

ஊடகங்களால் தவறாக எடுத்துக்காட்டப்பட்டு வரும் இந்த அமைதிப்பேச்சுவாத்தைகள்" என்றழைக்கப்பட்டதன் உண்மையான வடிவத்தை, அல் ஜசீராவினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்திக்காட்டியுள்ளன. தொடக்கத்திலிருந்தே, அது பாலஸ்தீன மக்களின் ஆறு தசாப்த கால அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஒரு கருவியாக இருந்து உதவியிருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு எதிராக முடிவில்லா வன்முறையை சட்டபூர்வமாக்கவும், மத்தியகிழக்கில் அமெரிக்காவின் நலன்களை இன்னும் அதிகரிக்கவுமே உதவியுள்ளன.

இந்த குறிப்புகளால் அம்பலமாகியிருக்கும் பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவரின் சரணடைவு, மத்தியகிழக்கிலும், சர்வதேச அளவிலும் முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்தையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் பன்துஸ்தான்-பாணியிலான ஒரு குட்டி-நாட்டிற்காக (statelet) ஏகாதிபத்தியத்தின் உதவியைக் கோரி பின்தொடர்வதன் மூலம் பாலஸ்தீன மக்களின் வரலாற்று கோரிக்கைகளை தீர்க்க முடியாது. பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மற்றும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் அதை ஐக்கியப்படுத்துவது மட்டும் தான் தற்போதைய முட்டுச்சந்துக்கு ஒரு வழியைத் திறக்கும் என்பதுடன் அதுமட்டும் தான் படுபயங்கரமான ஒரு புதிய சுற்று யுத்தச்சூழலையும் தடுக்கும்.