World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government intensifies Colombo evictions

இலங்கை அரசாங்கம் கொழும்பில் குடிசைகளை அகற்றுவதை துரிதப்படுத்துகிறது

By Vilani Peiris
27 January 2011

Back to screen version
 

இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை அவர்களது வீடுகளிலும் குடிசைகளிலும் இருந்து வெளியேற்றி நிலத்தை சொத்து உற்பத்தியாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் விடுவித்துக் கொடுக்கும் அதன் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்தியுள்ளது.

வெளியேற்றப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு சிப்பாய்களை அணிதிரட்டுவதன் மூலம், இந்த முன்னெடுப்புகளில் இராணுவம் அந்தரங்கமாக தலையீடு செய்கின்றது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், நகர அபிவிருத்தி அதிகார சபையையும் (யூ.டி..) காணி சீர்திருத்த அபிவிருத்திச் சபையையும் (எல்.ஆர்.டி.பி.) பாதுகாப்ப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

* ஜனவரி 5 அன்று, யூ.டி.. அதிகாரிகள் மத்திய கொழும்பில் கொம்பனி வீதியில் உள்ள குடியிருப்பாளர்களை தமது வீடுகளில் இருந்து வெளியேறத் தயாராகுமாறு கூறியுள்ளனர். இந்த நிலத்தில் சிறிய வியாபாரிகள் பெருமளவில் வாழ்வதோடு அவர்களில் பலரிடம் பெறுமதியான காணி உறுதி உள்ளது. சில வீடுகளில் மூன்று அல்லது நான்கு அறைகள் இருப்பதோடு மின்சாரமும் குழாய் நீரும் உள்ளன. ஆயினும், தமது வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்களை வைத்துள்ள குடும்பங்களும் கூட வெளியேற்றப்படும் என யூ.டி.. தலைவர் ஜனக குருகுலசூரிய சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

* ஜனவரி 20 அன்று, யூ.டி.. அதிகாரிகள், சுமார் 60 வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளுவதற்காக நூற்றுக்கணக்கான பொலிசாருடனும் மற்றும் கனமாக ஆயுதம் தரித்திருந்த விசேட அதிரடிப் படையினருடனும் ஒரு கொழும்பு புறநகர் பகுதியான வனாதமுல்ல பகுதிக்கு சென்றிருந்தனர். குடியிருப்பாளர்கள் அந்த அதிகாரிகளை எதிர்கொண்டதுடன் வீடுகளை இடிப்பதையும் எதிர்த்தனர். ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தனக்குத் தானே தீமூட்டிக்கொள்ள முயற்சித்த போது, ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை தடுத்தனர். பொலிசார் தற்காலிகமாகவேனும் பின்வாங்கத் தள்ளப்பட்டனர்.

* ஜனவரி 24 அன்று, மத்திய கொழும்பின் கோட்டைப் பகுதியில் 13 கடைகளை இடிப்பதற்கு படையினர் அனுப்பப்பட்டனர். இந்தக் கடைகள் நூற்றாண்டு பழமையானவை மற்றும் தமது உரிமையை வெளிப்படுத்த குடியிருப்பாளர்கள் சட்டப்பூர்வ ஆவணங்களையும் வைத்துள்ளனர். “இராணுவமே நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கட்டிடங்களை இடிக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து கட்டளை வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார் என ஒரு சிறிய கடை உரிமையாளர் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட உள்ளவர்களில் அநேகமானவர்கள் வறியவர்கள். அவர்களுக்கு சரியான தொழில்களோ அல்லது ஒழுக்கமான வீடுகளோ கிடையாது. பலரும், அவர்களது குடும்பங்களும் மத்திய கொழும்பில் உள்ள சேரிப் பகுதிகளில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருவதோடு தெரு வியாபாரிகளாக, துண்டுப் பொருட்களை சேகரிப்பவர்களாக மற்றும் கூலித் தொழிலாளர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இப்போது அரசாங்கம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் மத்திய பகுதிகளை ஆசியப் பிராந்தியத்தின் ஒரு வர்த்தக மையமாக மாற்றுவதற்கும் தலைநகரில் பெரும் பிரதேசங்களை துப்புரவு செய்ய முயற்சிக்கின்றது.

தனக்கே தீ மூட்டிக்கொள்ள முயற்சித்த, வனாதமுல்லவில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற தொழிலாளியான  பி.. ஜயந்த WSWS நிருபர்களிடம் தெரிவித்ததாவது: யூ.டி.. அதிகாரிகள் ஜனவரி 19 அன்று வந்து அடுத்த நாளே எங்கள் வீடுகளை காலி செய்யச் சொன்னார்கள். இங்கு பெரும்பாலான குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வதோடு உரிமைப் பத்திரங்களையும் வைத்திருக்கின்றனர். ஒரு சரியான பதிலீடு இல்லாமல் 24 மணித்தியாலத்துக்குள் வெளியேற யாருக்காவது முடியுமா?”

அந்தப் பிரதேசத்தில் 1943ல் தனது பெற்றோர்கள் குடியேறியதாக எஸ்.. ஸ்வர்னா கூறினார். “நாங்கள் பணக்காரர்கள் இல்லை. அன்றாடம் கிடைக்கும் வருமானத்திலேயே வாழ்கின்றோம். எனது கனவர் ஒரு சாரதி. நான் ஒரு சிறிய துணிக் கடையை நடத்துகிறேன். இந்த இடத்தை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டால் நாங்கள் இடிந்து போவோம்.

இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் உறுப்பினரும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால, வெளியேற்றத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திப்போட தலையீடு செய்வதாகவும் புதிய வீடுகள் வழங்கப்படும் வரை வாடகைப் பண உதவியைப் பெற முயற்சிப்பதாகவும் வாக்குறுதியளித்து வனாதமுல்ல குடியிருப்பாளர்களை சாந்தப்படுத்த முயற்சித்துள்ளார். இந்த வெற்று வாக்குறுதிகளில் உள்ளூர் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

முன்னதாக, அந்த பிரதேசத்தில் சுமார் 400 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும், அநேகமான குடும்பங்கள் 2001 மற்றும் 2007ல் வெளியேற்றப்பட்டு சஹசபுற மற்றும் சிங்கபுர என்ற பெயர்களில் அமைக்கப்பட்ட மாடி வீடுகளில் குறியேற்றப்பட்டன. ஆயினும், அறுபது குடும்பங்கள் நகர மறுத்துவிட்டன. அநேகமானவர்களுக்கு முற்பணத்தையும் மின்சார இணைப்புக்கான கட்டணத்தையும் அவர்களால் செலுத்த முடியாமல் போனது.

இந்தக் குடும்பங்களை தொடலங்க மற்றும் வெலிகொடவத்த போன்ற கொழும்பு புறநகர் பகுதிகளில் பலகையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய தற்காலிக வீடுகளுக்குச் செல்லுமாறு இந்தக் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதும், அந்த பலகை குடிசைகளுக்கு தண்ணீர் மற்றும் மலசல கூடம் உட்பட அடிப்படை வசதிகள் கூட கிடையாது.

இன்னுமொரு பிரதேசமான கொம்பனி வீதியில், மலே வீதி, ஜஸ்டிஸ் அக்பார் வீதி, மஸ்ஜிதுல் ஜமையா வீதி மற்றும் ஜாவா லேனில் இருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வெளியேற்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் அநேகமானவர்கள் முஸ்லிம்களும் தமிழர்களுமாவர். இவர்களுக்கு ஜனவரி 5 அன்று கட்டளை அனுப்பிய யூ.டி.ஏ. அதிகாரிகள் எச்சரிக்கையுடன் அதனை விநியோகித்திருந்தனர்.

அடுத்த 18 மாதங்களுக்கு 8,000 ரூபா மாத வாடகை குடியிருப்பாளர்களுக்கு கொடுப்பதாக யூ.டி.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு புதிய வீடுகள் கொடுப்பதாக வாக்குறுதியளித்த போதும், குடியிருப்பாளர்கள் அங்கிருந்து நகரவில்லை.

61 வயதான எம்.எச்.எம். சலீம், வீடுகளை கொடுப்பதற்காக எழுத்துமூலமான உத்தரவாதத்தை அரசாங்கம் கொடுக்கப் போகிறதா? என நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அதற்கு பதில் இல்லை. இங்குள்ள அனைவரும் தமது வீடுகளை பாதுகாக்க தயாராக உள்ளனர், என WSWS க்கு தெரிவித்தார்.

 “அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சிலர், அரசாங்கம் வீடு கொடுக்க உடன்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன? அரசாங்கம் நிலங்களை வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு கொடுக்கப்போகின்றது,” என அவர் மேலும் கூறினார். அவர் கடந்த  மே மாதம், 2,000 பொலிசாரும் படையினரும் அணிதிரட்டப்பட்டு கொம்பனி வீதி பிரதேசத்தில் மியூ வீதியில் இருந்து 45 குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றியதை நினைவூட்டினார். “இதற்கு முன்னர் கொம்பனி வீதியில் இருந்து வெளியேற்றப்பட்ட அநேகமானவர்கள் இன்னமும் தெருவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்,” என அவர் விளக்கினார்.

வெளியேற்றப்பட்டுவரும் 66,000 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டங்கள் அதிகார சபையிடம் இல்லை என்பதை யூ.டி.. துணை பணிப்பாளர் நாயகம் ஜயதுங்க ஏற்றுக்கொண்டார். நாம் சாலமுல்லவில் 1,600 வீடுகளையும் மேலும் 500 வீடுகளை தெமட்டகொடவிலும் கட்டுவதற்கு இப்போதுதான் தொடங்கியுள்ளோம் என அவர் WSWS க்குத் தெரிவித்தார். இந்த வீடுகள் இரண்டு வருடங்களில் கட்டி முடிக்கப்படும், மேலும் 25,000 வீடுகள் மூன்று வருடங்களில் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கு தேவையான நிதி எங்கிருந்து வரும் என்பதை அவர் விளக்கவில்லை.

வெளியேற்றங்களை முன்னெடுக்கும் அதே வேளை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுடனான உடன்படிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்துகிறது. ஜனவரி 12 அன்று அமைச்சரவை இரு திட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. அவை ஒவ்வொன்றும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை. இதன்படி சீன தேசிய ஏரோ தொழில்நுட்ப கூட்டுத்தாபனத்தினால் ஒரு விற்பனைச் சந்தை கட்டிடமொன்றும், ஷங்ரி லா ஹொட்டேல் குழுமத்தினால் (Shangri La Hotel group) இயக்கப்படும் ஒரு ஹோட்டலும் கட்டப்படவுள்ளன.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, ஒரு இலங்கை புளூ சிப் கம்பனி ஐந்து ஹெக்டயர் நிலங்களை வாங்கவுள்ளது. அது அங்கு ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது கொழும்பை ஒரு உலக தரத்திலான நகரமாக, பூகோள ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செழித்தோங்கும், ஆற்றல்வாய்ந்த மற்றும் கவர்ச்சிமிக்க பிராந்திய மையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டக் குறிக்கோளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, என அந்த பத்திரிகை விளக்கியுள்ளது.

எல்லாமாக, அரசாங்கம் சுமார் 390 ஹெக்டயர் நிலத்தை, பிரதானமாக சேரிவாசிகள் குடியிருக்கும் பிரதேசத்தை துப்புரவு செய்ய முயற்சிக்கின்றது. அரசியல் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதன் பேரில், அது இராணுவத்தை பயன்படுத்துவது மட்டுமன்றி, கொழும்பு மாநகர சபையை ஒரு நியமிக்கப்பட்ட நிர்வாகியின் கீழ் இருத்தியுள்ளது. தலைநகரத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றது என்ற போலி சாக்குப் போக்கைக் கூறி, எதிர்வரவுள்ள மாநகர சபை தேர்தலில் அரசாங்கம் கொழும்பில் தேர்தல் நடத்தவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற பிரதான எதிர்க் கட்சிகள், இந்த வெளியேற்றங்களை பெயரளவில் எதிர்த்த போதிலும், அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவதற்கு அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையும் முன்நிலைப்படுத்துகின்றன. முன்னர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட போது ஆட்சியில் இருந்த யூ.என்.பீ. யும் ஜே.வி.பி. யும் அரசாங்கத்தைப் போல் அதே சந்தை சார்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

சர்வதேச நிதி மூலதனத்தாலும் சர்வதேச நாணய நிதியத்தினாலும் கட்டளையிடப்பட்டுள்ள கொள்கைகளை அமுல்படுத்தி வரும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெளியேற்றத் திட்டங்களை தோற்கடித்துவிட முடியாது. பொருத்தமான தங்குமிடம் என்ற அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டமானது, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் தமது வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இந்த சேரிவாசிகளுக்கு பொருத்தமான வீடுகளும் பொருத்தமான தொழிலும் வழங்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வலியுறுத்துகிறது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைகளை இட்டு நிரப்புவதன் பேரில் பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே அத்தகைய வேலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியும்.

அரசாங்கம் வீடுகளை அப்புறப்படுத்துவதை எதிர்ப்பதன் மூலம் நகர்ப்புற வறியவர்களுக்கு உதவிசெய்ய முன்வருமாறு சோ.ச.க. உழைக்கும் மக்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவொன்றை கட்சி அமைத்துள்ளதோடு அதில் இணைந்து அதை கட்டியெழுப்ப முன்வருமாறு குடிசைவாசிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.