World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Lebanese conflict threatens civil war, Israeli-US intervention

லெபனிய மோதல் உள்நாட்டு யுத்தத்திற்கு அச்சுறுத்துகிறது, இஸ்ரேல்-அமெரிக்கா தலையீடு

By Jean Shaoul
27 January 2011

Back to screen version
 

ஷாத் ஹரீரியின் கூட்டணி அரசாங்கம் பொறிந்ததைத் தொடர்ந்து ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க, செவ்வாயன்று ஜனாதிபதி மிகெல் சுலெய்மன், ஷியா இஸ்லாமிய குழுவான ஹெஸ்புல்லா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட நஜ்ப் மிகாதிக்கு (Najib Mikati) அழைப்புவிடுத்தார். லெபனிய பிரதமர் பொறுப்பில் ஹெஸ்புல்லாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இது ஆழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள், லெபனானிற்குள் மீண்டெழுந்திருக்கும் குழுவாத மோதல்கள் மற்றும் அந்த பிராந்தியத்தில் நிலவும் ஒரு புதிய யுத்த அபாயத்திற்கான அறிகுறியாக உள்ளது.

பிரதம மந்திரி பதவியில் பொறுப்பு வகிப்பதற்காக ஹெஸ்புல்லா வந்திருப்பது, வாலித் ஜூம்ப்லாட்டின் (Walid Jumblat) ட்ரூஜ் கட்சி (Druze party) மற்றும் பலான்ஜிஸ்ட் கிறிஸ்துவ குழுக்கள் போன்ற சுன்னி முஸ்லீம் கட்சிகளுடன் சேர்ந்த, ஹரீரி தலைமையிலான அமெரிக்க ஆதரவு பெற்ற March 14 கூட்டணியின் ஒரு பெரும் பின்னடைவைக் குறிக்கின்றது. சிரியா மற்றும் ஈரானின் உதவியைப் பெற்றிருக்கும் ஹெஸ்புல்லாவும், அதன் ஷியிட் கூட்டாளிகளும் அந்த பிராந்தியத்தில் வாஷிங்டனுக்கும் அதன் கூட்டாளிகளான இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் எகிப்திற்கும் மற்றொரு தாக்குதலாக இருந்து, லெபனானில் முக்கிய பாத்திரம் வகிப்பவர்களாக ஆகியுள்ளனர்.

ஜனவரி 12இல் ஹரீரியின் கூட்டணியிலிருந்து ஹெஸ்புல்லா வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் இடைக்கால அரசாங்கத்தைக் காலவரையின்றி தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய முற்போக்கு சோசலிச கட்சியிலிருந்து ஜூம்ப்லாட் மற்றும் ஆறு உறுப்பினர்களும் அவர்களின் சொந்த அரசியல் உயிர்வாழ்விற்காக கூட்டணியிலிருந்து வெளியேறியதும், சில காலமாகவே ஒன்று கூடியிராத  ஹரீரியின் பிளவுபட்ட "தேசிய ஐக்கிய" கூட்டணி  பெருபான்மை இல்லாமல் கைவிடப்பட்டது. அரசியல்அமைப்பின்படி, மூன்றில் ஒரு பங்கினருடன் ஒரு மத்திய மந்திரியும் வெளியேறினால் ஒரு புதிய அரசாங்கத்தின் ஸ்தாபகம் தேவைப்படுகிறது.

ஜனவரி 2006இல் பாலஸ்தீன அதிகாரத்தின்கீழ் ஹமாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரபலமாகியிருந்த ஹெஸ்புல்லா, எப்போதுமே ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயங்கி வந்துள்ளது. அது தற்போது 120 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 68 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும், "ஒத்திசைவான" ஒரு சுன்னி அரசியல்வாதி மிடாகியை (Mitaki) வேட்பாளராக நிறுத்தியது. “நாங்கள் அதிகாரத்தைக் கோரவில்லை" என்று கூறி, ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், பரந்த பங்களிப்புடன் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியமென்று ஹெஸ்புல்லா நம்புவதாக அறிவித்தார்.

ஆனால் வாஷிங்டனின் கட்டளையின்பேரில், சவூதி-சிரியாவின் தரகுவேலையால் ஹெஸ்புல்லாவுடனான உடன்படிக்கையிலிருந்து ஹரீரி பின்வாங்கிய போது, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நெருக்கடி ஆழமடைந்தது. ஐக்கிய நாடுகளின் லெபனானுக்கான சிறப்பு மன்றத்திற்கு (Special Tribunal of Lebanon - STL) கீழ்படியாமல் ஒரு மந்திரிசபையை அவர் கூட்ட வேண்டும், STLஇல் இருந்து லெபனானிய நீதிபதிகளைத் திரும்பப் பெற வேண்டும், மற்றும் அதற்கு நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஹெஸ்புல்லா கோரியது.

2005இல் ரபீக் அல்-ஹரீரைக் கொன்றவரை கண்டறியும் வேஷத்தில் இருக்கும்  லெபனானுக்கான சிறப்பு மன்றம் (STL) என்பது, வாஷிங்டனின் நலன்களுக்காக லெபனானைக் கட்டுப்படுத்தும் அல்லது சீர்கெடுக்கும் ஒரு ஒழுங்கமைப்பாக உள்ளது. அது முன்னாள் கோடீஸ்வரரான  பிரதமமந்திரியின் படுகொலையோடு தொடர்புபட்ட ஹெஸ்புல்லாவின் "போலி" உறுப்பினர்கள்மீது குற்றப்பத்திரிக்கை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொலையில் தமக்கு எந்த தொடர்பும் இல்லையென்று ஹெஸ்புல்லா மறுத்துள்ளது. அந்த கொலைக்காக இஸ்ரேலை குற்றஞ்சாட்டும் ஹெஸ்புல்லா, லெபனானில் வாஷிங்டனின் மற்றும் டெல் அவிவின் நோக்கங்களை ஆழப்படுத்த  லெபனானுக்கான சிறப்பு மன்றத்தின் செயல்பாடுகள் ஒரு கருவியாய் இருப்பதாக கூறி வருகிறது.

பல ஆண்டுகளாக வாஷிங்டன், எந்தவித ஆதாரமும் இல்லாமல், ஹரீரி படுகொலையின் பின்புலத்தில் சிரியா இருந்ததாக முறையிட்டது. சிரியா-ஆதரவுபெற்ற நான்கு லெபனான் தளபதிகளும் அந்த திட்டத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். வாஷிங்டன் மட்டும் தான் சிரியாவை முன்கொண்டு வந்துகாட்ட முயற்சிப்பதாக இருந்தது, ஏனென்றால் அது ஈரானை ஒதுக்கவும், லெபனானுக்கான சிறப்பு மன்றத்தின் கவனத்தை ஹெஸ்புல்லாவின் பக்கம் திருப்பவும் விரும்பியது. மறைந்த பிரதம மந்திரியின் மகன் ஷாத் ஹரீரி, கடந்த அக்டோபரில், சிரியாவிற்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்ததுடன், சிரியா-ஆதரவிலான தளபதிகள் இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களின்மீது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதம மந்திரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பவரும், அமெரிக்காவால்-படிப்பிக்கப்பட்டவருமான நஜீப் மிகாதி, அரசியலமைப்பின் தேவையின்படி, ஒரு சுன்னி முஸ்லீம் ஆவார். ஹரீரியின் படுகொலையைத் தொடர்ந்து 2005இல் இடைகால பிரதம மந்திரியாக இருந்த அவர், பாராளுமன்றத்தில் இரண்டு இடங்களைப் பெற்றிருக்கும் குளோரி இயக்கத்தின் (Glory Movement) தலைவர். அவர் யாருடன் சேர்ந்து Investcom நிறுவனத்தை நிறுவினாரோ அந்த அவருடைய சகோதரரோடு சேர்ந்து, லிபியா சூடான் மற்றும் யேமனில் செல்வங்களைக் குவித்துக் கொண்டு, அந்த தொலைதொடர்பு நிறுவனங்களை 5.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்ற பின்னர், அவர் லெபனானில் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

ஒரு ஹரீரி கூட்டாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிகாதி, சிரியாவுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தார். 2005இல் அதன் செல்வாக்கில் வீழ்ச்சியடைந்திருந்த சிரியா மீண்டும் அதை திரும்ப பெற்று வருகிறது. ஹெஸ்புல்லாவுடன் நெருக்கமாக இல்லாத அவர், ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியில், ஹரீரியின் March 14 கூட்டணி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஓர் உறவை எட்ட முயற்சித்தார்.

ஆனால், எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஓர் "ஒத்திசைவான வேட்பாளரைக்" கொண்டு வரமுடியாது என்று கூறி, ஹெஸ்புல்லா ஆதரிக்கும் ஒரு வேட்பாளரின் தலைமையில் அமையும் ஓர் அரசாங்கத்தில் பங்குபெற ஹரீரி மறுத்துள்ளார். பின்னர் அவர் புதிய பிரதம மந்திரியின் நியமனத்தை, ஈரானிய கட்டுப்பாட்டின்கீழ் நாட்டை கொண்டு வருவதற்கான ஒரு "சதி முயற்சி" என்றழைத்தார்.

அவருடைய கூட்டாளிகள், பள்ளிகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்த திரிபோலியின் வடக்கு நகரிலும், நகரின் மையப்பகுதி வீதிகள் அடைக்கப்பட்டிருந்த பெய்ரூட்டிலும், சிடோனின் தெற்கு கடற்கரை நகரிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, அதைலெபனான் முழுவதும் ஓர் ஆக்ரோஷமான நாள்" என்றழைத்தனர். அதில் இருபது பேர் காயப்படுத்தப்பட்டனர்; அல்-ஜசீரா செய்தி சேவையால் பயன்படுத்தப்பட்ட ஒரு தொலைதொடர்பு வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்தினர். அவர்கள் அதை ஹெஸ்புல்லாவின் ஒரு கூட்டாளியாக பார்க்கின்றனர்.

வன்முறையும், நாசவேலைகளும் அமெரிக்க ஊடகங்களால் பெருமளவிற்கு ஆதரவுடன் கையாளப்பட்டன. அவை சில தினங்களுக்கு முன்னர் தான், ஹெஸ்புல்லாவின் தலைமறைவு ஆதரவாளர்கள் பெய்ரூட் தெருக்களில் ஆங்காங்கே தோன்றுவதை, ஓர் ஆத்திரமூட்டலாகவும், சதி அச்சுறுத்தலாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின.

அப்பிராந்தியத்தில் அதன் மூலோபாய நலன்களுக்கு ஹெஸ்புல்லா தலைமையிலான கூட்டணியை ஒரு நேரடி அச்சுறுத்தலாக பார்ப்பதாக வாஷிங்டன் தொடர்ந்து தெளிவுபடுத்தி கொண்டிருக்கிறது. எல்லா உதவிகளையும் வெட்டுவது, ஸ்திரமின்மைக்கு கொண்டு வருவதற்கான ஒன்றுபட்ட பிரச்சாரம் மற்றும் சாத்தியமானால் இராணுவ தாக்குதல் ஆகியவற்றால் அது பிரதிபலிப்பு காட்டக்கூடும் என்று கருதப்படுகிறது.

புதிய அரசாங்கத்தில் ஹெஸ்புல்லா ஒரு முக்கிய பங்கு வகிப்பதை "பெரும் கவலைக்குரிய" விஷயமாக ஒபாமா நிர்வாகம் வெளிப்படுத்தியது. வெளியுறவு விவகாரத்துறை மந்திரி ஹிலாரி கிளின்டன் கூறுகையில், ஹெஸ்புல்லா செல்வாக்கு செலுத்தும் ஓர் அரசாங்கம் என்பது அமெரிக்காவிற்கும், லெபனானுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறிக்கும் என்றார். அவர் குறிப்பிட்டதாவது, “ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டில் அமைந்த ஓர் அரசாங்கம், லெபனானுடன் நம்முடைய இருதரப்பு உறவுகளின்மீது ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கும்,” என்றார்.

அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹெஸ்புல்லாவும் இருக்கிறது என்பதுடன் அது நிதி மற்றும் பயண தடைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. 2006இல் இருந்து லெபனானின் இராணுவத்தையும், பொலிஸ் படைகளையும் பலவீனப்படுத்த அமெரிக்கா 720 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளது; அவ்வாறே ஹெஸ்புல்லாவிற்கு அளிக்கப்படும் ஆதரவுகளுக்குக் குழிபறிக்கவும், அவற்றை அடக்கவும் செய்யப்பட்ட உள்நாட்டு திட்ட முயற்சிகளில் 500 மில்லியன் அமெரிக்க டாலரை அது செலவிட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் இந்த ஆண்டு லெபனான் உதவிக்காக கூடுதலாக 246 மில்லியன் டாலர் கோரியுள்ளது.

வெளியுறவுத்துறை தெரிவித்தது, “லெபனானை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசாங்கமும், அந்நாட்டில் நடந்த படுகொலையை விதிவிலக்காக கைவிடும் முயற்சியை எடுக்காது.”

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், சிறப்பு லெபனான் தீர்ப்பாயத்திற்கு மிகாதி கீழ்படியாவிட்டால், ஒபாமா நிர்வாகம் மிகாதி அரசாங்கத்தை ஏற்க மறுக்கும் என்பதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசாங்கம் நிறுத்தப்பட்ட அதே பிரிவில்-ஒரு பயங்கரவாத அரசு அமைப்பாக-இதையும் கொண்டு போய் நிறுத்தும்.

இஸ்ரேல் இந்த புதிய அரசாங்கத்தைப் பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தெளிவுபடுத்தியது. இஸ்ரேலின் துணை பிரதம மந்திரி சில்வன் ஷெலொம் கூறுகையில், "நடைமுறையில் அது இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இருக்கும் ஓர் ஈரானிய அரசாங்கமாக இருக்கிறது,” என்றார்.

ஓர் ஓய்வுபெற்ற இஸ்ரேலிய இராணுவ தளபதியும், முன்னாள் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரும், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புத்துறை ஆய்வு பயிலகத்தின் தற்போதைய மூத்த ஆராய்ச்சியாளருமான ஜியோரா எய்லாந்து, அடுத்த யுத்தத்தை இஸ்ரேல் ஜெயிக்க வேண்டுமானால் அது ஹெஸ்புல்லாவை மட்டுமல்ல, லெபனானின் அரசு உள்கட்டமைப்பையும் தாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “அந்த அரசாங்கத்திற்குப் பின்னால் ஹெஸ்புல்லா நிற்குமேயானால், லெபனான் அரசுக்கு எதிராக நாம் ஏன் போராட வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவது மிகவும் சுலபமாக இருக்கும்,” என்றார்.

2006இல், ஹெஸ்புல்லா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் ஒரு கொடூர யுத்தத்தைத் தொடர்ந்தது. இதில் 1,200க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டதுடன், அது பத்து ஆயிரக்கணக்கான வீடுகளையும், லெபனானின் உள்கட்டமைப்பையும் சீரழித்தது. கடந்த ஆகஸ்டில், இஸ்ரேலியர்களின் கண்பார்வைக்குத் தடையாக இருந்த ஒரு மரத்தை ஓர் இஸ்லாமிய எல்லை பாதுகாப்புப்படை சிப்பாய் வெட்டுவதை நிறுத்த மறுத்தை தொடர்ந்த ஓர் இராணுவ மோதலில் நான்கு லெபனானியரும் ஓர் இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர். ஆனால் அமெரிக்காவினதும் பிரான்சினதும் அழுத்தங்களுக்கு கீழ் இஸ்ரேல் ஒரு பாரிய தாக்குதலை நடத்துக்கூடும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கட்டுரையின்படி, கடந்த ஆகஸ்டில் இஸ்ரேலிய இராணுவ தலைவர்கள், "லெபனிய இராணுவ முகாம்கள், ஹெஸ்புல்லா இரும்புப்பிடி இருக்கும் பகுதிகள் மற்றும் பெய்ரூட்டின் மின்நிலையங்கள் மீது குண்டுவீசும் திடீர் திட்டங்களைச் செயல்படுத்த" தயாராக இருந்தனர்; அதை செய்ய வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியும் இருந்தனர்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கசிவுகள், இதுபோன்ற திட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தின. ஓர் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிக்கு இஸ்ரேலிய முதன்மை இராணுவ தளபதி கபி அஸ்கினாஜி (Gabi Ashkenazi), ஓர் இராணுவ திட்டத்துடன், மற்றும் இஸ்ரேலிய இராணுவம் லெபனான், காசா உட்பட மத்தியகிழக்கில் ஒரு புதிய யுத்தத்திற்கான தயாரிப்புகளுடன் முழுவீச்சில் முன்னேறி அழுத்தம் அளித்து வருவதை விவரித்த கசிவுகளை, நோர்வேஜிய செய்தியிதழ் Aftenposten தொகுத்தளித்திருந்தது.

பெரியளவிலிருந்து சிறியளவிற்கு எளிமையாக குறைத்துக்கொள்ள முடியும் என்பதால், ஒரு பெரும் யுத்தத்திற்கு நான் இஸ்ரேலிய இராணுவத்தைத் தயாரித்து வருகிறேன்,” என்ற அஸ்கினாஜியின் கூற்றை கசிவுகள் குறிப்பிட்டுக்காட்டுவதாக Aftenposten குறிப்பிட்டது.

இஸ்ரேலின் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள், தொலைதொடர்புகளை வேவு பார்க்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் கூடுதல் உதவியுடன், தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லாவின் ராக்கெட் ஏவுதளங்களை கண்டறிந்திருந்ததாக அவர் அந்த பிரதிநிதிகள் குழுவிடம் தெரிவித்தார். “அடுத்த யுத்தத்தில்நகர்புற பகுதிகளில் யுத்தம் குறித்த எந்த கட்டுப்பாட்டையும் இஸ்ரேலினால் ஏற்க முடியாது,” என்று அஸ்கினாஜி அச்சுறுத்தினார்.

2008-2009 யுத்தத்தில் இருந்து அங்கே ஏறத்தாழ ராக்கெட்கள் எதுவும் செலுத்தப்படவில்லை என்ற உண்மை இருந்த போதினும், இஸ்ரேல் சமீபத்தில் காசாவிற்கு எதிராக பல போராளிகள் கொல்லப்பட்ட பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை செய்தது