World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP calls on Sri Lankan plantation workers to reject pay deal

சோசலிச சமத்துவக் கட்சி சம்பள உடன்படிக்கையை நிராகரிக்குமாறு இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
29 June 2011

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஜூன் 6 அன்று தொழிற்சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள உடன்படிக்கையை முற்றாக நிராகரிக்குமாறும், தக்க சம்பள உயர்வு, பொருத்தமான வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காகப் போராடுவதன் பேரில் அரசியல் மற்றும் தொழிற்துறை போராட்டமொன்றை முன்னெடுக்குமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வறிய மட்ட சம்பளத்திலேயே மட்டந்தட்டி வைக்கப்படுவார்கள். கோதுமை மா மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், 285 ரூபாயில் இருந்து 380 ரூபா வரை (3.50 அமெரிக்க டொலர்) அதிகரிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க எந்தவகையிலும் போதாது. 90 ரூபாயில் இருந்து 105 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ள வருகைக்கான மேலதிக கொடுப்பணவை, அல்லது உற்பத்தி ஊக்குவிப்புத் தொகையை, அநேகமான தோட்டத் தொழிலாளர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளுக்கு இரண்டு வேளை உணவுக்கு குறைந்தபட்சம் 350 முதல் 400 ரூபா வரை தேவைப்படும். இது நாள் சம்பளம் மற்றும் கொடுப்பணவுகளில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியாகும்.

அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் முதலாளிகளுடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக விரைந்தன. டெயிலி எஃப்டீ. கொம் (Daily FT.com) என்ற இணையத்தில் வெளியான செய்தியின் படி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, விரைவில் ஒரு உடன்பாட்டுக்குச் செல்லுமாறு தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனிப்பட்ட முறையில் தலையீடு செய்துள்ளார். பிரேரிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக, சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி நடத்திய பிரமாண்டமான எதிர்ப்புப் போராட்டங்கள், அவர்களைப் பின்பற்றுமாறு தோட்டத் தொழிலாளர்களையும் தூண்டிவிடும் என அரசாங்கம் கடும் கவலையடைந்திருந்தது.

இந்த சம்பள வியாபாரம் கைச்சாத்திடப்பட்ட அதே தினம், அதாவது ஜூன் 6, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பும், ஒரு சில தோட்டங்களில் ஒத்துழையாமை போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சரான இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தொழிலாளர்கள் நியாயமான சம்பள உயர்வை பெற்றுள்ளார்கள் என கூறிக்கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சகல தொழிற்சங்கங்களும் வேகமான சரணடைந்தன.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (ACEWU) செயலாளர் ஏ.டி. பிரேமரத்ன, எந்தவொரு மேலதிக நடவடிக்கையையும் எடுப்பதை நிராகரித்தார். இப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. தொழிற்துறை முரண்பாடுகள் சட்டத்தின் படி, எங்களால் எதுவும் செய்ய முடியாது, என அவர் கூறினார். சம்பள உயர்வு போதாது என புலம்பிய ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) தலைவர் மனோ கணேசன், அரசாங்கத்தை தலையீடு செய்யுமாறு அற்ப வேண்டுகோள் ஒன்றை விடுத்ததோடு நிறுத்திக்கொண்டார்.

மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) தலைவர் பி. இராதாகிருஷ்ணன், அடுத்த முறை பேச்சுவார்த்தைகளில் சகல தொழிற்சங்கங்களும் பங்குபற்ற வேண்டும் என சாதாரணமாக சொல்லி முடித்தார். இதே போல், இ.தொ.கா. தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து விட்டது. கடவுள் அவர்களைத் தண்டிப்பார், என கூறிய தேசிய தொழிலாளர் சங்கத்தின் (NUW) தலைவர் ஆர். திகாம்பரம் எந்தவொரு பிரச்சாரத்தையும் பிரேரிக்கவில்லை.

கடந்த ஏப்பிரல் மாதம் எச்சரிக்கை ஒன்றை விடுத்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), .தொ.கா.வை பெயரளவில் எதிர்க்கின்ற தொழிற்சங்கங்கள் உட்பட சகல சங்கங்களும், 2006 மற்றும் 2009ல் செய்தது போலவே தோட்டத் தொழிலாளர்களை விற்றுத் தள்ளும், என தெரிவித்திருந்தது. 2006ல் பிரமாண்டமான வேலை நிறுத்த இயக்கத்தின் மத்தியில், ஜனாதிபதி இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த முயற்சிகளை கீழறுக்கின்றனர் என தொழிற்சங்கங்களை குற்றஞ்சாட்டிய போது, சகல தொழிற்சங்கங்களும் ஒரு வழிக்கு வந்தன.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட உடனேயே, 2009ல் இ.தொ.கா. முதலாளிமாருடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதை அடுத்து, இந்த சங்கங்கள் இதே போன்று காட்டிக்கொடுத்தன. ம.ம.மு., அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஏனைய எதிர்ப்புச் தொழிற்சங்கங்களும், பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை பிரச்சாரத்தை தொடர்வதை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டன. ஆனால், அதுவும் அந்த பிரச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முடித்துவிடுவதற்காக மட்டுமே கூறப்பட்டது.

இத்தகைய ஒரு தொழிற்சங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கக் கூடாது. அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்த அவர்கள், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமான சந்தை-சார்பு மறுசீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக, முன்வைக்கப்பட்டுள்ள தேசத்தைக் கட்டியெழுப்பும்திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றனர். உற்பத்திப் பொருட்களின் சர்வதேச விலை அதிகரித்துக்கொண்டிருக்கின்ற போதிலும், தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொண்ட முதலாளிமார், இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சர்வதேசத்தில் போட்டியிடக்கூடியவாறு வைப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என தொழிலாளர்களை வலியுறுத்துகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய தரவுகளின்படி, ஒரு கிலோ தேயிலையின் விலை 2007 மே மாதம் 190.4 அமெரிக்க சதங்களில் (கிட்டத்தட்ட 200 ரூபா) இருந்து 2011 மே மாதம் 327.68 அமெரிக்க சதங்கள் (கிட்டத்தட்ட 350 ரூபா) வரை அதிகரித்துள்ளது. அதே காலப் பகுதியில், ஒரு கிலோ இறப்பரின் விலை, 108.60ல் (கிட்டத்தட்ட 100 ரூபா) இருந்து 232.07 அமெரிக்க சதங்கள் (கிட்டத்தட்ட 250 ரூபா) வரை அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் 23 தேயிலை மற்றும் இறப்பர் கம்பனிகள் 2010ல் தம்முடைய இலாபத்தை 935 வீதத்தால் அதிகரித்துக்கொண்டுள்ளன.

கம்பனிகள் பிரமாண்ட இலாபங்களால் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ள போதும், தொழிலாளர்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. மாறாக, இலங்கை தொழிலாளர்கள் உதாரணமாக கென்யத் தொழிலாளர்களுடன் போட்டியிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது -கென்யாவில் தேயிலைக் கொழுந்துகள் பறிக்க இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தினதும் முதலாளிமார்களதும் தேவைகளை அமுல்படுத்துபவையாக செய்றபடுகின்றன.

இந்த ஆண்டு முற்பகுதியில், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, ஜ.தொ.கா. தலைவர் கணேசன், 500 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 250 ரூபா கொடுப்பனவை மட்டுமே வெல்ல முடியும் என தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை சுருக்கிக் கூறினார். எங்களால் அதற்கும் மேல் கேட்க முடியாது. நாம் அதை விட அதிகம் கேட்டால், தேயிலை தொழிற்துறை வீழ்ச்சியடைந்துவிடும், என்றார். அது நிராகரிக்கப்பட்ட போது, ஜ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் அதை விட குறைந்த தொகையை ஏற்றுக்கொண்டதோடு, நியாயமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் தடுத்துவிட்டனர்.

தொழிற்சங்கங்களில் இருந்து அமைப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முழுமையாக பிரிந்து, தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி வீசுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நாடுவதே நியாயமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான எந்தவொரு உண்மையான போராட்டத்துக்குமான ஆரம்பப் புள்ளியாக இருக்கும். தோட்டங்கள் பூராவும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

எந்தவொரு சம்பளக் கோரிக்கையும் தொழிலாளர்களாலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும், தொழிற்சங்கங்களால் அல்ல. அந்தக் காரணத்துக்காக, கோரிக்கைகளின் பட்டியலொன்றைத் தயாரிக்கவும் அவற்றுக்காகப் போராடுவதற்கு ஒரு பிரச்சாரத்தை திட்டமிடவும் நடவடிக்கை குழுக்களின் மாநாடு ஒன்று கூட்டப்பட வேண்டும். சோ.ச.க. ஏப்பிரலில் வெளியிட்ட அறிக்கையில், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற அவசரமான சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதற்கான பின்வரும் கோரிக்கைகளை அது பிரேரித்தது.

* தொழிலாளர்களை வறுமையிலும் மற்றும் அரை-அடிமைகளாகவும் வைத்திருக்கும் நாள் சம்பள முறைமையை நிறுத்தி, ஒரு வாரத்துக்கு 40 மணித்தியால வேலைக்கான மாத சம்பளமாக 30,000 ரூபா உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

* மருத்துவ பராமரிப்புக்கான முழு செலவு, தக்க ஓய்வூதியம் மற்றும் மேலதிக நேர கொடுப்பணவும் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

* தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட ஒழுக்கமான வீடு, அதே போல் முறையான கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கும் போராட வேண்டும்.

இந்த அடிப்படை சமூக உரிமைகளுக்கான ஒரு பிரச்சாரம், வெறுமனே இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு மட்டுமன்றி, தவிர்க்க முடியாமல் கூட்டுத்தாபனங்களின் பக்கம் சாயும் முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை அர்த்தப்படுத்துகிறது. தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் சகல பகுதியினரதும் ஆதரவுடன் மட்டுமே சாதிக்கப்படக்கூடிய அரசியல் அதிகாரத்துக்கான ஒரு போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபடுவர்.

ஒவ்வொரு நாட்டிலும், சம்பளத்தை குறைக்கவும் அடிப்படை சமூக உரிமைகளை அழிக்கவும் முதலாளிமாரும் அவர்களது அரசாங்கங்களும் முயற்சிப்பதை தொழிலாளர்கள் காண்கின்றனர். இது ஒரு அனைத்துலக சோசலிச முன்நோக்குக்காக போராடுவதற்கு தொழிலாளர்கள் அணிதிரள்வதை அவசியமாக்குகிறது. சர்வதேச போட்டி நிலைமை என்ற பெயரில், வாழ்க்கைத் தரங்களை முடிவின்றி சீரழிக்க உலகம் பூராவும் ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான கோரிக்கையுடன் பதிலளிக்க வேண்டும். மற்றும் ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, சகலரதும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு உலக சோசலிசப் பொருளாதாரத்தால் முதலாளித்துவத்தை பதிலீடு செய்ய வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (நா.அ.அ.கு.) அதன் சகல பகுதிகளும் அபிவிருத்தி செய்கின்ற முன்நோக்கு இதுவேயாகும். நாம் இப்போது தோன்றிக்கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தலைமை வகிக்க வேண்டிய தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக நா.அ.அ.குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணையுமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.